1 அக்., 2014

இன்னும் சற்று நேரம் இருந்துவிட்டு போ!...

ஒரு கடைசி சந்திப்பை எப்படி எதிர்கொள்வது எனத்தெரியாமல் நாம் தயங்கிக்கொண்டிருந்தோம். நாம் எதிர்பார்க்காத ஒன்றை எதிர்க்க வேண்டிய ஒன்றை மவுனமாக ஏற்றுக்கொள்ள எது நம்மை பக்குவப்படுத்தியது அல்லது சிறுமைப்படுத்தியது என்பதான மன உளைச்சல் இந்த அதிகாலை குளிரிலும் வியர்வை சொட்டுகளாய் எட்டிப்பார்த்தது. காதல் உன்னதமானது என்றவனை புனிதனில் இருந்து பயித்தியக்காரனாய் உருமாற்றும் வித்தையும் காதலுக்குத்தான் இருக்கிறது.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் போற்றி பாதுகாத்து வைத்திருந்த உன்னதமான தருணங்கள் இனி வாழ்வில் எப்போதும் வராது என்பதே வாழ்வின் நீட்சியை நினைத்து பெருங்கவலை கொள்ள வைக்கிறது. சம்பிராதாயங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகள் செத்துவிடலாம். காதல் போயின் சாதலே பெரிது. நாம் சந்தித்தோம், பேசினோம், காதலித்தோம், கலந்தோம் என்பதே வாழ்வின் உச்சமாக முடிந்துவிட்டது. அது அவசரமாக ஒரு பகல் நேர கனவைப்போல் எல்லாம் கலைந்துவிட்டது.

நம் காதலுக்கு உறவு, பணம், ஜாதி என பெரும்பாலானவர்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் இல்லாதது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா? என கூதுகலித்தாய். உன்னை எனக்குள் முழுமையாய் கலந்த நாள் அது. சந்தர்ப்பங்கள்தான் எவ்வளவு அற்புதமானதும், அபத்தமானதுமாக மாறிவிடுகிறது. அன்று நீ மகிழ்ந்து சொன்ன அதே காரனம் இருந்தால் கூட சந்தோசமாக இருந்திருக்குமே!.

உறவுகள் சிக்கலானது என்பதை இத்தனை சிக்கலான தருணத்தில் நாம் உணரவேண்டிய அவசியத்தை காலம் கோரமாக செய்துமுடித்து விட்டது. எனக்கு அத்தை மகள் உறவென்பதால் நாம் உறவாடியதை ஊர் சுற்றியதை யாரும் கண்டிக்காமல் போனதும், எப்போதும் நான் உன் வீட்டில் பழியாய் கிடந்தபோது, உன் அம்மா என்னை மருமகனே என வாய் நிறைய அழைத்து மகிழ்ந்ததும், நாம் தனியறையில் தூங்கியபோதும் “படிக்கிற புள்ளைங்க, அதான் தொந்தரவு செய்யல” என வெகுளியாய் சொன்னபோதும். அது, நம்மை உடல்மொழியும் கற்றுக்கொள்ள வைத்துவிட்டது என்பதும். ஒரு காதலை இயற்கை எப்படியெல்லாம் கொண்டாடுகிறது பார்த்தயா? என கவிதையாய் சிரிப்பாயே ஒரு பூ மலர்வது மாதிரியான உன் சிரிப்பு பிரத்யோகமானது, எனக்கே எனக்கானது என இருமாந்து கிடந்தேனே. இனி எப்போதும் அது கிடையாது என்பதை எப்படி எதிர்கொள்வேன்.

நாம் அதிர்ந்துதான் போனோம். அன்றைய பொழுது எப்போதும் மறக்கமுடியாத நாளாக மாறித்தான் போனது. என் சித்தப்பாவும், உன் அக்காவும் காதலிக்கிறார்கள் என்று நம் வீட்டின் ஒரு விஷேச நாளில் எல்லோர் முன்னும் சித்தப்பா சொன்னபோது மொத்த குடும்பமுமே சந்தோசத்தில் ஆர்ப்பரிக்க, நீயும் நானும் உடைந்து நொறுங்கினோம். அவருக்கு தன் அக்காள் மகள் மேல் காதல் வருவது எதார்த்தம் கடந்த உரிமை என அறிவு சொன்னாலும் என் தந்தையைவிட நான் மதிக்கக்கூடிய, குடும்பத்தை இத்தனை வருடங்களாக தூக்கிச்சுமந்த, அதற்காக வெளிநாட்டில் எட்டு வருடங்களாக உழைத்து, இப்போதும் தனக்கு பணம் தேவைப்பட்டால் அப்பாவிடம் கேட்க தயங்கி, அம்மாவிடம் விண்ணப்பம் வைக்கும் மரியாதையில், பாசத்தில் உயர்ந்த குணமுள்ள அவருக்கு, அடுப்படியும், குமுதமும், விகடனும் தவிர்த்து இப்படி ஒரு பெண் உன் வீட்டில் இருக்கிறாள் என்பதே ஊரில் பல பேருக்கு தெரியுமா? என சொற்ப வார்த்தைகளால் தன் தினசரிகளை நகர்த்தும் உனது மூத்த சகோதரி மிக, மிக பொருத்தமானவர்தான்.

ஒரே வகுப்பில் தொடர்ந்து கல்லூரிவரைக்கும் பயிலும் நம்மை அவர்கள் காதலர்களாக எப்போதுமே பார்த்ததில்லை என்கிற உண்மை அப்போதுதான் நாமே உணர்ந்தோம். எப்போதும் சண்டைக்கோழிகளாய் திரிந்த நம் காதலை நண்பர்களே அறியவில்லை என்பதும், நமக்குள் எந்த தருணத்தில் அது பூத்தது என்பதே நினைவில்லை என்பதும் கூட இப்போதுதானே நினைவுக்கு வருகிறது!. கல்லூரி வாழ்க்கை முடிந்து வேலையும் கிடைத்துவிட்டது என உன் வீட்டில் வைத்து சந்தோசத்தில் ஆர்பரித்தபோது, ”இவளையும் கூட்டிட்டு போயிடேன், படிச்ச படிப்புக்கு கொஞ்ச நாள் வேலைக்கு போவட்டும்”   என அத்தை கிண்டலடித்தபோது “ஏன், நானும் அவனோட போகத்தான் போறேன்” என்று கலகலவென சிரித்தாயே!. நான் போகிறேன்,சென்னையில் கிடைத்த வேலையை உதறிவிட்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கேம்புக்கு வேலைக்கு போகிறேன்.  இனி வரவே கூடாது என்கிற தீர்மானத்துடன் போகிறேன். நீ நிற்கிறாய், எப்போதும் பேசியே கொல்பவள், பேசாமல் நிற்கிறாய்!, இனி நீ என்ன ஆகப்போகிறாய்?, உறவுகளில் எப்படி வாழப்போகிறாய்?. நான் கோழை, உன்னை மட்டும் உறவுகளிடம் விட்டுப்போகிற கோழை.

எல்லாம் கண நேரத்தில் மாறிவிட்டது. நம் தற்கொலை குடும்பத்தின் நிம்மதியை நிரந்தரமாய் குலைத்துவிடக்கூடும் என்கிற உண்மையை உனக்கு புரிய வைப்பதே பெரும்பாடகிவிட்ட எனக்கு, எப்போது நாம் சந்திக்க நேர்ந்தாலும் உன் கண்கள் அணிச்சையாய் கலங்குவதை இனி என் வாழ்நாளில் நான் பார்க்கவே கூடாது. உன்னுடன் நான் வாழ்ந்த நிமிடங்கள் என் மீதி நாட்களுக்கு போதும். காலம் நம்மை மாற்றலாம், அல்லது மாற்றமில்லாத வாழ்வை விரும்பி வாழலாம். எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. இனி எது நடக்கப்போகிறதோ!, அது ஒருபோதும் நன்றாக நடக்காது!. தத்துவங்கள் எப்போதும் பொதுவானவையாக இருப்பதில்லை.அழாதே என்று சொல்ல முடியவே இல்லை. இனி அது மட்டும்தான் உன்னை எப்போதும் ஆறுதல்படுத்தும் என்பதால். அழு... நான் விடைபெறுகிறேன்.

3 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

மிகவும் அருமை அண்ணா....
அசத்தலான எழுத்து நடை...
முடிவு அருமை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...

தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_26.html

நன்றி

மகிழ்நிறை சொன்னது…

மனம் கனக்கச் செய்கிறது பதிவு!! புதுகை பதிவர் விழா போட்டிகளை பார்த்தீர்களா? உங்களது நடை அருமையாக இருக்கிறது. நீங்களும் போட்டியில் கலந்துகொள்ளலாமே!