10 ஆக., 2009

ராமசாமி அத்தியாயம் - 26


தேவதை கதைகள் "செல்வி" பாகம் இரண்டு ....

செல்வி அண்ணி, கணேசன் அண்ணனின் ஒன்றுவிட்ட அக்கா மகள். செல்வி மதுரையில் படிக்கும்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருக்கிறது. செல்வி குடும்பத்தில் அவர்தான் மூத்தவர் அதனால் மிகவும் பாசமாக வளர்க்கப்பட்டவர். அதனால் இவர்கள் காதல் வீட்டிற்கு தெரிய வந்தவுடன் செல்வி வீட்டில் கடுமையான எதிர்ப்பு வந்தது. தன் பெண் சிரமப்பட்டு விடுவாளோ என்ற பயத்தில் செல்வியின் அப்பா கண்டித்தார், ஆனால் செல்வியின் பிடிவாதமே ஜெயித்தது. கணேசன் அண்ணனுக்காக ஒரு கட்டத்தில் விஷம் அருந்திவிட்டார். அதன் பிறகே அவர்களின் திருமணம் எல்லோரின் சம்மதத்துடனே விமரிசையாக நடந்தது.

ஆனால் திருமணத்திற்கு பின் செல்வியின் அப்பா சொன்னது மாதிரியே மிகுந்த சிரமத்துக்கு இடையில்தான் வாழ்கை நடத்த வேண்டியிருந்தது. கணேசன் அண்ணனுக்கு ஒரு நிரந்தர வேலை இல்லை, இருந்தாலும் டியுசன் எடுப்பதால் அவர் சம்பாதிக்கும் சொற்ப பணத்தில்தான் குடும்பம் நடத்த வேண்டும். தான் விரும்பி ஏற்றுகொண்ட வாழ்க்கை என்பதால் தன் வீட்டினருக்கு தன் சிரமத்தை சொல்லாமலே, சந்தோசமாகவே வாழ்க்கை நடத்தினார். கணேசன் அண்ணன் இந்த காலகட்டத்தை தன் வாழ்வின் சந்தோசமான தருணம் என என்னிடம் சொல்லியிருக்கிறார். தான் செல்வாக்கான குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் அதை காட்டிகொள்ளாமல் எளிமையாக தன்னோடு வாழ்ந்துதான் பெருமை என அடிக்கடி சொல்லியிருக்கிறார். இந்த காதலுக்கு அடையாளமாக சுஜன் பிறந்தவுடந்தான் செல்வி என்னை என் உண்மையான நிலையை எடுத்து சொல்லி சிங்கபூருக்கு கிளம்ப சொன்னார். ஆனால் இரண்டுமுறை விசா கிடைக்கவில்லை என்றவுடன் மிகவும் சோர்ந்துபோனேன், அப்போதெல்லாம் ஆறுதலாக இருக்கவில்லை என்றால் தன்னால் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது என்பார்.

அது உண்மைதான் அண்ணியின் கடுமையான உழைப்பு நான் கண்கூடாக கண்ட உண்மை. எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தியும் அழகும் இருக்கும். சட்டென யாரையும் நம்பிவிடக்கூடிய அப்பாவி அவர். மிகுந்த பாசக்காரர், இரக்ககுணம் மிக்கவர். அதே வேலை தன் மிகவும் அன்பு செலுத்திய ஒருவர் பேசாமல் போனால் மிகுந்த மனவருத்தம் அடைவார். எனக்கு தெரிந்தவரை கடவுளின் மேல் மிகுந்த ஆத்மார்த்தமான பக்தி கொண்டுள்ள சிலரில் அவரும் ஒருவர். மிகவும் புத்திசாலியான பெண், நல்ல நிர்வாகத்திறமை உள்ள அண்ணி வேலைக்கு சென்றிருந்தால் இந்நேரம் தலைமை பொறுப்புக்கு வந்திருப்பார். அவரிடம் பிடிக்காத சிலவிசயங்கள் எனக்கு உண்டு, தன் உடல்நிலையை பற்றி கவலைப்பட மாட்டார், மற்றவர்களின் உடல்நிலை சரியில்லை என்றவுடன் தீவிர அக்கறை காட்டும் இவர் தனக்கு பார்ப்பதில்லை, அடுத்து யாராயிருந்தாலும் வலிய சென்று அவர்களுக்கு உதவுவது, அதன்பின் வருத்தம் ஏற்பட்டு புலம்புவது. அண்ணி இவையிரண்டையும் அவசியம் மாற்றிக்கொள்ளவேண்டும்.

அடுத்து அண்ணியின் சமையில், ஆரம்பத்தில் எங்களை சோதனை சாலை எலிகளாய் பயன்படுத்தி சமையல் கற்றுகொண்டவர், இன்று மிகபிரமாதமாக சமைப்பார். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சமைக்கும் அண்ணியின் சமையலை அண்ணன் குறை கூறும் நாளில் எனக்கு சிரிப்பாக இருக்கும். எனக்கு அந்த குடும்பத்தில் தனியான இடம் உண்டு, அண்ணனின் சொந்த தம்பியாக என்னை மதிக்கும் அதே வேளையில் ஒரு நல்ல நண்பனாகவும் என்னை மதிப்பார். அண்ணி தன் பிள்ளைகளுள் ஒருவராகவே என்னை பார்க்கும், நான் மிகுந்த சிரமத்துக்கு ஆளான போதெல்லாம் ஆறுதல் சொல்லி நம்பிக்கை ஏற்படுத்தி என்னை ஜெயிக்க வைக்க பாடுபடுபவர். என்னை பொறுத்தவரை அவர் என் அன்னை.

அண்ணி மேல் அண்ணனும், அண்ணன் மேல் அண்ணியும் கொண்ட காதல் அற்புதமானது, எத்தனையோ பிரச்சினைகள் வந்திருக்கின்றன, எத்தனையோ சண்டைகள் வந்திருக்கின்றன அதற்கெல்லாம் நானும் சுஜனும்தான் சாட்சி, ஆனால் மறுநாளே ஒன்றும் நடக்காதது போல் பேசிகொள்வார்கள், நமக்கே வெறுப்பாக இருக்கும் அட சண்டைபோட்டால் சில நாளாவது நீடிக்க வேண்டாமா?....

அண்ணன் மிகவும் கொடுத்துவைத்தவர், ஏனென்றால் சம்பளம் எடுத்தவுடன் அது அண்ணி கைக்கு போய்விடும் அதன்பிறகு அண்ணன் செலவுக்கு வாங்கிகொள்வதொடு சரி, எல்லா நிர்வாகமும் அண்ணிதான் பார்த்துகொள்ளும், வீட்டிலும் சும்மா இருக்காது, டியுசன் எடுக்கும், டிரஸ் தைத்து கொடுக்கும், இவரின் டிசைனுக்காகவே பிரத்யோகமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இப்போது ஒரு கடை வைத்திருக்கிறார்கள், இரவு வெகு நேரம் தூக்கம் முழிப்பார், இதன் காரணமாகவே இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும்.


இவர்களுக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது. இப்போது ஸ்ருதி பள்ளிக்கு செல்கிறது, அதன் மழலை கலந்த பேச்சு அற்புதம், இரண்டு குழந்தைகளும் என்னை அவர்களின் நண்பனாக கருதி என்னை பாடாய் படுத்துவார்கள், வாழ்க்கையில் சந்தோசமான தருணங்கள் சில உண்டென்றால் அது அந்த தருணம்தான். அந்த நேரங்களில்தான் என் சிரமங்களை மறந்து இருக்க முடிந்திருக்கிறது.


நல்ல காதல் எப்போதும், அதற்க்கு மிகசிறந்த உதாரணம் அண்ணன், அண்ணியின் வாழ்க்கை. எனக்கான ரோல் மாடல் இவர்கள்தான். ஒரு அற்புதமான தாய்மையை அண்ணியிடம் கண்டிருக்கிறேன், பாரபட்சமற்ற அன்பு அது. கோபமோ, அன்போ உடனடியாக உணர்ச்சிகளை கொட்டிவிடும்.
அண்ணனும், அண்ணியும், சுஜனும், ஸ்ருதியும் நீண்ட ஆயுளோடு எழ வளங்களையும் பெறவேண்டும் என எல்லாம் வல்ல எம் குருவிடம் எப்போதும் பிரார்த்திக்கிறேன்.
இந்த கதை தமிழ்குறிஞ்சி இணைய இதழில் தொடராக வருகிறது.....

ராமசாமி அத்தியாயம் - 25



தேவதை கதைகள் "செல்வி"

ஒரு மனிதனுக்கு எப்போதாவது திடீரென ஞானம் பிறக்கும், புத்தனுக்கு போதிமரம் கிடைத்தமாதிரி அண்ணன் கணேசனுக்கு ஒரு நாள் தன் குழந்தை தொட்டிலில் தூங்கிகொண்டிருந்தபோது வாழ்க்கை பற்றிய பயம் திடீரென வந்ததாக சொன்னார். பெண் குழந்தை வளர்ந்து பெரியவள் ஆகபோகிறாள் தற்போது வாழும் பற்றாகுறை வாழ்க்கை அவளை பாதித்துவிடக்கூடாதே என கவலை வந்துவிட்டது.

தனக்கு கிடைக்கும் சொற்ப பணத்தில் தன் மனைவி பொறுமையாக குடித்தனம் செய்தாலும், இத்தனை நாள் எத்தனை பொறுப்பற்று இருந்திருக்கிறோம் என்பதே மனதுக்கு பெரும் உறுத்தலாக இருந்தது. தன் திருமணமே மிகப்பெரிய போராட்டத்தில் ஜெயித்த நம்பிக்கை மனதில் இருந்தாலும். இப்படி எதிர்காலம் பற்றிய பயம் இதுவரை வந்ததில்லை. இத்தனை நாளும் செல்வி அடிக்கடி சொல்வதுதான் என்றாலும், தன் குழந்தை பற்றி யோசித்தவுடன் வந்த பயம் மனதை அரித்தது.

நண்பர்கள் சேர்ந்து சிங்கபூருக்கு சென்று வேலை செய்யலாம் என முடிவு செய்து ராஜனும், குமாரும் சிங்கப்பூர் சென்று வேலையில் அமர்ந்துவிட்ட பிறகும் தனக்கான விசா தொடர்ந்து கிடைக்காமல் போகவே, சரி ஒரு நல்ல சோசியகாரானாக சென்று பார்த்தால் தேவலை என நினைத்து, அவனை சென்று பார்த்தால் அவனோ உன்னால் வெளிநாடு போகவே முடியாது என்று கூறிவிட்டான். கோபத்தில் கோவிலுக்கு சென்று சாமியிடம் நான் சிங்கபூருக்கு சென்றே ஆகவேண்டும் அதற்க்கு நீதான் பொறுப்பு என சொல்லிவிட்டு வீட்டிற்கு வர, வீட்டில் செல்வி அப்பாவிடம் இருந்து போன் வந்தது, மீண்டும் விசா அப்ளை செய்யலாம் என சென்னை வரசொன்னார் என்றது. சென்னை வந்து குடும்பத்தோடு விசா அப்ளை செய்ய உடனே கிடைத்துவிட்டது.

நான் இடையில் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் மீண்டும் சிங்கபூர் சென்றேன். அன்றைய காலை விமானத்தில் நானும் மாலை விமானத்தில் கணேசன் அண்ணன் குடும்பத்துடனும் ஒரே நாளில் வந்திறங்கினோம். அப்போது தெரியாது எங்களுக்குள் ஒரு புதிய உறவு துவங்கபோகிறது என்று. ஒரு இரண்டு நாள் கழித்து கணேசன் அண்ணன், செல்வி அண்ணி, குழந்தை சுஜனி மூவரும் எங்கள் பாசிர் ரிஸ் இல்லத்திற்கு வந்திருந்தனர், சம்பிராயதமான உரையாடலுக்கு பிறகு சிறிது நானும் கணேசன் அண்ணனும் தனித்து பேச வாய்ப்பு கிடைத்தது. தன்னை எல்லோரும் ஏன் குடும்பத்துடன் வந்தாய், தனியாக வந்தாலே வேலை கிடைப்பது சிரமம் இதில் குடும்பத்தோடு வந்தால் எப்படி சமாளிப்பை என பயமுறுத்துவதாக சொன்னார். நானோ இல்லை அண்ணா நிச்சயம் வேலை கிடைக்கும்,கவலைபடாதீர்கள் என ஆறுதல் கூறினேன். அவரோ நான் இங்கு கோவிலுக்கு சென்று ஒரு வாரத்துக்குள் எனக்கு வேலை கிடைக்கணும் என வேண்டிகொண்டதாக சொன்னார். கடவுள் நம்பிக்கை அற்ற எனக்கு அது அபத்தமாக இருந்தாலும். சொன்னபடி அவருக்கு வேலை நிச்சயம் ஆனது. அதன்பிறகு அவர்கள் குடும்பத்துடன் எங்களுடன் தங்கினர்.

அவர்களின் குழந்தை சுஜனி மிகவும் அருமையான குழந்தை, கணேசன் அண்ணன் குடும்பத்தினருடன் மனஸ்தாபம் வந்து பிரிந்த அவரின் நண்பர் குமாரின் மனைவி தங்கை மீனா அடிக்கடி சொல்லும் அது மிகவும் ராசியான குழந்தை என்று, உண்மைதான் கணேசன் அண்ணனுக்கு அது பிறந்தபின்தான் வாழ்வில் ஏற்றம் கிடைத்தது. சுஜனி எனக்கும் குழந்தைதான் இன்று அதற்க்கு பனிரெண்டு வயதாகிறது. ஆனாலும் எனக்கு இப்போதும் ஒன்றரை வயதில் இருந்த அதே குழந்தை தன்மையுடன்தான் இப்போதும் இருக்கும் மிகவும் புத்திசாலியான பெண்.

அதன்பிறகு அண்ணிதான் எங்களுக்காக சமைத்தது. செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து, வசதியாக வளர்ந்த பெண், ஆனால் சிரமம் பார்க்காமல் எங்களுக்காக சமைக்கும், சமைக்க தெரியாமல் சிரமப்படும், நாங்கள் சாப்பிடும்போது நன்றாக இருக்கா, வேறு ஏதாவது மாற்றம் செய்யனுமா எனகேட்கும். வீட்டு சாப்பாடே கிடைக்காமல் நாக்கு செத்துப்போன எங்களுக்கு எப்படி இருந்தால் என்ன. அதுவே அமிர்தமாக இருக்கும்.

பாசிர் ரிஸ் வீட்டில் நண்பர்களுக்குள் பிரச்சினை வந்து எல்லோரும் தனித்தனியே போய்விடுவது என முடிவு செய்தோம். அதில் கணேசன், மற்றும் குமார் இருவருக்கும்தான் பிரச்சினை வந்து இன்றுவரை அவர்கள் பேசிக்கொள்வதில்லை ஆனால் இருவரின் குடும்பத்தோடும் எனக்கு இருக்கும் நட்பு அப்படியேதான் இருக்கிறது. அப்படி இருவரும் பிரியும்போது கணேசன் அண்ணா ஜூரோங் வெஸ்ட் சென்றுவிட்டார், சாமான்களை எல்லாம் நானும் சம்பத்தும்தான் சென்று இறக்கிவிட்டு வந்தோம்.

அதன்பிறகு சிலமாதங்களில் நான் ஊருக்கு வந்துவிட்டேன். அதற்கு அடுத்த மாதங்களில் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைத்தது. அவர்கள் ஒரு சொந்தவீடு வாங்கினார்கள் அப்போது நான் சிங்கபூரில் இருந்தேன், எனவே அப்போதும் நான்தான் சாமான்களை இடம்மாற்றி கொடுத்தேன். முதன் முதலில் நானும் நண்பர் ராஜசேகரும் சேர்ந்து வர்ணம் அடித்தோம். இப்போதும் அந்த வீட்டில்தான் வசித்துவருகிறார்கள்.

இதுவரை அண்ணனை பற்றியே எழுதியிருக்கிறேன், அண்ணியை பற்றியும் இருவரின் தூய்மையான காதலை பற்றியும் அடுத்தவாரம் எழுதுகிறேன்.
இந்த கதை தமிழ்குறிஞ்சி இணைய இதழில் தொடராக வெளிவருகிறது ......