25 செப்., 2013

பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை!


அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடும்போது தேர்ந்த கவனத்துடன் தவறான வித்தைகளை ஐஸ்க்ரீமிற்கு அழும் குழந்தைகளின் முகத்தில் உற்சாகத்தை தெளிப்பவர்கள் கோமாளிகளே. பெருநகரின் சாலைகளில் நம் தினசரி வாழ்க்கை ஒரு தேர்ந்த சர்க்கஸ் கோமாளியின் பிழைப்பாக மாறிவிட்டது. எல்லா சாலைகளுமே பார்க்கிங் மற்றும் நடைபாதை தொழிலதிபர்களால் பங்கிடப்பட்டு கிடைக்கும் இடைவெளிகளில் பயணத்தை தொடரும்படி நமக்கு நிபந்தனை விதிக்கிறது. எல்லோர் விதியையும் யாரோ ஒருவர்தான் தீர்மாணிக்கிறார் எனும் கருத்தை  சமீபத்தில் ஒரு அரசுப்பேரூந்தை, இரு சக்கர வாகனமோட்டி மயிரிழையில் (உண்மையில் விரற்கடை அளவு இடைவெளியில்) முந்தியதை பார்க்கும்போது கிட்டதட்ட உறுதி செய்கிறது.

ஒரு இரவில்  இப்படித்தான் நள்ளிரவு தாண்டி வீடு நோக்கிப் பயணித்தபோது பிளாட்பார வாசிகள் இருவரை தங்களது நீண்ட லத்தியால் சுளீரென அடித்தனர் ஒரு காவலர்கள். வேதனை தாங்காத வயதான பெரியவர்களான அவ்விருவரும் கதறியதை பொருட்படுத்தாத அந்த இளம் காவலர்கள் மீண்டும் அவர்களை அடிக்க கை ஓங்கியபோது எனக்கு தாங்க முடியவில்லை. அந்த காவலர்களை அழைத்து ”என்ன காரனத்திற்காக அடித்தீர்கள்?” என்றேன். அவர்களில் ஒருவர் “யார் நீ?, எதற்காக கேட்கிறாய்?” என அதட்டினார். “ டேய் சின்னப்பையந்தானே நீ!, அவர்கள் உன் பெற்றோரை ஒத்தவர்கள் இல்லையா?” என்னை விசாரிப்பது இருக்கட்டும் முதலில் உங்கள் இருவரின் பெயரும் எனக்கு தெரியவேண்டும், மேலும் நீங்கள் எந்த காவல் நிலையத்தில் பணிபுரிகிறீர்கள்?” எனக்கேட்டதும். ”சார் நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றார் இன்னொரு காவலர். ”முதலில் அடிச்சதுக்கு காரனம் சொல்லுங்கள் பிறகு என்னைப்பற்றி சொல்கிறேன்” என்றதும். ”இல்ல  சார், இப்ப நிறைய திருட்டு நடக்குது, வெளியூர்களில் இருந்து வருகிறவர்கள் இப்படி பிளாட்பாரங்களில் துங்குவது போல் நடித்து நள்ளிரவில் தனியாக வருபவர்களிடம் வழிப்பறி செய்வதாகவும் அதனால் இரவு நேரங்களில் அவசியம் இவர்களை கண்காணிக்க வேண்டியிருப்பதாகவும்” சொன்னார். இதற்குள்ளாக சம்பந்தப்பட்ட பெரியவர்கள் இருவருமே என்னை சமதானப்படுத்தினர். நானும் அந்த இளம் காவலர்களிடம் என் விவரங்களை சொல்லிவிட்டு இனி பெரியவர்களிடம் இவ்வாறு முரட்டுத்தனம் காட்டாதீர்கள் என அறிவுரை கூறிவிட்டு கிளம்பினேன்.

சென்னை முழுதுமே இப்படி தங்கள் வாழ்நாள் முழுதும் பிளாட்பாரங்களையே வீடாக வாழ்பவர்கள் அனேகம். இவர்கள் மழை, வெயிலால் அவதிப்படுவது ஒருபுறம் என்றால், சமூக விரோதிகளால் எரிச்சலாகும் காவல்துறையும் இவர்களை துரத்துகிறது. ஆனால் கோடி கோடியாக பணம் கொட்டி வீடு கட்டும் முக்கால் வாசிப்பேர் தங்கள் வாகனங்களை சாலை ஓரங்களில்தான் நிறுத்துகிறார்கள். அவர்களை இந்த அரசாங்கமும், காவல்துறையும் ஒரு கேள்வியும் கேட்பது இல்லை. சென்ற வாரம் நண்பனுக்கு வீடு பார்க்க சென்றபோது அந்த வீட்டின் உரிமையாளர் வீடு மட்டும்தான் வாடகைக்கு பைக் பார்க் செய்யனுன்னா ரோட்லதான் நிறுத்திக்கனும் என்றார். நண்பனும் அதற்கு ஒத்துக்கொண்டு வாடகைக்கி குடியேறிவிட்டான். ஆனால் சாலைகளில் நிறுத்திக்கொள்ள யார் அனுமதியும் தேவையில்லை போல!!
 
எழுதிக்கொண்டிருக்கும் ஒரு கவிதையின் அடுத்த வரிக்காக மோட்டு வளையை (இது சரியான பதமா?) உற்று நோக்கும் சமகாலக் கவிஞன் போல சென்னையின் குறுகிய சந்துகளில் வழி தேடி பயணிக்கும்போது அபூர்வமான சித்திரம் போல் மாலை வேளைகளில் வீட்டு வாசல்களில் கோலமிடும் நடுத்தர பெண்டீர் தம் எரிச்சலின் உச்சத்தை தண்ணீர் தெளிக்கும் சாக்கில் போகிறவர் மேலெல்லாம் ஊற்றிவிட்டு அதற்கான சாரி எனும் ஆங்கில பதத்தை உபயோகிக்க தெரியாத வருத்தத்தை வெளிக்காட்டும் விதமாக அவசரகதியில் போடப்படும் கோலமென சென்னை நகர் முழுதுமே அத்தனை தெருக்களிலும் 90% வீடுகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் இல்லாமல் கட்டப்பட்டவைதான். பக்கத்து பக்கத்து வீடுகளுக்கு இடைவெளில் இல்லாமல் ஒருவர் வீட்டின் சுவரில் இன்னொருவர் போஸ்டர் சைசில் சுவர் பூசி இடம் மிச்சப்படுத்தும் அதிசயமான மேஸ்திரி எஞ்சினியர்கள் திறமைக்கு எல்லையே இல்லை.
இப்போதெல்லாம் அடுக்ககங்களில் நாம் உறவினர்களையோ, நண்பர்களையோ, அல்லது வேலை விசயமாகவோ பார்க்கப்போனால் அங்கிருக்கும் பாதுகாவலர் நம் வாகனங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. ஏன் என்று கேட்டால்? பதில் சொல்லாமல் எழுதி வைக்கப்படிருக்கும் ஒரு அறிவிப்பை கைகாட்டுகிறார்.

அங்கே “பார்வையாளர்களின் வாகனங்களுக்கு அனுமதியில்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது!.

3 கருத்துகள்:

கவியாழி சொன்னது…

சொந்த வாகனத்தையே வீதியில் நிறுத்தும்போது பார்வையாளர்கள் எம்மாத்திரம்?

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லவேளை பார்வையாளர்களுக்கு அனுமதியில்லைன்னு போடலையே...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சமூக அத்து மீறல் போலீஸ்காரர்களுக்கு கொஞ்சம் அதிகம்தான்! எல்லாம் அதிகார போதைதான்! நன்றி!