30 ஆக., 2013

அறச்சீற்றம்...

யாருடனாவது சண்டை போட்டுவிட்டு திடீரென ஏதாவது ஊருக்கு பயணப்பட்டு இருக்கிறீர்களா? அப்போது என்ன மாதிரியான சிந்தனை தோன்றும் உங்களுக்கு? வாழ்வின் முடிவை நோக்கிய இறுதிப்பயணமாக முடிவு செய்துவிட்ட பயணத்தை துவங்குவதற்கு சற்று முன்பாக இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஏன் நான் வாழ்வை முடித்துக்கொள்ளவேண்டும்?, ஒரு சன்னியாசியாக உலகை துறந்து வாழலாமே என்று கூட தோனியது. ஆனால், யாருக்காக? எதற்காக எனது வாழ்வை சாமியாராக நீட்டிக்க வேண்டும்?. காரனமற்ற வாழ்வை ஒரு பிச்சைக்காரனைப்போல வாழ என்னால் முடியாது. அது கொடுமை. எல்லோரிடமும் இறைஞ்சி வாழ என்னால் ஆகாது. இப்போது மட்டும் என்ன மாதிரியான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறாய் என மனசாட்சி கேள்வி கேட்கிறது. அதனை குப்பையில் போட்டுவிட்டு நான் முடிவில் உறுதியாய் இருக்கிறேன். இருப்பேன். இப்போது கூட இருத்தலைப்பற்றியே எழுதும் என் மனதை என்ன செய்து வழிக்கு கொண்டுவர!.

சண்டைக்கான காரனங்களை விடுங்கள். இப்படி ஒரு கடைசி கடிதத்தை யாராவது எழுதியிருப்பார்களா? அனேகமாக ”என் தற்கொலைக்கு யாரும் காரனமில்லை” என ஒற்றை வரியில் யாராவது எழுதியிருக்கலாம். நான் தற்கொலை செய்துகொள்ளப்போவதில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை. குழப்புகிறேனா? மேற்கொண்டு படிக்க எரிச்சலாக இருந்தால் மூடிவிட்டு வேறுவேலை பாருங்கள். என் கதையை கேட்டு என்ன ஆகிவிடப்போகிறது. யாரிடமாவது உச் கொட்டியபடி விமர்சனம் செய்ய உதவலாம்.மேலும் நான் என் சண்டைக்கான காரனத்தை சொல்லப்போவதும் இல்லை என்பதால், நீங்கள் தராளமாக டிவியில் சீரியல் பார்க்கலாம். இல்லை தொடர்ந்து படிப்பேன் என்பவர்கள் பாவம் செய்தவர்களாக கடவீர்கள்.

பொதுவாகவே பெரும்பாலோர் என்னுடைய நிலமையை கடந்து வந்திருப்பவர்களாக இருப்பீர்கள். சமயங்களில் நம் கையாலாகாத்தனத்தை சகிப்புத்தன்மை எனும் லேபிள் ஒட்டி மறைத்துவிடுவோம். இதற்கு முன்பெல்லாம் என் முடிவுகளை மாற்றுவது அரசியல்வாதிகளுக்கு வைக்கப்படும் போஸ்டர்கள்தான். அந்த போஸ்டர்கள் மற்றும் ஃப்ளெக்ஸ்களில் தங்கள் தலைவகடவுளுக்கு அவர்கள் சூட்டியிருக்கும் பட்டங்களை பார்க்கையிலும் அதற்கு கீழே சின்ன சின்ன கட்டங்களாக அடுத்தடுத்த வட்ட பொறுப்புகளில் இருக்கும் பக்த கேடிகளின் புகைப்படம் பார்க்கும்போதும், இந்த மாதிரியான சமூகத்தில்  இவர்களெல்லாம் வாழும்போது நாம் ஏன் வாழக்கூடாது? என்கிற அறச்சீற்றம் என்னை மீட்டெடுக்கும் கர்த்தாவாக மாறும்.

ஆனா நேற்று பாருங்க நிலமை அவ்வளவு மோசமா போகக்கூடாது. இத்தனை வயதில் ஒருத்தனுக்கு கல்யாணம் ஆகாம இருக்கிறது ஒரு பிரச்சனையாங்க. நாப்பது வயசெல்லாம் ஒரு வயசா? இல்லை கல்யாணம் பன்னாத்தான் இந்த லோகத்துல  மனுசனா வாழுற தகுதி இருக்குன்னு ஏதாவது சாங்கியம் இருக்கா? வருமானத்துக்கே மானம் கெட்டுப்போன வக்கு இல்லாத எனக்கு இன்னொரு துணைய வச்சுகிட்டு ரெண்டு பேரும் தெனமும் அம்மா உணவகத்துலயா சாப்பிட முடியும்? ஆனாலும் எனக்கு அவ்வபோது எழும் காம எழுச்சிகளை சுயமாக தீர்த்துக்கொள்ள வழிமுறைகள் இருக்கும்போது திருமணம் என்பது தேவையற்ற ஒன்றாகவே நான் நினைக்கிறேன். இதில் என்னங்க தப்பு இருக்க முடியும். அதவிடு்ங்க நம்ம வாஜ்பாய், காமராஜர்ன்னு .... அடடா கொட்டாவி விட ஆரம்பிச்சுட்டீங்க பாத்தீங்களா?.

நான் கிளம்பறேங்க. தற்கொலை செய்துகொள்ளப்போவதில்லை என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா?. அப்புறம் என்ன வாழ்வின் முடிவு என்கிறீர்களா?. அதாங்க திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்!!. இனி என்னை கேலி பேசும் அத்தனை பேரின் வாயையும் மூடப்போகிறேன். எனக்கென ஒரு ராஜகுமாரி கிடைக்காவிடினும் அவர் வீட்டில் கழுவித்துடைக்கும் ஒரு வேலைக்காரியாவது கிடைக்காமலா போவாள்?. அதான் எந்த ஊருன்னு கூட முடிவு பன்னாம கிளம்பிட்டேன். போகிற இடத்தில் எனக்குன்னு ஒருத்தி கிடைபான்னு இதனை எழுதறப்பவே சனி மூலையில ஒரு பல்லி அதனை உறுதிப்படுத்திடுச்சு. அப்ப நான் கெளம்பட்டுங்களா?

29 ஆக., 2013

வெயில் தின்ற காலம்...


Photo : KRP Senthil
"ஒரு வெறிநாயின் வாயிலிருந்து ஒழுகும் எச்சில் போல ஊரெங்கும் வெயில் ஒழுகிக் கொண்டிருக்கின்றது" என்று ஒரு கட்டுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லி இருப்பார்.
 

நினைவு தெரிந்த நாட்கள் முதலாகவே எனக்கு ஆகாத எதிரி வெயில்தான். வாழ்வின் பக்கங்களில் பெரும்பாலானவை இருட்டினால் நிரப்பப்பட்டவை என்பதனாலும் கூட இப்படி ஒரு வெயில் வெறுப்பு என் மனதை பட்டுப்போக வைத்திருக்ககூடும். தனித்த இரவுகளில் நிலாவும், நட்சத்திரங்களும் சொல்லும் ஆயிரம் கதைகள் போலல்லாது பகல் என்னை மனிதர்களால் நிரப்பி வைத்ததாலும் வெயில் எனக்கு பிடிக்காமல் போயிருக்கக் கூடும். கூடுமானவரைக்கும் வெயில் நாட்கள் என்பது எனக்கு பகலில் கூட்டுக்குள் வாழப்பழகிவிட்ட ஆந்தை என மாற்றிவிட்டன. என் இரவுகளையும் வெறுப்பாக்க முயலுகிறது இப்போதுள்ள சென்னையின் வெயில். என்னுள் வெயில் எப்போதும்  வேப்பிலைச்சாற்றைப் போல் ஒரு கசப்பை ஊறவைத்தபடியே இருக்கின்றது.

அறையெங்கும்
மின்வெட்டால் பரவும்
புழுக்கத்தில்
 கசியும்
வியர்வை
பெருக்கெடுத்து
ஆடைகள்
நனைக்க 

இப்படியாக
பெரு
நகரத்தை

கொளுத்தும் வெயிலை
வருடம் தப்பாது வைதாலும்
வெறுப்புடன்
பொறுத்துக்
கொள்ளத்தான்
வேண்டியிருக்கிறது

வெயிலை
ஒரு

வேண்டா
விருந்தாளியைப் போல... ”
 

- இப்படி ஒரு கவிதையை நானே எழுதியிருக்கிறேன்.

எத்தனை இடர்பாடுகளை மழை எனக்குத் தந்திருந்த போதிலும். சேற்றுப்புண் வந்து பாதங்கள் வெந்து சுரைச்செடியின் இலைகளையோ, சைப்பாலையோ அம்மாவின் வசவுகளுடன் கலந்து தடவிக்கொண்ட இரவுகளிலும் கூட பாதங்களின் அரிப்பையும் மீறி மறுநாள் மழைக்கான கற்பனைகள்தான் என்னை தூங்கவைக்கும். மழைவிட்டபின்னும் பன்னீர் தெளிக்கும் மரக்கிளைகள்தான் எப்போதும் என் மழைக்கால வாசஸ்தலங்களாக இருந்தன.

முதல் காதல் மலர்ந்த மழை ராத்திரி என்னை வீடுவரைக்கும் கொண்டு வந்து சேர்த்தது ஒரு பெருமழைதான். அதன்பின் அவள் என்னைவிட்டு பிரிந்தபின் போதையில் ஆற்றங்கரையில் மயங்கிக் கிடந்தபோது நனைத்து எழுப்பியதும் ஒரு பெருமழைதான். கிராமத்து நாட்களில் அதிகாலைப் பனி வரப்புகளின் ஓரத்துப் புற்களில் படிந்திருக்க செருப்பணியாக் கால்களை கழுவி விளையாடும் நாட்கள் கடந்தபின் வரும் சித்திரை மாதத்துக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே பிறந்தவன் நான்.
  
என் மூத்த சகோதரனும், ஆத்ம நண்பரும் ஆன கணேசன் அண்ணனுக்கு வெயிலென்றால் கொள்ளைப்பிரியம் மூடிய மேகத்தை பார்க்க நேர்கையில் எல்லாம் பிரகாசமாக ஜொலிக்கும் என் முகத்தின் நிழல் அவரை சோகமாய் காட்டும். நான் சிங்கப்பூரில் அண்ணனுடன் இருந்தபோது அங்கு தினசரி ஒரு முறையாவது என் விருப்பம்போல் பெய்த மழையை எனக்காக அவரும் பொறுத்துக்கொள்வார். வாழ்வியலின் சோகம் எப்போதும் தன்னை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும் அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். சுஜாதாவின் பரம விசிறி. உதவிய நண்பர்கள் அவருக்கு துரோகத்தையே பரிசளித்தபோதும் சிரித்தபடி ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்.

ஒருமுறை விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் வெயில் பற்றிய சிலாகிப்பை ஒரு தொடரில் எழுதி இருந்ததை அவரிடம் காட்டியபோது வெயிலின் மீதிருந்த என் வெறுப்பையும் மீறி அவரை நான் நேசிப்பதை புரிந்துகொண்ட கணத்தில் இருந்து எனக்காக மழையை நேசிக்க முயல்வதாக என் கைபிடித்து சொன்னார். அப்போதும் கூட திடீரென தூறல் போட ஆரம்பிக்க சிரித்துக்கொண்டே நனைந்தவாறு என்னுடன் நடக்க ஆரம்பித்தார்.


சென்னையில் மூன்று நாட்கள் பெரு மழையொன்று தொடர்ச்சியாக பெய்த மூன்றாம் மழைநாள் இரவில் முகப்பேரில் தங்கியிருந்த வீட்டில், நள்ளிரவில் கிணறு நிரம்பி வீட்டுக்குள் தண்ணீர் வர ஆரம்பிக்க நிரம்பிகொண்டிருந்த வீட்டின் படுக்கையறையில் ஒரு வயது மகனுடன் மனைவியும், நானும் கொட்டக் கொட்ட விழித்திருந்தோம். எங்கிருந்தோ படையெடுத்த பூரான்களை கையில் வைத்திருக்கும் டார்ச் லைட்டால் கண்டுபிடித்து ஒவ்வொன்றாய் கொல்லத் துவங்கினேன். மறுநாள் காலை ஒரு ஆட்டோவில் சமைப்பதற்கு சில பாத்திரங்களையும் சிலிண்டரையும், கேஸ் ஸ்டவ்வையும் எடுத்துக்கொண்டு எனது அலுவலகம் வந்து மழைவிடும் வரைக்கும் அங்குதான் தங்கியிருந்தோம். அவ்வாரம் முழுதும் அலுவலகமே வீடானது. மழை நீங்கி நகரம் இயல்பான நாளில் வீட்டிற்குப் போனால் மொத்த வீடும் சேறாக இருந்தது. கழுவித் துடைக்க முழுநாள் செலவானது.  அப்போதும் கூட எனக்கு மழை மீதான காதல் கூடித்தான் போனது.

அதன்பிறகு தியாகராய நகருக்கு வீடு மாறி வந்து ஒரு வருடம் கழிந்தபின் அந்த வீட்டை அலுவலகமாக மாற்றிவிட்டு எதிரே இருந்த வீட்டுக்கு மாறுவதற்கு அட்வான்ஸ் கொடுக்கப் போனபோது அந்த வீட்டைப் பார்த்ததும் வீட்டு உரிமையாளரிடம் "மழை வந்தால் வீட்டுக்குள் தண்ணீர் வருமா?"  என்று கேட்டேன். அவரோ "கடந்த 32 வருடங்களில் ஒருமுறை கூட அப்படி ஆனது இல்லை" என்று சொல்லிவிட்டு, "ஏன் அப்படி கேட்டீர்கள்?" என்றார். நான் சிரித்துக்கொண்டே "என் ராசி அப்படி!" என்றேன். அப்போது அவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார் அந்த வருட மழை என் ராசியை உண்மையாக்கும் என!.

சொன்ன மாதிரி அந்த வருடமும் மழை மாதத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் மழை சென்னை நகரத்தையே கடலுடன் இணைக்கும் உத்வேகத்துடன் இடைவிடாமல் கொட்ட ஆரம்பித்தது. அப்போது என் இரண்டாவது மகன் மனைவியின் வயிற்றில் இருந்ததாலும் ஏற்கனவே மழை எடுத்த பாடம் மூளையின் பழைய பக்கங்களில் பதிக்கப் பட்டிருந்ததாலும் முன்கூட்டியே அலுவலகம் வந்துவிட்டோம். அந்த வீட்டிற்குள்ளும்   தண்ணீர் நிரம்பியது, அந்த வாரம் முழுக்க வீட்டு உரிமையாளர் எங்களுக்கும் சேர்த்து சமைத்து தந்தார். அவர் நூறு தடவையாவது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததற்காய் வருத்தம் தெரிவித்தாலும் அவர் மீதும் மழை மீதும் எனக்கு கோபமே வரவில்லை.

எனது சகோதரியின் மகன் வீரவேல் இப்படித்தான் ஒரு மூன்று நாள் மழைநாள் முடிவில் விபத்தில் சிக்கி அதன்பின் ஐந்து நாள் கழித்து மருத்துவமனையில் இறந்துபோனான். அப்போதும் அவன் இறுதிச் சடங்கு முடிந்த மறுநாள் ஒரு தனித்த இரவில் ஆகாயத்தில் இருந்த ஒற்றை மேகத்தைப்பார்த்து இன்னும் ஒரு நாள் சேர்த்துப் பெய்திருந்தால் ஒருவேளை அவன் காப்பாற்றப்பட்டு இருப்பானே என அதனிடம் வருத்தப்பட்டு அழுதேன். எங்கிருந்தோ இரவுப் பறவையொன்று என்  தனிமையை நீக்க தொடர்ந்து கூவியபடி என் சோகத்தை பங்கிட்டுக் கொண்டது.

குறும்புகள் செய்யும் காதலியைப் போல மழை என்னுடன் எப்போதும் தீரா விளையாட்டினை ஆடிக்கொண்டே இருக்கிறது. முகத்தில் பட்டுத்தெறிக்கும் மழையின் முதல்துளி என்றுமே எனக்கு முதல் முத்தம் அளிக்கும் கிளர்ச்சியையே தந்து கொண்டிருக்கிறது

இப்போதுமே வெயில் என்று தலைப்பு போட்டுவிட்டு மழை பற்றித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

28 ஆக., 2013

சாம்பார் வாசனை ...

என் மனக்காடுகளில்
எரியும் தீயை
உன் துயரப்பாடலில்
வழியும் 
கண்ணீரைக் கொண்டு 
அணைக்க முயல்கிறேன்...

 நீ ஒருமுறை
வெறுக்கிறேன் என்றாய் 
அது பற்றி
நினைக்கும்
ஒவ்வொரு முறையும்  
இதயத்தை அறுக்கிறது...

நினைவுக்கு வராத 
நள்ளிரவு கனவைப்போல்
மீளவே இல்லை
நம் காதல்...

நகரத்தில்
புதிதாக நுழைபவனின் 
பையில் இருந்து
தவறிய முகவரித்தாள்
காற்றால்
விலாசம் மாறிய 
வீடுகளுக்கு
சென்று சேர்வதுபோல் 
எங்கோ
உப்புக் குறைவான
சாம்பாருக்கு 
வசவு வாங்கும்
நீ 
அறியப்போவதே இல்லை
என் காதலையும் ..
இக் கவிதையையும்....

27 ஆக., 2013

கடன் பெற்றார் நெஞ்சம்!...

Photo : KRP Senthil
நாங்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் காத்திருந்தேன். அவன் வருவதற்கான நேரம் கடிகாரத்தின் பெரிய முள் இன்னொரு முறை சுற்றி வரவேண்டும் என்பதால் நான் முன் கூட்டியே வந்திருக்கிறேன். காத்திருப்பு என்பது அயர்ச்சி தரும் விசயம். புதிய நபருக்காக அல்லது புதிய விசயத்துக்காக பொறுமை காக்கும் எல்லை சாமியாக எல்லோரும் மாறித்தான் ஆகிறோம். ஆனால் பழகிய நபர்களுக்காக யாரும் காத்திருக்க பழகுவதே இல்லை. காத்திருப்பதின் சுவாரஸ்யம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தக்க மாறுபடுகிறது. என் நண்பன் ஒருவன் மிகுந்த அவசரக்காரான் அவன் பேசுவதுகூட அப்படித்தான் ஓலைப்பாயில் ஒன்னுக்கடிச்சா மாதிரி ஏண்டா இப்படி பேசுறே என்பார் அவனை அவன் பாட்டி. அப்படிப்பட்ட அவனே மணிக்கணக்கில் தேவன் குட்டையில் காத்திருப்பதை பார்த்திருக்கேன். சமீபத்தில் சென்னையின் பிரதான ஜவுளிக்கடையில் கை நிறைய பைகளோடு காத்திருந்தான். கொஞ்சம் வயிறு முன்னுக்கு தள்ளப்பட்டு அருகிலிருக்கும் யார் கூடவோ பேசிக்கொண்டிருந்தான், என்னை சட்டென அடையாளம் கண்டுகொண்டான் பிறகென்ன பக்கத்து ஆளிடமும், காவலாளியிடமும் பைகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு என்னுடன் வந்து விட்டான்.

ஒரு மணிநேரத்துக்கு மேலாக அவனே பேசிக்கொண்டிருந்தான். கிட்டதட்ட பத்து வருட வாழ்க்கையை அவ்வளவு விரைவாக உலகில் அவன் ஒருவனால்தான் சொல்ல முடியும் தேவன் குட்டையில் காத்திருந்த அதே ஆளாகத்தான் அவன் இப்போதும் இருக்கிறான். என்ன காத்திருப்பதற்கான ஆளும், காரனமும் மாறிக்கொண்டேயிருப்பதால் அவனால் இப்போதும் சுவரஸ்யமாக பேச முடிகிறது. ஆனால் அந்த ஒரு மணிநேரமும் ஓலப்பாயில் ஒன்னுக்கடிப்பதாக சொல்லும் அவன் பாட்டிதான் என் கண் முன் தெரிந்தார்கள்.

இந்த இடம் முற்றிலும் மாறி இருந்தது. முன்பெல்லாம் சாயங்காலம் ஆச்சுன்னாலே ஆள் நடமாட்டம் இருக்காது. இப்போது அப்படியில்லை கொஞ்சம் வீடுகள் வந்துவிட்டன. தெருவிளக்கு வந்திருக்கிறது. கீழே ஓடிக்கொண்டிருந்த கால்வாய் இப்போது குப்பை மேடாக இருக்கிறது. நாங்கள் அமர்ந்து நேரம் போவது தெரியாமல் பேசும் பாலம் உட்கார முடியாத நிலையில் சரிந்திருக்கிறது. தெரு விளக்கின் ஒளி என் முகம் காட்டாதாவாறு ஒதுங்கி நின்றிருந்தேன். மனசு பழசை அசைபோடத் துவங்கியது.

நாம் இருவரும் சேர்ந்து சுற்றாத இடங்கள் இல்லை. எப்போதும் ரெட்டையர்களாக சுற்றித்திரிந்த காலம் அது. நம்மூரின் வழக்கப்படி நான் முன்கூட்டியே சிங்கப்பூர் சென்றுவிட்டேன். ஆனால் அதற்கடுத்த ஆறே மாதத்தில் உன்னையும் கூட்டிக்கொண்டேன். அதன்பிறகு என் பணம், உன் பணம் என நாம் எப்போதும் பார்த்ததே இல்லை. எல்லோரும் நீ இன்னும் வீடு கூட கட்டலியா? என்றபோது கூட நண்பன் கட்டியிருக்கிறான் அதுவும் என் வீடுதான் என நான் பெருமைப்பட்ட காலம் அது. அதே காலம்தான் நம் உறவை கூறு போட்டது. இத்தனை ஆண்டுகாலம் நம்மை பிரித்தும் வைத்தது.நாம் நினைத்து மகிழ எத்தனை சந்தோஷங்கள் இருந்தனவோ, அத்தனை துயரங்கள் நாம் வெறுத்து ஒதுங்கவும் காரனமாக இருக்கின்றன. இப்போதும் கூட மீண்டும் நம்மை சேர்த்து வைத்த காலத்தை வசைபாடியபடி நான் காத்திருக்கிறேன்.

மிகச்சரியாக ஆறு மாதங்களுக்கு முன்னால ஆளைக்கொளுத்தும் ஒரு மதிய வெயிலின் உக்கிரத்தில் இருந்து உடலை குளிர்விக்க ஒரு லெமன் ஜூசுக்காக சாலையோர கடையில் ஒதுங்கினேன். அங்குதான் உன்னை மீண்டும் சந்தித்தேன். பார்த்த மாத்திரத்திலேயே வெறுப்பு, நெருப்பில் காய்ந்த தோசைக்கல்லின் மீது விழுந்த தண்ணீரைப்போல சடரென புகையாய் கிளம்பினாலும், உன் அதீத புன்னகை வெப்ப சலனத்தால் பெய்யும் மழையென என்னை குளிர்வித்தது. பரஸ்பரம் விசாரிப்புகள் கழிந்து பார் ஒன்றில் பழங்கதைகளை ஊற்றி பருகினோம். நாம் விடைபெற்ற கணத்தில் உனது பேக்கில் இருந்து காசோலை ஒன்றை உருவி அதிலிருந்து ரூ.2 லட்சம் நிரப்பிய தாள் ஒன்றை என்னிடம் தந்து, ”தயவு செய்து வச்சுக்க, இந்தப்பணத்தை கடனாகவே நீ எடுத்துக்கலாம், உன்னால் எப்போது முடிகிறதோ! அப்போது திருப்பினால் போதுமென்றாய்”, வறுமை என் கவுரவத்தை காலில் போட்டு மிதித்தது. 

அதன்பிறகு அவ்வப்போது அலைபேசியில் அழைப்பாய், சென்னை வந்தால் பார் மூடும் வரைக்கும் உற்சாகமாய் பழங்கதைகள் பேசுவாய். சென்ற வாரம் அப்படித்தான் ஒரு சந்திப்பு நம் பிரிவுக்கான காரனங்களை அலச ஆரம்பித்தது. நான் உனக்கு கடனாளி என்பதை மறக்கவைத்தான் அரை நெப்போலியன். நான் நியாயம் பேசினேன். வழக்கமாய் பில் கொடுக்கும் நீ அன்று என்னை கொடுக்க வைத்தாய். அடுத்த அஸ்திரமாக பணத்தை திருப்பிக்கேட்டாய் அதுவும் உடனே வேண்டும் என்றாய். என் ஏழ்மை உன்னுடன் சாமாதனம் செய்து வைக்க சொன்னதால் மன்னிப்பு கேட்டேன். ஒரு வார அவகாசம் தந்தாய். இன்றுடன் அது முடிகிறது. தூரத்தே நீ வருகிறாய், என்ன சொல்லி சமாளிக்கலாம் என மனது அலைபாய்கிறது....