15 ஏப்., 2011

துரோணா - 11 ...




பிரியங்களை காற்றில் முத்தங்களாக 
ஊதித் தள்ளுகிறாய் ..
தள்ளாடும்  காற்று 
எங்கெல்லாம்  கொண்டு சேர்க்குமோ..


என்னுடைய இருபதாவது வயதில் எதிர்கால திட்டங்கள் எதுவுமின்றி நாட்களை நகர்த்திகொன்டிருந்தேன். அப்போது தினமும் மன்னார்குடி சென்றுவிடுவேன், அங்கு எனக்கு ஒரு மடம் இருந்தது, எனக்கு கணக்கு சொல்லிக்குடுத்த ஆத்மநாதன் அத்தான் டுயசன் சென்டரில் தினமும் ஆஜராகிவிடுவேன். அவருக்கு குழந்தை இல்லை அதனால் யாரிடமும் கோபப்படமாட்டார், டுயசன் பீஸ் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் ஒன்றும் சொல்லமாட்டார். ஆனால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாகத்தான் வகுப்பு எடுப்பார், பெண்களுக்கான வகுப்பில் எந்த ஆண்களும் உள்ளே வரக்கூடாது, ஆனால் எனக்கு மட்டும் எப்போதும் வரக்கூடிய சுதந்தரத்தை அளித்திருந்தார். என்மேல் அதீத பாசம் வைத்திருந்தார், எப்போதும் என்னை மாப்பிள்ளை என்றுதான் கூப்பிடுவார். அப்போது பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் மட்டும் அயிநூறுக்கும் மேல் அங்கு படித்தனர், அவர்களின் அப்ளிகேசன்கள் அனைத்தும் நான்தான் சரிசெய்து அனுப்பிவைப்பேன். 


அப்போது போட்டோ காப்பி எடுக்க ரங்கூன் டிராவல்ஸ்தான் செல்வேன் அங்கு ஒரு கப்பிக்கு ஐம்பது காசுதான் மேலும் ஒரு காப்பி எடுத்தால்கூட ஒரு கவரில் போட்டு தருவார்கள். அப்படிதான் ஒருநாள் என்னுடைய கவர் வந்தவுடன் காப்பிகள் சரியாக இருக்கிறதா என பார்த்தபோது அதில் வேறொருவருடைய நகல் இருந்தது, பெயர் கீதாஞ்சலி என இருந்தது, 


நான் "யாருங்க கீதாஞ்சலி" என்றேன், 


"எஸ்" என்ற குரல் வந்த திசை நோக்கினேன் திடீரென தென்றல் குளிர்ந்து வீசியது, வெளியே மழை கொட்டியது, வானத்தில் இருந்து தேவதைகள் எல்லாம் பூக்களை கொட்டினார்கள் என்றெல்லாம் எழுதலாம்தான், ஆனால் எதுவும் நடக்கவில்லையே...

அவள் கையில் கவரை கொடுத்தபோது "பெயர் சூப்பர்" என்றேன். என்னை முறைத்துவிட்டு சென்றுவிட்டாள். நானும் அவளை மறந்துவிட்டேன். அப்போது எனக்கு அமைதியாக படிக்கவேண்டும் எனதோன்றினால் பாலகுமாரன் மற்றும் சுஜாதா நாவல்களை எடுத்துக்கொண்டு பெரிய கோவில் சென்றுவிடுவேன், அங்கு பனிரெண்டு மணிக்கெல்லாம் கோவில் நடைசாத்திவிடுவார்கள் ஆனால் மக்கள் சுலபமாக மற்றொரு தெருவுக்கு செல்ல நுழைவாயிலில் ஒரு சிறிய கதவை நாற்புறமும் திறந்து வைப்பார்கள், அதனால் எந்த நேரம் வேண்டுமானாலும் நான் அங்கு போவேன் அருமையான காற்றுடன் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும், அங்கு போனால் படித்த நேரம் போக நன்றாக தூங்கலாம், இப்படிதான் ஒருநாள் அங்கு அவளை இன்னொரு பெண்ணுடன் பார்த்தேன், 


உடனே "என்ன அஞ்சலி எப்படி இருக்கே?" என்றேன். அவள் திருதிருவென முழித்துக்கொண்டே "நல்லா இருக்கேன்!" என சொல்லிவிட்டு அந்த பெண்ணை இழுத்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டாள்.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதே கோவிலில் அவளை பார்த்தேன். சைக்கிளில் தனியாக வந்தாள். நான் வழக்கம்போல் ஆரம்பித்தேன் உடனே கோபமாக இங்கிலீசில் பொளந்துகட்டினாள் அப்ப எனக்கு பீட்டர் அவ்வளவா புரியாது. சரி இது நமக்கு சரிப்பட்டு வராது என அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். இரண்டு வாரங்கள் போயிருக்கும் நான் சென்டருக்கு போனேன் பெண்களுக்கு வகுப்பு நடந்துகொண்டிருந்தது, அத்தான் என்னைக்கூப்பிட்டு "ஒரு சைக்கிள் பஞ்சர் அதனை சரிபண்ணு" என்றார், நான் சரிபண்ணி எடுத்துவந்தபோது அங்கே அஞ்சலி நின்றுகொண்டிருந்தாள், 


"தேங்க்ஸ் இப்ப என்கிட்டே காசில்லை சார்கிட்டே சொல்றதுக்குள்ளே அவர் போய்ட்டாரு அதனால் நாளைக்கு கொடுத்தர்றேன்" என்றாள், 


நான் "சிரித்துக்கொண்டே பரவாயில்லை ஆனால் எப்படி இருக்கிங்கன்னுதானே உங்ககிட்டே கேட்டேன் அதுக்கு ஏங்க அப்படி கோப பட்டீங்க!" என்றேன், 


உடனே "சாரிங்க இந்த ஊரில எல்லா பசங்களும் பொண்ணுங்களை மொறைச்சு பாக்குறாங்க!, சும்மா பாத்துட்டு போகவேண்டியதுதானே அப்புறம் நாம திரும்பி பார்த்துட்டா போதும் தினமும் பின்னாடியே சைக்கிள்ள வந்து வீடுவரைக்கும் விட்டுட்டு போறாங்க அதானல எனக்கு எல்லார் மேலயும் வெறுப்பு" என்றாள். 


நான் சிரிச்சுட்டு "சரிங்க நான் உங்க பின்னாடி எல்லாம் வரமட்டேன்" என்றேன். அவளும் சிரித்தாள்.

அப்ப நான் பாலகுமாரனின் தீவிர ரசிகன் அவரின் அத்தனை எழுத்துக்களையும் படித்துவிடுவேன், அவர் புத்தகம் வந்தவுடன் வீட்டில் போய் படிக்கிற அளவுக்கு பொறுமை இருக்காது, அதனால் புத்தகத்தை வாங்கியவுடன் பெரிய கோவில் சென்று ஒரே மூச்சில் படித்துவிடுவேன். அவரால் பெண்கள் மேல் எனக்கு ஒரு மரியாதை ஏற்பட்டிருந்தது, அப்புறம் சில வாரங்கள் நான் செண்டருக்கே போகவில்லை. 


ஒருநாள் "சார் வரசொன்னார்" என்று ஒரு பையன் சொல்லிவிட்டு போனான், 


நான் போகும்போது பெண்கள் வகுப்புமுடிந்து கிளம்பிக்கொண்டிருந்தனர். அப்போது அஞ்சலி என்னிடம் வந்து "உங்க பணம் இந்தாங்க" என்றாள்.


நான் "அத்தான் கிட்டே கொடுக்கலியா?" என்றேன்.


"இல்லைங்க அவர் வாங்கிக்கல, அதனால் உங்ககிட்ட கொடுக்கிறேன்" என்று ஐம்பது ரூபாய் கொடுத்தாள்.


”என்கிட்டே சில்லறை இல்லைங்க அப்புறம் கொடுங்க” என்றேன்.


”பரவாயில்லை வச்சுகங்க” என்றாள்.


“அட ஒரு பஞ்சர் ஓட்ட ஐம்பது ரூபாயா! அப்படின்னா உங்க சைக்கிள் அடிக்கடி பஞ்சர் ஆகணும்” என்றேன். அப்போது அவளின் கலகலவென்ற சிரிப்பு அங்கிருந்த எல்லோரையும் எங்களை திரும்பி பார்க்க வைத்தது.

மறுநாள் நான் பெரிய கோவிலில் படித்துகொண்டிருக்கும்போது அவள் வந்தாள்.


”என்னங்க இந்த பக்கம்” என்றேன்.


“என் வீடு திருமஞ்சன வீதியிலதான் இருக்கு” என்றாள். 


”நான் எங்க அக்கா வீடு கூட அங்குதான் இருந்துச்சு” என்றேன்.


”இப்ப எங்க இருக்கு?” என்றாள்.


என் அக்காவும் அத்தானும் தன் இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு இறந்த கதையை சுருக்கமாக சொன்னேன். 


கண்ணீர் வழிய கேட்டவள், ”சாரி குமார் அந்த குழந்தைகளை பத்திரமா பாத்துகங்க” என்றாள்.

அதன் பிறகு எங்களின் சந்திப்பு பெரிய கோவிலில் அடிக்கடி நடந்தது, அவள் சின்ன வயதிலேயே தன் அத்தைக்கு பெண் குழந்தை வேண்டும் என்பதால் தன் தந்தையால் சகோதரிக்கு தத்து கொடுக்கப்பட்டு பெங்களூரில் வளர்ந்ததாகவும் இப்போது தன் அக்காவை அத்தை மகனுக்கு திருமணம் செய்வதால் தான் மீண்டும் தன் வீட்டிற்க்கே வந்து விட்டதாகவும், இங்கு உள்ள சூழ்நிலைகள் பிடிக்காமல் தான் மீண்டும் பெங்களுருக்கே செல்ல விரும்பியாதகவும், வீட்டிலும் மேற்கொண்டு பெங்களூரில் படிக்க ஏற்பாடு செய்துவிட்டனர் ஆனால் தான் இப்போது போக மறுத்துவிட்டேன் என்றாள். நான் அந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்று கேட்டேன், அதான் எனக்கும் தெரியல என்றாள். 

இதற்குள் நான் அவளுடன் பழகுவது என் நண்பர்களுக்கு தெரிந்து போனது, அவர்கள் என்னை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர், நான் ஒரு பெண்ணை காதலிப்பதாக எல்லோரிடமும் சொன்னார்கள், அதுவரை அவளை அந்த கோணத்தில் பார்க்காத நான் முதன் முறையாக அவளை திருமணம் செய்துகொண்டால்தான் என்ன என நினைத்தேன், இப்போது நிஜமாகவே மணி அடித்தது, சிரிக்காதீங்க அப்ப நான் பெரிய கோவில்லதான் இருந்தேன். பூஜை மணிதான் அடித்தது.

அப்புறம் சில நாள் அவளை பார்ப்பதை தவிர்த்தேன், எப்படி சொல்வது என்ற தயக்கம், அவள் தன் தோழியை சைக்கிள் ஸ்டாண்டிற்கு அனுப்பி(என்னோட வெட்டி ஆபிஸ்) கோவிலுக்கு வரச்சொன்னாள், அங்கு போனபோது ஏன் வரவில்லை என்றாள். அப்ப நமக்கு சண்டை வம்புகள் சர்வ சாதாரணம் இடையில் நடந்த ஒரு தகராறால் வரமுடியவில்லை என்றேன். கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்துவிட்டு உங்களுக்கு நான் பேசுறது இப்ப பிடிக்கலேன்னாலும் வீட்டில போய் நெனச்சு பாருங்க என்று ஒரு மணி நேரம் பேசினாள். என்னுடைய அத்தனை திறமைகளையும் பட்டியலிட்டாள், என் கடமைகளை சொன்னாள், என் இப்போதைய முட்டாள்தனத்தை அதனால் ஏற்படபோகும் பின் விளைவுகளை எடுத்துசொன்னாள்.


கடைசியாக ”உன்னை ஏன் எனக்கு ரொம்ப பிடிக்குறதுன்னா! இவ்வளவு நாள் பழகின பின்னாடியும் என்னை காதலிக்கிறேன்னு சொல்லாத முதல் ஆள் நீதான்” என்றாள்.

அன்று சுட்டெரிக்கும் வெயிலில் எனக்குள் பெரிய இடி ஒன்று இறங்கியது.

கையில் ஒரு ஐந்நூறு ரூபாயை கொடுத்து ”எங்காவது ஒரு வாரம் போய்ட்டுவா” என்றாள்.


எனக்கோ எங்கும் போக விருப்பம் இல்லை, நான் அவளை விரும்பும் விஷயத்தை சொல்லலாமா வேண்டாமா என குழம்பினேன், ஒரு வழியாக சொல்லிவிடுவது என முடிவுசெய்தேன் நேரில் சொல்ல முடியாது. அதனால் கடிதம் கொடுப்பதுதான் சரி என முடிவு செய்தேன். எப்படி எழுதுவது? தாமஸ் ஆல்வா எடிசன் கூட அப்படி யோசித்திருக்க மாட்டார். ஒரு வழியாக அகநாநூறில் இருந்து ஒரு கவிதையை எடுத்து அப்படியே எழுதி அவள் தோழி மூலம் கொடுத்துவிட்டேன்.

ஒரு வாரம் மன்னார்குடி பக்கமே எட்டி பார்க்கவில்லை, அத்தான் ஆளனுப்பினார் அவசரம் என்றவுடன் காலையிலேயே வந்தேன். பெண்கள் வகுப்பு நடந்துகொண்டிருந்தது அவளும் வகுப்பில் இருந்தாள், எப்போது என்னை பார்த்தாலும் ஒரு தாமரைபூவாய் மலரும் அவள் முகம் என்னைபார்த்தவுடன் கருத்து கிடந்தது. ஒரு புயல் மைய்யம் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. 


வகுப்பு முடிந்து போனபோது என்னிடம் வந்து ”சாயந்தரம் ஆறுமணிக்கு கோவிலுக்கு வா” என்றாள் (வழக்கமான வாங்க போய் வா என அழைத்தது எனக்கு உறுத்தியது) போகலாமா, வேண்டாமா மனம் குழம்பி தவித்தது.


அத்தானோ ”என்ன மாப்பிள்ளை ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்றார். 


“தலைவலி சாயந்தரம் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஒரு ஓரமாக தூங்கினேன், கண்கள்தான் மூடியிருந்தது, மனம் அலைபாய்ந்தது, 

சரி வருவது வரட்டும் என கோவிலுக்கு போனேன், எனக்கு முன்பே வந்து காத்திருந்தாள். அதன் பிறகு நடந்தவை என் வாழ்கையை புரட்டிபோடும் என நான் நினைத்துகூட பார்க்கவில்லை. அதனை அடுத்த பதிவில் எழுதுகிறேன்...

13 கருத்துகள்:

அஞ்சா சிங்கம் சொன்னது…

ஒரு கப்பிக்கு ஐம்பது காசுதான்................//////////////
///////////
அர்த்தமே மாறுது தலைவரே .........

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஜஸ்ட் மிஸ்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>அப்ப நான் பாலகுமாரனின் தீவிர ரசிகன் அவரின் அத்தனை எழுத்துக்களையும் படித்துவிடுவேன்,

இப்போ ஆன்மீகப்பக்கம் போய்ட்டாரே படிக்கறீங்களா?

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

ரொம்ப சுவாரஸ்யமா போகுது தல....அடுத்து எப்போ?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ம்ம்ம்ம் சுயசரிதை வேகமா போயிகிட்டு இருக்கு....

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நல்லா சூப்பரா விறுவிறுப்பாக இருக்குது சார், இந்தப்பதிவு. பாராட்டுக்கள்.

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

//தாமஸ் ஆல்வா எடிசன் கூட அப்படி யோசித்திருக்க மாட்டார். ஒரு வழியாக அகநாநூறில் இருந்து ஒரு கவிதையை எடுத்து அப்படியே எழுதி அவள் தோழி மூலம் கொடுத்துவிட்டேன்//

நடைமுறை உண்மை

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

இப்போது நிஜமாகவே மணி அடித்தது, சிரிக்காதீங்க அப்ப நான் பெரிய கோவில்லதான் இருந்தேன்.//
சுவாரஸ்யமாய் போகுது, ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்

Jana சொன்னது…

முக்கியமாக அடுத்த பதிவுக்கு ஆவல்.. :)

Jana சொன்னது…

முக்கியமாக அடுத்த பதிவுக்கு ஆவல்.. :)

SHANKAR சொன்னது…

என்ன சார், இப்படி சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்களே?
சரி நம்ம பாலா சார் வாசகர்,எல்லாம் நல்ல முடிவாகத்தான் இருக்கும் என்று நம்புவோம்.

சசிகுமார் சொன்னது…

சார் சுவாரஸ்யமாக இருக்கு

Mahan.Thamesh சொன்னது…

சுவாரசியமாக இருக்கிறது . அடுத்து ..........................................