29 மே, 2009

"ராமசாமி அத்தியாயம் -16"

தொடர்ந்து பதினாறு வாரங்கள் என் கதையை படித்த உங்களுக்கு நன்றி. இடையில் எனக்கு ஏற்ப்பட்ட வேலைப்பளு காரணமாக சரியான நேரத்துக்கு தமிழ்குறிஞ்சிக்கு கதையை வழங்க முடியவில்லை. இருந்தாலும் பொறுத்துக்கொண்டு பதிவேற்றிய தமிழ்குறிஞ்சி ஆசிரியருக்கு நன்றி.

என்னுடன் படித்த நண்பன் ராஜா பற்றி சொல்லியிருக்கிறேன், இது இன்னொரு ராஜா பற்றி இவன் என்னோடு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை படித்தவன், அதற்க்கு அப்புறம் சிங்கபூரில்தான் சந்தித்தோம், ஒரு இக்கட்டான தருணத்தில் அவன் ஊர் வர வேண்டிய நேரத்தில் எங்களுடைய சந்திப்பு நிகழ்ந்தது, அப்போது ஒரு முக்கியமான பொருளை என்னிடம் கொடுத்து சென்றான். அதன்பிறகு மீண்டும் சிங்கப்பூர் வந்தபோது அந்த பொருளை அவனிடம் ஒப்படைக்க முடியவில்லை.ஏனென்றால் என்னுடன் தங்கியிருந்த என் நண்பன் கணேசனும், என் அண்ணனும் சேர்ந்து அதனை திருடிச்சென்று விற்றுவிட்டனர்.

எனவே அதற்கான பணத்தை அவனிடம் கொடுத்தேன், அப்போது முதல் சற்று நெருக்கமானோம். ஒரு மூன்று மாதம் கழித்து ஒருநாள் இருவரும் பியர் குடித்துகொண்டிருந்தோம், அப்போது அவன் உன்னை நான் மூன்றுமாதமாக டெஸ்ட் செய்தேன், அதில் நீ மிகவும் நம்பிக்கைக்கு உரியவன் என்று ஆனபின்தான் உன்னோடு நெருக்கமாக பழகுகிறேன் என்றான், நான் சத்தமாக சிரித்தேன், அவன் கோபமாக எதுக்கு சிரிக்கிறே என்றான், நான் கடைசிவரை உண்மையாக இருந்துவிடுவேன் ஆனால் உன்னால் இருக்கமுடியுமா என நினைத்தேன் சிரித்தேன் என்றேன், அவனோ ஏன் முடியாது நான் எப்பவும் உண்மையாக இருப்பேன் என்றான்.

அதன்பிறகு எங்களுக்குள் எந்த செலவுக்கும் கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. பார்க்கிற அனைவரும் பொறாமைப்படுகிற அளவு எங்கள் நட்பு வளர்ந்தது. கிட்டத்தட்ட எங்கள் இருவரின் திருமணமும் ஒன்றாக நடத்தவேண்டும் என்ற அளவுக்கு நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் விதி வலியது அது எங்களின் வாழ்கையில் ஒரு பெண் வடிவில் புகுந்தது. நன்றாக வளர்ந்து சென்னையில் ஒரு தொழில் செய்ய ஆரம்பித்தோம், நான் சிங்கையிலும் அவன் சென்னையிலும் இருந்தோம், அப்போது அவனுக்கு ஒரு காதல் வந்தது.

எத்தனையோ பிரச்சனைகள் எங்களுக்கு வந்தபோதெல்லாம் அதனை ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுக்காமல் சமாளித்தோம். ஆனால் அவனுக்கு வந்த காதலால் ஏற்பட்ட பிரச்சினையால் நாங்கள் பிரிந்துபோனோம், அந்த பெண்ணும் மிகவும் நல்லவள்தான், தனக்கு உள்ள பிரச்சினையை சரியாக கையாள தெரியாமல் தானும் குழம்பி, எங்களையும் குழப்பி, அது எங்கள் இருவருக்கும் நிரந்தர பிரிவாக அமைந்துவிட்டது, கிட்டத்தட்ட பத்து வருட கால நட்பு இந்த காலகட்டங்களில் எங்களை அறிந்தவர்கள் நாங்கள் பிரிந்திவிடுவோம் என நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள், அப்படி ஒரு நட்பு அது. என் வாழ்க்கையில் நான் நேசித்தவர்களில் ராஜாவும் ஒருவன்.

நான் ஊருக்கு சென்றால் அவன் வீட்டில்தான் தங்குவேன், அங்குதான் சாப்பிட்டு தூங்குவேன், என் வீட்டிற்கும், அவன் வீட்டிற்கும் இரண்டு கிலோமீட்டர் இடைவெளிதான் இருந்தும் நான் அவன் வீட்டில்தான் தங்குவேன், அவனுடைய தாத்தாவும், பாட்டியும் என் மேல் வைத்திருந்த பாசம் அளவிடமுடியாத ஒன்று.

பிரச்சினை எங்கள் இருவரின் திருமணத்தை ஒன்றாக வைப்பதில் ஆரம்பித்தது. படிப்பை முடித்துவிட்டு காமாட்சி(என் மனைவி) ஒரு வருடமாக திருமணத்திற்காக காத்திருந்தாள், ஆனால் காயத்ரியோ(ராஜாவின் மனைவி) உன் திருமணத்தை தனியாக நடத்திகொள் என்கிறாள், ராஜாவோ இருபக்கமும் பேச முடியாமல் மென்று விழுங்குகிறான், ஒரு சமயம் நட்புக்கும், இன்னொரு சமயம் காதலுக்கும் சார்பாக இருந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானான். அப்போது அவனைப்பார்க்க பாவமாக இருக்கும். ஆனாலும் நான் விட்டுகொடுக்கவில்லை.

இடையில் ஒருநாள் பிரச்சினை பெரிதாகி அவளை அவன் திட்டி அனுப்பிவிட்டான், அதற்குமேல் நானும் பிடிவாதம் பிடிக்கவில்லை, நான் தனியாக திருமணம் செய்துகொள்கிறேன் என சொல்லிவிட்டேன், அதற்கான ஏற்பாடுகளை அவனே செய்ய ஆரம்பித்தான். உடனே என் அக்கா வீட்டுக்காரர் முறைபடி வந்து பெண் கேட்க வேண்டும் என முரண்டுபிடிக்க அதற்காக ஊரில் இருந்து எல்லாரும் வந்து பேசிவிட்டு செல்ல, அக்கா வீட்டுக்காரர் தனக்கு பணம் தேவைபடுவதால் மூன்று மாதம் தள்ளி வைக்க சொன்னார், நான் எல்லா செலவையும் நானே பாத்துக்கிறேன் என்று சொல்லி விரைவான தேதியை பார்க்க சொன்னேன்.

எல்லாம் சுமுகமாக போய்க்கொண்டிருந்தது, அப்போது ருசி ஊறுகாயின் டீலராக கிண்டி முதல் தாம்பரம் வரை செயல்பட்டுக்கொண்டிருந்தோம், தொழிலில் போதிய அனுபவம் இல்லாத காரணத்தால் கம்பனி புதிதாக அறிமுகப்படுத்திய சில பொருள்களை அதிகமாக எடுத்து அனைத்து கடைகளுக்கும் வைத்துவிட்டோம், அது சரியாக போகவில்லை அதனால் கம்பெனிக்கும் எங்களுக்கும் சிறு பிரச்சினை வந்தது. எங்களை கேட்காமல் பாதி ஏரியாவை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டனர், அதனால் கம்பெனி மேல் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் செய்யபோனோம், போகும்போது அந்த கம்பெனி விற்பனையாளர் ரவியையும் அழைத்துசென்றோம், அங்கு போனதும் இன்ஸ்பெக்டர் இல்லை, கூட வந்த தினத்தந்தி நிருபர் இமாம் கசாலி தனக்கு சிறிது வேலை இருப்பதால் நீங்கள் இருந்து பார்த்துவிட்டு வாருங்கள் என சென்றுவிட்டார். எங்களுக்கும் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரவே நாங்களும் வந்துவிட்டோம். ஆனால் ரெப் ரவி அவன் முதலாளிக்கு போன் செய்து நிலவரம் சொல்லியிருக்கிறான், அப்போது ருசி ஊறுகாய் சவேரா ஓட்டல் நிர்வாகத்திடம் இருந்தது, அதனால் அவர்கள் ஐ,ஜி ஆபிஸ் மூலமாக போன் செய்து இன்ஸ்பெக்டரிடம் எங்கள் மேல் வழக்கு பதிவு செய்யும்படி வற்புறுத்தியிருக்கின்றனர்.

இன்ஸ்பெக்டர் கசாலிக்கு போன் செய்து எங்களை அழைத்து வராவிட்டால் அவரையும் சேர்த்து அரெஸ்ட் செய்வேன் என மிரட்ட, கசாலி எங்களுக்கு போன் செய்து என்ன செய்யலாம் எனக்கேட்டார். நான் நீங்கள் எங்களுடன் வாருங்கள் முதலில் எங்களுக்கும், உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என சொல்லிவிடுகிறேன் போதமா என்றேன். கசாலி அது மட்டும் செய்தால் போதும் என்றார்.

நாங்கள் மூவரும் ஸ்டேஷன் போனதும் இன்ஸ்பெக்டர் வானத்துக்கும், பூமிக்கும் குதித்தார். என்னையும் ராஜாவையும் ஆட்கடத்தல் வழக்கில் உள்ளே வைத்துவிடுவேன் என மிரட்டினார், எங்களை பேசவிடவே இல்லை. அவரே ருசி முதலாளி மாதிரி உங்களால் ஒண்ணுமே புடுங்க முடியாது என ஏகத்துக்கும் சத்தம்போட ஆரம்பித்தார், கொஞ்ச நேரத்தில் தகாத வார்த்தைகளை பேச ஆரம்பிக்கவும் நான் கடுப்பாகி "டேய் நிறுத்துடா'' என்றேன். போலீஸ் ஸ்டேஷன் அப்படியே நிசப்தமானது. இன்ஸ்பெக்டர் உட்பட அத்தனைபேரும் ஒரு கணம் பேச்சற்று போயினர். ராஜா என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

பக்கத்து அறையில் இருந்த கிரைம் இன்ஸ்பெக்டர் டேய் இது போலீஸ் ஸ்டேஷன் தெரியுமா, உள்ள வச்சு பிச்சுடுவேன் என்றார். நானோ தைரியம் இருந்த கை வை பார்க்கலாம் என அவரிடமும் சத்தம் போட்டேன். என கோபத்தை என்னால் கட்டுபடுத்தவே முடியவில்லை. எல்லோரையும் ஒரு பிடி பிடித்தேன். முதன் முறையாக ராஜா என்னைப்பார்த்து பயந்தான். பொதுவாக நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என அவனுக்கு தெரியும், ஆனால் போலீசையே அப்படி பேசுவேன் என நினைக்கவில்லை.ஆனால் இந்த சம்பவத்தால்தான் எங்கள் பிரிவு தொடங்கியது.

கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் என்ன நடந்தது? ராஜாவும் நானும் எப்படி பிரிந்தோம் அது அடுத்தவாரம்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

"ராமசாமி அத்தியாயம் 15"

எங்கள் ஊரில் வருடாவருடம் காமன் பண்டிகை நடக்கும், பெரும்பாலும் அது வசூல் சம்பத்தப்பட்ட பண்டிகை, காமன் தகனம் முடிந்த மறுநாள் புலிவேடமிட்டு வசூல் செய்வார்கள் இதைப்பற்றி நண்பன் ராஜா தன்னுடைய ப்ளாக்கில் விரிவாக எழுதியுள்ளான்.

விஷயம் காமன் பண்டிகை பற்றியது அல்ல, அதனால் ஏற்ப்பட்ட விளைவுகள் பற்றியது, காமன் பண்டிகை கடைசி நாளில் இரு சிறுவர்களுக்கு ரதி, மன்முதன் வேடமிட்டு எறிந்த கட்சி, எரியாத கட்சி என இரண்டு பிரிவாக பாட்டு பாடுவார்கள், முடிவில் காமனை தகனம் செய்வார்கள், தகனம் முடிந்தவுடன் புலிவேடம் போட ஆரம்பிப்பார்கள், அப்போது நாங்கள் இரவில் வேடிக்கை பார்க்க போவோம், புளியங்கொட்டைகளை ஊறவைத்து, அவித்து தின்பதற்கு எடுத்துபோவோம், எனக்கு ஐந்து வயதாக இருக்குபோது இப்படி ஒருநாள் இரவு பார்த்துவிட்டு வந்ததும் எனக்கும் அப்படி புலிவேடம் போட வேண்டும் என ஆசையாக இருந்தது.

அறுவடை முடிந்து அப்போதுதான் ஒருவாரம் முன்புதான் வைக்கோல்போர் போட்டிருந்தார்கள்.குப்பையில் கிடந்த சாம்பலை தண்ணீர்விட்டு உடம்பெல்லாம் பூசிக்கொண்டேன். வைக்கோல்போரில் இருந்து சிறிதளவு வைக்கோலை புடுங்கி அதன் அருகிலேயே போட்டு கொளுத்தினேன், கையில் ஒரு தட்டை எடுத்து தாளம் தட்டிக்கொண்டு வைக்கோல்போரை சுற்றி ஆட ஆரம்பித்தேன் தீ மளமளவென பரவி மொத்த வைக்கோல்போரும் ஏறிய ஆரம்பித்தது. நான் பயந்து ஓடி ஒளிந்துகொண்டேன்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் சத்தம் போட்டு அனைவரும் வந்து தீயை அனைப்பதற்க்குள் வைக்கோல்போர் முழுவதும் எரிந்துவிட்டது, அப்போதுதான் பக்கத்து வீட்டு பரமசிவம் மாமா செந்தில்தான் அந்த இடத்தில் இருந்தான், அவன்தான் ஏதாவது செய்திருப்பான் என்று சொன்னதும் என்னை தேடி கண்டுபிடித்து இழுத்துவந்தனர், என்னை எல்லோர்முன்னும் கொண்டுவந்ததும் எல்லோரும் என் வேசத்தை பார்த்து சிரிக்க எனக்கு அவமானம் ஆகிவிட்டது, அதன்பிறகு இன்றுவரை அதைபோன்று ஒரு வைக்கோல்போர் எங்கள் வீட்டில் நாங்கள் போட்டது இல்லை, படிப்படியாக நிலங்களை விற்றுவிட்டோம்.

சின்ன வயது குறும்புகள் எப்போதும் நினைவகலாதவை. நான் வீட்டிற்கு கடைசி பிள்ளை என்பதால் செல்லம் அதிகம், அதனால் யாரும் என்னை கண்டுகொள்வதில்லை, எப்போது பார்த்தாலும் ஏதாவது செய்துகொண்டிருப்பேன் அந்த வயதில் எனக்கு அடிபடாத நாளே கிடையாது, பத்தாம் வகுப்புக்கு பிறகு பெரிய செட்டுகளுடன் நட்பு ஏற்பட்டு, இரவுகளில் வயல்காடுகளுக்கு சென்று சமைத்து சாப்பிடுவோம், அதிலும் குரவர்களிடம் பணம் கொடுத்தால் அவர்கள் நரி, காட்டுப்பூனை போன்ற விலங்குகளை பிடித்து கொடுப்பார்கள் அதனை சுட்டு சாப்பிடுவோம், யார் வீட்டு வெள்ளாமையாக இருந்தாலும் எங்களுக்கு தேவை என்றால் ஆட்டைய போட்ருவோம், மறுநாள் நாங்கதான் என தெரிந்தாலும் யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள், ஏனெனில் சாப்பிடும் அளவுக்கு மட்டுமே எடுத்து வருவோம்,

இப்போது உள்ள பிள்ளைகள் தொலைக்கட்சிகளில் தங்களை தொலைக்கிறார்கள், சின்ன வயதில் உடல் விளையாட்டுகளில் ஈடுபடாமல், மூளை விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடுவதால் சீக்கிரத்தில் சுயநலம் வந்துவிடுகிறது, கிரிக்கெட்டை தவிர வேறு எந்த விளையாட்டும் தெரியாமல் ஒரு தலைமுறையே வளர்வது கவலை அளிக்கிறது, நம்முடைய சேனல்களும் அவர்களின் மூளையை தொடர்ந்து மழுங்கடிக்கும் வேலையைத்தான் செய்கிறது.

எந்த சேனலை திறந்தாலும் அரைகுறை ஆடைகளுடன் சினிமா பாட்டிற்கு அபிநயம் பிடிக்கும் போட்டிகளை வைத்து தங்கள் குழந்தைகளை பெற்றோரே கொண்டு வந்து அவர்கள் பிள்ளைகள் தோற்கும்போது அழுது புரள்கிறார்கள், போட்டியைவிட பெற்றோர்கள் அடிக்கும் கூத்து வேதனையை அளிக்கிறது, மெல்ல மெல்ல மேலை நாடுகளைபோல் மாறிவருகிறோம்.

எதிர்கால சந்ததிகள் கிராமங்களில் கூட இப்படி மாறிவருவது கவலை அளிக்க கூடிய விஷயம், சின்ன வயதில் சொந்தமாக சிந்திக்கக்கூடிய ஆற்றலை கிராமங்களில் நிறைய பார்க்கலாம், அதனால்தான் கிராமங்களில் பிறந்தவர்கள் சாதனை பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார்கள், ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் கிராமங்களில் நகர குழந்தைகளைவிட அதிக நேரம் டிவி பார்க்கிறார்கள்.

நாம்மால் முடிந்த ஒரு சிறிய மாற்றத்தை எங்கள் சொந்த கிராமத்தில் ஏற்படுத்த வேண்டும் என நானும் நண்பர்களும் சில திட்டங்கள் வைத்துள்ளோம், அது நன்றாக போகும் பட்சத்தில் மற்ற கிராமங்களுக்கும் அதனை கொண்டு செல்லவிருக்கிறோம்,
இந்தியாவின் எதிகால தூண்கள், கடந்தகால சிற்பிகள் இரண்டும் கவனிப்பாரற்று இருக்கின்றனர், இளைய சமுதாயத்தை உயர்த்தும் அதே வேலையில் முதியோர்களையும் நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோம், இந்த தேசத்தை கட்டியெழுப்பிய சிற்பிகளை முதியோர் இல்லங்களில் சென்று சேர்க்கிறோம், மனதளவில் குழந்தைகள் ஆகி விடுகிற முதியோர்களை அற்பமாக பார்க்கிறோம்,

எல்ல இடங்களிலும் முதியோர்களுக்கு என சலுகைகள் தரப்படுவது இல்லை, நமக்கும் நாளை வயசாகும், நம் தகப்பனுக்கு நாம் செய்ததைதான் நாளை நம் மகன் நமக்கும் செய்வான் என்பதை மறந்து விடுகிறோம்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

11 மே, 2009

"ராமசாமி அத்தியாயம் -14"

என்னுடைய வாழ்கையில் இப்படி ஒரு காதல் வந்து அதன்பிறகு நான் திருமணம் செய்வேன் என கனவிலும் நினைக்கவில்லை, சிங்கபூரில் இருந்து வந்து அக்கா மகளை திருமணம் முடித்த கதை ஏற்கனவே சொல்லிவிட்டேன், ஆனால் நடந்த அத்தனை விசயங்களையும் அவளிடம் மறைக்காமல் சொன்னபிறகுதான், அவளின் பூரண சம்மதத்தை பெற்றுக்கொண்டு திருமணம் செய்தேன்,

என் வாழ்கையில் கிடைத்த பொக்கிஷம் என் மனைவி காமாட்சி, நான் எத்தனையோ மேடுபள்ளங்களை சந்த்தித்து இருக்கிறேன், சில சமயம் செலவுக்கு பத்து ரூபாய் பணம் கூட இருக்காது, எப்போதும் ஒரே மாதிரி இருப்பாள், எதைபற்றியும் நீ கவலைபடுவதே இல்லையா என்றால்/ நான் ஏன் கவலைபடனும் அதான் எல்லாத்தையும் நீங்க பாத்துக்குவீங்களே என சாதாரணமாக சொல்லிவிடுவாள், இரண்டு குழந்தைகள், நான் இம்மூவரும்தான் அவள் உலகம், இன்றுவரை அவளை நான் எங்கும் கூட்டிபோனது கிடையாது, அவ்வளவு ஏன் இன்றுவரை திருமணம் முடித்து ஏழு ஆண்டுகள் ஆகிறது, நாங்கள் உணவகம் சென்று சாப்பிட்டது இல்லை.

எங்கள் திருமணம் முடிந்து சிலமாதங்களுக்குள் அம்மாவுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு வந்து அம்மா என்னை வீட்டை விட்டு வெளியே போகச்சொன்னது, அப்போது கையில் என்னிடம் சுத்தமாக காசு இல்லை. என்ன செய்வது என புரியாமல் நின்றபோது மதுக்கூர் கண்ணன் அண்ணன் தன் வீட்டில்தான் தங்கவேண்டும் என பிடிவாதமாக சொல்லி, அண்ணி, குழந்தைகளிடத்தும் சொல்லி எனக்கு பேச சொன்னார், அதுவரை சந்தித்திராத என் மனைவியை, மகாலட்சமி அண்ணி தன் மகளாய் ஏற்றுக்கொண்டார். வாழ்வின் அடுத்த அடி எப்படி எடுத்து வைப்பது என தவித்த நாங்கள் இன்று சமூகத்தில் அந்தஸ்துடன் வாழ காரணம், அன்று கண்ணன் அண்ணன் குடும்பத்தினர் எங்கள் மீது காட்டிய கருணை, எனக்கும், மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது, ஆனால் நாங்கள் இருவரும் சாமியாய் நினைப்பது அண்ணனையும், அண்ணியையும்தான்.

கண்ணன் அண்ணனை பொறுத்தவரை அவரும் என்னைபோலதான், யாருக்காவது உதவிக்கொண்டே இருப்பார், ஒரு பெரிய பொருளாதார வசதி இல்லாமால் கடன் வாங்கியாவது மற்றவர்களுக்கு உதவும் அவர்களின் குணம்தான் நான் இப்போதும் பின்பற்றுவது. அதிலும் அண்ணி உடல்நிலை சரியில்லாத போதும் வீட்டிற்கு வந்தவர்களை நிறைவாக கவனித்து அனுப்புவார். எங்களை பொறுத்தவரை அதுதான் எங்களின் தாய்வீடு.

ஏதோ ஒருவகையில் இயற்கை எப்போதும் என்னை காப்பாற்றிக்கொண்டுதான் இருக்கிறது. இன்றுவரை யாராவது என்னை எமாற்றிவிட்டுதான் போகிறார்கள், அதிலும் ரமேஷ் என்பவன் என்னை திட்டம்போட்டு ஏமாற்றியவன். என்னை மட்டுமல்லாது பலரையும் ஏமாற்றியிருக்கிறான், பார்க்க அப்பாவிபோல் தோற்றமளிக்கும் அவனை நம்பி ஏமாந்தவர்கள் பலபேர், ஆனால் அவனும் உருப்படவில்லை. அந்த பித்தலாட்டக்காரன் அடிக்கடி செல்போன் நம்பரை மாற்றிவிடுவான். ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் இன்னும் அவனை சிலபேர் நம்புகிறார்கள் என்பதுதான். தன் தகப்பன் யாரென்றே தெரியாமல் வளர்ந்ததால் இன்றுவரை திருமணம் செய்துகொள்ளாமல், ஒரு மனநோயாளியாக திரிகிறான், ஆனால் அவனை பார்க்கும்போது அப்படி தெரியாது, அவ்வளவு நியாயம் பேசுவான். என்னிடமே ஒருமுறை தனக்கு நல்லவிசயம் ஒருமடங்கு தெரிந்தால், கெட்டவிசயம் மூன்றுமடங்கு தெரியும், தான் நினைத்தால் ஒருவனை வாழவிடாமல் செய்துவிடமுடியும் என சொன்னவன், ஆனால் எப்போதும் யாருக்காவது பயந்து ஒளியும் கோழையாகத்தான் அவனை நான் பார்த்திருக்கிறேன்.

இப்படி தொடர்ந்து நான் யாரிடமாவது ஏமாந்தாலும் நான் உதவி செய்வதை நிறுத்தவில்லை. இந்த சென்னை மாநகரில் நான் வேலைக்காக வந்தபோது திக்கு தெரியாமல் அலைந்தேன், அதனால் யார் என்னைத்தேடி வந்தாலும் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.

சின்ன வயதில் இருந்தே தனிமை விரும்பி, ஆனால் என்னைசுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். ஊரில் இருக்கும்போது நேரம் கிடைக்கும்போது தனியாக காட்டாறு ஒன்று ஊர்க்கடைசியில் ஓடுகிறது அங்கே சென்று பொழுது சாயும்வரை இருப்பேன்.சென்னைவந்தபிறகு மெரினாவுக்கு சென்று பனிரெண்டு மணிவரை அமர்ந்திருப்பேன், இப்போதோ எனக்கென்று நேரம் இருப்பதே இல்லை. எப்போதும் யாராவது என்னுடன் இருப்பதால் என் தனிமையை அனுபவிக்க முடியவில்லை.

எதிர்காலத்தில் ஒரு ஐம்பது ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்யலாம் என்றிருக்கிறேன் அப்போது எனக்கான தனிமை கிடைக்கலாம். தொடர்ந்து போரடித்துவிட்டேன் அடுத்தவாரம் முதல் மீண்டும் என் சிறுவயது அனுபவங்களை எழுதபோகிறேன்.

சின்னவயதில் எங்க ஊரில் காமன் பண்டிகை நடக்கும் அதனைப்பற்றி அடுத்தவாரம் எழுதுகிறேன்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

4 மே, 2009

''ராமசாமி அத்தியாயம் - 13"

காதலும் நட்பும்தான் ஒருவனின் வாழ்வில் முக்கிய பங்கு ஆற்றுகிறது, சில பேருக்கு காதல் வாய்க்காவிட்டாலும், நட்பு இல்லாமல் யாரும் இருக்கமுடியாது, என் வாழ்வில் காதல் ஏற்படுத்திய தாக்கம்போல், நட்பும் பெரிய தாக்கத்தை இன்றுவரை ஏற்படுத்திவருகிறது.

பிறந்த ஊரில் ஒன்றாக வளர்ந்து, ஒன்றாக படித்து தொடர்ந்து நண்பர்களாக இருப்பவர்கள் அநேகம் இருப்பார்கள், எனக்கு அந்த வகையில் சத்தி அத்தானும், ராஜா மாப்பிள்ளையும் இப்போதும் நட்பாக உள்ளார்கள். இதில் சத்தி அத்தான் எங்களைவிட மூத்தவர், ராஜா என் செட்டு, சத்தி அத்தானுக்கு பத்தொன்பதாவது வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். அதனால் அவரை அப்போதுமுதல் முறைவைத்து கூப்பிட ஆரம்பித்துவிட்டேன். இன்றுவரை என்னுடைய எல்லாவிசயங்களையும் அவரிடம் பகிர்ந்துகொள்வேன். வாரம் ஒருமுறை தொலைபேசியில் பேசிக்கொள்வோம். அவர் என் வாழ்க்கையில் முக்கியமான நபர். நல்ல மனிதர் கையில் காசு இருந்தால் நன்றாக செலவு செய்வார், சின்ன வயதில் தாயை இழந்ததால் செல்லமாக வளர்க்கப்பட்டவர். இன்றுவரை எந்த கவலையும் இல்லாத மனிதர் என்று எல்லோரும் சொல்வார்கள், ஆனால் தனிப்பட்ட முறையில் எல்லோர் மீதும் பரிவும் அக்கறையும் உள்ள மனிதர்.

நண்பன் ராஜா எனக்கு எதிர்வீடு, மேலும் மாமா பையன் ஒன்றாகவே விளையாடுவோம், ஏன் வீட்டில் எனக்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்டு, ஆனால் அவனுக்கு நிறைய சுதந்தரம் உண்டு. சின்ன வயதில் இருந்தே எங்களுக்குள் ஒரு மறைமுகமான போட்டி இருக்கும், படிப்பில் சராசரி மாணவன் நான், ஆனால் அவனோ நல்ல மார்க் எடுப்பான், அவர்கள் வீட்டில் எப்போதும் வேலை இருந்துகொண்டே இருக்கும், காலையில் வயலுக்கு போய்விட்டுத்தான் பள்ளிக்கே வருவான், ஆனால் எனக்கு எந்த வேலையும் இருக்காது, எப்போதும் விளையாட்டுதான். இரண்டுபேருமே வீட்டிற்கு கடைசி பிள்ளைகள், அதனால் இரண்டுபேருக்கும் இருவர் வீட்டிலும் ஒரு தனித்துவம் இருக்கும்.

ஒன்பதாவதுவரை அவனும் நானும் வேறுவேறு வகுப்புகள், பத்தாம் வகுப்பில் ஒன்றாக படிக்க ஆரம்பித்தோம், ஆனால் எங்களுக்குள் நட்பு வட்டாரம் மாறியது, பனிரெண்டாம் வகுப்புவரை அப்படிதான், அதிலும் பனிரெண்டாம் வகுப்பில் அவன் டீச்சருக்கு செல்லபிள்ளை, அதனால் நாங்கள் சற்று விலகியே இருந்தோம், பனிரெண்டில் நான் பெயிலானதால், அவன் மேற்கொண்டு படிக்க சென்றுவிட்டான், அதற்க்கு அவன் பட்ட சிரமம் சொல்லிமாளாது, அப்போதும் ஏன் வீட்டில் வந்து எனக்காக சண்டைபோட்டான், எப்படியாவது படிக்க வைங்க என அப்பாவிடம் உரிமையாக பேசினான், ஆனால் நமக்கு ஏறல.

அப்புறம் என்னுடன் சிங்கபூருக்கு வந்தான், அங்குதான் நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட எதிரியானோம். பிறகு அவன் அமெரிக்கா சென்றுவிட்டான். ஆனால் இடைப்பட்ட காலத்தில் சில முக்கியமான முடிவுகளை எனக்கு தெரிந்தே எடுத்திருக்கிறான்.

கடந்த ஒருவருடமாக சென்னையில்தான் இருக்கிறான், ஆளே மாறிபோய் முழுக்க சமூக சிந்தனையுடன் இருக்கும் அவனை நினைக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். இப்போதுபோல் ஆரம்பம் முதலே இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருப்பான். சரியான திட்டமிடலும், கடின உழைப்பும் கொண்டவன்.

சென்னையில் சொந்தமாக பிசினஸ் ஸ்கூல் நடத்துகிறான், கூடியவிரைவில் நாங்கள் இணைந்து சில விசயங்களை செய்யலாம் என்றிருக்கிறோம். முடிந்தால் இவனோட ப்ளாக்குக்கு சென்று ஒருமுறை வாசியுங்கள்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..