5 நவ., 2011

மரணம் ...

எல்லா உயிர்களும் பிறப்பதுபோல ஒருநாள் செத்தும் போகும். மற்ற உயிர்களுக்கு இது தெரியுமோ?! இல்லையோ?!! ஆனால் விவரம் புரிந்தபின் எல்லா மானுடர்க்கும் இது மிக நன்றாகவே தெரியும், தானொரு நாள் செத்துப்போவோம் என்பது. இரு உயிர்கள்  முயங்கும்போது உச்சத்தில் ஒரு உயிர் ஜனிக்கும். அம்மூன்று உயிர்களுமே அறிவதில்லை வாழ்வின் பக்கங்களை.

மரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாம். ஆனால் சகித்துக்கொள்ள   நன்றாகவே பழக்கபட்டிருக்கிறோம். ஒரு நாய்க்குட்டியைப் போல அறிந்தவர்கள் அறியாதவர்கள் என யார் பின்னாலும் பின்தொடரும் மரணம் சமயம் பார்த்து, அவர்களை ஆட்கொள்ளும். ஒரு செடியையோ, மரத்தையோ வெட்டிவிடுகிற மாதிரி, ஒரு கோழியையோ, மீனையோ, ஆட்டையோ கொல்ல முடியாது. அவைகளை நமது தேவைக்கு தகுந்த மாதிரியான பயன்பாட்டிற்கு கொன்று தின்னவே இம்மாதிரியான உயிர்கள் படைக்கபட்டிருப்பதாய் முடிவு செய்யப்பட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மனிதர்களுக்கான நியதி வேறு மாதிரியானது தடித்தடியான சட்டப் புத்தகங்களால் வகுக்கப்பட்டிருக்கும் கோட்பாடுகள் கால காலமாக மீறப்பட்டு வந்தாலும் சாப்பிடும் பொருளாக மனிதனே மனிதனை வைக்காததால் வறட்டு கவுரவத்துக்கும், முரட்டு கோபத்துக்கும் இன்னொருவனை பழிவாங்கி, தானும் பலியாகிறான் மனிதன்.

கிராமங்களின்  துக்க வீடுகள் வயதுக்கும், இறப்புக்கும் தக்க மாதிரி இருக்கும். குழந்தைகள் செத்துப் போனாலோ அல்லது இளையோர் யாராவது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ உடனே அடக்கம் செய்துவிடுவார்கள். காரணம் மீதமிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் துயரத்தின் உச்சத்தில் எதையாவது செய்துகொண்டுவிடக்கூடாது என்கிற பதட்டத்தில் அப்படி அடக்கம் செய்வார்கள். வயதானவர்கள் இறந்தால் அது எழவு வீடாகவே தெரியாது. குறைந்தது ஒரு நாளைக்காவது உடலை வைத்திருப்பார்கள். உற்றார், உறவினர் அனைவருக்கும் ஆளனுப்பி அவர்கள் வந்து சேர்ந்தபின்னர்தான் மயானக் கொட்டகைக்கு எடுத்துப்போவார்கள். உறவினர் யாரும் வெளியூரில் இருந்தால் அவர்கள் வரும்வரைக்கும் வைத்திருக்கவேண்டும். இதில் வெளியூரிலிருப்பவர் சம்மதம் இருந்தால் மட்டுமே அவர்கள் வருவதற்கு முன்னர் அடக்கம் செய்வார்கள்.

நான் சென்னையில் வசிப்பதால் அடிக்கடி யார் சாவுக்கும் போகமுடியாது. ஊருக்கு போகும்போது மட்டும் அம்மா வைத்திருக்கும் பட்டியல் பிரகாரம் ஒவ்வொரு வீடாக சென்று துக்கம் விசாரிக்க செல்வேன். சமயங்களில் அந்தந்த வீடுகளின் துக்க நிழல்கள் இல்லாதிருக்கும்போது அங்கு சென்று அவர்களின் சோகத்தை புதிப்பிப்பது மாதிரி ஆகிவிடுகிறது. ஆனாலும் போகவேண்டியது கட்டாயம் என்று ஆகிறது. போகாவிட்டால் பெரிய குறை ஆகிவிடும். நான் குறை என்று சொன்னது துக்க வீட்டினர் வைக்கும் குறை அல்ல. என் அம்மா வைக்கும் குறை, இப்படி சாதி சனமே வேண்டான்னு போயிட்டா, அப்புறம் தன் சாவுக்கு வரும் கூட்டம் குறையக்கூடும் என்கிற அச்சமாகவும் இருக்கலாம். இப்போதெல்லாம் செல்பேசி புண்ணியத்தில் துக்கம் விசாரிப்பது எளிதாக மாறியிருக்கிறது.

இப்படி வயசாளிகள் இறந்த துக்க வீட்டில் யாராவது ஒரு சில பெண்கள் மட்டுமே தனித்த ஒப்பாரிகளை தனது தனிப்பட்ட வேறுபல சோகங்களுக்காக அதுவும் அந்த சோகத்துக்கு சம்பந்தமான நபர் வெளியில் அமர்ந்திருந்தால் சாடையாக ஒரு சண்டையையோ, சமாதானத்தையோ தனது ஒப்பாரியில் ஆரம்பிப்பார்கள். சம்பந்தப்பட்ட வேறு சிலரும் ஒப்பாரியில் கலந்துகொண்டால் சுவாரஸ்யத்திற்கு  பஞ்சம் இருக்காது. இப்போது இளம் மனைவிமார்கள் தொலைக்காட்சி சீரியலின் நாயகிகள் போல சம்பிராயதுக்கு அழுதுவைப்பார்கள். என் அத்தை ஒருத்தி இருக்கிறாள் எங்கள் நெருங்கிய சொந்தங்கள் இறந்து போகும்போது அவள் ஒப்பாரி வைத்து எங்கள் வீட்டில் பலதலைகள் உருட்டப்படிருக்கின்றன. அவள் சோகம் அவளுக்கு.

சில வருடங்களாகவே இப்படி வயசாளிகள் மாலை நேரங்களில் செத்துப்போனால் இரவைக் கடத்த டிவிடி உதவியுடன் விடியவிடிய அதனை இயக்கும் பொறுப்பிலிருப்பவர் ரசனைக்கு ஏற்ப படம் ஓட்டுவார்கள். கைவசம் வைத்திருக்கும் படங்களாக அது இருப்பதால், அதிலும் பெரும்பாலும் பார்த்த படங்களாக இருப்பதால் சுவாரஸ்யமற்று பார்க்கும் அனைவரும் ஒரு கட்டத்தில் தூங்கிப்போனாலும், நாற்காலியில் சாத்தி அமர்த்தப்பட்டிருக்கும் பிணங்கள் ஒரு வேளை வசனங்களை கேட்டுக்கொண்டிருக்கலாம்.

எங்கள் கிராமத்தைப் பொறுத்தவரை சாவு வீட்டுக்கென சில சம்பிரதாயங்கள் இருக்கின்றன. மனகசப்பிலோ அல்லது சொத்துப் பிரச்சினையிலோ பிரிந்தவர்கள் பெரும்பாலும் சாவுகளால் ஒன்றுகூடி விடுவார்கள். கொலை வரை போன உறவுகள் கூட சாவுக்கு வந்து தலைகாட்டிவிட்டு போவார்கள். இப்படி கொலை வரைக்கும் போன உறவுகள் வரும்போது மட்டும் வீட்டு மகளீர் பிரச்சினை தொடங்குவார்கள். சமாதானத்துக்கு காத்திருந்த பங்காளிகள் கைவசம் வைத்திருக்கும் அரதப்பழசு சால்ஜாப்புகளை சொல்லி சமாதானப்படுத்துவார்கள். திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு கூட போகாமல் இருந்தாலும் இருப்பார்கள். சாவுக்கு வந்து தலை காட்டாமல் இருக்க மாட்டார்கள். மரணம் நிகழ்ந்தபின் யார் தன் பின்னால் சுடுகாடுவரை வருவார்கள் என்று தெரியாமல் இருந்தாலும், சாவுக்கு மரியாதை செலுத்தும் ஆட்களாகத்தான் இருக்கிறோம் நாம்.

என் வீட்டில் கோவித்துக்கொண்டு மனைவியுடன் நான் வெளியேறிவிட்ட சமயம். என் இரண்டாவது அக்கா என்னிடம் தொலைபேசியில் இப்படித்தான் சொன்னார்.
"செத்தா தூக்கிப் போடவாவது நாலு ஆட்கள் வேண்டும் என்பதற்காகத்தான் சொந்தங்களே, அதனாலே ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு வந்துடுங்க" என்றார்.
என்கூட நாலு பேர் இல்லை நாப்பதுக்கும் மேல் ஆட்கள் இருக்கிறார்கள் என்றேன். அப்போதே எனக்கு நூற்றுகணக்கான தோழர்கள் இருந்தார்கள். சாவின் பயம் என்னை இன்றுவரைக்குமே எங்கள் வீட்டாருடன் சமாதானமாக போகச்சொல்லவில்லை.

நான் நகரவாசியாக மாறிவிட்டபின் மரணம் பற்றிய, சாவு பற்றிய என் பார்வை  மாறித்தான் போனது. எவ்வளவு பெரிய டிராபிக் நெருக்கடிகள் இருந்தபோதும் ஆமை வேக மரண ஊர்வலம் போகும்போது மட்டும் பொறுத்துக்கொண்டு  வழி விடும் மக்கள். அந்த மரண ஊர்வலத்தின் முன் ஒரு கூட்டம் போடும் குத்தாட்டம் என சுவாரஸ்யமான ஊர்வலமாக இருக்கும். சமயங்களில் சாலை ஓரங்களில் நிற்கும் ஒரு சில இளைஞர்கள் வந்து ஆடிவிட்டு போவதைக்கூட பார்த்திருக்கிறேன்.

ஆனால் நகரத்தில் வாடகை வீட்டிலும். அடுக்ககங்களின் குடியிருப்புகளிலும்  வாழும் மனிதர்களுக்கு அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் செத்துப்போனால் அந்த சாவு அவர்களுக்கு சாபம்தான். வாடகை வீட்டு ஓனர் அதே குடியிருப்பில் இருந்தால் சாவு விழுந்த மறு நிமிடமே சீக்கிரம் எடுத்துடுங்க என உத்தரவு போடுவார். சிலர் மருத்துவமனையில் இறந்துபோனால் வீட்டுக்கே எடுத்துவர அனுமதிக்க மாட்டார்கள். முகப்பேரில் இருக்கும்போது நண்பன் ஒருவனுக்காக வீடு தேடிக்கொண்டிருந்தபோது ஒரு வீட்டு ஓனர்
"எத்தனை பேருக்கு வீடு வேண்டும்" என்றார்.
"ஒரு குடும்பத்துக்காகத்தான்" என்றேன்.
"அது தெரியும் தம்பி, அந்த குடும்பத்தில் யார் யார் இருக்கா?" என்றார்.
"கணவன், மனைவி, ஒரு குழந்தை மட்டும்தான்" என்றேன்.
"வயசானவங்க யாரும் இல்லைல்ல!" என்றார்.
"ஏன் கேக்குறீங்க?" என்றேன்.
"வயசானவங்க இருந்தா சீக்கிரம் செத்துப் போவாங்க, அப்ப இந்த வீட்டில்தான் வைப்பார்கள், நான் அதை விரும்பவில்லை" என்றார்.
நான் கோபமாக "நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் சாவையே சந்திக்காமல் இருக்க வாழ்த்துகிறேன்!" என சொல்லிவிட்டு வந்தேன்.

அடுக்கக வீடுகளில் சாவு ஒரு பிரச்சினைதான், கார், பைக்குகள் நிறுத்தும் இடத்தில் கூட ஆட்கள் நிற்கக்  கூடாது என அசோசியேசன் கட்டளை போடும். சமயங்களில் 600 சதுர அடிக்குள் வாழும் வீட்டினர் படும் சிரமங்களை பார்த்திருக்கிறேன். அபூர்வமாகவே தங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர்களின் துக்கத்தை தன் தோளில் தாங்கும் ஒனர்களை பார்த்திருக்கிறேன்.

சென்ற வாரம் சாலையில் ஒரு மரண ஊர்வலத்தைப் பார்த்தேன். ஒரு தள்ளுவண்டியில் ஒருவரின் உடலை இழுத்துச் சென்றார் ஒருவர , அதன் பின்னால் நடந்து சென்றான்  ஏழு வயதிருக்கும் ஒரு சிறுவன் கூடவே மேலும் இருவர் நடந்து வந்தனர். அதில் ஒருவர் மணியடித்தபடி செல்லும் சேகண்டி. மற்றொருவர் மட்டுமே அந்தப் பையனின் உறவினர் ஆகவோ, பக்கத்து வீட்டுக் காரராகவோ இருக்ககூடும். அந்த சிறுவனின் எதிர்காலம் இனி எப்படி இருக்குமோ?.

அதன்பிறகு இந்தக் கட்டுரை எழுதும் வரைக்குமே அந்த சிறுவனின் முகமே மனதிற்குள் இருக்கிறது..

12 கருத்துகள்:

Thozhirkalam Channel சொன்னது…

மனம் கனக்கிறது.......

rajamelaiyur சொன்னது…

//மனகசப்பிலோ அல்லது சொத்துப் பிரச்சினையிலோ பிரிந்தவர்கள் பெரும்பாலும் சாவுகளால் ஒன்றுகூடி விடுவார்கள்

//
கிராமத்தில் இது சகஜம்

rajamelaiyur சொன்னது…

இன்று என் வலையில்

விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு

சிசு சொன்னது…

//கிராமங்களின் துக்க வீடுகள் வயதுக்கும், இறப்புக்கும் தக்க மாதிரி இருக்கும். //

இங்கிதம் தெரிந்தவர்கள்....

சிசு சொன்னது…

//மனகசப்பிலோ அல்லது சொத்துப் பிரச்சினையிலோ பிரிந்தவர்கள் பெரும்பாலும் சாவுகளால் ஒன்றுகூடி விடுவார்கள்.//

மிக உண்மை செந்தில்....
சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ள வருபவர்களை விட, சங்கடங்களைப் பகிர்ந்துகொள்ள, ஆறுதல் சொல்ல அங்கே நாகரிகமும் மனிதமும் நிறைந்த மனிதர்கள் இருக்கிறார்கள்.

SURYAJEEVA சொன்னது…

இப்பொழுது பெரும்பாலான சாவு வீடுகளில் துக்கம் தங்குவதில்லை, உலகம் அவர்கள் காலடியில் வேகமாய் நகர்வது போல், சர்வ சாதாரணமாய் கதைபேசி திரிகிறார்கள்... சிலர் சிரித்து பேசி கூட பார்த்திருக்கிறேன்.. அன்றிலிருந்து சாவு வீட்டுக்கு போவதில்லை, அதனால் கல்யாணங்களுக்கும் செல்வதில்லை

குறையொன்றுமில்லை. சொன்னது…

மனதை கனக்கச்செய்த பதிவு

ஹேமா சொன்னது…

மரணம் என்பது வந்தேயாகும் என்றாலும் எதிர்கொள்ளத் தைரியம் குறைவுதான் எல்லாருக்குமே !

போளூர் தயாநிதி சொன்னது…

உண்மையில் சிறப்பான பதிவு பாராட்டுகள் நன்றி .

காஞ்சி முரளி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
காஞ்சி முரளி சொன்னது…

"மரணம்"
இயல்பான...!
எதார்த்தமான பதிவு...!

வாழ்த்துக்கள்...!



ஓர் நகரத்தில் பிறந்து
மாநகரத்தில் வாழும் நான்
மரணம் எனும் தங்கள் பதிவைக்கண்டதும்
ஏற்கெனவே என் மனதில் உதித்த "கிறுக்கல்கள்"...!

இதோ...

"பிணங்களின் மத்தியில்.... ஓர்
பிணமாய்.... நானும்....!"


இன்றுகாலை....
இருள்வெளிச்சத்துடன்
விடிந்தும்விடியாத
விடியற்காலைப்பொழுது...

மாநகரத்தின்
மத்திய....
இதயப்பகுதியில் ...
(இதயமே இல்லாதப் பகுதியில்)
மாநகர பிரதான சாலை சந்திப்பில்...

மாக்கள்... மன்னிக்கவும்...
மக்கள் அதிகநடமாட்டமுள்ள பகுதியில்...

ஓர்
முடிநரைத்துப்போன
முதியவர்..

சட்டையேதுமில்லாமல்..
இடுப்பு வேட்டியுடன்...
நடைபாதைக்கும்...
சாலைக்கும் இடையில்
ஒருக்களித்து படுத்தபடி...
உறங்கும் பாணியில்...

ஏதோ ஒன்றெனை
உறுத்த...
உற்றுநோக்கினேன்...
அம்முதியவரை...!

மறுகணம்...!
ஒருநொடி என் இதயம் நின்று...
மறுநொடி இயக்கத்தொடங்கியது...

முதியவர்
மரித்து...
சடலமாய்...!

வேதனையில்
விம்மியது என் நெஞ்சம்...!

மனிதனின்
"ஜனனம்" தெரியும்...!
"மரணம்" தெரியுமா..? என்ற
விடையில்லா வினாவுடன்...!

அருகில்
நடந்துகொண்டிருந்தவரிடம் கேட்டேன்...!

"ஏன்... இப்படி" என
"அவர் இறந்துவிட்டார்...
ஆனால் எப்போது என்று தெரியாது" என சொல்லிவிட்டு
அவர் தன் பணியைப் பார்க்கச் சென்றுவிட்டார்..!

நான் திகைப்புடன் நின்றேன்...!

ஓர் ஐந்தறிவு காகம்கூட
தன் இனத்தில் ஒன்று மரிணித்தால்....
சொந்தமோ...ஒட்டோ...உறவோ...
இல்லையென்றாலும்...
தன் இன காக்கைகளை
"கா..கா.." என அழைத்து.... ஒன்றுகூடி..
கரைந்து தன் இரங்கலைத் தெரிவித்து...
தன் துயரத்தை காட்டுகிறது...

ஆனால்...!
ஆறறிவுள்ள...
புனிதனான "மனிதன்" ....?

நான் அயர்ச்சியிலும்...
மன உளைச்சலிலும்...!
என்ன செய்யவேண்டுமென சிந்தித்து கொண்டிருந்தபோது....

மரித்துப்போன
அம்மனித உடலுக்கு உதவுவதா...!
இல்லை...!
வேடிக்கை பார்த்து செல்பவரைப்போல
ஒதுங்கிக்கொள்வதாயென...

இதற்குள்...

என்
உள்ளம்
உறுத்தத் தொடங்கியது...
"நீ மனிதனா..?" எனும் கேள்வியுடன்...!

இறுதியில்...
வென்றது...

மனிதாபிமானமல்ல....
"பிணபிமானம்"தான்....!

அதாவது...
நான் பிணமானேன்...!

இப்பிணக்கூட்டத்தில்...
இப்பிணங்களுக்கு மத்தியில்...
ஓர் பிணமாய் நானும்....

காரணம்...!
மாநகரத்தின்
மகாயந்திரங்களில்.... நானுமோர்
மகாயந்திரம் என்பதால்...!

அதோடு...

இந்த
இதயமேயில்லாத
இதயமற்ற பிரதேசத்தில் ....
இதயமில்லாதவர்களில் ...
நானும் ஒருவன் என்பதால்....

நட்புடன்...
காஞ்சி முரளி....

சேக்காளி சொன்னது…

//ஒரு தள்ளுவண்டியில் ஒருவரின் உடலை இழுத்துச் சென்றார் ஒருவர , அதன் பின்னால் நடந்து சென்றான் ஏழு வயதிருக்கும் ஒரு சிறுவன் கூடவே மேலும் இருவர் நடந்து வந்தனர். அதில் ஒருவர் மணியடித்தபடி செல்லும் சேகண்டி. மற்றொருவர் மட்டுமே அந்தப் பையனின் உறவினர் ஆகவோ, பக்கத்து வீட்டுக் காரராகவோ இருக்ககூடும். அந்த சிறுவனின் எதிர்காலம் இனி எப்படி இருக்குமோ?//
என் மனதினையும் கனக்கச் செய்து விட்டது.