20 செப்., 2010

தீராக்காதல் - 4 - கீதாஞ்சலி ....


என் 
மதுக்கோப்பைகளில்
நிரம்பி வழிகிறது உனக்கான காதல் ...

மெல்ல மெல்ல 
அது என்னை கொல்லத் துவங்க ...

எனக்கு தெரிந்ததில் 
இதுதான் 
மிக ரசனையான தற்கொலை ...

எனக்கு அடுத்த ஒரு வாரத்தை தள்ளுவது பெரும் சிரமமாக இருந்தது, இப்போது போல் அப்போதெல்லாம் போன் கூட பேசமுடியாது. அவள் அழுதது என் கண்முன் வந்துகொண்டேயிருந்தது, அவளின் நெருக்கத்திற்கு பிறகு நான் தண்ணி அடிப்பதை முற்றாக விட்டுவிட்டதால் நண்பர்களுடன் பழகுவதை தவிர்க்க நூல் நிலையம் போக ஆரம்பித்தேன். மேலும் நண்பர்கள் வற்புறுத்தினால் மஞ்சள் காமாலையை காரணம் சொல்லி தப்பித்துவிடுவேன், அதனால் அவர்களும் என்னை மாலை வேளைகளில் கூப்பிடுவதை தவிர்த்தனர். எனவே எப்போதும் புத்தகங்களுடன் வாழ ஆரம்பித்தேன். 

ஒரு வாரம் கழித்து எனக்கு அவளிடமிருந்து கடிதம் வந்தது, எனக்கு சந்தோசத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை, அந்த கடிதத்தை ஆயிரம் முறையாவது படித்திருப்பேன், அதில் நவம்பர் இருபதாம் தேதி மன்னார்குடி வருவேன் எனவும் மறுநாள் மாலை வழக்கம்போல் கோவிலில் சந்திப்போம் எனவும், வந்து எனக்கு ஒரு சந்தோசமான செய்தி சொல்லப்போவதாகவும் எழுதியிருந்தாள். முடிவில் With Thousand Warm of Kisses என எழுதி கையெழுத்து போட்டிருந்தாள். அந்த சந்தோசத்தை எனக்கு எப்படி சொல்லுவது என்று தெரியாமல் தனி உற்சாகத்துடன் நடமாட ஆரம்பித்தேன். பத்தொன்பதாம் தேதி அன்று காலை என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. கடுமையான ஜுரம் அடித்தது உடனே மன்னார்குடி அழைத்து வந்தார்கள். அங்கு எனக்கு டைபாய்டு என அட்மிட் செய்தார்கள். தொடர்ந்து நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன், எனக்கு இருபத்திஒன்றாம் தேதி அவளை பார்க்கமுடியவில்லையே என்பதுதான் வருத்தமாக இருந்தது. அதனால் நண்பன் ராஜசேகரை விட்டு விசாரிக்க சொன்னேன், அவனும் விசாரித்துவிட்டு அவள் மன்னார்குடி வந்தமாதிரி தெரியவில்லை என்றான். 

ஆனால் என்னை பார்க்க அஞ்சலியின் தோழி சுமதி வந்தாள், வந்து என்னைபார்த்ததும் கதறி அழ ஆரம்பித்தாள், நான் இருந்தது தனி அறை என்பதாலும், காலை பத்துமணிக்கு மேல் என்பதாலும் யாரும் இல்லை, எனக்கு ஒன்றுமே புரியவில்லை, என்ன ஆச்சும்மா, ஏன் அழுவுறே என சமாதானபடுத்தினேன், அவள் அழுகையை நிறுத்தவில்லை, அழட்டும் என மௌனமாக இருந்தேன், மெல்ல அவளை ஆசுவாசபடுத்திக்கொண்டு அண்ணே அஞ்சலி நம்மை எல்லாம் ஏமாத்திட்டு போய்ட்டான்னே.. என தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்,.எனக்குள் எதுவோ உடைந்தது, .......................................... 

சுமதி போனபிறகு அப்படியே பைத்தியம் பிடித்தவனாய் அமர்ந்திருந்தேன்.. என்னைப்பார்க்க வந்த நண்பனிடம் அஞ்சலி வீட்டின் முகவரி சொல்லி எப்படியாவது என்ன நடந்தது என விசாரிக்க சொன்னேன், 

பெங்களூரில் பத்தொன்பதாம் தேதி ஊருக்கு கிளம்புவதற்குமுன் கடைசி நேரத்தில் தனக்கு டிரஸ் வாங்க வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டு கிருஷ்ணகுமாரின் அம்மா, மற்றும் அஞ்சலியின் மூத்த சகோதரி, கிருஷ்ணகுமார் என்ற குட்டிபையனுடன் கிளம்பியிருக்கிறார்கள், மெயின் ரோட்டில் சாலையை கடக்கையில் சாலையின் நடுவில் நின்று மறுபுறம் கடக்கையில் அந்த குட்டிபையனை யார் அழைத்துவருகிறார் என தெரியாமல் கடந்துவிட அந்த குட்டிபையனோ போகிற வருகிற கார்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே அங்கேயே சாலைநடுவில் நிற்க, மறுபுறம் கடந்த அஞ்சலி அதனை கவனித்துவிட்டு அவசரமாக சாலையின் குறுக்கே ஓடி அவனை காப்பாற்ற முயன்ற பொது வேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்திரிக்கிறது, அவள் சாகும்போது கடைசியாக சொன்ன பெயர் குமார்..... அந்தக் குட்டிப் பையனுக்கு எதுவும் ஆகவில்லை.

இதனை நண்பன் வந்து சொன்னபோது நான் அழவேயில்லை, என் உயிரில் கலந்த அவள் இறந்துவிட்டாள், என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... 

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தபின், நான் எங்கும் செல்லவில்லை, எந்த நேரமும் வீட்டிலேயே அடைபட்டிருந்தேன், நான் யாருடனும் பேசுவதில்லை, சரியாக சாப்பிடுவதில்லை என நண்பனிடம் அம்மா வருத்தப்பட்டது, அவன் பிடிவாதமாக என்னை வெளியில் அழைத்துசென்றான், அன்று இரவு நிறைய குடித்தேன்.. அத்தனை நாள் இரவுகளில் அன்று இரவுதான் போதையில் தூங்கினேன், அதன்பிறகு குடி என்னுடன் ஒட்டிகொண்டது, குடிக்காமல் என்னால் தூங்க முடியாது, வீட்டிற்கு தெரியக்கூடாது என்பதற்காக மாட்டு கொட்டகையில் தூங்க ஆரம்பித்தேன்... 

இப்படி ஒருநாள் காலையிலேயே நண்பன் செழியனுடன் குடித்தபோது, ஓவராக குடித்துவிட்டு அஞ்சலியை பற்றி புலம்ப அவனோ நீ 
\"ஏழு சுவரங்களுக்குள்\" 
என்ற பாட்டு கேட்டிருக்கிறாயா என்றான், அதில்
 \'எனக்காக நீ அழுதாள் இயற்கையில் நடக்கும்\',\'
 நீ எனக்காக உணவு உன்ன எப்படி முடியும்\' 
என்றொரு வரி உண்டு தெரியுமா? என்றான் அதுக்கு இப்ப என்னடா என்றபோது, நீ அஞ்சலியை நெஜமாகவே காதலிச்சியா? என்றான், ஆமாண்டா... அத எதுக்கு கேக்குறே என்றேன். இல்லடா நீ நிஜமா காதலிச்சிருந்தா அப்பவே செத்திருப்பே, ஆனா நீ இப்ப எங்களுக்காக நடிக்கிறே.. உண்மையான காதலா இருந்தா அவளுக்காக நீ செத்திருக்கணும் என்றான்.. என் போதை வடிந்துவிட்டது, வீட்டிற்கு வந்து நெடு நேரம் யோசித்து ஒரு முடிவெடுத்தேன்... 

தற்கொலை செய்து கொள்ளவேண்டும், அதுவும் இன்றைக்கு இரவே என முடிவெடுத்தேன்.. 

மாலையில் மன்னார்குடி சென்று ஒரு பாட்டில் விஷமும், இன்னொரு பாட்டில் பிராந்தியும் வாங்கிகொண்டேன், கடைசியாக ஆத்மநாதன் அத்தானை பார்த்துவிட்டு சென்றுவிடலாம் என அவரைப்பார்க்க சென்டருக்கு போனேன்.. அவர் வீட்டிற்கு சாப்பிட போனதாக சொன்னார்கள், அவருக்காக காத்திருந்தேன்,, என் நினைவுகள் முழுதும் அஞ்சலி மட்டுமே இருந்தாள், இன்னும் சில மணி நேரத்தில் அவளுடன் கலந்துவிடப்போகிறேன், அந்த நினைப்பே என்னை ஒரு ஏகாந்தத்திற்கு இட்டுசென்றது... வகுப்பின் பெஞ்சில் படுத்து கண்மூடினேன் என் கண்களுக்குள் அஞ்சலி சிரித்தாள்... அப்படியே தூங்கிவிட்டேன்.......

அப்படி ஒரு உறுதியான முடிவு எடுத்த என்னை.. எது உங்களுக்கு இதனை எழுதுகிற அளவுக்கு உயிரோடு வைத்தது என்பதை நாளை சொல்கிறேன்......

26 கருத்துகள்:

என்னது நானு யாரா? சொன்னது…

விதியின் கோரமான விளையாட்டு!

ஐயோ! ஐயோ! மனிதர்களை கைப்பாவை ஆக்கி அது ஆடும் விளையாட்டு!

நெஞ்சம் நெகிழ்கிறதே நண்பா! இப்படியும் ஒரு சோகமா?

சௌந்தர் சொன்னது…

அப்படி ஒரு உறுதியான முடிவு எடுத்த என்னை.. எது உங்களுக்கு இதனை எழுதுகிற அளவுக்கு உயிரோடு வைத்தது என்பதை நாளை சொல்கிறேன்.///

சொல்லுங்கள் அண்ணா காத்திருக்கிறோம்

அருண் சொன்னது…

வாசிக்கும்போது என் கண்களும் கலங்குகின்றன,
//எது உங்களுக்கு இதனை எழுதுகிற அளவுக்கு உயிரோடு வைத்தது என்பதை நாளை சொல்கிறேன்......//
நிச்சயம் எதிர்பார்க்கிறேன்.

வினோ சொன்னது…

பல நினைவுகள் மனதிலிருந்து மறைவதில்லை அண்ணே ..

தமிழ் உதயன் சொன்னது…

உண்மையில் உங்கள் வாழ்வு ஆயிரம் நம்பிக்கைகளை விதைத்துள்ளது எங்களுக்கு

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

நிஜ வாழ்வில்தான் எத்தனை எதிர்பாரா துயரங்கள், திருப்பங்கள்.

Unknown சொன்னது…

வாழ்க்கையில் எத்தனை துயரங்கள் எத்தனை வலிகள்!!! காலமே அனைத்திற்கும் மருந்து. கடந்த காலத்தின் அந்த முடிவு என்ன என்பதை அறிய ஆவலுடன்.......

சசிகுமார் சொன்னது…

நண்பரே படிக்கும் எனக்கே கண்கள் கலங்குகிறது, உங்களுக்கு சொல்ல முடியாது அந்த வேதனையை.

Unknown சொன்னது…

Nijam valikkum... sila samayam nijathai namba manam marukkum... varigal anaithum unarvin velippadu... adutha pathivirkaga kaathirikkiren... nantri...

கவி அழகன் சொன்னது…

வலிகளிளின் வரிகள் நண்பா
கண்ணீர்களுக்கு சொந்தமாகட்டும்

பெயரில்லா சொன்னது…

என்ன நண்பரே இப்படி அதிர்ச்சி கொடுக்கறீங்க...ம்,வாழ்வில் இதனை கடந்து வராதவர்கள் இல்லை ஆனால் உங்கள் சோகம் மனதை பிழிந்து விட்டது

♥♪•வெற்றி - VETRI•♪♥ சொன்னது…

படிக்கவே மனது வேதனைக் கொள்கிறது...!

iniyavan சொன்னது…

தலைவரே,

4 பாகத்தையும் சேர்த்து இப்போதுதான் படித்தேன். கண்கள் கலங்குகிறது. இது கதையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

என்றும் அன்புடன்,
என்.உலகநாதன்

Chitra சொன்னது…

மனதில் ஒரு வலி......

அம்பிகா சொன்னது…

சோகமாக செல்கிறது...
உருக்கமான நடை.

அன்பரசன் சொன்னது…

இன்னிக்கு கொஞ்சம் சோகமா போகுதே..

Bibiliobibuli சொன்னது…

இது ஒருவரின் சொந்தக்கதை என்று புரிகிறது. ஒவ்வொரு பதிவையும் படிக்கும் போதும் ஏதோ திருட்டுத்தனமாய் இன்னொருவரின் அந்தரங்கமான நாட்குறிப்பை படிக்கிற உணர்வு ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும், வலியை தின்று ஜீரணித்த ஓர் பக்குவம் எழுத்தில் தெரிவதால் குற்ற உணர்வு எழவில்லை.


காதல் போனால் சகலமும் போச்சு என்று தன்னை, தன் வாழ்க்கையை அழித்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு அடுத்த பதிவில் நல்ல பாடம் இருக்கும் என்று நம்புகிறேன்.

Anisha Yunus சொன்னது…

செந்தில் ண்ணா,

சிலர் வாழ்ந்த வாழ்வின் நிமிடங்களை நம்மால் கடக்க முடிகிறதே தவிற வாழ முடியாது. அப்படி ஒரு எமோஷனல் மொமென்ட்ஸ்தான் இந்த பதிவு...

vasu balaji சொன்னது…

கதையான்னு மீண்டும் ஒரு முறை பார்த்தேன். அனுபவம்னு பார்த்ததும் கலங்குது.

Madhavan Srinivasagopalan சொன்னது…

ரொம்ப பீலிங்கா இருக்கு, நண்பா.... என்ன செய்யுறது.. நாம நெனச்சது எல்லாம் நடந்துடுமா என்ன..?

//உண்மையான காதலா இருந்தா அவளுக்காக நீ செத்திருக்கணும் என்றான்..//

நல்ல ஆளுய்யா ஒங்க பெரண்டு.... ஒருத்தரு செத்துட்டா அவருக்கு/அவரை பிடிச்ச எல்லோரும் சாவரதுன்னு முடிவெடுத்தா.. இங்கிட்டு யாருமே இருக்க முடியாது..
அது இருக்கட்டும்.. அத்தனை சோகத்துக்கும் பின்னாடி நீங்க நிமிர்ந்து எழுந்த வாழ்க்கைல ஒரு நல்ல நெலமைக்கு வந்ததை கேக்குற பொது.. நல்லா இருக்குது.. உங்களோட கதை/வரலாறு, 'வாழ்க்கையே கஷ்டம்/சோகம்' ன்னு நெனைச்சு வாழுற/சாக-நெனைக்கற ஆளுங்களுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும்..

vinthaimanithan சொன்னது…

ஓடிக்கொண்டே இருக்கும் ரயில் பயணி, காட்சிகள் கடந்தபின்னால் மெல்ல அசைபோடும் அமைதி தெரிகிறது கதையில்!

//காதல் போனால் சகலமும் போச்சு என்று தன்னை, தன் வாழ்க்கையை அழித்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு அடுத்த பதிவில் நல்ல பாடம் இருக்கும் என்று நம்புகிறேன். //

காதல் போனால் சகலமும் போச்சு என்பது என்னவோ பொய்யான கருத்தாக்கம்தான். வழியும் குருதி மெல்ல உறைந்து தழும்புகளாகவும் வடுக்களாகவும் மட்டுமே எஞ்சும் என்பதும் உண்மைதான்! ஆனால் சில புண்கள் தழும்புகளாக மாறியபின்னும் எப்போதாவது கீறப்பட்டு நிணம் வடியும் என்பதும், எல்லா வலிகளும் வேறு வழியின்றித் தான் கடந்து செல்ல வேண்டியுள்ளதேயொழிய, just like that ஒதுக்கிப்போக முடியாது என்பதும்கூட உண்மைதானே!

ஆமாம்... வலிகள் எல்லாமே ஆதூரத்துடன் கவனிக்கப் படவேண்டியவை என்பதுதானே மனித இயல்பு? அதில் ஏன் எப்போதும் காதலின் வலி மட்டும் சற்று இளக்காரத்துடனேயே நோக்கப்படுகின்றது?!

எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தியே பார்க்கும்போது புரிதலுக்கான இடம் இல்லாமல் போய்விடுகிறது, இல்லையா?

கதை என்பது எப்போதும் பாடம் எடுக்கவேண்டுமா என்ன? கதைகள் அனுபவக்கடத்தலாக இருப்பதுதான் சரியெனப் படுகிறது எனக்கு! வாத்தியாராய் மாறி கையில் குச்சியுடன் பாடம் எடுக்கத் துவங்கினால் கதையோடு நெருங்க முடியும் என்று தோன்றவில்லை.

Anyway, இந்தக்கதையைப் பொறுத்தமட்டில் நல்லதொரு அனுபவக் கடத்தலாகத்தான் தோன்றுகின்றது எனக்கு! கதை தனது போக்கில் வீசிச்செல்லும் கேள்விகள் வாசகனிடமே விடைதேடும் பொறுப்பை ஒப்படைக்க முடிந்தால் கதாசிரியர் தன் தளத்தில் இன்னுமொரு படி மேலேறுவார்! வாழ்த்துக்கள்!

அலைகள் பாலா சொன்னது…

உருக்கம்.........

Bibiliobibuli சொன்னது…

//காதலின் வலி மட்டும் சற்று இளக்காரத்துடனேயே நோக்கப்படுகின்றது?!//

நான் காதலின் வலியை இளக்காரத்துடன் தான் நோக்குகிறேன் என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள்.

//கதை என்பது எப்போதும் பாடம் எடுக்கவேண்டுமா என்ன? //

அடப்பாவமே, நான் சொன்னது "பட்டறிவு". ஏன் என்னோடு சண்டைக்கு வருகிறீர்கள்?

பெயரில்லா சொன்னது…

லப் டப் சத்தம் எகிறுகிறது அண்ணா!

Sriakila சொன்னது…

அருமையானக் கதை! சஸ்பென்ஸ் வைத்து முடித்திருக்கிறீர்கள்.

வேலையாக இருந்ததால் கொஞ்சம் தாமதமாகத்தான் படிக்க முடிந்தது..

ஹேமா சொன்னது…

நேரமின்மையால் இன்றுதான் பார்க்கிறேன் செந்தில்.

மூன்று நாட்கள் வீட்டில் இல்லை.அதனால் உங்கள் தொடர்பதிவை மனம் அழுத்த அழுத்த முழுதுமாக வாசிக்கிறேன்.வாழ்வே வெறுக்கிறது தோழரே !