31 ஜூலை, 2013

Ship of Theseus - அற்புதமான படம்...

நல்ல சினிமாவை பாலிவுட் பிதாமகன்கள் முன்மொழிவதற்கு எப்போதும் தயங்கியதில்லை. பாலிவுட்டின் பிரபல இயக்குனர்கள், கதாநாயகர்களால் கொண்டாடப்படும் படம் இது. உண்மையில் மிகச்சிறந்த படமும் கூட, அற்புதமான ஒளிப்பதிவு நம்மை திரைக்குள் இழுத்துச்சென்று ஒன்றிவிடச்செய்கிறது. ஒலிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, துல்லியமாக நகரும் சீரான திரைக்கதை என ஒரு அற்புதமான காட்சிப்படுத்தல். இயக்குனர் ஆனந்த் காந்தியை நாம் என்ன பாராட்டினாலும் தகும்.

முதல் கதை மன ரீதியானது, கார்னியாவால் பாதிக்கப்பட்ட போட்டோகிராபர் Aida Al- Khashef   தன் தோழன் Faraz Khan உதவியுடன் தான் எடுத்த புகைப்படங்களுக்கு சில கூடுதல் Effects ஒரு Special Software மூலம் கொடுத்து உருவாக்குகிறார். பெரும்பாலும் கருப்பு, வெள்ளை புகைப்படங்களையே ரசிக்கிறார். ஒரு மேம்பட்ட புகழை அது அவருக்கு தேடித்தருகிறது. ஆனாலும் அவர் எடுக்கும் சில படங்கள் அவர் தோழனுக்கு பிடித்திருந்தாலும் அதனை பிடிவாதமாக அழித்துவிடும்படி சொல்கிறார். இந்த நேரத்தில் நடக்கும் வாக்குவாதங்கள், காட்சியமைப்பு, நடிப்பு என நம்மை வியக்க வைக்கிறார் ஆனந்த் காந்தி. அதன்பிறகு அவருக்கு கார்னியா பிரச்சினை சரி செய்யப்படுகிறது. மிகுந்த சந்தோசத்தோடு புகைப்படம் எடுக்க கிளம்புகிறார். ஆனால் அவர் எடுக்கும் எந்த புகைப்படமும் அவருக்கு திருப்தியை தரவில்லை. பிறகு என்ன மாதிரியான முடிவை இயக்குனர், பார்வையாளருக்கு தருகிறார் என்பதே கதை. ஆலியா மற்றும் அவர் தோழன் இன்னொரு கேரக்டராக ஆலியாவின் கேமரா என வித்தியாசமான, அழகான, அற்புதமான நடிப்பு.

இரண்டாவது கதை தத்துவார்த்தமானது, கிட்டதட்ட நமக்கு அறிமுகமில்லாத ஜைன துறவிகளின் வாழ்வை மைட்ரேயா எனும் நீரஜ் கபி வழியாக நமக்கு அறிமுகம் செய்வார். மைட்ரேயா மிருக வதைகளுக்கு எதிரானவர். மிருகங்களை வைத்து ஆராய்ச்சி செய்யும் மருந்து கம்பெனிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பவர். Cirrhosis எனும் வயிற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பார். மருத்துவர்கள் அதற்கான தீர்வாக Liver Tissue Replacement முன்வைக்கும்போது, அதனை மறுத்து மிருகங்களை சித்ரவதை செய்து தயாரிக்கப்படும் மருந்துகளை ஏற்க மாட்டார். சாவுக்கு அருகில் வந்தபின் அவர் எடுக்கும் முடிவுதான் கதை. மிக ஆழமான தத்துவ விசாரனைகளை வழக்கறிஞராக வரும் இளையவர் வினய் சுக்லாவுடன் அவர் விவாதிப்பதும், ஒரு காட்சியில் அவ்விவிவாதம் ஒரு சாலையில் மிக வேகமாக நடந்துகொண்டே தொடரும்போது ஒரே காட்சியில் படமாக்கப்பட்ட விதமும் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்.

மூன்றாவது கதை வாழ்வியல் பேசுகிறது. பங்கு வர்த்தகரான நவீனாக Sohum Shah தன் பாட்டியின் சமூக போராட்டங்களை கேலி பேசும்போது. பாட்டி நீ இப்போதும் அடிமையாகத்தான் வாழ்கிறாய் என்கிறாள். வாக்குவாதம் பணமே பிரதானம் என வாழும் நவீனின் மனதை குழப்புகிறது. அப்போது சங்கர் என்பவரின் கிட்னி திருடப்பட்டு அவர் மனைவி வைக்கும் ஒப்பாரி அவன் கவனத்தை திசை திருப்ப சங்கரின் கிட்னியை திரும்பப்பெறுவதற்காக ஸ்டாக்ஹோம் வரைக்கும் செல்கிறார். இக்கதையில் சங்கர் எடுக்கும் அசாதரனமான முடிவு படத்தின் சீரியஸ் நகைச்சுவை.

கிளைமாக்சில் மூன்று நபர்களுக்குமான சந்திப்பு நிகழும் இடமும், அப்போது காட்டப்படும் ஆவனப்படமும் இயக்குனரின் பார்வையில் படத்தை முடித்து வைக்கிறது. ஒளிப்பதிவாளர் பங்கஜ் குமாருக்கு மிக சிறப்பான  எதிர்காலம் காத்திருக்கிறது.

உலகப்படங்கள் என்றால் என்ன என்பதற்கான அடிப்படை விசயங்கள் சில இருக்கின்றன. தமிழ் சினிமா இயக்குனர்கள் பலர் தங்களின் அப்பட்டமான கற்பனை வறட்சியை “ஒலக சினிமா அப்படின்னெல்லாம் ஒன்னுமில்ல, மத்த நாட்டுக்காரனுக்கு தமிழ்ப்படங்களும் ஒலகப்படம்தான்” என்று சொலவதை பலமுறை கேட்டிருக்கிறோம். தமிழ் சினிமாவில் பாதை தெரியுது பார், கிராமத்து அத்தியாம், அவள் அப்படித்தான், பதினாறு வயதினிலே, தண்ணீர் தண்ணீர், முதல் மரியாதை, பேசும் படம், வீடு போன்றவை உலகப்படங்களில் வைக்கப்படவேண்டியவை.

எனவே தமிழ் சினிமாவின் அத்தனை சித்தாள்கள், மேஸ்திரிகள் மற்றும் நல்ல படங்களை விரும்பும் ரசிகர்கள் அவசியம் இப்படத்தை எத்தனைமுறை வேண்டுமானாலும் பார்க்கலாம்..

2 கருத்துகள்:

உலக சினிமா ரசிகன் சொன்னது…

நண்பரே...மிகச்சிறப்பாக ‘ஷிப் ஆப் தீஸ்ரசை’உங்கள் பார்வையில் விவரித்து உள்ளீர்கள்.

தமிழ் பட லிஸ்டில் மிக முக்கியமான ‘உதிரி பூக்களை’ தவற விட்டு விட்டீர்கள்.

கிராமத்து காக்கை சொன்னது…

அருமையான படத்தை அருமையாக தெரியப்டுத்துள்ளீர்கள் எங்களுக்கு