21 ஏப்., 2009

"ராமசாமி அத்தியாயம் -12"

அன்று இரவோடு என் கதை முடிந்திருந்தால், இந்த கதையை நீங்கள் படிக்க நேர்ந்திருக்காது.. என் செய்ய உங்கள் தலைஎழுத்தை யாரால் மாற்ற முடியும். காதல் பற்றிய கதைகளை, காவியங்களை, கட்டுரைகளை, கவிதைகளை படிக்க.. படிக்க அலுப்பதில்லை, பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் காதல் அந்தரங்கமாக நம்முள் எப்படியோ கலந்துவிடுகிறது, அதனால் யார் இதனைப்பற்றி போரடித்தாலும் கேட்க தோன்றுகிறது.. காதல் எப்போதும் ஒருவருக்கு மாதிரி மற்றவருக்கு வாய்ப்பதில்லை, காதலித்த காலத்தில் ஈருடல் ஓருயிராக இருந்தவர்கள் கல்யாணம் முடிந்தபின் விவாகரத்தான கதைகள் உண்டு, அதேபோல் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டவர்கள் வாழ்கிற காலம் முழுதும் காதலித்த கதைகளும் உண்டு, வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் காதல் சுவாரஸ்யமானதுதான்.

அன்று அத்தான் வந்து என்னை எழுப்பி, /என்ன மாப்புளே இந்த நேரத்துலே/ என்றார்.. அவரை பார்த்ததும் நான் அழுதேன், / என்னடா முட்டாளா நீ/ எல்லாரும் ஒருநாள் சாகத்தான் போறோம் சிலபேர் முன்னாடி, சிலபேர் பின்னாடி அவ்வளவுதான், நீ நடந்ததையே நினைச்சுகிட்டிருந்தா! நல்லதில்ல மாப்ள.. ராஜசேகர் சொன்னான் இப்படியே போனா நீ செத்துடுவேன்னு.. கேட்கவே சங்கடமா இருக்கு.. உன் குடும்பத்துல எவ்வளவு பிரச்சினைகள் இருக்கு,முதல்ல உங்க அக்கா பிள்ளைகள பாரு அவங்க ரெண்டு பேரும் உன்னைநம்பிதானே இருக்காங்க, கண்ணனோ குடிகாரன் ஆயிட்டான், அப்புறம் யாரு உங்க குடும்பத்த காப்பாத்தறது.. ஒரு ஆறுமாசந்தான் இருக்கும் அந்த பெண்ணோட பழகி, அவளுக்கு உன்னோட வாழ கொடுத்து வக்கல... அதுக்கு இப்படி தாடி வச்சிக்கிட்டு,.. தண்ணி அடிச்சிட்டு திரியறது நல்லால்ல மாப்ள... சரி நீ செத்துட்டதாவே வச்சுக்க உன் குடும்பத்துக்கு ஏதாவது செஞ்சுட்டு அப்புறம் என்னவேனாலும் செய் மாப்ள.. என நான் மௌனமாக அழுதுகொண்டிருக்க அவர் சொல்லிகொண்டேபோனார்... நான் எதுவும் பேசவில்லை.. கடைசியாக மாப்ளே நாளைக்கு வந்து என்கிட்டே பணம் வாங்கிக்க கொஞ்ச நாளைக்கு மெட்ராசுக்கு போய் இருந்துட்டு வா.. அப்புறம் என்ன செய்றது என முடிவு செய்யலாம் என் டாக்ஸி பிடித்து அனுப்பி வைத்தார்.

வீட்டிற்க்கு வந்து மதுவையும், விசத்தையும் திறந்து வைத்தேன்... அத்தானும், அஞ்சலியும் மாறி மாறி என்னை வதைத்தனர்.. பொழுது விடிய ஆரம்பித்தது, அப்போது எங்கள் வீட்டில்தான் பால் சென்டர் இருந்தது. எல்லோரும் மாட்டை ஓட்டிவந்து பால் கறப்பார்கள், அவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.. குடும்பத்துக்காக கொஞ்சநாள் வாழ்வது என முடிவெடுத்தேன், விசத்தை குப்பையில் கொட்டிவிட்டு, மதுவை குடித்துவிட்டு மாட்டுகொட்டகையிலேயே தூங்கிவிட்டேன். மறுநாள் மதியம்தான் எழுந்தேன், அம்மாவிடம் மெட்ராஸ் போகிறேன் என சொல்லிவிட்டு குளிக்கசென்றேன். அப்பா ஏன் இப்ப மெட்ராஸ் போறே என்றார்.. போய் ஏதாவது வேலைப்பார்ப்பேன் என்றதும், மாலை கிளம்பும்போது நூறு ரூபாய் கொடுத்தார்.. மன்னார்குடி வந்து அத்தானை பார்த்தேன், அவர் எனக்கு ஐந்நூறு ரூபாய் கொடுத்தார். மறுநாள் காலை மெட்ராஸ் வந்தேன், அதிகாலை அக்கா வீட்டு கதவை தட்டியபோது திறந்தவள் காமாட்சி.. அன்றைக்கு தெரியவில்லை அவள்தான் என் மனைவியாக போகிறவள் என்று.. அம்மா மாமா வந்திருக்காங்க என அக்காவை எழுப்பிவிட்டாள்.. அக்கா என்னடா சொல்லாம வந்திருக்க.. என கேட்டுவிட்டு பரவாயில்லை தூங்கு, சாயந்தரம் பேசிக்கலாம் என்று சமைக்க போய்விட்டது, ..

மெட்ராஸ் வந்துவிட்டேனே தவிர என்னால் எங்கும் வேலை தேட முடியவில்லை, இடையில் அக்கா வீட்டுக்காரர் எனக்காக பார்த்து கொடுத்த வேலையால் வந்த பிரச்சினை பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன், ஆறு மாதங்கள் இப்படியே போனது ஒரு கம்பெனியில் வேலைக்கு போவது இரண்டு நாளிலேயே பிடிக்காமல் வந்துவிடுவது இப்படியே போய்க்கொண்டிருந்தது அக்கா இரண்டு நாளைக்கு ஒருமுறை பத்து ரூபாய் தரும் அதற்க்கு புத்தகங்கள் வாங்கிவிடுவேன், மற்றபடி எங்கு போனாலும் நடைராஜாதான். வாரவாரம் செவ்வாய் அன்று தி.நகரில் வேலை செய்த நண்பன் செல்வகுமாரை பார்க்க வருவேன், அவன் ஜி.ஆர்.டியில் வேலை செய்தான், அந்த நேரத்தில் அவன்தான் எனக்கு ஆறுதலாக இருந்தான்..

அண்ணன் பாண்டியன் எனக்கு தமிழ்நாடு தாதா மருந்து கம்பெனியில் வேலை வாங்கி தந்தார், நல்ல வேலை ஆனால் ஒரு வாரம்தான் போயிருப்பேன்.. வீட்டில் இருந்து ஊருக்கு வரும்படி கடிதம் வந்தது.. ஊருக்குபோனால் இருந்த கடைசி நிலத்தையும் விற்றுவிட்டு அண்ணனுக்கு, கடனுக்கு போக அப்பா என் பங்காக எட்டாயிரம் ரூபாய் கொடுத்தார். அப்போது சிங்கப்பூர் போக பதினெட்டாயிரம் வேண்டும், சிகாமணி சித்தப்பா இருக்கிறத கொடு மிச்சத்த சிங்கப்பூர் வந்து சம்பாதிச்சு கொடு என்றார், மலர் வீட்டு அத்தான் ஐயாயிரம் கொடுத்தார். 1992 ஆம் வருடம் மார்ச் 2ஆம் தேதி சிங்கப்பூர் வந்தேன்.

எத்தனையோ அனுபவங்களை இன்றுவரை சந்த்தித்து இருக்கிறேன், ஆனால் இன்றைக்கு ஒரு நல்ல திறமையாளனாக நான் இருப்பதற்கு காரணம் சிங்கப்பூர்தான்.

அங்கு சென்றும் நான் உண்டு ஏன் வேலையுண்டு என இருந்தவரை நன்றாகத்தான் இருந்தேன், ஆனால் பிரச்சினை என் நண்பன் கணேசன் வடிவில் வந்தது, அவனால் எத்தனை பிரச்சினைகள், பொதுவாக நான் யாருக்காவது இரக்கப்பட்டால் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள், இன்று வரையில் யாருக்காவது உதவி செய்துகொண்டுதானிருக்கிறேன், காரணம் ஒருமுறை இப்படி ரவுடித்தனமாக இருக்கிறாயே.. அதை விடுத்து உன்னால் முடிந்த உதவியை எல்லோருக்கும் செய்துபார் அதில் கிடைக்கும் மனநிறைவு எதிலும் கிடைக்காது என அஞ்சலி சொன்னாள், இன்றுவரை அதை பின்பற்றுகிறேன் ஆனால் என்னிடம் உதவி பெற்றுக்கொண்ட அத்தனைபேரும் என்னை குறை சொல்லிவிட்டுதான் பிரிகின்றனர்.

தற்போது யோகா மற்றும் தியானம் பயின்று வருகிறேன், அது என்னை மறுபரிசீலனை செய்யவைத்தது, இப்போதுதான் தெரிகிறது என்னுடய வெளிப்படையான பேச்சு எல்லோரையும் காயபடுத்துகிறது என்பதை, மனதில் பட்டதை சட்டென்று சொல்லிவிடும் குணம் எனக்கு.. அது யாருக்கும் பிடிக்கவில்லை என இப்போதுதான் தெரிகிறது. என்ன செய்ய என்னை மாற்றிக்கொள்ள முயற்சிசெய்கிறேன்..

என் வெளிப்படையான பேச்சுதான் அன்று அவளுக்கு பிடித்தது.. அதே பேச்சுதான் இன்று எல்லோருக்கம் பிடிக்கவில்லை...

14 ஏப்., 2009

"ராமசாமி அத்தியாயம் - 11 "

எனக்கு அடுத்த ஒரு வாரத்தை தள்ளுவது பெரும் சிரமமாக இருந்தது, இப்போது போல் அப்போதெல்லாம் போன் கூட பேசமுடியாது. அவள் அழுதது என் கண்முன் வந்துகொண்டேயிருந்தது, அவளின் நெருக்கத்திற்கு பிறகு நான் தண்ணி அடிப்பதை முற்றாக விட்டுவிட்டதால் நண்பர்களுடன் பழகுவதை தவிர்க்க நூல் நிலையம் போக ஆரம்பித்தேன். மேலும் நண்பர்கள் வற்புறுத்தினால் மஞ்சள் காமாலையை காரணம் சொல்லி தப்பித்துவிடுவேன், அதனால் அவர்களும் என்னை மாலை வேளைகளில் கூப்பிடுவதை தவிர்த்தனர். எனவே எப்போதும் புத்தகங்களுடன் வாழ ஆரம்பித்தேன்.

ஒரு வாரம் கழித்து எனக்கு அவளிடமிருந்து கடிதம் வந்தது, எனக்கு சந்தோசத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை, அந்த கடிதத்தை ஆயிரம் முறையாவது படித்திருப்பேன், அதில் நவம்பர் இருபதாம் தேதி மன்னார்குடி வருவேன் எனவும் மறுநாள் மாலை வழக்கம்போல் கோவிலில் சந்திப்போம் எனவும், வந்து எனக்கு ஒரு சந்தோசமான செய்தி சொல்லப்போவதாகவும் எழுதியிருந்தாள். முடிவில் வித் தவுசண்ட் வார்ம் ஆப் கிஸ்ஸஸ் என எழுதி கையெழுத்து போட்டிருந்தாள். அந்த சந்தோசத்தை எனக்கு எப்படி சொல்லுவது என்று தெரியாமல் தனி உற்சாகத்துடன் நடமாட ஆரம்பித்தேன். பத்தொன்பதாம் தேதி அன்று காலை என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. கடுமையான ஜுரம் அடித்தது உடனே மன்னார்குடி அழைத்து வந்தார்கள். அங்கு எனக்கு டைபாய்டு என அட்மிட் செய்தார்கள். தொடர்ந்து நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன், எனக்கு இருபத்திஒன்றாம் தேதி அவளை பார்க்கமுடியவில்லையே என்பதுதான் வருத்தமாக இருந்தது. அதனால் நண்பன் ராஜசேகரை விட்டு விசாரிக்க சொன்னேன், அவனும் விசாரித்துவிட்டு அவள் மன்னார்குடி வந்தமாதிரி தெரியவில்லை என்றான்.

ஆனால் என்னை பார்க்க அஞ்சலியின் தோழி சுமதி வந்தாள், வந்து என்னைபார்த்ததும் கதறி அழ ஆரம்பித்தாள், நான் இருந்தது தனி அறை என்பதாலும், காலை பத்துமணிக்கு மேல் என்பதாலும் யாரும் இல்லை, எனக்கு ஒன்றுமே புரியவில்லை, என்ன ஆச்சும்மா, ஏன் அழுவுறே என சமாதானபடுத்தினேன், அவள் அழுகையை நிறுத்தவில்லை, அழட்டும் என மௌனமாக இருந்தேன், மெல்ல அவளை ஆசுவாசபடுத்திக்கொண்டு அண்ணே அஞ்சலி நம்மை எல்லாம் ஏமாத்திட்டு போய்ட்டான்னே.. என தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்,.எனக்குள் எதுவோ உடைந்தது, ..........................................

சுமதி போனபிறகு அப்படியே பைத்தியம் பிடித்தவனாய் அமர்ந்திருந்தேன்.. என்னைப்பார்க்க வந்த நண்பனிடம் அஞ்சலி வீட்டின் முகவரி சொல்லி எப்படியாவது என்ன நடந்தது என விசாரிக்க சொன்னேன்,

பெங்களூரில் பத்தொன்பதாம் தேதி ஊருக்கு கிளம்புவதற்குமுன் கடைசி நேரத்தில் தனக்கு டிரஸ் வாங்க வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டு கிருஷ்ணகுமாரின் அம்மா, மற்றும் அஞ்சலியின் மூத்த சகோதரி, கிருஷ்ணகுமார் என்ற குட்டிபையனுடன் கிளம்பியிருக்கிறார்கள், மெயின் ரோட்டில் சாலையை கடக்கையில் சாலையின் நடுவில் நின்று மறுபுறம் கடக்கையில் அந்த குட்டிபையனை யார் அழைத்துவருகிறார் என தெரியாமல் கடந்துவிட அந்த குட்டிபையனோ போகிற வருகிற கார்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே அங்கேயே சாலைநடுவில் நிற்க, மறுபுறம் கடந்த அஞ்சலி அதனை கவனித்துவிட்டு அவசரமாக சாலையின் குறுக்கே ஓடி அவனை காப்பாற்ற முயன்ற பொது வேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்திரிக்கிறது, அவள் சாகும்போது கடைசியாக சொன்ன பெயர் குமார்....... இதனை நண்பன் வந்து சொன்னபோது நான் அழவேயில்லை, என் உயிரில் கலந்த அவள் இறந்துவிட்டாள், என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தபின், நான் எங்கும் செல்லவில்லை, எந்த நேரமும் வீட்டிலேயே அடைபட்டிருந்தேன், நான் யாருடனும் பேசுவதில்லை, சரியாக சாப்பிடுவதில்லை என நண்பனிடம் அம்மா வருத்தப்பட்டது, அவன் பிடிவாதமாக என்னை வெளியில் அழைத்துசென்றான், அன்று இரவு நிறைய குடித்தேன்.. அத்தனை நாள் இரவுகளில் அன்று இரவுதான் போதையில் தூங்கினேன், அதன்பிறகு குடி என்னுடன் ஒட்டிகொண்டது, குடிக்காமல் என்னால் தூங்க முடியாது, வீட்டிற்கு தெரியக்கூடாது என்பதற்காக மாட்டு கொட்டகையில் தூங்க ஆரம்பித்தேன்...

இப்படி ஒருநாள் நண்பன் செழியனுடன் குடித்தபோது, ஓவராக குடித்துவிட்டு அஞ்சலியை பற்றி புலம்ப அவனோ நீ \"ஏழு சுவரங்களுக்குள்\" என்ற பாட்டு கேட்டிருக்கிறாயா என்றான், அதில் \'எனக்காக நீ அழுதாள் இயற்கையில் நடக்கும்\',\' நீ எனக்காக உணவு உன்ன எப்படி முடியும்\' என்றொரு வரி உண்டு தெரியுமா? என்றான் அதுக்கு இப்ப என்னடா என்றபோது, நீ அஞ்சலியை நெஜமாகவே காதலிச்சியா? என்றான், ஆமாண்டா... அத எதுக்கு கேக்குறே என்றேன். இல்லடா நீ நிஜமா காதலிச்சிருந்தா அப்பவே செத்திருப்பே, ஆனா நீ இப்ப எங்களுக்காக நடிக்கிறே.. உண்மையான காதலா இருந்தா அவளுக்காக நீ செத்திருக்கணும் என்றான்.. என் போதை வடிந்துவிட்டது, வீட்டிற்கு வந்து நெடு நேரம் யோசித்து ஒரு முடிவெடுத்தேன்...

தற்கொலை செய்து கொள்ளவேண்டும், அதுவும் இன்றைக்கு இரவே என முடிவெடுத்தேன்..

மாலையில் மன்னார்குடி சென்று ஒரு பாட்டில் விஷமும், இன்னொரு பாட்டில் பிராந்தியும் வாங்கிகொண்டேன், கடைசியாக ஆத்மநாதன் அத்தானை பார்த்துவிட்டு சென்றுவிடலாம் என அவரைப்பார்க்க சென்டருக்கு போனேன்.. அவர் வீட்டிற்கு சாப்பிட போனதாக சொன்னார்கள், அவருக்காக காத்திருந்தேன்,, என் நினைவுகள் முழுதும் அஞ்சலி மட்டுமே இருந்தாள், இன்னும் சில மணி நேரத்தில் அவளுடன் கலந்துவிடப்போகிறேன், அந்த நினைப்பே என்னை ஒரு ஏகாந்தத்திற்கு இட்டுசென்றது... வகுப்பின் பெஞ்சில் படுத்து கண்மூடினேன் என் கண்களுக்குள் அஞ்சலி சிரித்தாள்... அப்படியே தூங்கிவிட்டேன்........

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் திங்களன்றே வருகிறது ..

"ஐ.நாவின் இரட்டைவேடம்"

சமிபத்திய வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு மேற்க்கத்திய நாடுகளுடன் ஜப்பானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியாவை பொறுத்தவரை அது தன் சொந்த பாதுகாப்பு கருதியே சோதனை செய்வதாக சொல்கிறது. இதுவரை அது தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதே தவிர அதன்மேல் போர் தொடுக்கவில்லை, ஆனால் அமெரிக்கவோ அத்தனை நாடுகளுக்கும் தான் பெரியண்ணனாக நடக்க முயற்சிக்கிறது, அமெரிக்காவுக்கு ஈரானின் எண்ணெய் வயல்களின்மேல் ஒரு கண், அதன்மேல் போர் தொடுக்க காரணம் தேடிக்கொண்டிருக்கிறது, அத்தனை ஆயுதங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள அமெரிக்கா வடகொரியாவை மிரட்டுகிறது.

இதில் ஐ.நாவோ வடகொரியாவின்மேல் பொருளாதார தடை செய்வதாக எச்சரிக்கிறது. என்ன ஒரு அக்கறை பாருங்கள்.. ஒரு நாடு வெறும் ஆயுத சோதனை செய்தாலே அதன்மீது பொருளாதார தடை விதிப்பதாக சொல்லும் ஐ.நா, முப்பத்துமூன்று வருடங்களாக இன அழிப்பு செய்து கொண்டிருக்கும் சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக ஏன் குரல் கொடுக்க முடியவில்லை?..

அதுவும் கடந்த ஒரு வருடமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவிக்கிறது, மூன்று இலச்சம் மக்கள் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் அவர்களுக்கு போதிய உணவு வசதி, மருந்து வசதிகள் அளிக்க தடை செய்து பட்டினியால் சாகிறார்கள். செஞ்சிலுவை சங்கத்தினரை கூட அனுமதிக்காமல், ஊடகங்களையும் அனுமதிக்காமல் வெளிஉலகத்துக்கு தெரியாமல் மொத்த இனத்தையும் நாளுக்கு குறைந்து முன்னூறு பேர் வீதம் கொன்று குவிக்கிறது.

உலகம் பூராவும் இருக்கிற தமிழ் மக்கள் எழுச்சிமிகு போராட்டங்களை தொடர்ந்து நடத்திகொண்டிருக்கிரன்றனர், ஆனால் இவை எதுவும் ஐ.நாவின் காதில் விழவில்லை.சிங்கள அரசான்கதிரர்கு வெறும் அறிக்கைகளை மட்டும் அனுப்பி கொண்டிருக்கிறது, அந்த காகித அறிக்கைகள் அனேகமாக "ங்கோத்தா பய ராசபக்சே" வின் டாய்லெட் பேப்பராக மாறியிருக்கும்.

இதில் நவநீதம்பிள்ளை இந்தியாவிற்கு இலங்கை பிரச்சினை பற்றி சிவசங்கர மேனனுடன் பேசுகிறார். பேசிவிட்டு இருதரப்பும் போர்நிறுத்தம் செய்யவேண்டும் என இன்னொரு டாய்லெட் பேப்பர் அனுப்புகிறார். ஐ.நாவே நீங்கள் யாருக்காக இருக்கிறீர்கள், உங்களுக்கே நீங்கள் செய்வது அபத்தமாக தெரியவில்லையா?..

வடகொரியாவின் மேல் இத்தனை நிர்பந்தங்களை அறிவிக்கும் நீங்கள் ஏன் சிங்கள அரசாங்கத்தை நிர்பந்திக்கவில்லை? ... இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இணைந்து சிங்கள அரசாங்கத்துடன் படுகொலை செய்துகொண்டிருக்கிறது. அதனை வெளிபடையாக அறிந்தும் மனிதாபிமான அடிப்படையிலாவது சம்பத்தப்பட்ட நாடுகளை கண்டிக்ககூடாதா?.

ஒரு இனத்தை முற்றிலும் அழித்துவிட சிங்கள அரசாங்கம் அதன் அடுத்த அஸ்திரமாக கெமிக்கல் குண்டுகளை பயன்படுத்த துவங்கியிருக்கிறது. குண்டு விழுகின்ற இடத்தில் எந்த உயிரினமும் வாழ முடியாது என்று சொல்கிறார்கள், அதனை ஆதாரத்துடன் புலிகள் வெளியிட்ட பிறகும் ஐ.நா சிங்கள அரசின்மேல் பொருளாதார தடை விதிப்பதாக சொல்லவில்லை.

மேலும் ஐ.நாவின் எந்த கோரிக்கையையும் சிங்கள அரசாங்கம் இதுவரை ஏற்கவில்லை, ஆனாலும் சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் சிங்கள அரசிற்கு தொடர்ந்து ஆயுத, மற்றும் பண உதவிகளை அளிக்கிறது, இந்தியா ஒருபடி மேலேபோய் ஆள் உதவியும் அளிக்கிறது, தன் இன விடுதலைக்காக போராடும் அமைப்பை எல்லா நாடுகளும் தடை செய்துவிட்டதால், அந்த போராட்டம் தீவிரவாத செயலாக பார்க்கப்படுகிறது, எல்லா போராட்டங்களையும் தீவிரவாத போராட்டமாக பார்க்கமுடியாது.

இப்போது ஈழதமிழர்கள் உலகத்தின் கரங்கள் தங்கள் கண்ணீரை துடைககாதா? ஏன் ஏங்குகிறார்கள்.அவர்கள் மொத்தமாக மடிவதற்குள் என்னசெய்யப்போகிறோம்? .......

12 ஏப்., 2009

"ஈழமும், தமிழ் எழுத்தாளர்களும்"

பற்றி எரிந்துகொண்டிருக்கிறது ஈழம், ஆனால் இங்குள்ள தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம் அதில் குளிர்காய்கிறார்கள். இணையத்தில் நாம் எழுதாவிட்டால் இதைப்பற்றி யாரும் மூச்சுவிட மாட்டார்கள். தமிழ் வார இதழ்களில் விகடன்,குமுதம் மற்றும் நக்கீரனை தவிர வேறு யாரும் எழதவில்லை நாளிதழ்களில் தந்தி, மாலைமலர் தவிர வேறு எதுவும் எழுதவில்லை.

இதில் ஹிந்து, தினமலர், துக்ளக் போன்றவை இன அழிப்புக்கு துணைபோகின்றன, தினகரனோ புலிகள் செத்தால் எழுதுகிறது, தமிழன் செத்தால் எழுதுவதில்லை. ஊடகங்களில் சன் நெட்வொர்க்கும் , கலைஞர் நெட்வொர்க்கும் பெயருக்கு தகவல்கள் வெளியிடுகிறார்கள், மக்கள் தொலைகாட்சி மட்டும் தொடர்ந்து செய்திகளிலும், தொடராகவும் ஒளிபரப்புகிறார்கள்.

ஆனால் தமிழை வாழவைப்பேன் என்ற வைரமுத்துவோ எந்திரனுக்கு பாட்டெழுத போய்விட்டதால் ஒன்றிரெண்டு முறை பேசியதோடு சரி கலைஞரின் ஓட்டுக்கு வசனம் எழுத போய்விட்டார். மற்றபடி வாலி, அப்துல் ரகுமான் போன்ற துதிபாடிகள் பொற்கிழி( கலைஞர் பத்து ரூபாய்தான் தருவார்) வாங்கிக்கொண்டு கவியரங்கத்தில் புகழ் பாடுகின்றனர். ஏதோ தாமரை மட்டும் முழு அளவில் போராடுகிறார், அப்புறம் இளம் கவிஞர்கள் முத்துகுமார், கபிலன், பா.விஜய் போன்றவர்கள் கைதுக்கு பயந்து வாய்மூடி மௌனமாகிவிட்டார்கள்.

அப்புறம் தமிழில் எத்தனை எழுத்தாளர்கள்...., யாரும் இதுவரை வாய்திறக்கவில்லை, தனிப்பட்ட முறையில் புலிகளை பற்றியும் பிரபாகரனை பற்றியும் எழுதி காசு பார்கிறார்களே தவிர, இந்த உக்கிர கொடுமை பற்றி இவர்கள் யாரும் எழுதாதது பெரும் வருத்தத்தை அளிக்கிறது, இந்த அளவுக்கா சொரணை கெட்டு போயிருப்பார்கள் சாருவோ ஒருபடி மேலேபோய் நான் எழுதினால் என் வீட்டில் குண்டு போடுவார்கள் என்கிறார், யாரைப்பற்றி எழுதுவீர்கள்?, உங்கள் வீட்டில் குண்டு போடுமளவிற்கு அதில் என்ன எழுதபோகிறீர்கள்?..

கலைஞர் ஒருமுறை நெடுமாறன் அய்யாவை காகிதப்புலி என்றார், உண்மையில் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள்தான் காகிதப்புலிகள், உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா.. ஈழ ஆதரவு என்பது புலிகளின் ஆதரவாக ஏன் பார்க்கிறீர்கள், இன்றுவரை சிங்கள ராணுவத்தை தவிர அப்பாவி சிங்கள மக்களை அவர்கள் தாக்குவதில்லை, ஆனால் சிங்கள ராணுவமோ தமிழன் ஒவ்வொருவனையும் புலிகளாக நினைத்து சுட்டுகொல்லுகிறதே, அதிலும் குழந்தைகள் என்னய்யா பாவம் செய்தார்கள், தமிழனுக்கு பிறந்தது பாவமா? அந்த அப்பாவி பிஞ்சுகளின் மரண காணொளிகள் இணையம் முழுவதும் கொட்டிகிடக்குதே அதனை நீங்கள் காணுவதில்லையா?...

உலகில் வேறு எந்த இனமக்களும் சந்திக்காத பேரவலம் முப்பத்திமூன்று ஆண்டுகளாக தமிழினம் சந்திக்கிறதே, அதற்க்கு நாம் மௌனமாக இருக்கிறோமே உங்களுக்கு உறுத்தவில்லையா, தினசரி அதனை படித்துவிட்டு உங்களால் எப்படி ரஜினிக்கும், விஜய்க்கும் பாட்டெழுத முடிகிறது?, எப்படி உங்களால் கட்டுரைகள், கதைகள் எழுத முடிகிறது?.

இந்நேரம் பாரதியும், பெரியாரும் இருந்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா? பணம் என்னும் மாயப்பேய் உங்களை இப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது, நாளையே ஈழம் மலர்ந்தால் நீங்கள் அங்கும் போய் பேசுவீர்கள்.. கல் தோன்றி மண்தோன்றா.. என அடுக்குமொழியில் பொழிவீர்கள் அவர்களும் தமிழன்தானே எல்லாவற்றையும் வாய்பிளந்து கேட்பான், ஏனென்றால் இன்றைக்கு தமிழ் சினிமா இத்தனை பிரபலம் ஆனதற்கு புலம் பெயர்ந்த அவர்கள்தானே காரணம்.

ஆனால் அப்போது நீங்கள் அமரபோவது தமிழர்களின் கல்லறைகளின்மேல் என்பதை மறந்துவிடுவீர்கள், நேற்று கேப்டன் சர்வமத பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார், சாவு வீட்டில் ஒட்டு வாங்க நினைக்காதீர்கள் கேப்டன்... இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் அஞ்சலி கூட்டம் நடத்த வேண்டியதுதான்...

ஈழமக்களை சிங்களனிடமிருந்து காப்பாற்றுகிறாயோ இல்லையோ...
கடவுளே..... தயவுசெய்து தமிழக அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பாற்று.....

9 ஏப்., 2009

"காங்கிரஸ், திமுக, சிறுத்தைகளின் அசிங்க அரசியல்"

ஈழத்தின் சமீபத்திய நிகழ்வுகள் ஆழ்ந்த கவலை அளித்துக்கொண்டிருக்கின்றன.. தொடர்ந்த படுகொலை செய்திகளால் நாம் ஒருமாதிரி மரத்துபோய் இருந்தாலும், தற்போது அங்கிருந்து வரும் செய்திகள் இலங்கையில் தமிழினத்தை இந்திய அரசே அழிக்கிறார்கள் என ஆதாரபூர்வமாக பிரான்ஸ் செய்தியாளர்கள் வெளியிடும்போது இந்திய அரசின் குறிப்பாக சோனியாவின் தனிப்பட்ட வெருப்பின்பால் நிகழும் இந்த படுகொலைகள், நம்மை இந்தியாவின் இறையாண்மை பற்றி மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.

இங்கு தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அடிக்கும் கூத்துகள் நாளுக்குநாள் அதிகமாகிறது. இவர்கள் ஈழபிரச்சினை பற்றி ஒன்றுமே பேசாமல் கூட இருக்கலாம், ஆனால் போரை நிறுத்தசொல்லி போராடுவதாக இவர்கள் சொல்லுவது, சில சமயம் இவர்கள் கீழ்ப்பாக்கத்தில் இருந்து தப்பி வந்தவர்களோ என யோசிக்கவைக்கிறது.

ஐயா கலைஞர் அவர்களே நீங்க அங்கம் வகிக்கும் மத்திய அரசுதானே படைகளை அனுப்பி உள்ளது, பின் யாருக்காக போராடுகிறீர்கள், மேலும் எல்லோருக்கும் தந்தி அடிக்கிறீர்கள், ஏனையா மொபைல் ரீச் ஆகலியா? . நாங்கல்லாம் சொரணை கெட்டுபோய் ரொம்ப நாளாச்சு, இன்னமும் எங்களுக்கு இன உணர்வு இருக்குன்னு நம்புறீங்களா? .. பேசாம எலக்சன் வேலைய பாருங்க.. ரெண்டு ஓட்டாவது விழும்..

அண்ணன் திருமாவுக்கு.., எங்கண்ணே போச்சு உங்க வீரமெல்லாம், சும்மா போராட்டம் பண்ணிட்டு இருக்காதிங்க, அதுக்கு பதிலா சோனியா, தங்கபாலு கூட மேடையில ஒண்ணா நின்னு பேசும்போது அம்மா கட்சிகாரங்களுக்கு போட்டியா அன்னையை எப்படியெல்லாம் புகழலாம்ன்னு ரெடி பண்ணி வச்சிங்கன்னா உபயோகமா இருக்கும், அத விட்டுட்டு பிரபாகரனுக்கு ஆபத்துன்னு அறிக்கை விடுறீங்க, அவருக்கு என்ன ஆனா உங்களுக்கு என்னங்க, போய் அன்னையின் கரத்தையும், அண்ணனின் கரத்தையும் பலப்படுத்துங்க,,

தங்கபாலுவுக்கு.., என்ன ஆச்சு சார் திடீர்ன்னு நீங்களும் போராட்டத்தில் கலந்துக்குவோம்ன்னு சொல்லிட்டிங்க.. ஒட்டு வாங்கனுன்னா எதையாவது செய்றேன்னு அறிவிங்க... அதவிட்டுட்டு சின்னபுள்ளைதனம்மா இப்பிடியெல்லாம் அறிவிக்கலாமா? அங்க யாரு செத்தா உங்களுக்கு என்னங்க... அங்க உள்ள சிங்களவனுக்கு ஆயுதமும், ஆளும் கொடுக்கிறதும் உங்க அரசாங்கம்தானங்க அவங்கள நிறுத்த சொல்லவேண்டியாதுதானே.....

அய்யாக்களே வர்ற எலக்சன்ல உங்கள மட்டும் நாங்க செயிக்க வச்சுட்டோம்ன்னா நீங்க தாராளமா அங்க போய் குண்ட போடலாம், ஏன் தமிழ்நாட்டுலேயே ஈழம் பத்தி பேசுனா தேசிய பாதுகாப்பு சட்டத்துல போடலாம்... ஆனா இலங்கை அரசை நிர்பந்திக்க முடியாதுன்னு ஒரு தடவ அன்பழகன் சொன்னார், இப்ப அவரும்தானே போராட்டத்துக்கு வருவாரு?...

அப்புறம் மக்களே மறக்காம உங்க ஓட்ட இவர்களுக்கு குத்திடாம பாத்துகங்க...
அநேகமா நாளைக்கு என்னை தேடி ஆட்டோக்கள் வந்தா... இத நான் எழுதவே இல்லை என மறுப்பு அறிக்கை கொடுக்க வேண்டி வரும் அதனால இப்பவே சொல்லிர்றேன்...

இந்த கட்டுரையில் வரும் பெயர்கள் மற்றும் விபரங்கள் என் சொந்த கற்பனையே.. யாரையும் நிகழ்காலம், நடந்தகாலம் அல்லது எதிர்காலத்தில் குறிக்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்...

அப்பாடா கேஸ் போட்டா சமாளிச்சுக்கலாம்....

6 ஏப்., 2009

"ராமசாமி அத்தியாயம் 10"

அன்று அவள் இனிமேல் நமக்குள் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு போனபிறகு நான் நீண்ட நேரம் கோவிலிலேயே இருந்தேன்.. சில வருடங்கள் நட்பாகவே பழகியிருக்கலாம், அவசரப்பட்டுவிட்டோமோ எனத்தோன்றியது, கனத்த மனதுடன் வீட்டுக்கு வந்தேன்..

மறுநாள் காலை என்னால் எழுந்திருக்க முடியவில்லை.. உடம்பெல்லாம் அனலாக கொதித்தது, லெச்மணன் டாக்டர் வந்து பார்த்துவிட்டு சாதாரண சொரம்தான் என ரெண்டு ஊசி குத்திவிட்டு போனார், அம்மா மதியம் கொடுத்த கஞ்சிதான் ஓரளவு சாப்பிட்டது, ஆனால் சொரம் நின்றபாடில்லை விட்டுவிட்டு வர ஆரம்பித்தது, மறுநாள் பூரி வீட்டு தாத்தா பார்த்துவிட்டு மஞ்சள் காமாலை மாதிரி இருக்கு என்றார்.

அடுத்தநாள் முதல் மன்னார்குடியில் மஞ்சள்காமாலைக்கு மருந்து சாப்பிட ஆரம்பித்தேன், இப்படியாக இரண்டு வாரம் ஓடிவிட்டது.. உடல் மெலிந்து விட்டது.. உடம்பு நார்மல் ஆக மூன்று வாரம் ஆனது. வீட்டில் இருக்க போரடிக்கவே ஒருநாள் மாலை நேரம் கிளம்பி மன்னார்குடி வந்தேன், கோவிலுக்கு போனால் தேவலைபோல் போலிருந்தது, அங்கு சென்று நான் வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்திருந்தேன், மனம் எவ்வளவுதான் மறுத்தாலும் அஞ்சலி முகத்தையே காட்டியது.

அப்போது தன் குடும்பத்துடன் அஞ்சலி கோவிலுக்கு வந்தாள், என்னை அங்கு கண்டதும் தலைகுனிந்தவாறே சென்றாள். எனக்கு ஏண்டா இன்னைக்கு கோவிலுக்கு வந்தோம் என்று ஆனது.. அங்கேயே படுத்துவிட்டேன், சிறிது நேரம் கழித்து என்னை யாரோ எழுப்பினார்கள், அவள் அஞ்சலியின் தோழி சுமதி, அஞ்சலி என்னை பார்க்க வருவாள் என்றும் வீட்டுக்கு போய்விடவேண்டாம் என சொல்லிவிட்டு சென்றாள், நானோ வந்து என்ன சொல்ல போகிறாள், இனி கோவிலுக்குகூட வரவேண்டாம் என்பாள், அதைக்கேக்காமலே போய்விடலாம் என நினைத்தேன், ஆனால் மனசு அவளை பார்க்க துடித்தது.

சிறிது நேரம் கழித்து வேர்க்க விருவிருக்க அங்கு வந்தாள், என்னை பார்த்தவுடன் கண்கலங்கியது, எப்படி இருக்கு உடம்பு,சார்கிட்டே கேட்டேன், மஞ்சள் காமாலை என்றார், இப்ப பரவாயில்லையா என்றாள், நான் மௌனமாக தலையாட்டினேன், என் கையை பிடித்துக்கொண்டு என்மேல் கோபமா? சாரி குமார் நான் அன்னைக்கு அப்படி எடுத்தெறிஞ்சு பேசியிருக்கக்கூடாது. நீங்க உங்க விருப்பத்த சொன்னீங்க நான் நாசுக்காக மறுத்திருக்கலாம், உங்ககிட்டே இருந்து அதை எதிபார்காததால் கோபப்பட்டுட்டேன் என்னை மன்னிச்சுடுங்க என்றாள்.

வெளியே நன்றாக இருட்டிக்கொண்டு வந்தது. சுமாராக தூறல் போட ஆரம்பித்தது, நான் அவளை மழை வந்துவிட்டது சீக்கிரம் வீட்டுக்கு போ என்றேன், பரவாயில்லை அப்புறம் போய்க்கிறேன் என்றாள்.

நான் பெங்களூரில் இருக்கையில் பக்கத்து வீட்டில் ஒரு குட்டிபையன் இருந்தான் அவன் பெயர் கிருஷ்ணகுமார், நாங்க அவனை குமார் என்றுதான் கூப்பிடுவோம், என்மேல் மிகுந்த பாசமாக இருப்பான். என் பள்ளி நேரம் போக எப்போதும் நான் அவனுடன்தான் இருப்பேன், மூன்று வயதுதான் ஆகிறது. நான் இங்கு வந்தவுடன் அவனை மறக்க முடியவில்லை. போன் போட்டு பேசவேணும், ஆனால் அப்பா நெறைய பில் ஆகுதுன்னு சத்தம் போடுவார். இந்த நேரத்துலதான் உன் அறிமுகம் கிடைத்தது. மன்னர்குடியே பிடிக்காம இருந்த எனக்கு நீ ஒரு நல்ல டைவர்சனா இருந்தே, ஆனா நீ திடீர்ன்னு லவ் பண்றேன்னு சொன்னப்ப, அத என்னால உடனடியா ஏத்துக்க முடியாம அன்னைக்கு நான் அப்படி பேசிட்டேன், ஆனா தூக்கத்துல உன் பேரை சொல்லி உளறியிருக்கேன், நான் அந்த குட்டிபையனை மறக்க முடியாமல் இருக்கிறேன் என அம்மா எல்லோரிடமும் சொல்லி சிரிக்கிறார், இப்ப என்னால் உன்னை விட்டு விலக முடியாது என புரிந்துவிட்டது, ஆனால் காதல் வேண்டாம் நாம் நண்பர்களாகவே இருப்போம், நீ முதலில் ஒரு வேலையை தேடிக்கொள் அல்லது சிங்கப்பூர் போ, இரண்டு வருடத்துக்கு பிறகு முடிவெடுக்கலாம் என்றாள்.

திடீரென பெருமழை பெய்தது.. கரண்ட் கட்டாகியது, கோவில் கனத்த இருளுக்குள் மூழ்கியது.. அவள் என் தோளில் சாய்ந்தாள், எங்கள் கண்ணீர் இருவர் தோளையும் நனைத்தது.. எனக்கு உலகமே சுற்றியது. ஒரு பெரிய இடி இடித்தது நாங்கள் சுய நிலைக்கு வந்தோம். அதன்பிறகு நாங்கள் எதுவும் பேசவில்லை, சிறிது நேரத்தில் வீட்டுக்கு கிளம்பலாம் மழை விடுகிற மாதிரி இல்லை அதனால் நனைந்துகொண்டே போகலாம் என்றேன். சிறிது தூரம் அவளுடன் சென்றேன். நீ எப்படி வீட்டுக்கு போவாய் என்றாள், நான் பாத்துகிறேன் என்றேன், அன்று விடிய விடிய பெய்தது ஊர் வரைக்குமே நனைந்து கொண்டுதான் வந்தேன், இன்று வரைக்கும் மழை வந்தால் நனைந்துகொண்டுதான் செல்கிறேன்,

அதன்பிறகு எங்கள் சந்திப்பு அடிக்கடி நடந்தது, ஆனால் இருவருமே கவனமாக காதல் பற்றிய பேச்சை தவிர்த்து வந்தோம். என்றாலும் இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை உணர ஆரம்பித்தோம். ஒரு நாள் எனக்கு மூன்று பேன்ட் சட்டைகளுக்கான துணிகளை தந்தாள், அதனை தைப்பதற்கான பணத்தையும் தந்தாள். நான் மறுத்தபோது உனக்கு டிரஸ் பற்றிய அறிவு இல்லை, அதனால்தான் எப்ப பாத்தாலும் இஷ்டத்துக்கு டிரஸ் பண்றே, நான் செலக்ட் செஞ்சத போட்டுபாரு உனக்கே அது புரியும் என்று பிடிவாதமாக கையில் திணித்தாள்.

உண்மையில் அந்த ஆடைகள் அனைத்தும் மிக நன்றாக இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் நட்பு எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது.., என்னுடைய நண்பர்கள் அதனை காதலாகத்தான் பார்த்தார்கள், அவளுடைய வீட்டிலும் நாங்கள் கோவிலில் சந்திப்பது தெரிந்து கேட்டிருக்கிறார்கள், அவளோ வெறும் நட்புதான் என சொன்னதற்கு, அவர்களோ இது பெங்களூர் இல்லை, வேண்டுமானால் வீட்டிற்கு வரவழைத்து பேசு, கோவிலில் வேண்டாம் என கண்டித்து இருக்கிறார்கள். அதனால் சந்திப்புகளை குறைத்துகொண்டோம்.

ஒருநாள் என்னை அவசரமாக பார்க்கவேண்டும் அதனால் கோவிலுக்கு வா என்றாள். அங்கு சென்றதும் இன்னும் இரண்டு நாளில் குடும்பத்துடன் பெங்களூர் செல்லவிருப்பதாகவும், அங்கு தன் சகோதரியின் நிச்சயம் நடப்பதாலும், மேலும் தீபாவளி நேரம் என்பதால் அங்கு பதினைந்து நாட்கள் தங்கவிருப்பதாகவும் சொன்னாள், நான் நீ பதினைந்து நாட்களுக்குள் வரவில்லை என்றால், நான் அங்கு வருவேன் என்றேன். இல்லை குமார் நிச்சயம் வந்துவிடுவேன், அதற்குள் எதாவது செய்து குழப்பிவிடாதே, திரும்பி வந்தபிறகு நான் நிச்சயம் என் வீட்டிற்கு அழைத்து உன்னை அறிமுகப்படுத்துவேன் என்றாள்.

நான் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தேன், என்ன குமார் எதாவது சொல்லு என்றாள். அஞ்சலி இனி என்னால் உன்னை பிரியமுடியாது, உனக்கு அப்படி எதாவது எண்ணம் இருக்கா என்றேன், ஏன் லூசு மாதிரி பேசுறே, அப்படின்னா நான் உங்கிட்டே சொல்லிட்டு போகிற அவசியம் இருக்காது என்றாள். நானோ இல்லை அஞ்சலி என் மனசுக்குள்ள ஏதோ தப்பா தெரியுது, அதனால்தான் உன்கிட்ட வெளிப்படையா கேட்டேன் என்றேன். அவள் பதில் ஏதும் சொல்லாமல் தலைகுனிந்தவாறு அமர்ந்திருந்தாள், மெல்ல அவள் அழ ஆரம்பித்தாள், நான் ஏய் என்ன இது நான் தப்பா சொல்லிருந்தா மன்னிச்சுக்கோ என்றேன். அவளோ இல்லை குமார் எனக்கே மனசு சரியில்லை, எனக்கும் போக விருப்பம் இல்லை, அதனால் அப்பாகிட்டே நீங்க முன்னால போங்க, நான் மாமா வீட்டில் அங்கு வரும்போது அவர்களோடு வருகிறேன் என்றேன். அப்பா என்னை கடுமையா திட்டிட்டார். என்னால் எதுவும் சொல்லமுடியவில்லை அதான் மனசு சரியில்லை என்று சொல்லும்போதே விசும்ப ஆரம்பித்தாள்.

என்னால் அவளை சமாதானபடுத்த முடியவில்லை. எல்லாம் சரியாயிடும் அழாம போய்ட்டுவா என அனுப்பிவைத்தேன்,உடம்ப பாத்துக்க, பத்திரமா இரு என திரும்ப திரும்ப சொன்னாள், எல்லாம் நான் பாத்துக்கிறேன் நீ போம்மா என்றேன், கையில் ஆயிரம் ரூபாய் கொடுத்து வச்சுக்க என்றாள். நான் மறுத்து விட்டேன், ப்ளீஸ் குமார் வாங்கிக்க என கெஞ்சினாள், எனக்கு என்னமோ போலிருந்தது, இதற்க்கு மேல் விட்டால் அவள் மேலும் அழ ஆரம்பிப்பாள் என வாங்க்கிக்கொண்டு அனுப்பினேன், சைக்கிளை தள்ளிக்கொண்டே மெதுவாக நடந்து போனாள், தெருமுனை சென்றவுடன் திரும்பவும் என்னைப்பார்க்க வந்தாள், குமார் என்னை மறந்துடமாட்டியே என்றாள், எனக்கு திகைப்பாக இருந்தது என்ன ஆச்சு இவளுக்கு....? இல்லம்மா நீ என் உயிர், நீ இல்லாம என்னால் வாழமுடியாது பதினைந்து நாட்களுக்குள் ஒன்னும் ஆகாது போய்ட்டுவா என மீண்டும் தெருமுனைவரை அழைத்து சென்று அனுப்பி வைத்தேன்.

அன்றைக்கு எனக்கு தெரியவில்லை அன்றுதான் அவளை நான் கடைசியாக சந்திப்பேன் என்று.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் திங்களன்றே வருகிறது ..