31 மார்., 2011

கனவுகள் கலைத்து காதலாடியவள்...


 மன ஆழங்களில் புதையுண்டு
 மறைந்தே போனவள்
 நேற்றிரவு கனவில் வந்தாள்
 மறக்கவே முடியாது என்றுதான் 
 நானவளை நினைத்திருந்தேன்..

 எப்போதும் போலவே
 உதடு சுழித்தும்
 உள்ளங்கை பொருத்தியும்
 விளையாட்டு காட்டினாள்..

 நொடிக்கொரு முறை
"நேரமாச்சு வீட்டுக்குப் போவணும்"
  என்றாள்..

"எந்த பிரச்சினை வந்தாலும்
 எதிர்த்து நின்னு 
 கட்டிப்பியா?" 
 என்று
 கட்டிக் கொண்டாள்..

 எப்போதும் போலவே
 அவளே
 பேசிக்கொண்டிருந்தாள்
 நேரில் மட்டுமல்ல
 கனவில்கூட
 கட்டபட்டிருந்தது என் வாய்..

 கனவைக் கொன்று
 அலறியது அலைபேசி
 உடைந்த குரலில்
 உதிர்ந்த வார்த்தைகள்
 ஒரு துக்க செய்தியைப் பகிர்ந்தன
 ஒற்றைக் கண்ணீர்த்துளியை
 முற்றுப்புள்ளியாக்கி..

 'இனி கனவில் மட்டும்தான் 
 அவளை'...

30 மார்., 2011

பயோடேட்டா - தே.மு.தி.க ...


பெயர் : தேமுதிக
இயற்பெயர் : தெலுங்கர் முன்னேற்ற திராவிடர் கழகம்
தலைவர் : பிரேமலதா
துணை தலைவர்    : சுதிஷ்
மேலும் துணைத் தலைவர்கள் : பண்ருட்டியார், விஜயகாந்த்
வயது : "தம்பி டீ இன்னும் வரல" 
தொழில்  : இன்னும் ஆரமிக்கல. இப்பதான் வேட்பாளரை
                            அடிச்சி, உதைச்சி ட்ரெய்னிங் எடுத்துட்டு  இருக்கோம் 
பலம் : நடுநிலையாளர் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் 
                            அப்பாவி பொதுஜனம்
பலவீனம் : கொளுகை, புண்ணாக்கு எதுவும் இல்லாதது
நீண்ட கால சாதனைகள் : சுகன்யா தொப்புளில் பம்பரம்
சமீபகாலச் சாதனைகள் : 41
நீண்டகால எரிச்சல் : 'ழ' வாயில் நுழையாதது
சமீபத்தைய எரிச்சல் : வெடிவேலு
மக்கள் : தெலுங்கு மட்டும் பேசும் 'தமிளர்'கள்
சொத்து மதிப்பு : இப்போதான ஆரம்பிருக்கோம்!
நண்பர்கள் : முன்பு ராதிகா, ராவுத்தர், லியாகத் அலிகான்,  மூப்பனார் 
                                          எப்போதும் காங்கிரஸ்
எதிரிகள் : வெளிப்படையாக கருணாநிதி,மறைமுகமாக ஜெயலலிதா
ஆசை :முதல்வர் நாற்காலி
நிராசை         : சினிமாவில் சூப்பர்ஸ்டார்
பாராட்டுக்குரியது  : எல்லாருக்கும் வயிறார உணவு வழங்குவது
                                             (தேமுதிக அலுவலகத்தில்)
பயம் : 'மம்மி' நம்மள டம்மி ஆக்கிருமோ?
கோபம்         : பாகிஸ்தான் தீவிரவாதிகள்
காணாமல் போனவை : கதாநாயக வேஷம்
புதியவை : கருப்பு எம்ஜிஆர் வேஷம்
கருத்து         : கிச்சன் கேபினட் முடிவு செய்யும்
டிஸ்கி : கருப்பு, சேப்பு, பச்சை, மஞ்சள்னு இன்னும் எத்தனை 
                          எம்ஜிஆர்தாம்ப்பா வருவாங்க?

29 மார்., 2011

துண்டுப் பிரசுரங்கள் #Defeat Congress

மேலும் சில துண்டுப் பிரசுரங்களை நண்பர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கத் தோழர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்...





28 மார்., 2011

திருவண்ணாமலை ...


எனக்கு கடவுள்கள் மேல் நம்பிக்கை கிடையாது. மனிதர்கள் மீதே நம்பிக்கை வைக்க முடியாத காலத்தில் கடவுள்கள் மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும். கடவுள்களைப் பற்றிய எனது பார்வை எப்போதும் இப்படிதான் இருக்கும். லாஜிக் இல்லாத எதனையும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆனால் கோவில்களில் கடவுள் இல்லை என்று புரிந்துகொண்டபின் நம்மை இயக்கும் அந்த Super Nature மேல் ஓர் ஆர்வம் வந்து அதற்காக ஆன்மீகத்தின் பக்கம் பார்வையை திருப்பினேன். ஆன்மீகத்திலும் ஆயிரம் குருமார்கள் ஆயிரக்கணக்கான வழிமுறைகள்.

ஒரு வழியாக அலசி ஆராய்ந்ததில் "வாழ்க வளமுடன்" வேதாத்ரி மகரிஷியின் கொள்கைகள் ஏற்புடையதாக இருக்க அகத்தாய்வு மூன்றாம் நிலை வரை பயின்றேன். அதே காலகட்டத்தில் ஓஷோவை படிக்கவும் ஆரம்பித்தேன், அது அப்படியே ஜே.கே வரை பயணித்தது. இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் சென்னை ஹிக்கின் பாதம்ஸில் ஒரு புத்தகத்தை காண நேரிட்டது. அதன் பின்னட்டையில் இப்படி எழுதி இருந்தது "எனக்கு சுடும் அதிகாரம் இருந்தால், நான் முதலில் சுடுவது ஆசிரியர்களாய்த்தான் இருக்கும்’” என. அதனைப் பார்த்ததும் உடனே வாங்கிப்படித்தேன். அந்தப்புத்தகம் என்னுள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்தியது. அவர் யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி. இவரின் புத்தகங்கள் என்னை வேறு பாதைக்கு இட்டுச் சென்றது.

ஆனாலும் நான் அடிக்கடி திருவண்ணாமலை செல்லும் பழக்கம், நான் இப்போது தீவிர கடவுள் மறுப்பாளனாக இருக்கும்போதும் தொடர்கிறது. எப்போதும் நான் கிரிவலம் சென்றதில்லை. பொதுவாகவே பழமை வாய்ந்த கோவில்களாக இருந்தால். அதனுள் சென்று முழுவதுமாக சுற்றிப்பார்த்துவிட்டுதான் வருவேன். ஆனால் திருவண்ணாமலை நான் தனியாக சென்றால் மலையில் ஏறிவிட்டு வந்துவிடுவேன். நண்பர்களுடன் சென்றால் மட்டுமே கோவிலுக்குள் சென்று வருவேன்.



புதிய நண்பர்களை திருவண்ணாமலை அழைத்துச்சென்றால் போகும் வழியிலேயே ஒருமுறை செஞ்சிக்கோட்டையில் ஏறச்சொல்லி பழகிக்கொள்ளச்சொல்வேன். அது மறுநாள் காலை திருவண்ணாமலை மலையில் ஏறுவதற்கு உதவியாக இருக்கும். செஞ்சிக்கோட்டை போன்ற மிகச்சிறந்த புரதான சின்னங்களை நமது அரசு சரியாக பராமரிக்கவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. பெரும்பாலும் காதலர்களும், விலைமாதர்களும் ஒதுங்கும் இடமாகத்தான் அது இருக்கிறது. இலவசங்களால் மக்களை வளைக்கும் அரசுக்கு எது போனால் என்ன கவலை.

திருவண்ணாமலை மலை என்பது முறையான பாதைகள் இல்லாத மலை. பக்கத்தில் இருக்கும் பர்வத மலையில் குறிப்பிட்ட தூரம் வரைக்கும் படிக்கட்டுகள் அமைத்து இருப்பார்கள். அதற்குமேல் சிறிது தூரம் பாறைகள் வழியில் கடந்தால், அதன்பிறகு செங்குத்தான மலையும், ஆபத்தான வளைவுகளும் இருக்கும் என்றாலும் பர்வதமலையை பொறுத்தவரைக்கும் ஆட்கள் தொடர்ச்சியாக ஏறவும் இறங்கவுமாக இருப்பார்கள். மலை மீது ஒரு மண்டபம் இருக்கிறது. வழி நெடுக பெட்டிக்கடைகள் இருக்கிறது. அதனால் ஓய்வு எடுத்துக்கொண்டு மேலேற முடியும். ஆனால் திருவண்ணாமலையைப் பொறுத்தவரை கார்த்திகை தீபம் நாட்களில் மட்டுமே ஆட்கள் மிகுதியாக இருப்பார்கள். மற்ற நாட்களில் தீவிரமான பக்தர்களைத்தவிர வேறு யாரும் மலையேற மாட்டார்கள். அதனால் முன் அனுபவம் இருக்கும் நபர்களுடனோ அல்லது மலையடிவாரத்தில் இருக்கும் நபர்களுடன் ஒருமுறை ஏறினால், ஒரு சிறந்த மலையேற்ற அனுபவத்தை உங்களால் பெற முடியும்.

ஒருமுறை நாங்கள் ஐந்து நண்பர்கள் இப்படி மலையின் உச்சியை அடைந்தபோது, ஒரு நண்பன் இப்ப ஒரு டீ சாப்பிட்டா நல்லாருக்கும் என சொன்னான். நாங்கள் அவனை கிண்டல் செய்தோம். ஆனால் சிறிது நேரத்தில் மேலேறி வந்த உள்ளூர்வாசி எங்களுக்கு அருமையான சுக்கு காப்பி வைத்துத்தந்தார். அவர் அங்கு ஏற்கனவே தவமிருந்த சுவாமி நாராயண குருவின் சீடராம். தினசரி மலையில் ஏறிவந்து அவர் தவம் செய்த இடத்தை சுத்தம் செய்து வழிபாட்டு செல்வாராம். பிறகு அவருக்கு நன்றி கூறி விடைபெற்றோம்..

கடவுள் என்கிற விசயத்தையும் தாண்டி சில ஆன்மிகத்தலங்கள் நமக்கு சில மாற்று அனுபவங்களை தரவே செய்கிறது..

27 மார்., 2011

தேர்தல் அறிக்கை...

25 மார்., 2011

புத்தகங்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ்...

எங்கள் ழ பதிப்பகத்தின் நான்கு புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்..




24 மார்., 2011

பயோடேட்டா - காங்கிரஸ்( தமிழ் நாடு கிளை) ...

பெயர் :இந்திய தேசிய காங்கிரஸ்( தமிழ் நாடு கிளை) 
இயற்பெயர் :பண்ணையார்களின் கட்சி 
தலைவர் :ஸ்பெக்ட்ரம் 
துணை தலைவர்கள் :சி.பி.ஐ 
மேலும் 
துணைத் தலைவர்கள் :வேட்டியைக் கிழிக்கும் எல்லாரும்  
வயது :சொந்தமாய் எழுந்து நடக்க முடியாத வயது  
தொழில் :தினம் டெல்லிக்கு எஸ்.டி.டி பேசுவதும், காமராசருக்கு
                         வருஷாப்பியம் கொண்டாடுவதும் 
பலம் :இன உணர்வற்ற தமிழர்கள்
பலவீனம்  :சுயமாக முடிவெடுக்க முடியாதது.
நீண்ட கால சாதனைகள் :தி.மு.க வை உடைத்து அ.தி.மு.க வை
                                                           உருவாக்கியது 
சமீபத்திய சாதனைகள் :63 தொகுதிகள் 
நீண்ட கால எரிச்சல் :கருணாநிதி 
சமீபத்திய எரிச்சல் :சீமான், தாமரை, கோவை.இராமகிருட்டிணன்
                                                   போன்றவர்கள் 
மக்கள் :தமிழர் அல்லாதவர்கள் 
சொத்து மதிப்பு :இதுல மட்டும் மத்த கட்சிக்காரனுங்க போட்டிக்கு
                                       வரவே முடியாது 
நண்பர்கள் :ராஜபக்க்ஷே கும்பல்
எதிரிகள் :இன்னும் திராவிடம் பேசுபவர்கள்                   
ஆசை :ஆட்சியில் பங்கு 
நிராசை :இம்முறை டெபாசிட் தேறாது 
பாராட்டுக்குரியது :ஆளே இல்லாமல் கட்சி நடத்துவது 
பயம் :தமிழ் பேசுற பயலுவ ஆப்ப சொருவிடுவானுவளோ?
கோபம் :ராஜீவ் காந்தியை கொன்னுட்டாங்க (இந்திராகாந்தி???)
காணாமல் போனவை :காந்தியம் 
புதியவை :கார்த்தி சிதம்பரமியம் 
கருத்து :இருங்க டெல்லிக்கு பேசிட்டு சொல்றோம்
டிஸ்கி        :நாப்பத்தஞ்சு வருசமா காவேரி, முல்லைப்பெரியார்,
                           தேவிகுளம்-பீர்மேடு, தமிழக மீனவன்,            
                           ஈழத்தமிழன்னு எதுக்காகவும், யாருக்காகவும் போராடாம
                          நோகாம நொங்கு தின்னது இனிமே நடக்காது சாமீய்...

23 மார்., 2011

எங்கே போகிறது இந்தியா? - பகுதி ஐந்து...


ஜனநாயக திருநாட்டில் பிரதமர்தான் மக்களின் முதன்மை வேலைக்காரர். நமது அடுத்தடுத்த வேலைக்காரர்களாக மத்திய மாநில அமைச்சர்களும், மாநில முதலமைச்சர்களும் இருக்க வேண்டும். ஒவ்வொரு அரசு அதிகாரியும் நேர்மையாகவும், மக்களின் நலனுக்காக வேலை செய்பவராகவும் இருக்கவேண்டும். குறிப்பாக காவல்துறை மிக நேர்மையாக செயல்பட்டு மக்களின் பாதுகாப்பையும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமையையும் மீட்டுத்தர உறுதுணையாக இருக்க வேண்டும். எந்த திட்டங்களை நிறைவேற்றினாலும் அதனை மக்களிடம் நேர்மையாக கொண்டு சேர்க்கும் பிரதநிதிகளாகத்தான் நாம் நமக்காக அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

ஆனால் இங்கு நடப்பதெல்லாம் அப்படியே தலைகீழாக அல்லவா இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் குழுவாக சேர்ந்துகொண்டு தங்கள் நலனுக்காக அத்தனை நிர்வாகங்களையும் குளறுபடியாக்கியுள்ளனர். மக்களாட்சி மலர்ந்த காலத்தில் அரசியல்வாதிகளை தீர்மானிக்கும் சக்திகளாக பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் இருந்தனர். ஆனால் காலவோட்டத்தில் அரசியல்வாதிகளே பெரிய நிறுவனங்களை ஆரம்பித்து முதலாளிகள் ஆனார்கள். இப்போது இந்தியாவில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும்
மிகப்பெரிய நிறுவனங்களின் முதலாளிகளாக இருக்கின்றனர். இதில் சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் மட்டும்தான் விதிவிலக்காக இருக்கின்றனர்.

தமிழகத்தில் கருணாநிதியின் குடும்பத்தினர் வைத்திருக்கும் நிறுவனங்கள் பற்றி ஊருக்கே தெரியும் என்பதால் நேரடியாக விசயத்துக்கு வருகிறேன். அரசு பதவிகளில் இவர்கள் இருப்பதால் இவர்களின் ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் தாராள அரசு விளம்பரங்களை தருகிறார்கள். இது தவறான கொள்கையாகும். ஆனால் இவர்களை விமர்சிக்க வேண்டிய மாற்று ஊடகங்களும் அதே அரசு விளம்பரங்களுக்காக பணிந்து போகிறது. இதே போல மிடாஸ் ஆரம்பித்துவிட்டு டாஸ்மாக்கை அரசு மயமாக்கினார் ஜெயலலிதா, ஆட்சி மாறியது. ஆனால் மிடாஸ்தான் இன்றைக்கும் டாஸ்மாக்கின் முன்னணி சரக்கு விற்ப்பனையாளர். 

அந்த காலங்களில் நடந்த மன்னராட்சிக்கும் இப்போது நடக்கும் மக்களாட்சிக்கும் எந்த வித்தியாசங்களும் இல்லை. என்ன, அந்தக்கால மன்னர்கள் மக்களுக்காக போரிட்டு உயிர் பிரிவதை பெருமையாக நினைத்தனர். இந்தக்கால மன்னர்கள் தாங்கள் கொள்ளையடித்த பணத்திற்காக விசுவாசிகளை பலிகடாவாக்குகின்றனர்.

பிரதமராக பதவி வகிக்ககூடியவர் இந்த தேசநலனில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதை நாம் தினசரி ஒரு சிரிப்பு நடிகரைப்போல அவர் பேசுவதை கேட்டு சிரிப்பாய் சிரிக்கிறோம். இதில் சில நண்பர்கள் அவரை குற்றம் சொல்லி என்ன ஆவது. அவர் ஒரு குரங்கு. குரங்காட்டி சொல்வது போல ஆடுவதுதான் அவர் வேலை என சப்பைக்கட்டு கட்டுகின்றனர். இப்படி ஒரு ஈனப்பிழப்புக்கு டெல்லி ரயில்வே நிலையத்தில் பாட்டு பாடி பிச்சை எடுக்கலாம். இந்தியா சுதந்திரம் பெற்றபின் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிதான் இந்த நாட்டை நிர்வாகிக்கும் சக்தியாக இருந்துவருகிறது. ஆனால் இன்னும் ஏழை நாடாகவே இந்தியா இருக்கிறது. இடையில் வந்த பி.ஜெ.பி.யோ  பக்கத்து நாடான சீனா ஜெட் வேகத்தில் முன்னேற நாமோ ஆமை வேகத்தில் போவதையே " இந்தியா ஒளிர்கிறது பார்" என இருட்டில் நின்றுகொண்டு விண்மீன்களை காட்டியவர்கள்.

கண்ணுக்கு தெரிந்தே எத்தனை ஏரிகளை கான்க்ரீட் ஆக மாற்றிவிட்டார்கள். இப்போதும் சாலை போடும்போது எங்காவது மழைநீர் வடிகால்கள் செய்கிறார்களா"? கடுமையான மழை நேரங்களில் சென்னை மிதக்கும். இதில் சென்னையை சிங்கப்பூர் ஆக்கும் வாய்ச்சவடால்கள் வேறு. தங்க நாற்க்கர திட்டத்தின் மூலம் போட்ட அத்தனை சாலைகளும் அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் டோல் வரியில் அவர்கள் வாங்கும் கட்டணத்திற்கு என்ன வரைமுறை வைத்திருக்கிறார்கள் என்பது யாருக்காவது தெரியுமா?

ஓட்டுக்கு பணம் கொடுக்ககூடாது, தேர்தல் செலவுகளை கண்காணிக்க வேண்டும். என ஆயிரம் நடைமுறைகளை அமுல்படுத்தும் தேர்தல் கமிசன் ஏன் தேர்தல் அறிக்கைகளுக்கும் தடை ஏற்படுத்தக்கூடாது?.  இப்போதெல்லாம் வருகிற தேர்தல் அறிக்கைகள் இலவசங்களை அறிவிக்கும் தூண்டிலாகத்தான் இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் லஞ்சம் கொடுத்து ஓட்டு வாங்குவதைப்போலதானே!!!. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவோம். தடையில்லா மின்சாரம் தருவோம். பாக்கெட்டில் விற்கப்படும் தண்ணீர் விற்ப்பனையை ஒழித்து அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர், தரமான சாலை வசதிகளை தருவோம் என எந்த அறிக்கையாவது இருக்கிறதா"?. கிரைண்டர் தாரேன், மிக்சி தாரேன்., அரிசி தாரேன்னு சொல்லி மக்களை பிச்சைக் காரர்களாய் மாற்றும் முயற்சிதானே இப்போது வெளியாகியிருக்கும்.

டாஸ்மாக் இருப்பதால்தான் ஒரு ரூபாய்க்கு அரிசி தருகிறோம் என சப்பைக்கட்டு கட்டுகிறார்களே!. ஒரு குவார்ட்டரின் விலை நூறு ரூபாய். இந்த காசுக்கு தினசரி அவன் ஐந்து கிலோ தரமான அரிசி வாங்கி சாப்பிடுவானே. இருநூறு ரூபாய் தினசரி கூலி வாங்கி நூறு ரூபாய்க்கு குவார்டர் அடித்துவிட்டு மீதியை சைடிஷ் க்கு செலவழித்துவிட்டு ஆரோக்கியத்தை தொலைத்துவிட்டு முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகளை கையில் வைத்துக்கொண்டு தனியார் மருத்துவமனைகளில் வரிசையில் நிற்கிறான். டாஸ்மாக்கை வைத்திருக்கும் அதே வேளையில் கள்ளுக்கடைகளுக்கும் அனுமதி தரலாமே. அவன் பத்து ரூபாயில் ஆரோக்கியமான பானத்தையாவது அருந்துவான். இதனால் நிறைய விவசாயிகளும் ஏழைத் தொழிலாளர்களும் பயன்பெறுவார்களே!. ஆனால் பெருமுதலாளிகள் மென்மேலும் பணம் சம்பாதிக்க அல்லவா வழிவகை செய்திருக்கிறார் இன்றைய முதல்வர்.

இன்னும் இருக்கு... அது அடுத்த பகுதியில்... 

இனைப்பு :

தமிழக மக்கள் உரிமை கழகம் மற்றும்  மே பதினேழு இயக்கம் இணைந்து நடத்திய   கருத்தரங்கம்  - "தமிழக மீனவர் படுகொலையும் மக்களை திசை திருப்பும் சதியும் " 

நிகழ்ச்சியில் ஆற்றப்பட்ட உரைகள் காணொளி பதிவுகள்

http://www.youtube.com/watch?v=q8yxkhKWqG4

http://www.youtube.com/watch?v=L1as3_xwU0Q

http://www.youtube.com/watch?v=Gs4XXoyrCm4

திருமுருகன் உரை 

http://www.youtube.com/watch?v=mP-NmEfzKLk

http://www.youtube.com/watch?v=Fq0qHM6DPFk

http://www.youtube.com/watch?v=bB4EYqP049Y

மகேஷ் உரை 

http://www.youtube.com/watch?v=JkbQ65HPRUA

22 மார்., 2011

பயோடேட்டா - அ.தி.மு.க ...


பெயர்                               : அனைத்திந்திய அன்னா திராவிட முன்னேற்ற கழகம்
இயற்பெயர்                   :அகிலாண்ட நாயகி அம்மா திராவிட(ரல்லாத) 
                                             முன்னேற்றக் கம்பெனி பி.லிமிடெட்
தலைவர்                         : அன்று எம்.ஜி.ஆர் இன்று சசிகலா & Co
துணை தலைவர்கள்  : இந்து ராம், துக்ளக் ‘ஷோ’
மேலும் 
துணைத் தலைவர்கள்  : அப்புடியெல்லாம் பேசப்புடாது
வயது                                    :  எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகில் இன்னொரு இடத்தை 
                                                    கட்சிக்கு தேடும் வயது
தொழில்                         : ஹைதராபாத்தில் திராட்சை வளர்த்தல், கொடநாட்டில் 
                                             தேயிலை வளர்த்தல் , மிடாசிலிருந்து டாஸ்மாக் 
                                             சப்ளை லைனை வளர்த்தல், ஓய்வு நேரத்தில் 
                                             அறிக்கை விளையாட்டு
பலம்                                : எம்.ஜி.ஆரும், இரட்டை இலையும்
பலவீனம்                       : பின்னங்கால் பிடரியில்பட ஓடிக்கொண்டிருக்கும் 
                                             இரண்டாம், மூன்றாம் மட்டக் கட்சித் தலைவர்கள்
நீண்ட கால சாதனைகள் : சிங்கிளா நின்னு சிக்சர் அடிப்பது
சமீபத்திய சாதனைகள்   : இஷ்டம்ன்னா இரு, கஷ்டம்ன்னா ஓடீப்போ
நீண்ட கால எரிச்சல்         : எம்.ஜி.ஆர் புகழ்பாடும் கட்சியினர்
சமீபத்திய எரிச்சல்            : தி.மு.க வின் தேர்தல் அறிக்கை
மக்கள்                               : இன்னமும் ஆயிரத்தில் ஒருவன், ஒளி விளக்கு 
                                                படங்களை பார்ப்பவர்கள்
சொத்து மதிப்பு             : கோர்ட்டில் இருப்பதால் கருத்து சொல்ல முடியவில்லை
நண்பர்கள்                      : பணிக்கர்கள், நம்பியார்கள் இன்னபிற 
                                              ஜோதிட சிகாமணிகள்
எதிரிகள்                          : காங்கிரஸ்காரர்கள் அல்ல
ஆசை                                : நிரந்தர முதல்வர்
நிராசை                            : துனைப் பிரதம்ர்
பாராட்டுக்குரியது      :கருணாநிதி மாதிரி வளைந்து கொடுக்காமல் நரசிம்மராவ்,
                                             வாஜ்பாய், அத்வானி உட்பட டெல்லிக்காரர்கள் 
                                            கண்களில் விரலை விட்டு ஆட்டியது
பயம்                                   : வருங்காலத்தில் விஜயாகாந்த்?!
கோபம்                              : கேள்வி கேட்டால் வருவது

காணாமல் போனவை    : அரசியல் நாகரீகம்
புதியவை                        :    “ராவண லீலைகள்”
கருத்து                             :பெர்னாட்ஷா, ஷேக்ஸ்பியர் யாருன்னு தி.மு.க 
                                             தொண்டனிடம் கேட்டா  “அண்ணாவோட
                                             சிஷ்யப்புள்ளைங்க”னு சொல்லுவான். அ.தி.மு.க 
                                             தொண்டனிடம் கேட்டா “இதுங்கெல்லாம் அம்மா 
                                             வளர்க்கிற நாய்க்குட்டி பேரான்னு கேப்பான்.
டிஸ்கி                              :“தள்ளாத சென்னா ரெட்டி தப்பா பிஹேவ் பன்னாரு”, 
                                             “நரசிம்மராவுக்கும் எனக்கும் தலைமுறை இடைவெளி 
                                             இருக்கு”, “ அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா” 
                                             “வாஜ்பாய் வெறும் ட்ரைவர்தான், நாந்தான் எஞ்சின்”, 
                                             ”சோனியாவுக்கு பதிபக்தி இல்லை”, “நானும் 
                                             பப்பாத்திதான்”,  இந்த ஸ்டேட்மெண்ட்லாம்
                                            ஞாபகம் இருக்குங்களா மேடம்?!.

21 மார்., 2011

நாங்கள் தமிழர்கள்.. எங்கள் வாக்கு #DefeatCongress...

காங்கிரஸை தமிழகத்திலிருந்து விரட்டுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து எதிர்வரும் 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் காங்கிரஸை மண்ணைக்கவ்வச் செய்யவேண்டும் என்று சிலநாட்களுக்கு முன் நானும் தம்பி விந்தை மனிதனும் பதிவுகளை வெளியிட்டிருந்தோம். எதிர்பார்த்த அளவிற்கு தமிழ்ப்பதிவுலத்தினரின் ஒத்துழைப்பு கிட்டவில்லை என்றபோதிலும், எதிர்பாராத திசைகளிலிருந்து இணைய நண்பர்கள் மூலம் ஆதரவு குவிகின்றது.

நமது இணையதள நண்பர்கள் மேற்க்கண்ட துண்டுப் பிரசுரத்தை நமக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இதனை பிரதியெடுத்து அனைத்து மக்களுக்கும் வினியோகிக்குமாறு நண்பர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் வைக்கிறோம்..

இதையும் அவசியம் படிங்க..

கச்சத்தீவும் நமதே! கீழைக்கடலும் நமதே!! #DefeatCongress

20 மார்., 2011

தேர்தல் அறிக்கை - சாவுக்கு சலவை நோட்டு #DefeatCongress in #TNae11...


ஒரு ஓட்டுக்கு கருணாநிதி எவ்வளவு பணம் கொடுப்பார், ஜெயலலிதா எவ்வளவு பணம் கொடுப்பார் என்று ஒவ்வொருவரும் கனவு கண்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இன்று மதியம் தான் சாப்பிடவேண்டிய மாத்திரைக்கான பணத்திற்கு வழியில்லையே என்று புழுங்கிக் கொண்டிருக்கும் ஒரு பரிதாப ஜீவன்தான்  மேலிருக்கும் புகைப்படத்தில் இருப்பவர்.

பெயர்: ராஜா முகம்மது.
வயது: 42
ஊர்: ஜெகதாப்பட்டிணம் (புதுக்கோட்டை மாவட்டம்)
தொழில்: இலங்கைக் கடற்படையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு நேர்ந்து விடப்பட்ட தமிழக மீனவன்.

சுடப்பட்டிருந்தாலும் எப்படி இது போன்ற தீப்புண்கள் என்று தோன்றலாம். ஆனால், இவர் தாக்குண்டது பெட்ரோல் குண்டு வீச்சில். உடலில் பற்றிய தீயோடு கடலில் நீந்தி கரை சேர்ந்த அவரை ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். தமிழக மீனவர்களை வைத்து நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த கருணாநிதிக்கு ஒரு காட்சி கிடைத்ததாக குதூகலித்தார். பால்வளத்துறை அமைச்சர் மதிவாணனையும், கூடவே சன் டி.வி. கேமராமேனையும் அனுப்பி, ஐம்பதாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கியதாகவும், ஆறுதல் கூறியதாகவும் ஒளிப்பதிவு செய்து, தங்கள் நாடகத்தின் காட்சியொன்றை தமிழகம் முழுக்க ஒளிபரப்பி தம்பட்டம் அடித்துக்கொண்டார். சாவுக்கு சலவை நோட்டு திட்டம்; காயத்திற்கு கரன்சி உதவி திட்டம் என்றெல்லாம் கூட அறிவிக்கலாம் அரசியல்வாதிகளும்; அவர்தம் நாடகங்களும்.

திமுகவினரின் அன்றைய நாடகக்காட்சி அவர்கள் அளவில் முடிவுற்றது. ஆனால், உடல் முழுக்க தீப்புண்களோடு மருத்துவமனையில் இருந்த ராஜா முகமதுவிற்கு அரசுப் பணம் யானைப் பசிக்கு சோளப் பொரியாகிப் போனது. உடல் தேறாமலே, கையில் பணமில்லாத நிலையில் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டவர்இன்னும் படுக்கையில்தான் இருக்கின்றார்; தீக்காயங்களோடும், வைத்தியம் பார்க்க பணமில்லையே என்னும் மனக்காயங்களோடும்.

தமிழகத்தில் இவர் ஒருவர் மட்டுமல்ல, இவரைப் போன்ற ஆயிரக்கணக்கானோர் கையிழந்து, காலிழந்து, தொழில் செய்ய வலுவிழந்து நடை பிணமாக வாழ்ந்து வருகின்றனர். அந்நிய நாட்டுப் படையால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட தன் நாட்டு குடிமகனைக் காக்க வக்கில்லாத அரசு, தன் குடும்ப வளத்தை பெருக்குவதில் மட்டும் முழு கவனம் செலுத்தி வருகின்றது.

இதுபோன்ற தாக்குதல்களும் கொலைகளும் இனியும் நடைபெறக்கூடாது என்னும் நோக்கில் இணைய நண்பர்களால் முன்னெடுக்கப்பட்ட #tnfisherman போராட்டம், இணையம் கடந்து பல மட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றது. அதன் ஒரு முகமாக பல்வேறு இணைய நண்பர்கள், நாகப்பட்டிணம் தொடங்கி ராமேஸ்வரம் வரையிலான மீனவப் பகுதிகளுக்கு சென்று மீனவர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை திரட்டி வந்துள்ளனர்.

இதுவரை நாம் மேற்கொண்ட செயல்களை பரிசீலிக்கவும் (Review), அடுத்து நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதனை ஆலோசனை செய்யவும் வரும் ஞாயிறு அன்று #tnfisherman ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது.

நாள்: 20/03/2011
நேரம்: மாலை 5 மணி.
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், (பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்) மேற்கு KK நகர்.

அன்றைய கூட்டத்தின் திட்டம்:
1. முதல் ஆலோசனைக் கூட்ட முடிவுகளும், நடைமுறைப்படுத்தப்பட்டவையும் - அறிக்கை வாசிப்பு.
2. மீனவர்கள் வாழ்வில் - மீனவர் சங்கப் பிரதிநிதியின் உரை
3. மீனவர்கள் சந்திப்பு - பயணம் சென்ற நண்பர்களின் உரை.
4. மீனவர் ராஜா முகமது - நமது பங்களிப்பு என்ன?
5. ஆர்வலர்களின் கருத்துகளும், கலந்துரையாடலும்.

நம் சகோதரர்களுக்காக செயல்படும் நாம், அனைவரது கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெற்று ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிடும் இக்கூட்டத்திற்கு #tnfisherman ஆர்வலர்கள் அனைவரும் வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

www.savetnfishermEn.org சார்பாக

காங்கிரசை தோற்கடிப்போம் #DefeatCongress in #TNae11...


காங்கிரஸைத் தோற்கடிக்க வாருங்கள் என்று ஏற்கனவே பதிவிட்டிருந்தோம்.
பதிவுலகிலிருந்து பெருமளவில் யாரும் திரண்டு வராவிட்டாலும்கூட, இணைய வாசகர்கள், ட்விட்டர், முகப்புத்தகம் போன்றவற்றில் இயங்கும் நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியாக இருந்தது. பல நண்பர்கள் நேற்றுமாலை சென்னை தியாகராயநகரில் ஒன்றுகூடி "என்ன செய்யலாம்?" என்று கலந்தாலோசனை செய்தோம். நண்பர் பதிவர் கும்மி உடல்நலப் பிரச்சினைகளினால் நேரில் வரமுடியவில்லை எனினும் கூட்டம் எடுக்கும் முடிவுகளுக்கு தானும் உடன்படுவதாகச் சொன்னார்.

காங்கிரஸ் என்கிற கரையான்புற்றை தமிழகத்திலிருந்து இல்லாதொழிக்கும்
மிகப்பெரும் பணியில் தமிழ்தேசிய இயக்கங்கள், தமிழுணர்வாளர்கள், மனித
உரிமை ஆர்வலர்கள் ஆகியோர்களின் செயல்பாடுகளில் தமிழிணையவாசிகளான நாங்களும் சங்கமிப்பதை நாங்கள் பெருமிதமாக உணர்கிறோம்.

ஊர்கூடித்தான் தேர் இழுக்கவேண்டும். உதிரிப்பூக்கள் ஒன்றுசேர்ந்துதான்
மாலையாக வேண்டும்.

இன்று நாம் துவங்கி இருக்கிற சிறிய துவக்கம் நாளை பெரும் சூறாவளியாகச்
சுழன்று காங்கிரஸ் கட்சியை தமிழகத்துக்கு வெளியே வீசியெறிந்துவிடக்கூடும். அதற்கான முயற்சிகளில் தமிழ் இணைய வாசகர்கள்,பதிவர்கள், சமூக வலைத்தள உபயோகிப்பாளர்கள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று இந்தப் பதிவினைப் படிக்கும் அனைவரையும் வேண்டுகிறேன்

நேற்றைய ஒன்றுகூடலில் எடுக்கப்பட்ட முடிவுகள் :-

1)காங்கிரஸுக்கு எதிரான புனிதப்போரில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் " நாம் தமிழர்" போன்ற இயக்கங்களுடன் இணைந்து அனைவரும் ஒருமித்து  
    வேலை செய்யலாம் என்றும்.

2). காங்கிரஸ் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் காங்கிரஸ்
எதிர்ப்பு ஆர்வலர்களை ஒன்று திரட்டி அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யலாம் என்றும்.

3). இதற்கென பொதுவான tag ஆக ட்விட்டர் தளத்தில் நாம் அனைவரும் ஒரே tag -ஐ பயன்படுத்தலாம் என்றும்.

4).முகநூல்( facebook) மற்றும் ப்ளாக்கில் இதற்கென பொதுவான தளம் அமைத்து அல்லது ஏற்கனவே ட்விட்டர் தளம் போல யாராவது முன் மாதிரியாக இருந்தால் அதனை பின்பற்றுவது எனவும்

5)இப்போதைக்கு இதன் ஒருங்கினைப்பாளர்களாக நானும் (கே.ஆர்.பி.செந்தில்௦),
    ராஜாராமனும் (விந்தை மனிதன்) இருவரும் இயங்குவது எனவும் முடிவு
    செய்யப்பட்டது.

இந்த முடிவின் விபரங்களை ஆர்வலர்களிடம் தொடர்பு கொண்டு சொல்லிவிட்டோம்.

இது தொடர்பாக தகவல்கள் வேண்டுவோர்.

கே.ஆர்.பி. செந்தில் : +91-80988 58248
ராஜாராமன் (விந்தை மனிதன்) : +91-95007 90916    தொடர்பு கொள்ளலாம்...

19 மார்., 2011

பயோடேட்டா - தி.மு.க ...


பெயர்                                   : திராவிட முன்னேற்ற கழகம் 
இயற்பெயர்                      : திருக்குவளை மு.கருணாநிதி ப்ரைவேட் லிமிடெட்
தலைவர்                            : அன்று அண்ணா இன்று கருணாநிதி
துணை தலைவர்கள்   : ஸ்டாலின், அழகிரி, கனிமொழி
மேலும் 
துணைத் தலைவர்கள்  : உதயா, துரை தயா, கலா&தயா நிதிகள்
வயது                                :  பகுத்தறிவு, சுயமரியாதை, மாநில சுயாட்சி எல்லாம்
                                              வேலைக்காவாது என்று 'பக்குவ'ப்பட்ட வயது
தொழில்                         : சொத்து சேர்ப்பது மட்டும்
பலம்                                 : மூளை மழுங்கடிக்கப்பட்ட தொண்டர்கள்
பலவீனம்                       : காங்கிரசின் அடிமையாய் மாறியது
நீண்ட கால சாதனைகள் : சினிமாக்காரனை அரசியலுக்கு கொண்டுவந்தது
சமீபத்திய சாதனைகள்   : தொகுதி உடன்பாடு
நீண்ட கால எரிச்சல்         : கணக்கு கேட்பவர்கள் 
சமீபத்திய எரிச்சல்            : பங்கு கேட்பவர்கள்
மக்கள்                               : வக்கத்தவர்கள் ( இலவசங்களை மட்டும் 
                                                  விரும்புகிறவர்கள்)
சொத்து மதிப்பு             : முன்பு கொள்கைகள், இன்று கொள்ளைகள்
நண்பர்கள்                      : காங்கிரஸ்காரர்கள் அல்ல
எதிரிகள்                          : பழைய திமுகவின் கொள்கைகளை 
                                                 இன்றுபேசுபவர்கள்
ஆசை                                : 114
நிராசை                            : 80 வருமா?
பாராட்டுக்குரியது      :  இன்னும் வலிக்காத மாதிரியே நடிப்பது 
                                                 (என்னா அடி அடிக்கிறான் காங்கிரஸ்காரன்...)
பயம்                                   : மம்மி ரிட்டர்ன்ஸ்
கோபம்                              : அடிமட்ட தொண்டர்களிடம் இருப்பது 

காணாமல் போனவை    :பெரியாரும், அண்ணாவும் மற்றும் மிசா காலத்தில் 
                                                       சீறிப்பாய்ந்த வீரமும், கோபமும்
புதியவை                        :  சென்னையை விட்டுக்கொடுத்தது
கருத்து                             : தொண்டர்களிடம் இருக்ககூடாது
டிஸ்கி                              : 
பார்ப்பனீயத்தின் சனாதன தர்மத்துக்கு 
                                               பாடையைத் தயார்செய்த திராவிட இயக்கம் 
                                              இன்று அதற்கே பல்லக்கு தூக்கும் கார்ப்பொரேட் 
                                              கம்பெனியாக சீரழிந்துபோனது கண்டு சுயமரியாதை 
                                              உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் மனம் வெதும்பி 
                                              நிற்கிறான்..

17 மார்., 2011

1967 ஐ காங்கிரஸின் நினைவுகளில் தட்டியெழுப்புவோம்! தேர்தல் களத்தில் சூன்யத்தைப் பரிசளிப்போம்!!...


காங்கிரசுக்கு இறுதிச்சடங்குகளை செய்யத் தேவையான சாமக்கிரியைகளைப் பற்றி நானும்கேஆர்பி அண்ணனும் பேசிக் கொண்டிருந்தோம். நம்மால் என்ன செய்ய இயலும் என்பதனைப் பற்றிய ஆலோசனைகளை பதிவர் கும்மி உடல்நலன் குன்றி இருந்தபோதிலும் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட நேரம் தொலைபேசி உரையாடலில் பகிர்ந்து கொண்டார். அண்ணன் குழலியுடனான தொலைபேசி உரையாடலில் அவர் திமுகவையும் சேர்த்துப் புதைக்க வேண்டும் என்ற கருத்துக்களை பகிர்ந்தார்.

இருக்கும் மிகச்சில நாட்களில் மிகச்சிறு அளவில் இருக்கும் தமிழ்(உணர்வுள்ள)  இணையஜீவிகள் - ப்ளாக், டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் வாசகர்கள்- (அதிலும் நேரடியாக தேர்தல் களப்பணிக்கு தயாராக இருப்பவர்கள் மிக மிகக் குறைவு) மிகப்பெரும் அஜெண்டாவை வைத்துக்கொண்டு செயல்படுவது என்பது நடைமுறைச் சாத்தியங்களற்ற ஒன்று என்பதை நண்பர் கும்மி தனது கருத்தாகச் சொன்னார். இவ்வாறு களப்பணியாற்றத் தயாராக இருக்கும் தமிழ் இணையவாசிகள் ஏனைய தமிழ்தேசிய இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து, அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படுவதே சரியானதாக இருக்கும் என்றும் அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

காங்கிரஸ் போட்டியிடும் 63-ல் நிச்சயம் தோற்றுப்போகும் என்ற தொகுதிகளில் கவனம் குவிப்பதை விடுத்து, காங்கிரஸ் கடுமையான போட்டியைக் கொடுக்கக்கூடிய தொகுதிகளிலும், ஏறத்தாழ ஜெயித்துவிடும் என்ற நிலை இருக்கும் தொகுதிகளிலும் கூர்மையான செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் சிறந்த பலனைத் தரும் என்பதும் கும்மி அவர்களின் ஆலோசனை.

இணையத்தமிழ் வாசகர்களும், ப்ளாக்,டிவிட்டர், ஃபேஸ்புக் முதலானவற்றில் பங்களிப்போருமாக இருப்பவர்களில் தேர்தல் பணிக்கு வர விரும்புவோருக்காய் பொதுவான ஒரு ஃபோரம் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்பது எனது கருத்து. அப்படி நமக்குள்ளேயே ஒரு ஒருங்கிணைப்பும், ஏனைய இயக்கங்களினுடன் ஒத்திசைந்து செயல்படுவதும் அவசியமானது என்று கருதுகிறேன்.

இந்தத் தேர்தல் பணிகளில் பிரதானமாய் காங்கிரஸுக்கு எதிராய் எடுத்துவைக்கப்பட வேண்டிய பிரச்சாரங்களாக நான் கருதுபவை:

1) மிக முக்கியமானதாக ஈழப்படுகொலைகள். ஒரு இனத்தையே கருவறுத்த குரூரத்தை துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும், ஒளிப்பதிவுகளின் மூலமாகவும் கொண்டு செல்லுதல். வைகோ எழுதி இயக்கிய "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" என்ற ஆவணப்படத்தினை இதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பது பற்றி மதிமுக தோழர்கள் மூலமாக நான் முயல்கிறேன். அப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் எனில் அந்த ஆவணப்படத்தினை பல்லாயிரம் குறுவட்டுக்களில் படியெடுத்து விநியோகிக்க வேண்டும்

2) தமிழக மீனவர் படுகொலைகளை எவ்வித இடையூறுகளுமின்றி நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசிற்கு கால்தாங்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் அயோக்கியத்தனத்தைப் பற்றிய பிரச்சாரங்கள்

3) கேவலமான பொருளாதாரக் கொள்கைகளினால் மக்களின் வாழ்க்கைத் தரத்தினைச் சீரழித்து, விண்ணளந்த பெருமாளைப்போல சிகரத்தை எட்டி நிற்குமளவு விலைவாசி உயரக் காரணமாக இருந்த கையாலாகாத்தனங்கள், அற்பத்தனங்கள் பற்றிய பிரச்சாரம்

4) அரசுக்கிடங்குகளில் இருக்கும் தானியங்கள் அழுகிப்போனாலும் போகுமே ஒழிய, அடித்தட்டு மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கமாட்டோம் என்று மேட்டிமைத்திமிர்த்தனத்துடன் இறுமாந்திருந்துவிட்டு இன்று அதே அடித்தட்டு வர்க்கத்திடம் "போடுங்கம்மா ஓட்டு" என்று பல்லை இளித்து பசப்பும் பொறுக்கித்தனம் பற்றிய பிரச்சாரங்கள்

5) இதுவரையிலும், மீனவர் பிரச்சினையானாலும் சரி, காவேரிப் பிரச்சினையானாலும் சரி, முல்லைப்பெரியாறு பற்றிய பிரச்சினை, ஒகேனக்கல் பிரச்சினை என தமிழக நலன் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினைகளிலும் வாய்மூடி கள்ளமௌனம் சாதிக்கும் சாமர்த்தியம் பற்றிய பிரச்சாரம்

6) காமன்வெல்த் போட்டிகளில் துவங்கி ஆதர்ஷ் ஊழல், ஸ்பெக்ட்ரம் என்று நீளும் காங்கிரஸின் லட்சணமான முகத்தினை மக்களுக்கு விளக்கும் பிரச்சார யுக்திகள்

7) அந்தந்த பகுதி சார்ந்த உள்ளூர்ப் பிரச்சினைகளில் காங்கிரஸின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றிய விளக்கங்கள்.

இவற்றை மையப்படுத்தி ஏனைய தமிழுணர்வாளர்களுடன் இணைந்து தீவிரமாக வீதிப் பிரச்சாரங்களில் கலந்துகொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைபார்க்கும் இளைஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆகியோரின் தேர்தல் பணிகளின் தீவிரத்தை ஏற்கனவே சிவகங்கைச் சீமான் சிதம்பரம் அனுபவித்திருக்கிறார்.

63-ல் மிகக்கடுமையாக வேலைசெய்ய வேண்டியதாக இருக்கும் 25 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து நான்கு அல்லது ஐந்து பேர்கொண்ட சிறு குழுக்களாக வீதிநாடகங்களை அரங்கேற்றுவது போன்ற வேலைகளைச் செய்யவேண்டும்.

அமைக்கப்படும் ஃபோரத்திற்கு தலைவர் என்று யாரும் இல்லாமல் ஒரு ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதல் குழுவை நமக்குநாமே அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறாக தொடங்கப்படும் சிறிய அளவிலான ஃபோரத்தைப்பற்றிய செய்திகளை இணையத்தில் பரவலாக அறியப்பட செய்யக்கூடிய வேலைகளையும் நாம் செய்தாக வேண்டும். சிறு பொறிதான் தீயாகப் பரவ ஆரம்பிக்கின்றது. தனித்தனியாய் தன்னார்வலர்களாய் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் தமிழுணர்வாளர்களை ஒருங்கிணைக்கும்போது அதன் ஆற்றல் மிகப்பெரிதாக இருக்குமென்று எண்ணுகிறேன். ஏற்கனவே #tnfisherman என்ற வார்த்தை டிவிட்டர் மூலம் ஏற்படுதிய அதிர்வலைகளை நாம் கவனிக்கவேண்டும்.

நண்பர் கும்மி இது தொடர்பாக "நாம் தமிழர்" இயக்கம், மற்றும் சில இயக்கங்களுடன் பேசுவதாகச் சொல்லி இருக்கிறார். நானும்  என் தொடர்பிலுள்ள நண்பர்களிடம் பேசுவதாக இருக்கிறேன். அண்ணன் கேஆர்பி செந்திலும் இது தொடர்பான வேலைகளில் தீவிரமாக இயங்குவார்.

காங்கிரஸுக்கு போடப்படாமல் தடுக்கப்படும் ஒவ்வொரு ஓட்டும் தமிழினத்தின் வேரில் பாய்ச்சப்படும் ஜீவ ஊற்று என்பதை கருத்தில் கொள்வோம்; களமிறங்குவோம்!

இதற்கென பொதுவான ஒரு வலைப்பூவோ அல்லது இணையதளமோ (சாத்தியப்படின்),  இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.

நாம் விதையை ஊன்றுவோம். இது விருட்சமாகுமா, இல்லை வீணாய்ப்போகுமா என்பதை நாளைய தமிழகம் முடிவுசெய்து கொள்ளட்டும்.




நாளை மறுநாள் சனிக்கிழமை 19.03.2011 அன்று மாலை ஆறு(6 PM) மணிக்கு இது சம்பந்தமாக ஒரு குழுவாக கூடி முடிவெடுக்கலாம் என நினைக்கிறோம். சமூக அக்கறை உள்ள அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

கே.ஆர்.பி.செந்தில் : 8098858248
ராஜாராமன் (விந்தை மனிதன்):9443975253

"காங்கிரசுக்கு ஒரு ஓட்டுக்கூட விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. அப்படியும் காங்கிரசுக்கு யாரேனும் ஓட்டுப்போடுவார்களேயானால் அது இந்த நாட்டுக்கும், திராவிட மக்களுக்கும் செய்கிற துரோகம் மட்டுமல்ல.. தன் தாய், தகப்பன், பெண்டு பிள்ளைகளுக்குச் செய்யும் பெருந்தீங்கு. இந்த நிலையில் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என்று எப்படி தம்பி நான் கூறமுடியும் & நாடு நகைக்காதா? நல்லோர் கை கொட்டிச் சிரிக்கமாட்டார்களா?’’

&55 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா சொன்ன வார்த்தைகள் இவை. - இன்றும் ஜீவித்திருக்கின்றன இவ்வார்த்தைகள்..



கட்டுரை ஆக்கம் : விந்தை மனிதன்..