15 ஏப்., 2011

துரோணா - 10 ...


வெம்புவாள் விழுவாள் பொய்யே மேல் விழுந்தழுவாள் பொய்யே
தம்பலம் தின்பாள் பொய்யே சாகிறேன் என்பாள் பொய்யே
அம்பிலும் கொடிய கண்ணாள் யிரம் சிந்தையாளை
நம்பின பேர்கள் எல்லாம் நாயினும் கடையாவாரே.
- விவேக சிந்தாமணி 1

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரைக்குமே நல்ல பிள்ளையாக வலம் வந்தவன். பதினோராம் வகுப்பில்தான்  எனக்கு மிகுதியாக நண்பர்கள் அறிமுகம் ஆனார்கள். அந்த நண்பர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே பத்தாம் வகுப்பில் கோட்டை விட்டு ஏகப்பட்ட அட்டெம்ப்டுகளில் ஜெயித்து வெற்றிக்கொடி கட்டியவர்கள் என்பதால் கிடைத்த இடைவெளியில் எல்லா நல்ல பழக்கங்களையும் குலசாமியின் உண்டியலில் போட்டவர்கள். அவர்களின் ஆளுமையில் கவர்ந்த எனக்கு பெருந்தன்மையாக சிகிரெட் பிடிக்க கற்றுத்தந்தார்கள். நாளைக்கு ஒண்ணுன்னு திருட்டுதனமா அடிச்ச நான் பதினொன்றாம் வகுப்பு முடிவதற்குள் ஒரு பாக்கெட் அளவுக்கு அடிக்க ஆரம்பித்தேன். நான் அப்போது இத்தனை சிகிரெட் பிடித்தேன் என்பதை இப்போது சொன்னால்கூட சத்தியம் செய்து மறுப்பான் என் ஆருயிர் நண்பன் ஒ.ஆர்.பி.ராஜா. ஏனென்றால் அவ்வளவு ரகசியமாக அடிப்பேன். 

பனிரெண்டாம் வகுப்பில் படிக்கும்போது ஒரு நாள் காசில்லாமல் அப்பாவின் பாக்கெட்டில் கைவிட்டேன். அதுவரை வீட்டில் நான் திருடவோ, பொய் சொல்லவோ மாட்டேன் என என்மீது வைத்த நம்பிக்கையை நானே தகர்த்தது எனக்கு பெரிய வேதனையை தந்தது. அன்றோடு சிகிரெட் பழக்கத்துக்கு குட்பை சொல்லிவிட்டேன். இன்றுவரைக்கும் அபூர்வமாக நண்பர்களுடன் சரக்கடிக்கும்போது யார் சிகிரெட்டாவது வாங்கி ரெண்டு இழு இழுப்பேன்.

எல்லோருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் காதல் எட்டிப்பாக்கும் , எனக்கு நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் அந்த கிறுக்கு புடித்தது..


இப்ப மாதிரி  அப்ப பொண்ணுங்க கிட்ட பேசக்கூட முடியாது. நைசா பாத்துக்கலாம் அதுக்குமேலபோனா அடிதடிதான் ...

அவளும் எங்களோட ஊருதான் , அவ என்னோட ஸ்கூல்ல எட்டாவது படிச்சா.. என்னை பாத்து அடிக்கடி சிரிப்பா , போதாதா உடனே காதல்தான் , நம்மள உசுப்பி தெருவுல இழுத்துவிட காத்திருந்த நண்பன்களும் அதுல தூபம்போட காதல் தீ எனக்குள்ள பத்தி எரிந்தது ..எப்பிடியாச்சும் அத கொண்டுபோயி அவகிட்டே சேக்கனுன்னு பசங்களும் பெரிய முயற்சி பண்ணாங்க ..

அவளை தினமும் பள்ளியில் பார்த்துவிடுவதால் லீவு நாளுக்கு (அதாங்க சண்டே) பாக்காம இருக்க நம்மால முடியாது. உடனே சைக்கிள எடுத்துகிட்டு நண்பர்களை கூட்டிகிட்டு அவளோட வீட்டு வழியா எங்காவது போற மாதிரி கெளம்புவோம் , முதல் ரவுண்டிலேய பாத்துட்டா வந்துருவோம் , இல்லன்ன நாலஞ்சு ரவுண்டாவது அடிச்சு பாத்தாதான் பசங்க விடுவாங்க. பின்னாடிதான் தெரிஞ்சுது அவங்களும் சைட் அடிக்கத்தான் வந்தாங்கன்னு ,

கடைசிவரை ரெண்டுபேரும் பாத்தாக்க சிரிச்சுக்குவோம் அவளவுதான் என்னோட காதல அவகிட்டே சொல்லாமலே முடிந்து போனது என் முதற்காதல் ,

இப்ப நெனச்சா சிரிப்பா இருக்கு , ஏன்னா அவ என்னோட அக்கா (ஒன்று விட்ட) மகள். பொண்ணு கேட்டே கல்யாணம் பண்ணியிருக்கலாம் ,

ஆனா விதி யார விட்டது , இப்பவும் என்னோட அக்கா (சொந்த) மகளத்தான் கல்யாணம் பண்ணியிருக்கேன் .

ஆனா அந்த முதற்காதல் என் வாழ்க்கையில் வேறொரு பதிவை ஏற்படுத்தியது ,

அதற்குப்பின் பெண்களுடன் சாதரணமாக பழக அதுதான் எனக்கு கற்றுக்கொடுத்தது , அப்போதுதான் பாலகுமாரனை படிக்க ஆரம்பித்த நேரம் அவருடைய மெர்குரி பூக்கள் , இரும்புக்குதிரைகள், என் கண்மணி தாமரை படித்தபோது எல்லா பெண்களையும் சக தோழர்களாக பார்க்க உதவியது .

அதனால +1 படிக்கையில் என்னோட மூணு பொண்ணுங்கதான் படிச்சாங்க, அதுல ரெண்டு பேரு சகோதரி முறை , அப்புறம் என்னோட அத்தை பொண்ணு , ஆனா மூணுபேரும் என்மேல் பாசமாக இருப்பார்கள், அப்ப கொஞ்சம் தைரியமாக பேசுறதுக்கு தயாராயிட்டேன்.

+2 விலும் அது தொடர்ந்தது , அதில என்னோட அத்தை மகள் அழகா இருக்கும் , பிறகென்ன நெறைய பேரு அத ஒரு தலையா காதலிச்சாங்க , நாந்தான் அதுகூட பேசுவேன்றதால என்கூட நட்ப ஏற்படுத்திக்குவாங்க, நம்ம ஊரைப் பொறுத்தவரை மனசுக்குள்ள மட்டுந்தான் காதலிக்க முடியும் வெளிய தெரிஞ்ச கொலைதான் விழும். எனவே எல்லோருடைய காதலும் அத்தோடு முடிந்து போனது. 

+2க்கு அப்புறமும் எனக்கும் அத்தை பொன்னுக்கும் நட்பு தொடர்ந்தது .. அதை நெறைய பேரு நாங்க ரெண்டு பெரும் காதலிப்பதாக சொன்னார்கள் , ஆனால் எங்களுக்குள் ஏன் அப்படி ஒரு எண்ணம் அமையவில்லை என இன்னைக்கு வரைக்கும் பதில் இல்லை ...

தற்சமயம் அன்பான கணவன் , பிள்ளைகளுடன் சந்தோசமாக இருக்கிறது என நண்பர்கள் சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கும் ..

நான் மன்னார்குடிக்கு வர ஆரம்பித்தவுடன் அங்கு எனக்கு அறிமுகம் ஆனவள்தான் கீதாஞ்சலி .. என் உடல் பொருள் ஆவி எல்லாமே அவள்தான் ...

தற்சமயம் அன்பான மனைவி , மகன்கள் என வாழ்க்கை சந்தோசமாக போகிறது , ஆனால் என் வாழ்வில் எத்தனையோ இழப்புகளை சந்தித்து இருக்கிறேன் , நான் சாகும் வரை ஈடு செய்ய முடியாத ஒன்று அவளும் , என் சகோதரியின் மகன் வீராவும்தான்...

இதனைப்பற்றி அடுத்த அத்தியாயங்களில்  விரிவாக பேசலாம் ..

இனி காதல் கதைகள்...

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

//நான் அப்போது இத்தனை சிகிரெட் பிடித்தேன் என்பதை இப்போது சொன்னால்கூட சத்தியம் செய்து மறுப்பான் என் ஆருயிர் நண்பன் ஒ.ஆர்.பி.ராஜா. ஏனென்றால் அவ்வளவு ரகசியமாக அடிப்பேன்.//

சிகரெட்டு மட்டுமாடா எனக்குத் தெரியாம அடிச்ச நீயி?? :))

ஹேமா சொன்னது…

வாழ்வின் அத்தனை அனுபவங்களும் ஒரு பாடமாகிறது வாசிப்பவர்களுக்கு !

iniyavan சொன்னது…

போன்லயும் பேச முடியலை. SMSக்கும் பதில் இல்லை. அட்லீஸ்ட் இங்கேயாவது கேட்டுக்குறேன். நல்லா இருக்கீங்களா?

Unknown சொன்னது…

அப்படியா!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வாழ்க்கை பால பாடம் அருமை மக்கா...