22 செப்., 2011

பாஸ்போர்ட், தேவர் மகன், ஒரு குடிகார தெய்வம்...

நன்றி : The Hindu
பனிரெண்டாம் வகுப்பில் பெயிலாகி ஒருவருடம் வீட்டில் இருந்தபோது எங்க ஊர் குலவழக்கப்படி பாஸ்போர்ட் வாங்கேன் என என் வீட்டிலும் சொல்லவே அதற்கான முயற்சிகளில் இறங்க ஆரம்பித்தேன். எங்க ஊரைப் பொறுத்தவரைக்கும் +2 முடிச்சவுடன் பாஸ்போர்ட் வாங்கிடனும் ஏன்னா? அப்போது  வீட்டுக்கு ஒரு ஆள் சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் இருந்த காலம், அதனால் ஊரில் இருந்தால் வெட்டியாய் தகராறு செய்கிறோம் என்பதால் சிங்கப்பூருக்கு மூட்டை கட்டிவிடுவார்கள். பணம் அனுப்பலேன்னாலும் பயபுள்ளைங்க வம்பு வழக்குல சிக்காமயாவது இருப்பானுங்கன்னு அப்படி ஒரு ஏற்பாடு. வம்பு வழக்குல நாங்க சிங்கப்பூர் வரைக்கும் பிரபலமான ஆளுங்க. ஒருவேளை காலேஜ் போற மாதிரி இருந்தா மூணு வருஷம் முடிஞ்சவுடனே சிங்கப்பூர்தான். அரசாங்க வேலை பார்த்த ஆளுங்ககூட வேலையை விட்டுட்டு வெளிநாட்டுக்குப்  போன காலம் அது.

பொதுவா பாஸ்போர்ட் தேவைன்னா மன்னார்குடில இருக்கிற யாராவது ஏஜென்ட்கிட்டதான் கொடுப்பாங்க. ஆனா நாங்கல்லாம் நேரடியா திருச்சி பாஸ்போர்ட் ஆபிசுக்கே போய்த்தான் அப்ளை பண்ணுவோம். காரணம் அப்பல்லாம் பாஸ்போர்ட் கட்டணமாக ரூ.300 தான் இருந்தது. ஆனால் மன்னார்குடி ஏஜெண்டுகள் ரூ.1000 க்கு மேல வாங்கிட்டு இருந்ததானுங்க. மேலும் அவனுங்க மொத்தமா போய் அப்ளை செய்வதால் வரத்தாமதமாகும் என்பதால் நாங்களே நேரடியாக போய்விடுவோம்.படிச்சதுக்கு இதுகூட தெரியாட்டி வீட்டு மக்களே நம்மளே மதிக்குமா?

இந்த பாஸ்போர்ட் அப்ளை செய்ய திருச்சி போறது இருக்கே! அது ஒரு சாகசமான வேலை. காலையில நான்கு மணிக்கு எழுந்து மொத பஸ்ஸ புடிச்சு மன்னார்குடி வந்து அங்கிருந்து தஞ்சாவூர் வந்து கார்த்திக் ஹோட்டல்ல காலை உணவை முடித்துக்கொண்டு திருச்சி பஸ்ல ஏறி மத்திய பஸ் ஸ்டாண்டு வந்து அங்கிருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்டு போற டவுன் பஸ்சுல ஏறி மரக்கடை, பாஸ்போர்ட் ஆபிசுல்லாம் இறங்குங்கன்னு கண்டக்டர் சொன்னா திமுதிமுன்னு பாஸ்போர்ட் ஆபிசுக்கு வரவங்க கூட்டமா இறங்குவோம். உடனே எங்களை அங்கிருக்கும் ப்ரோக்கர்கள் மடக்குவார்கள். எங்களைப்போல விவரமானவர்கள் ஏஜெண்டு வரச்சொன்னார் என நழுவிவிடுவோம் ஆனால் விவரமில்லாத அத்தனை பேரையும் அன்பாகவோ, மிரட்டியோ பேரம்பேசி பணிய வைப்பார்கள்.

இந்த ஏஜெண்டுகள் நம்மை அழைத்துப்போய் இன்னொரு ஆளிடம் ஒப்படைப்பார்கள். அங்கிருக்கும் ஒரு சிறிய அலுவலகத்தில் நம்மைப்போல ஏராளமான அப்பாவிகள் காத்திருப்பார்கள். அங்குவைத்து ஆபிசர்கள் போல நமது டாக்குமெண்டுகள் பரிசோதிக்கப்படும் . பின்னர்  விண்ணப்பங்களை நிரப்பி பணம் வாங்கிக்கொண்டு வரிசையில் நிற்கவைப்பார்கள். ஒருவேளை தேவையான டாக்குமெண்டுகள் இல்லையெனில் வக்கீல் அபிடவிட் தேவைப்படும். அதற்கும் தயாராக வக்கீலின் கையெழுத்தோடு வெற்றுப்பத்திரம் வைத்திருப்பார்கள். அதற்கு தனிக்கட்டணம். இப்படி இவர்கள் அவசரமாக தவறாக நிரப்பிய விவரங்களால் ஏகப்பட்ட பேருக்கு பெயரில் ஆரம்பித்து, பிறந்த தேதி, பெற்றோர் பெயர்கள். ஊர்ப்பெயர் என ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருக்கின்றன. இப்படி குளறுபடி ஆனால் அதனை மாற்றுவதற்கு மீண்டும் பாஸ்போர்ட் ஆபிசுக்கு நடையாய் நடக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆபிசர் விசாரிப்பதால் தேவையற்ற விசாரணைகள் ஒவ்வொருமுறையும் ஆராம்பிக்கும். நிறைய ஆட்கள் இம்மாதிரி நடையாய் நடந்து வெறுத்துப்போய் யாரவாது இன்னொரு ஏஜெண்டிடம் இன்னொரு பாஸ்போர்ட் அப்ளை செய்து அது தெரிந்துபோய் கடைசியில் பாஸ்போர்ட் வாங்க முடியாமல் போனவர்களே ஏராளம் இருக்கிறார்கள்.

இன்றைய தேதிக்கு பாஸ்போர்ட் பெற ஏராளமான எளிய வழிகளை அரசாங்கம் செய்து கொடுத்திருந்தாலும். இன்றைக்கும் அத்தனை பாஸ்போர்ட் அலுவலகங்களின் வெளியிலும் ஏஜெண்டுகள் நின்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்போதெல்லாம் புதுப்படங்கள் திருச்சி, தஞ்சவூரில்தான் ரிலீஸ் ஆகும்.அதனால், யாருக்காவது பாஸ்போர்ட் அப்ளை செய்யவேண்டும் என்றால் புதிய சினிமா பார்ப்பதும் பயணத்திட்டத்தில் தவறாது இடம்பெறும். இப்படி நாங்கள் சென்றபோது தேவர்மகன் படம் ரிலீஸ் ஆகியிருந்தது. சரி பாஸ்போர்ட் அப்ளை செஞ்சுட்டு அப்படியே படம் பார்த்துட்டு வந்துடலாம் என நானும் நண்பன் ராஜசேகரனும் கிளம்பினோம். திருச்சி மாரீஸ் காம்பளக்ஸில் தேவர்மகன் படம் பார்த்து முடியும்வரைக்கும் எல்லாம் சுமூகமாகத்தான் போனது. படம் முடிந்து மத்திய பேரூந்து வந்தபோது இரவு எட்டு மணியாகி இருந்தது. நண்பன் இங்கேயே சாப்பிட்டுரலாம் என்றான். நானோ இல்லடா பஸ் காசு போக 20 ரூபாதான் இருக்கும் அதனால மன்னார்குடில போயி சாப்பிட்டுக்கலாம் என்றேன். நண்பனோ, ரொம்ப பசிக்குதுடா இங்க பக்கத்துல எங்காவது கையேந்திபவன் இருக்கும், அங்க போய் சாப்பிட்டா கம்மியாதான் இருக்கும் என்றான்.

கொஞ்ச தூரம் நடந்து வந்ததும் டாக்சி ஸ்டாண்ட் பக்கமாக ஒரு கையேந்திபவனில் ஆளுக்கு ரெண்டு இட்லியும், ஒரு தோசையும் சொல்லிவிட்டு சாப்பிட அமர்ந்தோம். இட்லி வைத்ததும் கறிக்கொழம்பு ஊத்தவா என்றான் ஒரு ஆள். சரி என்றதும் சால்னா போல ஒன்றை ஊற்றினான். சாப்பிட்டு முடித்ததும் எவ்வளவு என்றால் நாப்பது ரூபாய் என்றான். அதிர்ந்துபோய் எப்படி நாப்பது ரூபாய் வரும்ன்னு கேட்டா கறிக்கொழம்பு ரெண்டு பேருக்கும் இருபது ரூபாய். அப்புறம் இட்லி,தோசை இருபது ரூபாய் என்றான். வெறும் குழம்பை ஊற்றிவிட்டு இருபது ரூபாய் கேட்டு ஏமாற்றுகிறாய் என என் நண்பன் அவனிடம் எகிற, அப்போது பாத்து சாப்பிட வந்தவர்கள் எல்லாம் நகர்ந்துவிட்டனர். அதனால் மேலும் கோபமான கடைக்காரன் எங்களிடம் நீங்கள் சண்டை போட்டதால் கஸ்டமர் எல்லாம் போயிட்டாங்க அதனால பணம் கொடுத்துதான் ஆகனுன்னு சொல்ல, நண்பன் சண்டைக்குப்போக, அப்போது அங்கு நல்ல போதையில் வந்த ஒருவர், எதுக்குப்பா பசங்ககிட்ட சண்டை போடுறீங்க என கடைக்காரனை அதட்டினார். பின்னர் என் நண்பன் விபரத்தை சொன்னபின் எங்களுக்கான காசை அவரே தருவதாக சொல்லி எங்களை போகச்சொன்னார்.

அவர் மட்டும் வரவில்லை எனில் அன்று மிகுந்த பிரச்சினை ஆகியிருக்கும். தெய்வம் சமயங்களில் குடித்துவிட்டுகூட வரும் என அன்றுதான் தெரிந்துகொண்டேன். 

15 கருத்துகள்:

Bibiliobibuli சொன்னது…

உங்கள் கடவு சீட்டு அனுபத்தை விட பசங்களோட படம் நிறைய கதை சொல்லுது.

//// தெய்வம் சமயங்களில் குடித்துவிட்டுகூட வரும் என அன்றுதான் தெரிந்துகொண்டேன்////

:)))

Philosophy Prabhakaran சொன்னது…

// அதனால் ஊரில் இருந்தால் வெட்டியாய் தகராறு செய்கிறோம் என்பதால் சிங்கப்பூருக்கு மூட்டை கட்டிவிடுவார்கள். //

பையனுக்கு ஒரு exposure கிடைக்கட்டும்ன்னு நினைச்சிருப்பாங்க...

Philosophy Prabhakaran சொன்னது…

// இன்றைய தேதிக்கு பாஸ்போர்ட் பெற ஏராளமான எளிய வழிகளை அரசாங்கம் செய்து கொடுத்திருந்தாலும். //

இதுபற்றி நேரில் சில சந்தேகங்கள் கேட்கிறேன்... எனக்கு சாஸ்திரி பவன் வாசலில் இருக்கும் கூட்டத்தை பார்த்தாலே வெளிநாட்டு ஆசை விமானம் பிடித்து பறந்துவிடுகிறது...

Philosophy Prabhakaran சொன்னது…

// தெய்வம் சமயங்களில் குடித்துவிட்டுகூட வரும் //

செம பிலாசபி... அவ்வ்வ்வ்...

Philosophy Prabhakaran சொன்னது…

பதிவுகளை schedule செய்து வெளியிடுகிறீர்கள் போல... திரட்டியில் இணைக்காமல் இருந்தது...

வைகை சொன்னது…

நாங்க ரொம்ப பாஸ்ட் அண்ணே... வம்பு வழக்குல சிக்குனதுக்கு பிறகுதான் இங்க வந்தோம் :))

வைகை சொன்னது…

தெய்வம் சமயங்களில் குடித்துவிட்டுகூட வரும் என அன்றுதான் தெரிந்துகொண்டேன்//

தெய்வம் குடிச்சிட்டு வரல அண்ணே...மனுசன குடிக்க வச்சு அனுப்புது... சுயநினைவா இருந்தா எவன் மனுஷனுக்கு மனுஷன் உதவி செய்வான்.... அதான் :))

இரா.ச.இமலாதித்தன் சொன்னது…

//அப்போது வீட்டுக்கு ஒரு ஆள் சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் இருந்த காலம், அதனால் ஊரில் இருந்தால் வெட்டியாய் தகராறு செய்கிறோம் என்பதால் சிங்கப்பூருக்கு மூட்டை கட்டிவிடுவார்கள். பணம் அனுப்பலேன்னாலும் பயபுள்ளைங்க வம்பு வழக்குல சிக்காமயாவது இருப்பானுங்கன்னு அப்படி ஒரு ஏற்பாடு. வம்பு வழக்குல நாங்க சிங்கப்பூர் வரைக்கும் பிரபலமான ஆளுங்க. ஒருவேளை காலேஜ் போற மாதிரி இருந்தா மூணு வருஷம் முடிஞ்சவுடனே சிங்கப்பூர்தான்.//

அப்போது மட்டும்தான் சண்டை வளர்த்துகிட்ட இருந்த மாதிரியும், இப்போயெல்லாம் சாத்வீகவாதியாக மாறின மாதிரில்ல சொல்றீங்க... இப்போ இன்னும் அதிகமாத்தான் ஆகிருக்கு... உங்க ஊரை என்னால மறக்கவே முடியாது :( என் தாய்மாமன் வாக்கப்பட்டு போன ஊரு பரவகோட்டைதான்... :)

aotspr சொன்னது…

"தெய்வம் சமயங்களில் குடித்துவிட்டுகூட வரும் என அன்றுதான் தெரிந்துகொண்டேன்."

உண்மையா.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

சக்தி கல்வி மையம் சொன்னது…

"தெய்வம் சமயங்களில் குடித்துவிட்டுகூட வரும் என அன்றுதான் தெரிந்துகொண்டேன்." ///

அப்படியா?

சசிகுமார் சொன்னது…

சார் தமிழ்மணத்தில் ஓட்டு போட முடியவில்லை....

IlayaDhasan சொன்னது…

ஓட்டல் காரய்ங்க அன்பா பேசுனாலே சூதானமா இருக்கனும் அப்பு.

சூர்யா படத்தில் விஜய் வில்லன் ?

முதல்வர் என்னை சந்திக்க விரும்பினார் - சோனா

கோகுல் சொன்னது…

எங்களைப்போல விவரமானவர்கள் ஏஜெண்டு வரச்சொன்னார் என நழுவிவிடுவோம்//

அப்பவே விபரமா இருந்திருக்கிங்க!
எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிகொடுங்க!

CS. Mohan Kumar சொன்னது…

தஞ்சை கார்த்திக் ஹோட்டல்.. அடடா ! பல விஷயங்களை நினைவு படுத்தி விட்டது !! தஞ்சையில் தங்கி படிக்கும் போது மதியம் அன் லிமிடட் மீல்ஸ் அங்கு போய் சாப்பிடுவேன். (அப்போது விலை Rs 5.50)காலை & இரவு சாப்பிடாமல், மதியம் மூன்று மணி போல் சாப்பிடுவது வழக்கம். ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு விட்டு வாழ உதவிய ஓட்டல் அது !

மாரிஸ் ராக்கில் தான் நானும் தேவர் மகன் ஒரு மழை நாளில் பார்த்தேன்.

அந்த கடைசி சம்பவம். செம ! பலரும் அப்படி தண்டம் அழுவார்கள்! உங்களிடம் பணம் குறைவாக இருந்ததால் தரலை. இல்லாவிடில் தந்து தண்டம் அழத்தான் செய்யணும் !

ராஜா பேசுகிறேன் ... சொன்னது…

மாமா இது நீங்க சொல்லவே இல்லயே....