30 ஏப்., 2010

எங்கே போகிறது இந்தியா?


பழங்கால இந்தியாவை விட்டுவிடுவோம், அங்கிருந்து ஆரம்பிக்க இது வரலாற்று கட்டுரை இல்லை..

சமீப காலமாக வரும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்திகள் என்னை வெகுவாக பாதித்துக் கொண்டிருக்கிறது , முன்னெல்லாம் இடம்பெறும் கைதுகள் சில லச்சங்களுடன் இருக்கும்,இப்போது ஒரு கைதில் கைப்பற்றிய தொகை மட்டும் ரூபாய் ஆயிரத்து எண்ணூறு கோடி, அதற்கும் முன்பு பேசப்பட்ட ஐ.பி.எல் ஊழல் இன்னும் நீள்கிறது, சாதாரண அடித்தட்டு , மற்றும் நடுத்தர மக்கள் அம்பதுக்கும், நூறுக்கும் அல்லல்பட விலைவாசிகளும் உச்சத்துக்கு போய் வாழ்வே கேலிப்பொருளாக மாறிப்போன நிலையில், இத்தனை ஆயிரம் கோடி சில தனி மனிதர்களிடம் சென்று சேர்ந்துள்ளதை அறிகையில் வெறுப்பாகத்தான் இருக்கிறது.

எப்ப நம்ம தொகுதி எம்.எல்.ஏ சாவான் என எதிர்பார்க்கும் கூட்டமாய் மாறிப்போன நமக்கு,  நம் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என நினைக்கையில் பெரும் கவலை அளிக்கிறது. மத்திய அரசாங்கம் விலைவாசி உயர்வை பற்றியும், நக்சலைட்டுகளையும் பற்றி பேசாமல் சசிதரூர் , லலித்மோடிக்கும் உள்ள பிரச்சினைகளை பெரிது பண்ணுவதில் குறியாக இருக்கிறது, இன்னொரு பக்கம் அமேரிக்கா என்ன சொன்னாலும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டும் பிரதமர், காலடியில் ஈழத்தில் வந்து அமர்ந்து விட்டான் சீனன், மீன் பிடிக்க போனவன் பிணமாய் வருகிறான், அவர் மீன் பிடிக்கும் உரிமையை கூட தனியாருக்கு விற்க முயற்சி செய்யும் மத்திய அரசு.

மாநிலத்தில் மகன்களுக்கு பதவிகளை பிரித்து கொடுப்பதிலும் , வசனம் எழுதுவதிலும் கவனம் செலுத்தும் பெரியவர், சினிமாகாரர்களை வாழவைக்க செலவிடும் தொகையில் ஒரு பகுதியை தன் சொந்த வருமானத்தில் இருந்து கொடுக்கவேண்டியதுதானே. எல்லாம் யார் வீட்டு சொத்து, சினிமா தொழிலாளர்கள்  போலவே எத்தனையோ ஏழை ஆட்டோ ஓட்டுனர்களும், ரிக்சா இழுப்பவர்களும், தெருவோர வாழ்க்கை வாழ்வோரும், விவசாய கூலிகளும் உள்ளனர். அவர்களுக்கு வந்ததெல்லாம் இலவச தொலைக்கட்சிதான், வரும் வருமானத்தில் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு கலைஞர் தொலைக்கட்சியில் மானாட மயிலாட பார்த்துவிட்டு குப்புற அடித்து தூக்கம்தான்.

மக்களை சீரழிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை அடியோடு ஒழிக்காமல் வேடிக்கைபார்க்கும் பிரணாப் , ஒரு நாளைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்து, தெருவோர உணவகத்தில் சாப்பிட்டு , ரேஷன் கடை கியூவில் நின்று இரவு மின்வெட்டில் தூங்கினால் தெரியும், இங்கு ஒவ்வொரு மக்களும் படும் சிரமத்தை. சின்ன மொதலாளி ராகுல் காந்தி சாப்பிட்டு போட்டோ எடுதுக்கிறாரே அது மாதிரி இல்லை, நிஜமாவே ஒரு நாளைக்கு சாதாரண மக்களை போல் வாழ்ந்து பாருங்க.

அப்புறம் மக்களே நமக்கு இருக்கவே இருக்கு, தாத்தா, பேரன்களின் மற்றும் சகோதரி, கேப்டன் இன்னபிற தொலைக்கட்சிகள் சீரியலுக்கு அழுதுவிட்டு, ஆட்டத்துக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு வேலை முடிந்து வந்தவனும் செல்லமே பாத்துவிட்டு , பிள்ளைகளுக்கு கிடைக்குது வகை வகையாய் ஜன்க் புட் ,  வாங்கி கொடுத்தா கிடைக்கும் ஆசுபத்திரி செலவுக்கு காப்பீட்டு திட்டங்கள் இருக்க, நமக்கென்ன  ....... போச்சு. எல்லாருக்கும் உள்ளதுதானே நமக்கும்.

போங்க புள்ளை குட்டிகளை படிக்க வைங்கன்னு சொல்ல முடியாது , ஏன்னா அது விக்கிரமதித்யன் வேதாளத்த பிடிக்கிற கதை,  எல்.கே.ஜி க்கு அப்புறம் ஐ.ஏ.எஸ் போறமாதிரி எது புள்ளைகளை உருப்புடாம அடிக்குமோ அதுல பெருமைக்கு சேத்துவிட்டு அதுக்கு கட்ட வட்டிக்கு வாங்கி, கொடுத்தவனுக்கு பயந்து அறைக்குள் புலம்பும் ஆட்கள் நாம்.

இப்படியே போனா மொத்தமா அமெரிக்கவோ, சீனாவோ நம்மளை குத்தகைக்கு எடுத்து எல்லாத்துக்கும் காசு கேப்பானுவோ, அப்ப நம்ம சிங்குகளும், பேரன்களும், சோனியா, சிதம்பர வகையறாக்கள் பகுதி குத்தகை வசூலிப்பார்கள். சொல்றத சொல்லிட்டேன்.

இருங்க ஒரு அழைப்பு வருது :// ஹலோ // , //சொல்லு எந்த பாருக்கு//, //அப்படியா இன்னும் அஞ்சு நிமிசத்துல அங்க இருப்பேன்//

மக்களே ஒரு ஒசிகுடி இருப்பதால் அடுத்த பதிவில் சந்திக்கலாம். வரட்டா????.

முகமற்ற உறவுகள்

பூரணி 
எனக்கு இணையத் தோழி 
சாட்டிங் அலுத்துப்போய் 
தொலைபேசிக்கு
மாறிக்கொண்டோம் 
மணிகணக்கில் நீளும் 
பேச்சில் 
எல்லாமும் இருக்கும்.

இருவருக்கும் 
இருந்த சந்திக்கும் 
விருப்பங்கள் 
வருடங்களை விழுங்கின
சில மாதங்களாய்..,
தொடர்புகளின் 
எல்லைக்கு வெளியே  
அவளது எண்,
உபயோகத்தில் இல்லை 
என்னுடைய எண்..  

சமீபத்தில் ஒரு நாள் 
தஞ்சைக்கு போனபோது 
பெரிய கோவில் 
பிரகாரத்தில் 
குடும்பத்துடன் அமர்ந்து
குழந்தைகளுக்கு 
கதை சொல்லிய குரல் 
கேட்ட மாதிரி இருந்தது?

கருவூரார் சன்னதியில் 
நான் பேசிகொண்டிருந்தபோது 
நீங்கள் செந்திலா?
என விசாரித்த அவளிடம் 
இல்லை என 
ஏன் சொன்னேன்?...

29 ஏப்., 2010

விஜய் - பயோடேட்டா


பெயர்                                            : இளைய தளபதி 
இயற்பெயர்                                 : ஜோசப் விஜய் 
தலைவர்                                       : இன்னும் கட்சி ஆரம்பிக்கல 
துணை தலைவர்                       : இபோதைக்கு எஸ்.ஏ.சந்திர சேகர்  
மேலும் துணை தலைவர்கள் :எதிர் காலத்தில் மகன்,மனைவி, அம்மா 
வயது                                             : முதல்வர் ஆகும் வயதல்ல 
தொழில்                                        : நடிப்பு,விநியோகம், 
பலம்                                              :  வசூல் ராஜா 
பலவீனம்                                     : காசு கொடுத்தால் பேச்சு 
நீண்ட கால சாதனைகள்     : ஒரே மாதிரி நடிப்பு 
சமீபத்திய சாதனைகள்        : சன் டிவி காப்பாற்றுகிறது   
நீண்ட கால எரிச்சல்           : நான் ஹீரோதாங்க ...
சமீபத்திய எரிச்சல்               : தொடர்ந்து  தோல்வி 
மக்கள்                                       : இன்னுமா நம்பள நம்புறாங்க    
சொத்து மதிப்பு                       :  படத்துக்கு 5 கோடி மற்றும் விநியோகம், திருமண மண்டபம், தியேட்டர் மற்றும் பல...
நண்பர்கள்                                : தெலுங்கு படம் எடுப்பவர்கள் (ரீமேக் செய்ய உதவுது  )
எதிரிகள்                                    : பதிவர்கள் ( நான் மட்டுந்தான் மோசமா நடிக்கிறேனா?) 
ஆசை                                         : முதல்வர் ஆக 
நிராசை                                      : ராகுல் கண்டு கொள்ளாதது  
பாராட்டுக்குரியது                 : தேடித்தான் பார்க்கணும்...
 பயம்                                            : சுறாவாச்சும் ஓடுமா ?.
கோபம்                                       : சைலன்ஸ்... பேசிட்டிருக்கோம்ல
காணமல் போனவை            : பன்ச் டயலாக்குகள்  
புதியவை                                   : என் மகன் நிச்சயம் அரசியலுக்கு வருவான் (விஜய் அப்பா)
கருத்து                                        : நான் ஒரு தடவ முடிவு பண்ணா, அந்த படத்த சன் டிவிக்கே வித்துடுவோம்  
டிஸ்கி                                         : அது எப்புடிங்க ஒரே பார்முலாவுல இத்தனை படம் பண்ண முடியுது ?

28 ஏப்., 2010

ஒன்றைப் பகிர்தல்

நாம் நிறைய பகிர்ந்து 
கொண்டோம்
மகிழ்ச்சியை,
வருத்தங்களை, 
கோப்பைகளை 
அவைகளில் பேதங்கள் 
அறியப்படவில்லை 
நீ பகிர்ந்த ஒன்றை 
ஒருமுறை 
நானும் பகிரும் வரை ...

நாம் நிறைய பகிர்ந்து 
கொண்டோம் 
நம் புரிதல்களை,
அவற்றின் சில பக்கங்களை 
அருவெறுப்பு என 
நம்மை 
பிடிக்காதவர்களிடம் ...

நாம் நிறைய பகிர்ந்து 
கொண்டோம் 
நாம் 
பகிர்ந்து கொண்ட ஒன்றை 
வேறொன்று 
பகிர்ந்ததை அறிந்து 
அது 
நாங்களும் பகிர்ந்ததென ...

நாம் நிறைய பகிர்ந்து 
கொண்டோம் 
வருத்தங்களை 
சந்தோசங்களை 
கோப்பைகளை 
அந்த ஒன்றையும் ....
அதன்பின் 
ஒவ்வொன்றையும் ....

கேரளா கபே - பார்க்க வேண்டியபடம்



இந்தப்படத்தை ரஞ்சித் தயாரித்து, இயக்கியுள்ளார் , மொத்தம் பத்து கதைகள், பத்து இயக்குனர்கள் மொத்த கதைகளும் சுஜாதாவின் சிறுகதைகளை படித்த மாதிரி இருக்கும், அதில் நான்கு நம்ம யூத் கேபிளின் நிதர்சனக் கதைகள் மாதிரி இருக்கும்.

நாஷ்ட்டல்ஜியா - துபாயின் ஒரு அடுக்காக வீட்டில் ஊருக்கு கிளம்புமுன் நண்பர்களுக்கு அளிக்கும் மது விருந்துடன் ஆரம்பிக்கும், திலிப் ஊருக்கு குடும்பத்துடன் வந்து தன் பூர்விக வீட்டை விற்று பெற்றோர்களை காப்பகத்தில் விட்டுவிட்டு, மீண்டும் ஊருக்கு வரும்வரை உதவும் தன் நண்பன் கேட்கும் மூன்று இலட்சத்தையும் அவருடைய வங்கி கணக்கு அனுப்புவதாக சொல்லிவிட்டு செல்வார், அதன் பிறகு வருபவை அக்மார்க் வெளிநாட்டுகாரன் காமெடி, நவ்யா நாயர் உடன் நடித்திருப்பார், நடுவழிகள் எனும் கவிதையை தழுவி எடுக்கப்பட்ட கதை.,இயக்கம் :பத்மகுமார், ஒளிபதிவு :அணில் நாயர்
  
ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் - இதில் பிரித்விராஜ் பேசும் ஆரம்ப வசனங்கள் நன்றாக இருக்கும், மேலும் ரகுமான் பற்றிய காட்சி அமைப்பு கவிதை, ஒரு கடந்த கால ரயில் விபத்தில் தன் உறவுகளை இழந்த அனைவரையும் தனித்தனியான கோணத்தில் படம் பிடித்து இருப்பார்கள். கீது கிறிஸ்டி பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பார்.
இயக்கம்& எழுத்து : சங்கர் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு : குமார் 

லலிதம் ஹிரன்மயம் - முக்கோண காதல் கதை, சுரேஷ் கோபி, ஜோதிர் மயி, தன்யா மூவரும் நடித்திருக்கின்றனர், வசனங்களும், காட்சி அமைப்பும் அருமை, 
எழுத்து: ராஜேஷ் ஜெயராமன், இயக்கம்: சாஜி கைலாஷ் ஒளிப்பதிவு: சுஜித் வாசுதேவ் 

ம்ரிடியுன்ஜயம் - அற்புதமான த்ரில்லர், தன் முதல் சந்திப்பிலேயே தன்னை திருமணம் செய்துகொள்ள முடியுமா? எனக்கேட்பதும் அதற்க்கு அவள் உன்னால் எப்படி கேட்கமுடிந்தது என விருப்ப பார்வையுடன் அவனை கேள்விகளால் துளைப்பது இதை ஒரு தனிபடமாகவே எடுக்கலாம். திலகனை தவிர மற்றவர்களை தெரியவில்லை. இந்த குழுவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
கதை:அகமத் சித்திக் இயக்கம்: உதய் அனந்தன் ஒளிப்பதிவு: ஹரி நாயர் 

ஹாப்பி ஜர்னி - ஜெகதி ஸ்ரீகுமார் ஒரு சபல ஆசாமி, ஒரு பேருந்து பயணத்தில் இவரின் பக்கத்து இருக்கையில் மாட்டிகொள்ளும் பெண் இவரை சமாளிக்கும் விதம் அருமை, ஒரு த்ரில்லரை போல் நகர்ந்தாலும் நல்ல கதை. இந்த சம்பவத்துக்கு பிறகு ஜகதி நடந்துகொவது சிரிப்பை வரவழைக்கும்.
கதையும் இயக்கமும்: அஞ்சலி மேனன், ஒளிப்பதிவு:ராதா கிருஷ்ணன் 



அவிராமம்: சித்திக், ஸ்வேதா மேனன் இருவரும் நடித்திருக்கின்றனர், கடன் தொல்லையால் அவதிப்படும் சித்திக் குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுப்பார். முடிவு நல்ல திருப்பம். ஒரு அழகான குடும்பம் சிதறிவிடபோகிறதே எனும் பதட்டம் நமக்குள் வரும்.
கதையும் இயக்கமும்: உன்னிகிருஷ்ணன் ஒளிப்பதிவு: ஷம்டட்.

ஆப் சீசன் - காமேடிக்கதை, ஆனால் ஒரு போர்த்துகீசிய தம்பதியர்களை வைத்து பின்னியிருப்பார்கள். நல்ல திரைகதை.
கதை: ஜோஸ்வா நியுட்டன் இயக்கம்:சியாம் பிரசாத் ஒளிப்பதிவு: அழகப்பன்.

பிரிட்ஜ் - நெஞ்சை உருக வைக்கும்  கதை, தாயை இழந்த சிறுவன் பூனைகுட்டியிமேல் அன்பு, காட்டுவதும். தாயை பராமரிக்க முடியாமல் நகரத்தில் ஒரு திரைஅரங்கில் விட்டுவிட்டு வரும் ஒரு மகனின் போராட்டமும் அற்புதமான சித்தரிப்பு. முடிவு நம்மை வெகு ஆழத்திற்கு இட்டுசெல்லும் 
கதை: உன்னி இயக்கம்: அன்வர் ரசீத் ஒளிப்பதிவு: சுரேஷ் ராஜன் 


மகள் - இது இன்னொரு நெஞ்சை நெகிழ வைக்கும் கதை, வறுமைக்காக தத்து கொடுப்பதாக விற்ற பெண் எங்கு போகிறாள் எனும் முடிவு நம்மை பதறசெய்யும். கதையின் துவக்கமே ஒரு சிறுவனை பார்த்து யாரு பாண்டி புதுசா எனகேட்பதில் ஆரம்பிக்கும், வறுமையால் தென் தமிழக குழந்தைகள் எப்படி சீரழிகிறார்கள் எனகாட்டியுள்ளனர்.
கதை:தீதி தாமோதரன் இயக்கம்:ரேவதி ஒளிப்பதிவு:மது அம்பாட்

புறம் கழச்சல் - நேர்த்தியான திரைகதை, ஒளிப்பதிவு, இயக்கம்,நடிப்பு என எல்லாம் சம பங்கு இருக்கும் படம், சீனிவாசனும், மம்மூட்டியும் நடித்திருப்பார்கள். நேர்த்தியான முடிவு 
கதை:ஸ்ரீராமன் இயக்கம்:லால் ஜோஸ் ஒளிப்பதிவு: விஜய் உலகநாதன் 

ஆரம்ப காலத்தில் நல்ல படங்களை மட்டுமே தந்த மலையாள படவுலகினர், இடையில் மசாலா படங்களுக்குள் மாட்டிகொண்டனர், ஆனால் இது போன்ற அவர்களின் முயற்சிகள் மீண்டும் நல்ல படங்களை தரும் என நம்புவோம். எனக்கு மலையாளம் தெரியாது. அதனால் என்ன நல்ல படைப்புகளுக்கு மொழி தேவையில்லை என்பதே எனது கருத்து.

27 ஏப்., 2010

நாய்பிழைப்பு

தெரு நாய்களுக்கு லைசன்ஸ் இல்லை 
முதலாளிகளும் இல்லை 
கிடைத்தவற்றை சாப்பிடும் 
கொடுப்போருக்கு வாலாட்டும் 
தான் வாழும் தெருவை 
தன் உலகமாக கருதும்
பக்கத்து தெரு நாய்கள் நுழைந்தால் 
பஞ்சாயத்துகள் நடக்கும் 
சமயங்களில் சண்டைகளில் முடியும் 
கூட்டமாய் வாழும் 
கார்த்திகை மாதங்களில் 
எல்லோரும் முகம் சுளிக்க அல்லது 
ரகசியமாய் ரசிக்கும்படி 
தெருவிலேயே கூடும் 
பின் 
குட்டிகள் நிறைய போடும் 
வாகனங்களில் அடிபட்டு  செத்தது போக 
சில ஊனங்களும் உண்டு.
நள்ளிரவுக்குப்பின் யாரும் வந்தால் 
ஊரையே கிளப்பும் 
அடிக்கடி சிலரை கடித்தும் விடுவதால் 
நாளிதழில் செய்திகளாய் வரும்.
மறுநாள் மட்டும் வரும் 
கார்பரேசன் ஆட்கள் 
கிடைத்தை பிடித்து போவர்.
காயடித்து விடுவதாய் சொன்னாலும் 
போனவை திரும்பியதில்லை 
நன்றியின் இலக்கணம் வளர்ப்பு நாய்கள்
மட்டுமே.
தெரு நாய்கள் சனியன்கள்..