22 ஏப்., 2013

பாலை நிலமாக மாறப்போகும் திருவாரூர், தஞ்சை பகுதிகள்...

படம் : விஜயகுமார்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருகாலத்தில் விளங்கிய ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டம் (இப்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்) காவிரியில் கர்னாடாக கைவைத்த பின் முப்போகம் விளைந்த நிலங்கள் இருபோகமாக மாறி பின் ஒருபோகம் என்றாகி சென்ற வருடத்தில் வறட்சியில் ஒருபோகமும் வீணாகிப்போனது. பெரும்பாலான ஆற்றுப்பாசன நிலங்களுக்கு இதுதான் நிலமை என்றாலும் பணம் படைத்தவர்கள் பெரும் பொருள் செலவில் ஆழ்குழாய் கிணறுகளை தோண்டி நிலத்தடி நீரை பல இடங்களில் 800 அடி வரைக்கும் நீர்மூழ்கி மோட்டார்களைக் கொண்டு உறிஞ்சிவிட்டனர். இலவச மின்சாரம் மற்றும் தி.மு.க, அ.தி.மு.க அரசுகள் மாற்றி மாற்றி தள்ளுபடி செய்த கடன்களால் பணக்காரர்களே அதிகம் பயனடைந்தனர். இப்போது இலவச மின்சாரம் தடைபட்டதால் நிறைய நிலச்சுவாந்தார்கள் தென்னை விவசாயத்துக்கு மாறினர். இப்படியாக நமது பாரம்பரிய விவசாயத்தை நாமே குழிதோண்டி புதைத்துக்கொண்டிருந்தபோது நம்மாழ்வார் எனும் கடவுள் தோன்றி நமது பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுத்துகொண்டிருக்கும் வேளையில் மத்திய அரசு ஒட்டு மொத்தமாக அத்தனை விவசாயிகளுக்கும் ஆப்படிக்கும் வேலையை துவங்கியிருக்கிறது.

மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளடங்கிய திருவாரூர், தஞ்சை மாவட்டங்களின் விவசாய நிலங்களை மீத்தேன் படுகைகள் என அறிவித்து அவற்றை எடுப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே ஒரிஸ்ஸா, நாகாலாந்து பகுதிகளில் இயற்கை வளத்தை தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுத்த மத்திய அரசு இங்கும் The Great Eastern Energy Corporation Ltd எனும் தனியார் நிறுவனத்துக்குத்தான் உரிமம் வழங்கியிருக்கிறது.

மீத்தேன் வாயு எடுப்பதால் விளைநிலத்தில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தஞ்சை திரு.விஜயகுமார் தனது முகநூல் பக்கத்தில் விளக்கியிருக்கிறார். அது :

சோறு வேணுமா அல்ல கரி வேணுமா ?
***********************************
நிலக்கரிப் படுகை மீத்தேன் (நி.ப.மீ) என்றால் என்ன? நிலத்தடியில் நிலக்கரி இருக்குமானால், அந்தக் கரிப்பாறைகளில் உள்ள நுண்துளைகள் வழியே, கரிப்பாறைகளுக்கு அடியில் இருக்கும்மீத்தேன் வாயு ஊடுறுவி வெளிவரும். இது நிலக்கரிப் படுகை மீத்தேன்
ஆகும். (Coal Bed Methane) இங்கே நிலக்கரியை வெட்டி எடுப்பதுவேலையல்ல. கரிப்பாறை நுண்துளைகள் வழியே மீத்தேன் வளியை
உரிஞ்சி எடுப்பதே வேலை.

நி.ப.மீ எப்படி எடுக்கப் படும்?
****************************
ஆழ்துளைக் கிணறுகள் வேட்டி, முதலில் 500 முதல் 1650 அடி ஆழம் வரை உள்ள நன்னீரை அசுர நீர் இறைப்பிகளால் இறைத்து வெளியே விடுவார்கள். அப்படி இறைக்கும் போது, நன்னீருடன் உப்பு, அமிலமும், கரியும் கலந்து கெட்ட நீராக மாறிவிடும்.

அப்படி கெட்டதாக மாறிய நீரை பாசனத்திற்கும், குடிக்கவும் பயன்படும் வாய்க்கால்கள், ஆறுகள் போன்ற ஓடைகளின் வழியே வெளியேற்றுவார்கள்.

நிலத்தடியில் இருந்த நன்னீர், கெடு நீராக மாறியதொடு, வாய்க்கால், ஆறுகள், ஓடைகளில் ஓடும் நன்னீரையும் கெடு நீராக மாற்றி விடும்.

இப்படி நீரை இறைத்து வெளியேற்றியவுடன், அசுர உரிஞ்சிகளால் நிலக்கரிப் பாறைகளில் இருக்கும் நுண் துளைகள் வழியே வரும் மீத்தேனை உரிஞ்சி எடுப்பார்கள்.

இப்படி எடுக்கப் பட்ட வளியை பெருங்குழாய்கள் வழியே பிற மாநிலங்களுக்கும், சிங்களத்துக்கும், சிறிது தமிழ்நாட்டுக்கும் அனுப்புவார்கள். அந்தப் பெருங்குழாய்த் திட்டத்துக்கும் கூடுதல் நிலம் தேவைப்படும்.

நி.ப.மீயால் ஏற்படக் கூடிய கெடுதிகள் என்ன?
****************************************
விளைநிலங்கள் கரி நிலங்களாக மாறும்.
* நிலத்தடி நன்னீர் வறண்டு போகும்.
* மேலும் நன்னீர் நிலத்தடியில் வறழ வறழ, கடலோரப் பகுதி என்பதால், கடல் நீர் நிலத்தடியில் புகுந்து விடும்.
* இறைக்கப் படும் நீரால் சுற்றி வேளாண்மைக்காக ஓடும் நீர் நிலைகள் மாசு பட்டு பயனற்றுப் போகும்.
* துவக்கத்தில் 1,66,000 ஏக்கர் என்று குறிக்கப் பட்டிருக்கும் அளவில் 80 கிணறுகளையும் தோண்டி விட்டால், அந்தப் பகுதியின் நீரும் சுற்றுச் சூழலும் கெட்டு விடுவதால் மெல்ல மெல்ல வேளாண்மை மங்கும்.
* காவிரிப் பாசனப் பகுதி எங்கும் நிலத்தடியில் மீத்தேனும் நிலக்கரியும் இருப்பதாகக் கணித்திருக்கிறார்கள் என்பதால், 80 கிணறுகளுக்குப் பின்னர் அசுர வேகத்தில் 800, 8000 கிணறுகள் என்ற அளவில் அது மீத்தேன் கிணறுகள் பெருகும்.
* தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பெயர் பெற்றிருந்த தஞ்சை நெற்களஞ்சியம், கரிக்களஞ்சியமாக மாறும். இது தமிழ்நாட்டின் முதன்மையான வாழ்வாதாரத்தை அழித்து விடும்.
* மீத்தேனுக்குப் பின்னர் நிலக்கரியில் கைவைப்பார்கள். பெட்ரோலும் அங்கிருந்து வரக் கூடும்.
* வேளாண்மையை கைவிட்ட மக்கள் ஆரம்பத்தில் நிலங்களை விற்றுக் கிடைத்த காசில் சிறிது பகட்டாக இருந்தாலும் ஓரிரு தலைமுறைகளில் கரிக்களஞ்சியத்தின் கூலித் தொழிலாளிகளாய், பாலாவின் பரதேசி திரைப்படத்தில் வரும் பரதேசிகளாக ஆகிவிடுவர்.
* பசுமையான செழிப்பான மிக அகண்ட வேளாண்மைப் பகுதியில் வெட்டப்பட்ட சுரங்கங்கள், ஆழ்கிணறுகள் காலப் போக்கில் வற்றிவிட அவற்றைக் கைவிட்டு நிறுவன்ங்கள் வேறு தொழிலுக்குப் போய்விடும். பின்னர் “Abandoned Mines and deep wells” என்ற பெயரில் பயனற்று மண்மேடாகப் போகும். பல ஆயிரம் ஆண்டுகள் பச்சையாக இருந்த நிலங்கள் அரை அல்லது ஒரு நூற்றாண்டில் பாலையாக ஆகிப் போகும்.

* நிலத்தடியில் உள்ள கரிம வளங்களைப் பயன்படுத்துதல் உலக நடப்புதானே - செய்தால் தொழில் பெருகுமே என்று கருதலாமா?

தஞ்சை என்பது அடர்ந்த வேளாண் பகுதி. அந்த வேளாண்மை தமிழ்நாட்டின் அச்சாணிகளில் முதன்மையானது. தமிழ்நாட்டின் பொருளாதாரமும் தொடர்ந்த செழிப்பும் இதனூடே வருவன. ஒரு நாட்டின் வேளாண்மையும், தொழிலும் ஒன்றை ஒன்று அழிக்காமல் பெருக வேண்டும். ஒன்றை அடித்து ஒன்றை வளர்ப்பது, ஒரு கண்ணைப் பொட்டையாக்கிக் கொள்வதற்குச் சமம். வளர்ந்த மேனாடுகள் யாவற்றிலும் இந்தப் பண்பாட்டையும் கட்டுப்பாட்டையும் காணலாம்.
நி.ப.மீ திட்டத்தை ஏற்கக் கூடாததற்குக் காரணங்கள் யாவை!
*****************************************************
* வேளாண்மைக் களஞ்சியத்தை அழித்து கரிக்களஞ்சியம் கட்டுவது பொன்முட்டையை நிதமும் இடும் வாத்தை அறுத்து உடனடியாக நிறைய பொன்முட்டைகள் வேண்டும் என்பதற்குச் சமம் என்று கூறலாம்.
* அடர்ந்த, முதன்மையான வேளாண் நிலங்களை வலிந்து கரிக்களஞ்சியமாக ஆக்குவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பலனளிக்கும். ஆனால் வேளாண் களஞ்சியமோ என்றைக்கும் பலனளித்து வந்திருக்கிறது; வரக்கூடியது.

*கரிக்களஞ்சியம், தமிழ்நாட்டிற்குச் சிறிதும், பிற நாடுகள் மாநிலங்களுக்குப் பெரிதுமாகப் பலனளிக்கும். ஆனால், வேளாண் நெற்களஞ்சியமோ பெரிதாக தமிழ்நாட்டிற்கும் சிறிதாக பிற நிலங்களுக்கும் பலன் தரும். அதன் தன்மை அப்படியானது. ஆக, நெற்களஞ்சியமே 10 கோடி மக்களுக்கு அதிகம் பலன் தருவது. அந்தப் பொருளியலை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளாவிட்டால் தன் கண்ணில் தானே அமிலம் இட்டுக் கொள்வதாகவே பொருள்.

*தமிழ்நாட்டிற்குப் பிற மாநிலங்கள் தரவேண்டிய நீரளவும், நீர் உரிமையும் ஆழ்ந்த வணிக அரசியலால் தடுக்கப் பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டைச் சுற்றி உள்ள மாநிலங்களும் நாடுகளும் தமிழர்களுக்கு எதிரிகளாக உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் தொன்மையான செல்வங்கள் மருத வளமும், நெய்தல் வளமும் ஆகும். தமிழ்நாட்டு மருத வளம், நீர்ப்பங்கீட்டு ஓரவஞ்சனையால் வறட்சிக்குட்படுத்தப்படுகிறது. நெய்தல் வளம் சிங்களரால் சுட்டுக் கொல்லப்பட்டுச் சீரழிக்கப் படுகிறது. தமிழக் கடற்கரையைச் சுற்றிய கடற்பகுதிகளில் உள்ள எண்ணெய் வளங்களும் பன்னாட்டு வணிக அரசியலுக்குள் வந்து விட்டன.

ஆகவே, இந்த இரண்டு வளங்களையும் விட்டு விட்டால் பாலாவின் பரதேசிகளாய், அடிமைகளாய்த் தமிழ்க் குலம் மேலும் மாறிப்போகும். இதனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

தற்போதைய மீத்தேன் முனைப்புகளை, மன்னார்குடியில் இருந்து வடக்காகக் கோடு கிழித்து நெய்வேலியைத் தொட்டுப் பார்த்தால் இங்கே வெட்டப் படும் கிணறுகள் இறைத்து வெளியிடும் நீர் கிழக்காகத்தானே ஓடும்? மேற்குக்கு கிழக்குதான் நம்மூரில் பள்ளம்! ஆக, தற்போது குறைவாக (80) வெட்டப்படும் கிணறுகள் வெளியேற்றும் மாசு நீர் கடற்கரை வரை எல்லாப் பயிர்களையும். எல்லா நிலங்களையும், எல்லா ஊர்களையும் ஏப்பமிட்டு விடும் என்பது உண்மைதானே? அது என்ன சிறிய நிலப் பரப்பா? நாக நாடு முழுதும் காலியாகிவிடுமல்லவா? விழித்திருந்து ஏமாறலாமா? நம் விரலைக் கொண்டு நம் கண்ணைக் குத்திக் கொள்ளலாமா?
 
இத்தகைய தகவலை மக்களுக்கு தெரியப்படுத்திய சமுக சிந்தனையாளர் நாக.இளங்கோவன் அவர்களை வாழ்த்த ஒவ்வொரு தமிழனும் கடமை பட்டிருக்கவேண்டும் .

கரிக்களஞ்சியத்தை மறுத்து நெற்களஞ்சியத்தைக் காப்போம்!

உங்களுக்கு சோறு வேணுமா கரி வேணுமா முடிவு செய்து கொள்ளுங்கள் ....
இப்படிக்கு,
Vijay Kumar

தொடர்புடைய சுட்டிகள்:
 
  
Secrecy over coal based methane project fuels row

3 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

கே.ஆர்.பிஜி,

நல்ல விழிப்புணர்வு கட்டுரை,ஆனால் தமிழ்நாட்டில் இத்தகைய நிலை வர வாய்ப்பு சற்று குறைவே.

இச்செய்தி சுமார் ஒரு ஆண்டுக்கு முன்னர் ஜீவி அல்லது ரிப்போர்ட்டரில் வந்தது, அதன் பின்னர் எந்த சத்தமும் இல்லை.

கோல் பெட் மீத்தேன் எடுப்பது அனைத்து இடங்களிலும் லாபகரமாக இருப்பதில்லை, எனவே பல நிலக்கரி சுரங்களில் இருந்து மீத்தேன் எடுப்பதில்லை.

நெய்வேலி சுரங்கத்தில் இருந்து மீத்தேன் பெருமளவு கிடைப்பதில்லை, எனவே மீத்தேன் தயாரிக்க என பிளாண்ட் வைத்துள்ளார்கள், வெட்டிய கரியை சூடாக்கி பின்னர் மீத்தேன் உற்பத்தி செய்கிறார்கள்,இதனால் செலவு அதிகம் ஆவதால் பெரிய உற்பத்தி இல்லை, யூரியா தயாரிக்க மட்டுமே உற்பத்தி செய்துக்கொள்கிறார்கள்.

நிறைய நிலக்கரி படிமம் கிடைக்கும் இடத்திலே மீத்தேன் உற்பத்தி லாபகரமாக இல்லை,மன்னார் குடியில் லாபகரமாக மீத்தேன் எடுப்பது சாத்தியமல்ல, இப்பொழுது போடுவது பைலட் போர்வெல் தான், மீத்தேன் அளவை பார்த்துவிட்டு ,மூடும் வாய்ப்பு அதிகம்.

//இப்படி எடுக்கப் பட்ட வளியை பெருங்குழாய்கள் வழியே பிற மாநிலங்களுக்கும், சிங்களத்துக்கும், சிறிது தமிழ்நாட்டுக்கும் அனுப்புவார்கள். அந்தப் பெருங்குழாய்த் திட்டத்துக்கும் கூடுதல் நிலம் தேவைப்படும்.//

இதெல்லாம் மிகையானது, மீத்தேன் மலிவாக கிடைத்தால் மட்டுமே எடுப்பார்கள்,மேலும் அதன் விலை தான் இயற்கை எரிவாயுவிலேயே குறைவானது காரணம் எரிசக்தி திறன் மிக குறைவு, எனவே நீண்ட தூரம் குழாய்களில் கொண்டு சென்றால் உற்பத்தி& விநியோக செலவு கூடிவிடுவதால் அவ்விலைக்கு யாரும் வாங்க மாட்டார்கள்.ஏன் எனில் அவ்விலை எரிசக்தி அதிகமுல்ல பெட்ரோலிய இயற்கை வாயுவுக்கு சமமாகிவிடும்.

எனவே மீத்தேன் கிடைத்து ,அதனை எடுத்தாலும் சில நூறுகிலோ மீட்டர் தொலைவுக்குள் பயன்படுத்திவிடுவது வழக்கம்.

மன்னார் குடியில் மீத்தேன் எடுத்தால் திருச்சிக்கு கொண்டு செல்லக்கூடும்.

மயிலாடுதுறை குத்தாலம் அருகே மீத்தேன்/இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் மினுற்பத்தி நிலையம் அமைத்து மூடிக்கிடக்கிறது,காரணம் போதுமான மற்றும் தரமான மீத்தேன் உற்பத்தி தொடர்ந்து செய்யப்பட முடியவில்லை.

எனவே இயற்கையே காலைவாரிவிட்டு அந்த நிறுவனத்தை ஓட வைத்துவிடும் என நம்பலாம் :-))

நீங்க வேனாப்பாருங்க, மன்னார்குடி திட்டம் மூலம் பொருளாதார இழப்புனு அந்த நிறுவனம் வெகுவிரைவில் அறிவிப்பு வெளியிடும்!

Unknown சொன்னது…

வவ்வால் அண்ணே,
எவனுக்கு லாபம் இருந்தாலும், இல்லாம போனாலும் ஏற்கனவே விவசாயம் செய்கிற நிலத்தை இன்னொரு பயண்பாட்டுக்கு தாரைவார்ப்பது அயோகியத்தனம்.

வவ்வால் சொன்னது…

கே.ஆர்.பிஜி,

// விவசாயம் செய்கிற நிலத்தை இன்னொரு பயண்பாட்டுக்கு தாரைவார்ப்பது அயோகியத்தனம்.
//


என்னது அண்ணனா அவ்வ் :-((

நீங்க சொல்வது சரி தான் விவசாயம் செய்யும் நிலத்தினை இம்மாதிரியான பயன்ப்பாட்டுக்கு கொடுக்க கூடாது தான்.

இத்திட்டத்தில் அரசு கையகப்படுத்தி க்கொடுப்பதில்லை, நேரடியாக நிறுவனம் மக்களிடம் இடம் வாங்கிக்கொள்ள வேண்டும்,நம்ம மக்கள் நிலம் கொடுக்காமல் இருக்கலாம்.

அரசு தடை போட முடியாத திட்டம் இதெல்லாம்,அதுவும் இயற்கை எரிபொருள் என்றால் வாயப்பொளந்துக்கிட்டு அனுமதிக்கொடுக்கும் :-))

வெளிநாட்டில் இயற்கை எரிபொருள்/மாற்று எரிப்பொருள் திட்டம் என சொன்னால் கவர்மெண்ட் கிரான்ட்ஸ் அதிகம் கிடைக்கும் அதுக்குனே இப்படி லாபம் இல்லைனாலும் ஆரம்பிக்கிறது, மேலும் பங்கு சந்தையில் விற்று காசுப்பார்ப்பார்கள்.

கொஞ்ச நாள் கழித்து மூடிவிட்டு ஓடிவிடுவார்கள்.

இது போன்ற தனியார் திட்டங்களுக்கு நிலம் கேட்டு வந்தால் ,மக்களே இல்லை என சொல்லக்கற்றுக்கொள்ள வேண்டும் அது தான் இருப்பதிலே சிறந்த வழி.