31 மார்., 2010

ரங்கநாதன் தெரு - அங்காடித்தெரு அல்ல


சென்னை தி.நகரில் வசிக்கும், அதுவும் உஸ்மான் சாலையை வசிக்கும் மக்களில் ஒருவராக கடந்த ஐந்து வருடமாக வாழும் சூழல் ஏற்பட்டது எனக்கு. எப்போதும் மக்கள் கூட்டத்தால் பிதுங்கி வழியும் ரெங்கநாதன் தெருவுக்கு செல்வதென்றால் பெரும்பாலும் தவிர்க்க முயற்சி செய்வேன். பொதுவாகவே கூட்டமான இடங்களை பிடிக்காது. ஆனால் நள்ளிரவுக்குப்பின் பேருந்து நிலையம் வரைக்கும் நடந்து வருவேன். அப்போது பெரும்பாலும் மயான அமைதி நிலவும். பகலில் அத்தனை மக்களும் நிரம்பிய வீதி, நள்ளிரவில் வறண்ட நதியென காட்சியளிக்கும்.


பண்டிகை காலங்களில் எங்களால் எங்கள் வாகனத்துடன் தெருவுக்குள் நுழைய முடியாது பெரும்பாலும் காவல்துறையுடன் சண்டைபோடவேண்டிவரும். ஆனால் என் உறவினருக்கும், நண்பர்களுக்கும் என் வீடு அங்கிருப்பது வசதியாக இருப்பதால், எப்போதும் விருந்தினர்கள் வீட்டில் இருப்பார்கள், விஷயம் இது பற்றியது அல்ல.

அங்கு தெருவில் கடைவைத்திருப்போர் பற்றியது, என்னதான் மலிவு விலையில் கடைகளில் பொருட்கள் கிடைத்தாலும் அதைவிட மலிவாக நடைபாதை கடைகளில் கிடைக்கும், என்ன பேரம் பேசி வாங்கத்தெரியவேண்டும். ஆனால் காவல்துறை உயர் அதிகாரிகள் வரும்போது அவர்களின் துயரம் சொல்லிமாளாது. பொருட்களை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓடி ஒளிவார்கள். நடைபாதை கடைகள் சட்டவிரோதமாக இருக்கலாம், ஆனால் அதைக்கொண்டுதான் அவர்கள் குடும்பம் வாழ்கிறது.

எனக்கு தெரிந்து அந்த தெருவில் அதிகம் சம்பாதிப்பது பிச்சைகாரர்கள்தான், விதவிதமான பிச்சைகாரர்களை அங்கு பார்க்கமுடியும், ஆனால் கை,கால்களின்றி மொட்டை வெயிலில் கிடக்கும் பிச்சைகாரர்கள் மனதை பிசைவார்கள், இவர்களை யார் தூக்கி வருகிறார்கள், எங்கிருந்து கொண்டுவருகிறார்கள் எனதெரியவில்லை. ஆனால் மூன்று மணிக்கு ஒரு தடவை ஆளை மாற்றிவிடுவார்கள்.

இரவுகளில் ரயில் நிலையத்தை ஒட்டி இருக்கும் காய்கறி அங்காடிக்கு செல்வேன், தெருவில் விற்கப்படும் கீரைகள் நேரம் ஆக ஆக விலை குறைந்து சமயத்தில் ரூபாய்க்கு இரண்டு கட்டுகள் கிடைக்கும். இரவு 9 மணியானவுடன் ராமேஸ்வரம் தெரு வழியாக ரெங்கநாதன் தெருவின் கடைகளுக்கு சிறிய வகை லாரிகளில் சரக்குகள் வர ஆரம்பிக்கும், அப்போது அங்கு ஏற்படும் நெரிசல் சொல்லிமாளாது, மருந்துக்குகூட ஒரு காவல் அதிகாரியை அங்கு பார்க்க முடியாது.

அந்த நேரத்தில்தான் கடைகளில் வேலை செய்யும் பெண்களும், ஆண்களும் இரவு உணவுக்காக ராமேஸ்வரம் வீதியில் ஒரு ரயில் வண்டியைபோல் நடந்து செல்வார்கள், அப்போது அவர்கள் முகத்தில் இருக்கும் சொல்ல இயலா துயரங்கள் ஆயிரம். சில நண்பர்களின் வற்புறுத்தலுக்காக அவர்களுடன் அங்கிருக்கும் கடைகளில் பொருட்கள் வாங்க சென்றிருக்கிறேன், அங்கு வேலை செய்யும் அனைவரும் ஒரு எந்திரத்தனமாய் வேலை செய்வதை பார்த்து நிறைய பேர் அவர்களை திட்டுவதுண்டு, அவர்களை அப்போது விசாரிப்பேன் திட்டினால் கூட பரவாயில்லை அண்ணே, எங்களைப்பற்றி கண்காணிப்பாளரிடம் புகார் செய்துவிட்டு போய்விடுகின்றனர் அதுதான் பயம் என்றனர். அப்போது எனக்கு புரியவில்லை.

அங்காடித்தெரு பார்க்கும்வரை கிட்டத்தட்ட ஐந்து வருடம் அங்கு வாழ்ந்த நான் அங்கு வேலை செய்த சகோதர சகோதரிகளை பற்றி தெரியாமல் இருந்தது பற்றி வெட்கபடுகிறேன், இப்போது விசாரித்தால் படத்தில் காட்டியது அத்தனையும் கற்பனை அல்ல என்கின்றனர். வசந்தபாலனை பாராட்டுவதா? இல்லை அங்கு இன்னமும் துயருறும் மக்களுக்காக அழுவதா?..

"கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை ... "

30 மார்., 2010

"என் மகன் ரசிக்கும் ரயில்"

தியாகராயா நகரின் ராமசாமி சாலையில் கடந்த ஐந்து வருடமாக வசித்து வந்த எனக்கு அடிக்கடி விமான நிலையம் செல்லவேண்டி வரும், இரவானால் ரயிலில்தான் செல்வேன், எப்போதும் மக்களின் அடர்த்தியில் திணறும் ரங்கநாதன் தெருவை நள்ளிரவின் பின்னே பார்க்க பிடிக்கும்.
சில மாதங்களுக்கு முன் என் மகன் அகில் ஆதித்தனை அவனின் ஆறுமாத நச்சரிப்புக்குபின் ரயிலில் கூட்டிசென்றேன், அவனின் ஆர்வம், கேள்விகள்.. பதில் சொல்லி மாளவில்லை என்னால். இன்றுவரை அவன் அடிக்கடி கேட்கும் கேள்வி மீண்டும் எப்போது ரயிலில் போகலாம்?..

என்னுடைய முப்பத்தி ஒன்றாம் வயதில்தான் ரயிலில் செல்லகூடிய வாய்ப்பு கிடைத்தது, சென்னையில் இருந்து டெல்லிக்கு வியாபார நிமித்தமாக நானும் நண்பர்கள் இருவரும் சென்றோம். பகலெல்லாம் ரயில் வண்டியின் கதவை திறந்து வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். ஆந்திரா தாண்டியதும் இரு பக்கங்களும் தெரிந்த வெறுமை எனக்கு வேறொரு இந்தியாவை அறிமுகம் செய்தது.

இரவானதும் எனக்கு பக்கத்து இருக்கையில் வந்த இரு ஆண்களும், ஒரு பெண்ணும் தரையில் தூங்க இடம் தேடினர், அவர்களை விசாரித்தபோது RAC யில் வந்தோம் பரிசோதகர் இன்னும் இருக்கை ஏற்பாடு செய்யவில்லை என்றனர். அந்த பெண்ணிற்கு எனது இருக்கையை தந்து தூங்க சொல்லிவிட்டு நான் மீண்டும் படிக்கட்டில் வந்து அமர்ந்துகொண்டேன். நேரம் ஆனதும் ஒரு ஐந்து பேர் எனது அருகே வந்து அவர்களுக்குள் உரையாடினர். திடீரென பேச்சு என்பக்கம் திரும்பியது,என்னைப்போல் ஆட்கள்தான் ரயிலில் திருடுவார்கள் எனவும், ரயில் நிற்கும்போது ஏறிவிடுவது பின் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடுவார்கள் எனவும், நிச்சயம் ஒரு குழுவாகத்தான் நாங்கள் வந்திருப்போம் எனவும் ஆங்கிலத்தில் பேசினர். அப்போது அவர்களுள் ஒருவர் வைத்திருந்த பாட்டிலை திறக்க உற்சாக பானம் சாப்பிட ஆரம்பித்தனர்.

அதுவரை அமைதி காத்த நான் பேச ஆரம்பித்தேன். நான் யார் என்ன காரணத்திற்காக இங்கு அமர்ந்திருக்கிறேன் என்றும். என்னைப்பற்றி பேசிய நீங்கள் செய்யும் செயல் எந்த விதத்தில் சரி என்றேன். என்னுடையா ஆங்கிலத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை, லுங்கியில் இருந்த நான் அப்படி பேசியதும், அவர்கள் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர்.

சென்னை தாண்டியவுடன் சொல்லிவைத்த மாதிரி அத்தனை பேரும் ஹிந்திக்கு மாறியது எனக்கு ஆச்சர்யம், மேலும் நான் பார்த்த மனிதர்கள், அவர்களின் நடவடிக்கைகள், பொதுவான அலச்சியம், சுத்தமின்மை என்னை வேறு உலகிற்கு இட்டுசென்றிருந்தது. அந்த ரயில் பயணம்தான் இந்தியா பற்றிய புரிதலை எனக்குள் ஏற்படுத்தியது. சொல்லபோனால் தமிழகத்தில் ஜாதீய ரீதியில் எப்படி வேறுபடுத்தி பார்க்கபடுகிறோமோ, அதைப்போலத்தான் தமிழகம் தாண்டியதும் மாநில வாரியாக பார்க்கபடுகிறோம், அதிலும் வட இந்தியர்களுக்கு பொது நாகரீகம் இம்மியளவும் இல்லை.

அதன் பிறகு விலை மலிவான விமான பயணங்களால், ரயில் பிரயாணங்கள் கிடைக்கவில்லை. சமீபத்தில் சென்னை மாம்பலத்தில் இருந்து மீனம்பாக்கம் சென்றபோது, பயண சீட்டில்லாமல் வந்த ஒருவரை பரிசோதகர் விரட்டினார். அவர் ஓடும் ரயிலில் பயந்து ஓடி வந்து ஏறியபோது தடுமாறி கீழே விழப்போனார் படிக்கட்டில் நின்றவர்கள் அவரை காப்பாற்றினார்கள். அடுத்த பெட்டியில் ஏறிவிட்ட பரிசோதகரும் அவரைப்பிடிக்க எங்கள் பெட்டிக்கு வந்தார், அப்போது பயந்து தடுமாறிய நபரை, நான் பயப்படாதீர்கள் உங்களுக்காக நான் அபராதம் கட்டுகிறேன் என நிற்கவைத்தேன். அருகில் இருந்த அனைவரும் பரிசோதகரை கடுமையாக திட்டினார்கள், என்ன நினைத்தாரோ அவரும் எதுவும் பேசாது அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்றுவிட்டார்.

கோடி கோடியாக அடித்தவன் எல்லாம் சொகுசாய் வாழ, ஒரு பயணசீட்டு வாங்க முடியாதவரை துரத்தும் அரசு. சமயத்தில் எனக்கு இந்தியன் என சொல்லிகொள்ளவே அருவருப்பாக இருக்கிறது, எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் பிடிக்கும், ரயிலை ஏனோ எனக்கு பிடிப்பதே இல்லை. அடித்தட்டு மக்களின் துயர பாடலை அதில் கேட்டு கேட்டு கையாலாகாத இந்த பதிவனுக்கு எப்படி பிடிக்கமுடியும் ரயில்களை. ரயில் பயணத்தில் நான் பார்க்கும் வெறுமை படர்ந்த முகங்கள், அலுவலகங்களின் அவசரத்திலும் நடக்கும் ஏலசீட்டுகள், சிறு வியாபாரிகளின் வியாபார பதட்டம், ரயிலின் சுவர் முழுதும் ஒட்டியிருக்கிற ஏமாற்று விளம்பரங்கள், வயோதிகர்களும், பெண்களும், குழந்தைகளும் நிற்க பொறுப்பற்று இருக்கையில் அமர்ந்திருக்கும் இளயோர்கள், ஏன் எனக்கு மட்டும் இப்படி இந்த பாசாங்கு வாழ்க்கையை ஏற்க முடியவில்லை?

புரச்சிகளாலும், போராட்டங்களாலும் அடைந்த தேசத்தை புல்லுருவிகள் ஆள அனுமதித்துவிட்டு, சாலை ஓரங்களில் வாழ பழகிக்கொள்ளும் மக்களாய், ராம் சொல்வது போல் அடிமையை வாழும் என் போன்றோருக்கு ரயில் பிடிக்காதுதான். எப்படி விளக்குவேன் என் பையனுக்கு ரயிலின் துயரத்தை....

அவன் நேசிக்கும் ரயில்கள் அவனிடமே இருக்கட்டும்......