10 மே, 2011

வெயில்...

"ஒரு வெறிநாயின் வாயிலிருந்து ஒழுகும் எச்சில்போல ஊரெங்கும் வெயில் ஒழுகிக் கொண்டிருக்கின்றது" என்று ஒரு கட்டுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லி இருப்பார்.

நினைவு தெரிந்த நாட்கள் முதலாகவே எனக்கு ஆகாத எதிரி வெயில்தான். வாழ்வின் பக்கங்களில் பெரும்பாலானவை இருட்டினால் நிரப்பப்பட்டவை என்பதனாலும் கூட இப்படி ஒரு வெயில் வெறுப்பு என் மனதை பட்டுப்போக வைத்திருக்ககூடும். தனித்த இரவுகளில் நிலாவும், நட்சத்திரங்களும் சொல்லும் ஆயிரம் கதைகள் போலல்லாது பகல் என்னை மனிதர்களால் நிரப்பி வைத்ததாலும் பிடிக்காமல் போயிருக்கக் கூடும். கூடுமானவரைக்கும் வெயில் நாள் பகலில் கூட்டுக்குள் வாழப்பழகிவிட்ட ஆந்தை என மாறிவிட்ட என் இரவுகளையும் வெறுப்பாக்க முயலுகிறது இப்போது சென்னையின் மே மாத வெயில். வெயில் என்னுள் எப்போதும் வேப்பிலைச்சாற்றைப்போல் ஒரு கசப்பை ஊறவைத்தபடியே இருக்கின்றது

எத்தனை இடர்பாடுகளை மழை எனக்குத் தந்திருந்த போதிலும். சேற்றுப்புண் வந்து பாதங்கள் வெந்து சுரைச்செடியின் இலைகளையோ, சைப்பாலையோ அம்மாவின் வசவுகளுடன் கலந்து தடவிக்கொண்ட இரவுகளிலும் மறுநாள் மழைக்கான கற்பனைகள்தான் தூங்கவைக்கும். மழைவிட்டபின்னும் பன்னீர் தெளிக்கும் மரக்கிளைகள் என் மழைக்கால வாசஸ்தலங்களாக இருந்தன.

முதல் காதல் மலர்ந்த மழைராத்திரி என்னை வீடுவரைக்கும் கொண்டு வந்து சேர்த்தது ஒரு பெருமழைதான். அதன்பின் அவள் என்னைவிட்டு பிரிந்தபின் போதையில் ஆற்றங்கரையில் மயங்கிக் கிடந்தபோது நனைத்து எழுப்பியதும் ஒரு மழைதான். கிராமத்து நாட்களில் காலைப்பனி வரப்புகளின் ஓரத்துப் புற்களில் படிந்திருக்க செருப்பணியாக் கால்களை கழுவி விளையாடும் நாட்கள் கடந்தபின் வரும் சித்திரை மாதத்துக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே பிறந்தவன் நான்.


என் மூத்த சகோதரன் கணேசன் அண்ணனுக்கு வெயிலென்றால் கொள்ளைப்பிரியம் மூடிய மேகத்தை பார்க்க நேர்கையில் எல்லாம் பிரகாசமாக ஜொலிக்கும் என் முகத்தின் நிழல் அவரை சோகமாய் காட்டும் எனக்கு. நான் சிங்கப்பூரில் அண்ணனுடன் இருந்தபோது அங்கு தினசரி ஒரு முறையாவது என் விருப்பம்போல் பெய்த மழையை எனக்காக அவரும் பொறுத்துக்கொள்வார். வாழ்வியலின் சோகம் எப்போதும் தன்னை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும் அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். சுஜாதாவின் பரம விசிறி. உதவிய நண்பர்கள் அவருக்கு துரோகத்தையே பரிசளித்தபோதும் சிரித்தபடி ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். 

ஒருமுறை விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் வெயில் பற்றிய சிலாகிப்பை ஒரு தொடரில் எழுதி இருந்ததை அவரிடம் காட்டியபோது வெயிலின் மீதிருந்த என் வெறுப்பையும் மீறி அவரை நான் நேசிப்பதை புரிந்துகொண்ட கணத்தில் இருந்து எனக்காக மழையை நேசிக்க முயல்வதாக என் கைபிடித்து சொன்னார். அப்போது திடீரென தூறல் போட ஆரம்பிக்க சிரித்துக்கொண்டே நனைந்தவாறு என்னுடன் நடக்க ஆரம்பித்தார்.

சென்னையில் மூன்று நாட்கள் பெரு மழையொன்று தொடர்ச்சியாக பெய்த மூன்றாம் மழைநாள் இரவில் முகப்பேரில்  தங்கியிருந்த வீட்டில், நள்ளிரவில் கிணறு நிரம்பி வீட்டுக்குள் தண்ணீர் வர ஆரம்பிக்க நிரம்பிகொண்டிருந்த வீட்டின் படுக்கையறையில் ஒரு வயது மகனுடன் மனைவியும், நானும் கொட்டக் கொட்ட விழித்திருந்தோம். எங்கிருந்தோ படையெடுத்த பூரான்களை கையில் வைத்திருக்கும் டார்ச் லைட்டால் கண்டுபிடித்து ஒவ்வொன்றாய் கொல்லத் துவங்கினேன். மறுநாள் காலை ஒரு ஆட்டோவில் சமைப்பதற்கு சில பாத்திரங்களையும் சிலிண்டரையும், கேஸ் ஸ்டவ்வையும் எடுத்துக்கொண்டு எனது அலுவலகம் வந்து மழைவிடும் வரைக்கும் அங்குதான் தங்கியிருந்தோம். அப்போதும் கூட எனக்கு மழை மீதான காதல் கூடித்தான் போனது.


அதன்பிறகு தியாகராய நகருக்கு வீடு மாறி வந்து ஒரு வருடம் கழிந்தபின் அந்த வீட்டை அலுவலகமாக மாற்றிவிட்டு எதிரே இருந்த வீட்டுக்கு மாறுவதற்கு அட்வான்ஸ் கொடுக்கப் போனபோது  அந்த வீட்டைப் பார்த்ததும் வீட்டு உரிமையாளரிடம் மழை வந்தால் வீட்டுக்குள் தண்ணீர் வருமா? என்று கேட்டபோது கடந்த 32 வருடங்களில் ஒருமுறை கூட அப்படி ஆனது இல்லை என்று சொல்லிவிட்டு, ஏன் அப்படி கேட்டீர்கள்? என்றார். நான் சிரித்துக்கொண்டே என் ராசி அப்படி! என்றேன். அப்போது அவர் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார் அந்த வருட மழை என் ராசியை உண்மையாக்கும் என!.

சொன்னமாதிரி அந்த வருடமும் மழை தொடர்ந்து பெய்ய ஆரம்பித்தது. அப்போது என் இரண்டாவது மகன் மனைவியின் வயிற்றில் இருந்ததால் முன்கூட்டியே அலுவலகம் வந்துவிட்டோம். அந்த வீட்டிற்குள்ளும்   தண்ணீர் நிரம்பியது, அந்த வாரம் முழுக்க வீட்டு உரிமையாளர் எங்களுக்கும் சேர்த்து சமைத்து தந்தார். அவர் நூறு தடவையாவது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததற்காய் வருத்தம் தெரிவித்தாலும் அவர் மீதும் மழை மீதும் எனக்கு கோபமே வரவில்லை.


எனது சகோதரியின் மகன் வீரவேல் இப்படித்தான் ஒரு மூன்று நாள் மழைநாள் முடிவில் விபத்தில் சிக்கி அதன்பின் ஐந்து நாள் கழித்து மருத்துவமனையில் இறந்துபோனான். அப்போதும் அவன் இறுதிச் சடங்கு முடிந்த மறுநாள் ஒரு தனித்த இரவில் ஆகாயத்தில் இருந்த ஒற்றை மேகத்தைப்பார்த்து இன்னும் ஒரு நாள் சேர்த்துப் பெய்திருந்தால் ஒருவேளை அவன் காப்பாற்றப்பட்டு இருப்பானே என அதனிடம் வருத்தப்பட்டு அழுதேன். எங்கிருந்தோ இரவுப் பறவையொன்று என்  தனிமையை நீக்க தொடர்ந்து கூவிய  வண்ணம் இருந்தது.

குறும்புகள் செய்யும் காதலியைப்போல மழை என்னுடன் எப்போதும் தீராவிளையாட்டினை ஆடிக்கொண்டே இருக்கிறது. முகத்தில் பட்டுத்தெறிக்கும் மழையின் முதல்துளி என்றுமே எனக்கு முதல்முத்தம் அளிக்கும் கிளர்ச்சியையே தந்து கொண்டிருக்கிறது. 


இப்போதுமே வெயில் என்று தலைப்பு போட்டுவிட்டு மழை பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இந்த வெயிலை என்ன செய்ய
அறையெங்கும்
பரவும் புழுக்கத்தில் கசியும் வியர்வை
பெருக்கெடுத்து ஆடைகளை நனைக்க
பெரு நகரமெங்கும் இப்படியாக
வெயிலை வருடம் தப்பாது வைதாலும்
வெறுப்புடன் பொருத்துக் கொள்ளத்தான்
வேண்டியிருக்கிறது ஒரு
வேண்டா விருந்தாளியைப் போல... 

22 கருத்துகள்:

raja சொன்னது…

கட்டுரை நன்றாக வந்திருக்கிறது செந்தில்.

KUTTI சொன்னது…

SENTHIL SIR,

HOW ARE YOU....

WANT TO SEE YOU SOON...


THIS IS ARTICLE IS SO SUPERB...


CONGRTS,....


FRIEND,
MANO

செங்கோவி சொன்னது…

ரொம்ப டச்சிங்கான கட்டுரை..

ஹேமா சொன்னது…

செந்தில்...எனக்கும் மழை-குளிர்தான் பிடிக்கும்.வெயில் என்று மழையின் சோகம்தான் நிறைய !

Chitra சொன்னது…

I am sorry to hear about your nephew. May his soul rest in peace.

Chitra சொன்னது…

உதவிய நண்பர்கள் அவருக்கு துரோகத்தையே பரிசளித்தபோதும் சிரித்தபடி ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்.


.... உயர்ந்த குணம் தான்.

Sivakumar சொன்னது…

'சூரியனை' கண்டாலே உங்களுக்கு அலர்ஜிதான்!

iniyavan சொன்னது…

தலைவரே, எனக்கென்னமோ இது எஸ் ரா எழுதின கட்டுரையோ என்று சந்தேகம் வருகிறது. எங்கேயோ போயிட்டிங்க.

பெயரில்லா சொன்னது…

கட்டுரை மிக அழகாக இருக்கிறது அண்ணா மழையின் குளுமை போல! :)

எல் கே சொன்னது…

class

Unknown சொன்னது…

//இப்போதுமே வெயில் என்று தலைப்பு போட்டுவிட்டு மழை பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். //

அண்ணே இது தான் நான் நினைத்த பின்னூட்டம்.

சௌந்தர் சொன்னது…

wow.... வெயில் ஓர் மழை...!!!!

நிழற்குடை சொன்னது…

மழை பற்றி ஒரு‍ கவித்துவமான பதிவு.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நன்றாக எழுதப்பட்டுள்ள கட்டுரை.

சசிகுமார் சொன்னது…

//முதல் காதல் மலர்ந்த மழைராத்திரி என்னை வீடுவரைக்கும் கொண்டு வந்து சேர்த்தது ஒரு பெருமழைதான். அதன்பின் அவள் என்னைவிட்டு பிரிந்தபின் போதையில் ஆற்றங்கரையில் மயங்கிக் கிடந்தபோது நனைத்து எழுப்பியதும் ஒரு மழைதான்.//

உங்களையுமா

சசிகுமார் சொன்னது…

அண்ணே அப்புறம் ஒரு விஷயம் சொல்லணும் உங்க பிளாக் பார்க்க சூப்பரா இருக்கு அண்ணே கண்ணுக்கு குளிர்ச்சியான டெம்ப்ளேட் நிறம் ப்ளஸ்

vasan சொன்னது…

ஒரு முர‌ண் க‌வ‌னித்தீர்க‌ளா செந்தில்?
அடைம‌ழையோ, சிறு ம‌ழையோ,
ஒரு வெக்கை (சூடு) தெரிவதில்லை.
ஆனால், சூரிய‌ச்சூட்டில் வேர்வை ஈர‌ம் க‌சிகிற‌து.

நிரூபன் சொன்னது…

வெய்யிலோடு ஒன்றித்துப் போக முடியாத உங்கள் மன உணர்வுகளையும், மழையின் குளிர்மைக்குள் உங்கள் மனதைத் தொலைக்கும் உங்களின் எண்ணங்களையும் அழகிய உரை நடைத் தமிழில் பதிவாக்கியுள்ளீர்கள்.

பதிவினைத் தொய்ய விடாது நகர்த்திச் செல்வதில் நீங்கள் கையாளும் உரை நடை பெரும் பங்கு வகிக்கிறது.

Outofthezoo சொன்னது…

"தலைவரே, எனக்கென்னமோ இது எஸ் ரா எழுதின கட்டுரையோ என்று சந்தேகம் வருகிறது. எங்கேயோ போயிட்டிங்க"

Exactly!!.

Reader of your blog for a long time. Never bothered to comment/vote. But this blog entry.., you have something in your writing that cannot be explained.

God bless you.

RK நண்பன்.. சொன்னது…

அண்ணே மழைக்கும் உங்க வாழ்க்கைக்கும் ரொம்ப ரொம்ப தொடர்பு இருக்குனு இந்த தொடர் மூலம தெரியுது...

ரொம்ப எதார்த்தம்... மனைதை தொட்டது அண்ணே...

ஆமா ஆரம்ப காலத்தில் சென்னையில் மழையால இவ்வளோ கஷ்டம் இருந்தாலும் அதை பதிவாக்கிய விதம் அருமை...

RK நண்பன்.. சொன்னது…

///இப்போதுமே வெயில் என்று தலைப்பு போட்டுவிட்டு மழை பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்./////

மழையின் மீதான காதலன்றி வேறென்ன இருக்க முடியும் அண்ணா...

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

மழையை ரசித்து வெயில் பதிவாக்கிய விதம் அருமை