30 ஏப்., 2011

தேவதை கதைகள் "அலமேலு"...


காதல் அந்தரங்கமானது 
சமயங்களில் 
அதீதமானதும் கூட...

நான் சிங்கப்பூரில் இருந்தபோது நிறைய நண்பர்கள் பழக்கம். அப்படி ஏற்ப்பட்ட பழக்கத்தினால் ஒரு உதவி செய்யப்போய் அதனால் ஏற்ப்பட்ட அனுபவம் இது.

அன்று இரவு எனக்கொரு அழைப்பு வந்தது, தொலைபேசியில் தனக்கு அவசரமாக ஒரு உதவி வேண்டும் என்றார் கருணாமூர்த்தி. இவர் சிங்கப்பூர்காரர் தான் குடும்பத்தோடு ஆஸ்திரேலியாவுக்கு மாற்றலாகி போவதாகவும், அவசரத்திற்கு தன் வீட்டுப் பணிப்பெண்ணை கூட்டிச்செல்ல முடியவில்லை என்றும் அதனால் ஒரு மாதத்திற்கு அப்பெண்ணை எங்காவது தங்க வைக்க முடியுமா?என்றார். நாளை இரவுக்குள் ஏற்பாடு செய்கிறேன் எனச் சொன்னேன், எனக்கு தெரிந்த எல்லோரிடமும் உதவி கேட்டேன் ஆனால் மறுநாள்வரை யாரும் தனக்கு பணிப்பெண் வேண்டாம், அதிலும் ஏதாவது பிரச்சினை வரும் எனப்பயந்தனர்.

எனக்கு உடனே தனஞ்செய் நினைவுக்கு வந்தார். அவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். சிறுவயதில் தாயை இழந்தவர். சின்ன வயதில் இருந்தே விடுதியில் தங்கி படித்தவர். பின்னாளில் தந்தை மறுமணம் செய்துகொண்டது பிடிக்காமல், கல்லூரி படிப்பு முடிந்தவுடன், தன் நண்பன் மூலமாக சிங்கப் பூர் வந்து விட்டார். சிங்கப்பூரில் அவர் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். எனக்கு ஒரு நண்பர் மூலமாக அறிமுகமான அவர் மிகவும் எளிமையான இனிய மனிதர். அவரிடம் எனக்குப் பிடிக்காத ஒரு விசயம் வீட்டை குப்பைக்கூடமாக ஆக்கி வைத்திருப்பார். என்றாவது சனிக்கிழமை இரவுகளில் அவர் வீட்டுக்கு செல்வேன். அங்கு சென்று விடிய விடிய பீர் குடிப்போம். ஒருமுறை என்னிடம் சமைக்கத் தெரிந்த பையன் இருந்தால் சொல்லுங்கள் என்னுடன் தங்கிக்கொள்ளட்டும். வாடகை எதுவும் தரவேண்டாம். சமைத்துவைத்தால் போதும், வீட்டை கொஞ்சம் சுத்தப்படுத்தினால் போதும், கொஞ்சம் சிரமப்படுகிற வேலை அனுமதியில் (work permit) வந்திருக்கும் பையனை அனுப்பி வையுங்கள் என்றார். அவர் சொல்லி மூன்று மாதங்கள் இருக்கும், இருந்தாலும் கேட்டுப் பார்க்கலாமே என அன்று இரவு தொலைபேசியில் பிடித்தேன்

அவரோ நான் பையன்தான் கேட்டேன் பெண் என்றால் வேண்டாம் என்றார். நான் பிடிவாதமாக அது வயதான பெண்மணி, ஒரு மாதத்திற்கு மட்டும் இருந்தால் போதும் , இல்லை தற்சமயத்துக்கு மட்டும் உங்கள் வீட்டில் இருக்கட்டும், வேறொரு வீடு கிடைத்தால் நான் அங்கு அனுப்பிவிடுகிறேன், கொஞ்சம் உதவி பண்ணுங்க என்றேன். அரைமனதாக சரி என்றார்.

மறுநாள் கருனாமூர்த்தியிடம் நண்பர் தனஞ்செய் உங்கள் வீட்டிற்கு வந்து அழைத்து போவார் என்றேன். அவரும் நாளை மாலை வரச்சொல்லுங்கள், நாங்கள் நாளை இரவுதான் கிளம்புகிறோம், அவரும் வந்தால் அப்போதே அழைத்து போகட்டும் என்றார்.

மறுநாள் இரவு மீண்டும் கருணாமூர்த்தி பேசினார். என்ன தம்பி இப்படி பண்ணிட்டிங்க! என்றார் கோபமாக. என்னன்னே ஆச்சு! அவர் வரலியா? என்றேன். இல்ல தம்பி அவர் வந்துட்டார், ரொம்ப சின்னப் பையனா இருக்கார், அதுவும் அவர் மட்டும்தான் தனியாக இருக்காராம்! அவர நம்பி எப்படி அனுப்ப முடியும் என்றார். நானோ அண்ணே, இப்போதைக்கு இரண்டு நாளைக்கு இருக்கட்டும், அதன்பிறகு வேறு வீடு பார்த்து அனுப்பி வைக்கிறேன், மேலும் தனஞ்செய் மிகவும் நல்லபையன் அவரை நம்பி அனுப்புங்கள் என்றேன்

அதற்குள் தம்பி அவர் உங்ககிட்டே பேசனுமாம் என்று தொலைபேசியை அவரிடம் கொடுத்தார். தனஞ்செய்யும், என்னங்க நீங்க வயசானவங்கன்னு சொன்னீங்க, ஆனா சின்னப் பொண்ணா இருக்கு, என்னால கூட்டிட்டுப்போக முடியாதுங்க என்றார். எனக்கோ குரங்கு அசைத்த ஆப்பின் கதைதான் நினைவுக்கு வந்தது, என்னடா உதவி செய்யப்போய் கெட்டபேர் ஆகிவிட்டதே எப்படியாவது இதனை சரி செய்ய வேண்டுமே என தனஞ்செய்யிடம், மன்னிச்சுகங்க நண்பா அவங்க பேரு "அலமேலு"ன்னு சொன்னதும் வயசானவங்களா இருக்கும்ன்னு நம்பிட்டேன், தயவு செஞ்சு நாளை மாலை வரை உங்கள் வீட்டில் இருக்கட்டும் அதன்பிறகு நிச்சயம் மாற்று ஏற்பாடு செய்கிறேன் என உறுதி அளித்தேன்.

அதன்பிறகு விமான நிலையம் சென்று அங்கிருந்து கருணாமூர்த்தி தம்பி உங்கள நம்பித்தான் போறேன்,அது சின்னப்பொண்ணு  ரொம்ப பாவம், ஒரு பிரச்சினையும் வராம பாத்துக்கணும் என்றார். தனஞ்செய்யோ வீட்டிற்கு சென்றவுடன் நண்பா உங்களுக்காதான் அழைச்சிகிட்டு வந்தேன், நாளை மாலை வந்து கூட்டிப் போய்விடுங்கள், இல்லன்ன அவங்கள வெளில அனுப்பிவிடுவேன், அப்புறம் வருத்தப்படாதீங்க என டொக்கென தொலைபேசியை வைத்தார்.

எனக்கோ வடிவேலு மாதிரி ஆகிட்டோமே, உனக்கு வேணுண்டா... இனிமே யாரவது உதவின்னு கேட்டா பண்ணுவியா என என்னையே திட்டிகொண்டேன், அன்று இரவு எனக்கு தூக்கமற்று கழிந்தது. மறுநாள் வேலைக்குப் போகவில்லை, அந்த பெண்ணிற்கு ஏதாவது வழி பன்னவேண்டுமே.. முகமறியாத அந்த பெண்ணிற்க்காக நான் அன்று அவ்வளவு அலைந்தேன்.

மாலைவரை ஒருவரும் வேண்டாம் என சொல்லிவிட்டனர், எப்படியாவது தனஞ்செய்யிடம் சொல்லி இன்னொரு நாள் கேட்கவேண்டும் என முடிவு செய்தேன். அன்று இரவு எட்டுமணி வாக்கில் தனஞ்செய்யிடம் இருந்து அழைப்பு வந்தது, என்ன சொல்வாரோ என கலவரமாகவே வணக்கங்க எப்படி இருக்கீங்க என்றேன், அவரோ உங்களால் மட்டும்தான் இப்படியெல்லாம் பேச முடியுது, ஏன் வரலை என்றார்? மன்னிச்சுகங்க இன்னைக்கு வேலை அதிகம் எனவே நாளை மாலை நிச்சயம் வந்துவிடுகிறேன் என்றேன். அவரோ பரவாயில்லைங்க அவங்க இங்கேயே ஒரு மாதம் இருக்கட்டும், அத சொல்லத்தான் கூப்பிட்டேன் என்றார், எனக்கோ அப்பாடா என்றிருந்து ஆவலை அடக்கமுடியாமல் என்ன ஆச்சுங்க எதனால அப்படி ஒரு முடிவு எடுத்தீங்க என்றேன். 

அவரோ நான் வீட்டுக்கு வந்து பார்த்தா, வீடு மாறி வந்திட்டோம்ன்னு நெனெச்சேன், ஒரு நாளைக்குள்ள என் வீட்டை தலைகீழா மாத்திட்டாங்க, வீடே இப்பதான் பார்க்கிற மாதிரி இருக்கு, சமைச்சு வேற வச்சுருக்காங்க.. சரி இங்கேயே இருக்கட்டும்ன்னு முடிவு செய்தேன், எதற்கும் அவங்களிடம் இங்க இருப்பதில் சங்கடம் இருக்கான்னு கேட்டு சொல்லுங்க என தொலைபேசியை அந்த பெண்ணிடம் கொடுத்தார். அந்த பெண்ணும் நீங்க சொன்னா இருக்கிறேன் என்றது, நானும் பிரச்சினை தீர்ந்ததே என்ற சந்தோசத்தில் நீ அங்கேயே இரும்மா, நான் வரும் சனிக்கிழமை பார்க்கிறேன் என சொன்னேன்.

அன்று எனக்கு தெரிந்தவில்லை நான் அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக இருந்திருக்கிறேன் என்று. ..

அதன்பிறகு இரண்டு வாரம் கழித்துதான் நான் தனஞ்செய் வீட்டுக்குப் போனேன். அங்கு அந்தப் பெண் அலமேலுவை அன்றுதான் பார்த்தேன். அந்த பெண்ணின் பெயர் அலர்மேல் மங்கை சுருக்கமாக அலமேலு ஆகிவிட்டது. முகத்தில் எப்போதும் ஒரு அமைதி குடிகொண்டிருந்தது. உங்களுக்கு இந்த வீடு வசதியாக இருக்கிறதா? என கேட்டேன். ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணே என்றது. எனக்கும் அது புரிந்தது ஏனென்றால் அந்த வீட்டை அவ்வளவு சுத்தமாக வைத்திருந்தது. எனக்கு நிறைய ஆடைகள் எடுத்து தந்தார் என எடுத்து வந்து காட்டியது. அவ்வளவும் நல்ல விலை உயர்ந்த ஆடைகள். வேறு குறைகள் இருக்கிறதா? என்றேன். அவர் தினமும் தண்ணி அடிக்கிறார் தயவு செய்து அதை குறைக்க சொல்லுங்கள், மற்றபடி என்னிடம் மிக குறைவாகத்தான் பேசுவார். எனக்கு இங்கு இருப்பதில் பிரச்சினை எதுவும் இல்லண்ணே என சமைக்க போய்விட்டது. அன்று இரவு அங்குதான் சாப்பிட்டேன், அருமையாக சமைத்திருந்தது.

ஆஸ்திரேலியாவில் இருந்து பேசிய கருணாமூர்த்தியும் அங்கு இந்திய பணிப்பெண்ணை அழைத்துகொள்வதில் சிக்கல் இருப்பதாகவும், அதனால் தான்தனஞ்செய்யிடமும், அலமேலுவிடமும் பேசிவிட்டேன், அந்த பெண் அங்கேயே இருக்கட்டும் என சொல்லிவிட்டார்.

ஒரு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும் தனஞ்செய் என்னை அழைத்தார், நானும் வேலைப்பளு காரணமாக அதன்பிறகு அவரை சந்திக்கவில்லை. சரி வீட்டுக்கு வருகிறேன் என்றேன். ஆனால் அவரோ கோவிலுக்கு வாருங்கள் முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றார். அங்கு போனவுடன் தனக்கு அலமேலுவை மிகவும் பிடித்திருக்கிறது எனவும் அவளை தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னார். இதில் அலமேலுவுக்கு விருப்பமா? என்றேன். இல்லை நண்பா அதை நீங்கள்தான் கேட்டு சொல்லவேண்டும் என்றார். இன்னைக்கே முடிவு பண்ணிடலாம் வாங்க வீட்டுக்கே போவோம் என வீட்டுக்கு வந்தோம். வரும் வழியில் எதனால் இந்த முடிவை எடுத்தீங்க என்று கேட்டேன். இடையில் அலமேலுவுக்கு மிகவும் உடல்நிலை சரியில்லை, கடுமையான காய்ச்சல் இருந்தது, நான்தான் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றேன். வீட்டிற்கு வந்தும் அவளால் வேலை ஏதும் செய்ய முடியவில்லை, நான்தான் அவளுக்கு கஞ்சி வைத்து கொடுத்தேன், அந்த நாட்களில் நான் வீட்டை வழக்கம்போல் குப்பையாக்கி விட்டேன். அப்போதுதான் தெரிந்தது, எனக்கு நிச்சயம் ஒரு திருமணம் வேண்டும் , அது ஏன் அலமேலுவாக இருக்ககூடாது எனத்தோன்றியது , எனவே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன் மேலும் அந்த நாட்களில்தான் அவளின் கதையை கேட்டேன் அது என்னை மிகவும் பாதித்தது. என்னால் அவளிடம் நேரிடையாக கேட்கமுடியவில்லை. அதனால்தான் உங்களை கேட்க சொல்கிறேன் என்று அலமேலுவின் கதையை சுருக்கமாக சொன்னார்.

அலமேலுவும் தாயை இழந்த பெண், சொந்த சித்தியே அப்பாவுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டாள். ஆரம்பத்தில் மிகவும் பாசமாக இருந்த சித்தி தனக்கு இரண்டு குழந்தைகள் வந்ததும், பாசம் குறைந்து போனது அலமேலு நன்றாக படிக்கும் பெண். ஆனால் வீட்டு வேலை மற்றும் காணி வேலைகளை அலமேலுதான் செய்யவேண்டும். பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும் பெண்ணுக்கு படிப்பெதுக்கு என நிறுத்திவிட்டனர், மேலும் அப்போது தன் தூரத்து உறவினர் பேச்சை கேட்டு தன்னை பணிப்பெண்ணாக சிங்கப்பூருக்கு அனுப்பி விட்டனர். காசு அனுப்பினால் போதும் நன்றாக இருக்கிறாயா? எனக் கேட்டதில்லை. வந்து இரண்டு வருடம் ஆகிறது இதுவரை ஊருக்கு வரச்சொல்லி சொன்னதில்லை. மேலும் தான் சந்தோசமாக இருந்தது இந்த உடம்பு சரியில்லாத நேரத்தில்தான், இத்தனை வருட காலத்தில் தன்னை பாசமாக பார்த்து கொண்டது நீங்கள்தான் என அழுதாள். எனக்கு என்னமோ போலாகிவிட்டது அப்போதே அவளை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என முடிவு செய்துவிட்டேன் என்றார்.

வீட்டிற்கு வந்து அலமேலுவிடம் கேட்டதும் உடனே தனஞ்செய் காலில் விழுந்து அழுதது. எனக்கு அதன் சந்தோசம் புரிந்தது, தனஞ்செய்யிடம் அதுக்கு சம்மதம்தான். எனக்கு அவசரமாக ஒரு வேலை இருக்கு, நான் மறுபடி வந்து பார்த்துக்கொள்கிறேன் எனக் கிளம்பினேன். ஒரு காதல் பூக்கும்போது நமக்கென்ன வேலை?.

உடனே அலமேலு அண்ணே என என் காலிலும் விழ முயற்சி செய்ய, நான் பதறி தடுத்தேன், உங்களால்தான் எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தது என என் கையை பிடித்துக்கொண்டு அழுதது. இல்லம்மா உங்க நல்ல மனசுக்கும், தனஞ்செய்யின் நல்ல மனசுக்கும் அமைந்த வாழ்க்கை. நான் அடுத்தவாரம் வாரேன் எனப் பிடிவாதமாக சாப்பிட்டு போக சொல்லி வற்புறுத்தியபோதும் கிளம்பிவிட்டேன். இப்போது அவர்களுக்கு தேவை தனிமைதான்............

அதன்பிறகு இரண்டே வாரங்களில் தனஞ்செய் ஊருக்கு கிளம்பிவிட்டார். அங்கு சென்று தந்தையிடம் பேசியதில் அவர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் பிடிவாதமாக இருந்து, அவர் சம்மதம் கேட்கவே. தான் திருமணத்தில் கலந்து கொள்ளமாட்டேன் எப்படியாவது போய்க்கோ என பத்து லட்ச ரூபாயை கையில் தந்து அனுப்பி இருக்கிறார். அதனைக் கொண்டுபோய்  அலமேலு வீட்டில் கொடுத்து பெண் கேட்டிருக்கிறார். பணம் கிடைத்தவுடன் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை உடனே சம்மதித்து விட்டார்கள். அப்புறம் நான்தான் அலமேலுவை ஊருக்கு அனுப்பி வைத்தேன். கோவிலில் வைத்து தாலிகட்டி இரண்டே வாரங்களில் சிங்கப்பூர் கூட்டி வந்துவிட்டார்.

வந்து மறுமாதத்திலேயே அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைத்து, அதற்கடுத்த ஆறு மாதத்தில் தனஞ்செய் கம்பெனி அவரை அமெரிக்காவுக்கு மாற்றம் செய்தது . அதன்பிறகு எனக்கு எப்போதாவது மெயில் அனுப்புவார்கள். அதன்பிறகு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மெயில் வந்தது, அதன்பிறகு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக தொடர்பு இல்லை.

இந்தக் கதையில் அவர்களின் உண்மையான பெயர்களே பயன்படுத்தி இருக்கிறேன். படிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்குமானால் தொடர்பு கொள்வார்கள் என நம்புகிறேன்..

29 ஏப்., 2011

சிரிக்க மட்டும்...



27 ஏப்., 2011

ஆறே நாட்களில் ஒரு ட்ராக்டர் செய்ய முடியும்!...


மார்சின்  ஜகுபோவ்ச்கி  இப்படி அவர் பெயரை எழுதுவது சரியா எனத்தெரியாததால் ஆங்கிலத்திலேயே இனி தொடராலாம். Marcin Jakubowski விவசாயம் செய்ய ஆசைப்பட்டு ஒரு பழைய ட்ராக்டரை வாங்கி அதனை மிகுந்த செலவில் ரிப்பேர் செய்து பண்ணையில் ஓட்டினால் மறுபடி ரிப்பேர். இது ஒரு கட்டத்தில் கட்டுப்படி ஆகாமல் போகவே, இதற்க்கான மாற்று வழியாக எளிய தேவையற்ற உபகரணங்களைக் கொண்டு சொந்த முயற்சியில் ஒரு ட்ராக்டரை வடிவமைத்திருக்கிறார். அது வெற்றிகரமாக கைகொடுக்கவே இப்போது கிட்டத்தட்ட ஐம்பது எளிய கருவிகளை கண்டுபிடித்து அது எல்லோருக்கும் உபயோகமாகட்டும் என அதன் விபரங்களை OPEN SOURCE ஆக கொடுத்து இருக்கிறார். 

வீடியோவை English subtitle உபயோகித்துப் பாருங்கள்

Why you should listen to him:

Declaring that, "We can lead self-sustaining lives without sacrificing our standard of living," Marcin Jakubowski believes that only by opening the means of production can we achieve abundance for all. Though he has a Ph.D. in fusion physics, he became dissatisfied with its remoteness, and turned back to the earth as a farmer and social innovator.

He is the founder of Open Source Ecology, which is creating the Global Village Construction Set — the blueprints for simple fabrication of everything needed to start a self-sustaining village. At Factor e Farm in rural Missouri, he's been successfully putting those ideas to the test.
"It's not reinventing the wheel; it's open-sourcing the wheel."
Julia Valentine, farmer, in The Atlantic

26 ஏப்., 2011

பேய்க்கதைகள்...


நிசப்த இரவுகளின்
தனித்த பயணங்களில் 
எதிர்ப்படும் பேய்கள் ஒவ்வொன்றிடமும்
இருக்கின்றன ஆயிரம் கதைகள்..

துணைக்கு வரும் அவற்றின் 
துயரங்கள்
கண்ணீராலும்.. ரத்தத்தாலும் 
எழுதப்பட்டவை..

சமயங்களில்
வழியை மறிக்கும் ரத்தக் காட்டேரிகள் 
நம்மை கட்டாயப் படுத்தி 
சொல்லும் புனைவுகளில்
வீர வரலாறுகள் 
மிகுதியாக இருக்கும்..

சுடுகாட்டில் 
அப்போதுதான்  சாம்பலான 
பிசாசுகள் 
சொந்தங்களின் துரோகம் சொல்லி 
ஆறுதல் தேடிக்கொள்ளும்..

புளியமரப் பேய்களோ 
தூக்கில் தொங்கும் அவஸ்தை பற்றி 
வெளித்தள்ளிய நாக்குடன் குழறும்..

விபத்தில் மரணமுற்றவை கதைகள் 
பயங்கரமானவை
கடைசி வினாடியில் ஒரே வலி..

எப்போதும் துரத்துகின்றன 
கொலையான பேய்கள் 
செய்தவன் கனவுகளில்...

கொள்ளிவாய்ப் பிசாசிடம் மட்டும் 
கவனம் வேண்டும்
பிரித்தாளும் சூழ்சிகள் கொண்டவை..

எப்போதாவது அபூர்வமாய் 
தனித்த பயணத்திலோ, 
நடுநிசிக் கனவிலோ வரும் 
பேய்களிடம்,
சிநேகமாக இருந்து பாருங்கள்
பேய்களின் புனிதம் அறிவீர்கள்..

25 ஏப்., 2011

நாம் நினைத்தால் நிச்சயம் மாற்றலாம்...


நம்மில் எத்தனைபேர் தெருவில் நம்மிடம் கையேந்துபவர்களுக்கு பிச்சை போடுகிறோம், எத்தனை பேர் அவர்களை திட்டி அனுப்புகிறோம். எத்தனை பேர் பரிதாபப்படுகிறோம். எத்தனை பேர் அவர்களுக்கான மாற்று வழிகளை யோசிக்கிறோம். 

ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' படித்துவிட்டு நான்கு நாட்கள் என்னால் தூங்க முடியவில்லை. வாழ்வில் வலி ஒன்றை மட்டுமே அனுபவிப்பவர்கள், அந்த உலகத்தையும் சந்தோசமாக ஏற்றுகொள்ள எப்படி பழகிக்கொண்டார்கள்? இதையே பாலா "நான் கடவுளில்" காட்டிய உலகத்தை பார்த்த கணத்தில் இருந்து இந்த உலகில் முதலில் அகற்றப்படவேண்டியது எதுவென புரிந்தது. ஆனால் பிச்சை எடுக்கவே தேவைப்படாத தமிழகத்தில், ஏனெனில் இங்குதான் கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு அரசாங்கமே வழங்குகிறது, எப்படி இத்தனை பிச்சைகாரர்கள் எனப் பார்த்தால், அவர்களில் பெரும்பாலோர் ஆந்திராவின் தெலுங்கானா பகுதிக்காரர்கள். இவர்கள் பிச்சை எடுத்து தினமும் ஆயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கிறார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார். அப்படி தினமும் ஆயிரம் ரூபாய்வரை சம்பாதிக்க அவர்களின் கையில் வைத்திருக்கும் யாரோ ஒருவரின் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறது. ஆம் நண்பர்களே இந்தக்குழந்தைகள் எப்போதும் பிரச்சினையின்றி தூங்க பாலில் கஞ்சா கலந்து கொடுக்கபடுகிறது என சொல்கிறார்கள். வேறுபல உத்திகளை பயன்படுத்தவும் செய்கிறார்கள் என்றும் கேள்விப்பட நேரும்போது நாம் கொண்டாடும் சுதந்திரம் பற்றி எனக்கு கோபம்தான் வருகிறது.

சென்னையில் இதேபோல கோபம் வந்த இளைஞர்கள் சிலர் ஒருங்கிணைந்து MOTTO CHILDREN'S என்கிற அமைப்பை ஏற்ப்படுத்தி நடத்தி வருகின்றனர். குழந்தைகள் மட்டுமல்லாது, கைவிடப்பட்ட முதியவர்களையும் பராமரிக்கிறார்கள். பாலியல் தொழிலில் இருந்து மீண்ட பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்க சுயதொழில் பயிற்சியும் அளித்து அவர்கள் வாழ்வு மேம்பட உதவுகிறார்கள். அந்தப்பகுதி மக்களும், காவல்துறை அதிகாரிகளும் இவர்களின் மேல் வைத்திருக்கும் மரியாதையை பார்க்கும்போது இவர்களின் நேர்மை எனக்குப் புரிந்தது.

இவர்களைப் போன்றவர்களுக்கு உதவவேண்டியது நமது கடமை. எனவே விருப்பமுள்ளவர்கள் தங்கள் உதவிகளை நேரிடையாக இவர்களுக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் உதவிகளை ஆடைகளாகவோ, பொருட்களாகவோ, பணமாகவோ அனுப்பி வைக்கலாம். பணம் அனுப்பினால் 80G வரிவிலக்கு உண்டு. உங்கள் குழந்தைகள் பிறந்த நாளிலோ, உங்கள் திருமண நாளிலோ இந்த குழந்தைகளுக்கான ஒரு நாள் உணவை ஏற்றுக்கொள்ளலாம்.

தொடர்புக்கு: 
cell no : 9380006110 / 8015573334 
telephone : 044-43569563


24 ஏப்., 2011

ஆச்சார்யா - The Christ Conspiracy...


கிருத்துவம் பற்றியும் இயேசு கிருஸ்த்து நிறைய சர்ச்சைகள் எப்போதும் உலாவரும். இந்தியாவில் தொன்மையான ஆன்மீக விசயங்கள் இருந்திருக்கின்றன. இன்றுவரை அவைகளில் நிறைய தொடரவும் செய்கின்றன. ஆன்மீகம், மதம் இவைகள் அனைத்துமே தத்துவங்களால் கட்டமைக்கப்பட்டவை. வாழ்வின் அதீத பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் மனிதன் தன் ஆற்றாமைகளை கொட்டித்தீர்க்க இவைகள் உதவும் நோக்கில் யாரோ ஒரு சிந்தனையாளன் ஒவ்வொரு மதத்தையும், தத்துவத்தையும் படைத்திருக்க வேண்டும் என ஆன்மீக அன்பர்களும், அதெல்லாம் சுத்த பேத்தல் தனி மனித துதிபாடல்கள்தான் பின்பு மத ரீதியான கொள்கைகளாக மாறிவிட்டன. மூட நம்பிக்கைகளை விதைப்பதுதான் மதங்களின் அடிப்படை எனவும் அதனை வைத்து வியாபாரம் செய்பவர்கள்தான் மத குருமார்கள் என்று நாத்திக வம்பர்களும் தங்கள் தரப்பு வாதங்களுக்கு ஏதோ ஒரு சரித்திர பக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள்.

தொன்ம தெய்வங்களையும், இயற்கையும் வணங்கிய இந்தியர்களை கைபர், போலன் கணவாய் வந்த ஆரியர்கள் தங்கள் கட்டுக்கதைகளால் புதிய தெய்வங்களைப் படைத்து ஒட்டு மொத்த இந்தியர்களின் குறிப்பாக திராவிடர்களின் பாரம்பரிய தெய்வங்களையும், கலாசாரத்தையும் மாற்றி சாதிகளை உட்புகுத்தி சுயலாபம் பார்த்துவிட்டனர் என இந்து மதத்தை அந்த மதத்தில் உள்ள சிலரே சாடுகின்றனர். குறிப்பாக பெரியார் இதனை முழு மூச்சாக பிரச்சாரம் செய்தார். அவரின் வழிவந்த திராவிடக்குஞ்சுகள் மஞ்சள் வண்ணம் பூசிய ஒயிட் லெக்கான் கோழிகளாக மாறிவிட்டாலும் இன்னும் பாரம்பரிய கடவுள்களுக்கு கெடாவெட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்து மதத்தில் இருக்கிற ஒரே நல்ல விசயம் விமர்சனகளை ஏற்றுக்கொள்வது. ஏன் அவர்கள் விமர்சனத்தை ஏறுக்கொள்ள வேண்டியிருக்கிறது? இப்படி சோப்ளாங்கியாய் எல்லாத்துக்கும் தலையாட்டுவதற்க்கு காரணமே அது கட்டமைத்த புராணக்கதைகள். பொதுவெளியில் முலை என்கிற ஒற்றை தூய தமிழ் வார்த்தையை பயன்படுத்தினால் பொங்கி எழும் கலாச்சார ஆ'சாமி'கள் ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்த ஐயப்பனுக்கும் , அழுக்கு திரட்டியாக பிறந்ததாக சொல்லப்படும் பிள்ளையாருக்கும் தோப்புகரணம் அல்லது ஒரு பிள்ளையார் சுழியோடு துவங்கும் நம்பிக்கைகளை பற்றி எப்போதாவது ஆராய்வார்களா? என்பது அவர்கள் பேரறிவுக்கு எட்டாமல் போனாலும் சிற்றறிவுக்காவது எட்டாதது ஆச்சர்யமான விசயம்தான். 

முசல்மான்களின் மார்க்கம் எல்லோருக்கும் பொதுவானதாக நபிகளால் எழுதப்பட்டதாக சொல்லப்பட்டாலும் இன்னும் யார் ஒரிஜினல் முஸ்லீம், யார் டூப்ளிகேட் என அவர்களுக்கும் குழப்படிதான்!. பாகிஸ்தான், இந்தியா முஸ்லீம்களை அரபிகளும், மலாய்க்காரர்களும் வேறுபடுத்தித்தான் பார்க்கிறார்கள். அதிலும் சியா, சன்னி பிரிவுகளில் இன்னும் சண்டைகள் ஓய்ந்தபாடில்லை.

புத்தர் கொள்கைகள் இந்தியாவைத்தவிர உலகெங்கும் வியாபித்து இருந்தாலும், பக்கத்து நாடான இலங்கையில் ஒரு இனத்தையே அழித்து மதம் பரப்புகிறவர்கள் பிக்குகள்தான். இன்றுவரைக்கும் கருவறைக்குள் பிராமணன் அல்லாதோர் போகமுடியாது. சாமி தீட்டு பட்டுரும் என அதிமுக்கியமான காரணங்கள் இதற்கிருந்தாலும் தேவநாதன் முதல் ஊடகங்களால் அறியப்படாத ஆயிரம் களியாட்டங்கள் கருவறைக்குள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கருவறைன்னு சொல்லிட்டு இத பண்ணாம இருக்க முடியாது போல.

மதங்கள் வந்து படுத்துவது பத்தாதுன்னு ரோட்டோரம் இருக்கிற வேப்ப மரத்திற்கு குங்குமம் வைத்து குறி சொல்லுபவன் முதல் ஆசிரமம் கட்டி ஆன்மிகம் செய்கிற நித்யானந்தா, ஜக்கி மற்றும் தனது ஆன்மீக வாரிசை உலகிற்கு அடயாளம் காட்டிய( அரசியல்வாதி, சினிமாக்காரன்தான் வாரிசை கொண்டு வரணுமா?) மருவத்தூர் நாயக்கர் வரைக்கும் கடவுள் அவதாரம் எடுத்து மக்களை சொஸ்த்தப்டுத்தி கல்லா கட்டுகின்றனர். இந்தக்கட்டுரை எழுதிகொண்டிருந்த நேரத்தில் சாயிபாபா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க அவர் குணமாக அவரிடமே பிரார்த்தனை செய்த அதிசயம் நடந்தேறியது. கூடிய விரைவில் செத்தபின் சொத்துக்கு அடித்துக்கொண்டு புதிய சாயிகள் அவதாரம் பூசுவார்கள்.

தலைப்பை விட்டுவிட்டு எங்கெங்கோ பயணித்தமைக்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்க்காரம் போட்டுவிட்டு தலைப்புக்கு வருகிறேன். ஆச்சார்யா என தனது திருநாமத்தை மாற்றிக்கொண்ட ஒரு அமெரிக்க வரலாற்று மித்தாலஜி ஆசிரியர் ஒரு புதிய உண்மையை உலகுக்கு அறிவித்திருக்கிறார். அதன்படி இயேசு மற்றும் பைபிளில் கூறப்பட்ட அனைத்துமே இந்துமதத்தில் இருந்துதான் எடுக்கப்பட்டு இருக்கின்றன. கிருஷ்ணர்தான் இயேசு. கிருஷ்ணர் என்பதுதான் கிறிஸ்துவம் ஆனது என ஏகப்பட்ட ஆதாரங்களையும், ஒற்றுமைகளையும் முன்வைக்கிறார். மாயா இனமே இந்தியாவின் தமிழர்கள்தான் என்றும் மாயன் இன மக்கள் குறிப்பிடும் சிலம்பல்லம் தமிழ்நாட்டின் சிதம்பரம் என்றும் சொல்லும் அவர். அதன் தொடர்பான விசயங்களை தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார்.

//The Mexican civilization resembles not only the Semitic, which is one reason it is clearly not an outgrowth of it. The Maya have much in common with the Indians as well. As to the similarities between the Mayan and Hindu religion and language, Hinduism Today says, “Chacla in Mayan refers to force centers of the body similar to the chakras of Hinduism. K’ultanlilni in Mayan refers to the power of God within man which is controlled by the breath, similar in meaning to kundalini. Mayan chilambalam refers to a sacred space, as does Tamil Chidambaram. Yok’hah in Maya means ‘on top of truth,’ similar to yoga in Sanskrit.”mlxvi The Maya also had the same goddess Maya, mother of the gods and man, as in India. mlxvii Furthermore, the legendary founder of the Maya was the god Votan or Wotan, a name identical to the god of Teutonic tribes. There are many such correspondences between the Old and New Worlds//

எகிப்துக்கும். இந்தியாவுக்கும், மெக்சிகோவுக்கும் இருக்கும் தொடர்புகளை ஆராயும் இந்தப்புத்தகம் இன்னொரு குழப்படியை எனக்குள் உண்டு பண்ணியதால், யாம் பெற்ற குழப்படியை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு வழங்காவிடில் ஊழ்வினை இப்பிறப்பில் மட்டுமே தாக்கினாலும் தாக்கும் என்ற பயத்தால் இதனை பகிர்ந்துகொண்டுள்ளேன். எளிமையான ஆங்கிலத்தில் இருக்கும் இதனை எல்லோரும் படித்து இன்புற அதன் இணைப்பையும் கொடுத்துள்ளேன். இதற்குமேல் எழுதினால் உண்மைத்தமிழன் அண்ணாச்சி தான் அனுதினமும் வணக்கும் முருனிடம் சொல்லி அவன் வேலால் என் கண்ணை குத்தும் அபாயம் இருப்பதால் இத்துடன் முடித்துகொள்கிறேன்.

இந்துமதம்தான் உலகின் ஆதாரமதம் என சொல்லிக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்தப்புத்தகம் ஒரு புதிய கீதாபைபிளாகக் கடவது - கிருஷ்ணா ஆமென்.

இணைப்பு:

23 ஏப்., 2011

மேய்ப்பர்களின் ஆட்டுக்குட்டிகள்...

தவிர்க்க முடியாத காரணத்தால்!
எனக் காரணம் சொல்கிறோம் 
தவிர்க்க வேண்டி..

நினைவில் இருந்தே 
விலக்கி வைக்க நினைத்தவர்களை 
காணும்போது 
அவசியம் தேவைப்படுகிறது
ஒரு 
முறைப்போ! சிரிப்போ!..

பொய்யாய் துவங்கி 
பொய்கள் நிரம்பி 
உண்மையில் முடிந்தது 
ஒரு நட்பு..

சாமியை வைத்து 
வியாபாரம் செய்தால் 
சில்லறைகள்தான் தேறுதுன்னு 
சாமியாராய்ப் போனான் ஒருவன்..

வீட்டை பூட்டிவிட்டு 
நான்குமுறை இழுத்துப் பார்த்தான் 
அருள்வாக்கு சொல்பவன்..

மனிதன் கடவுளாக 
கடவுளிடம் வேண்டுகிறான்
மந்தைகளாய் இருப்பதைத்தான் 
கடவுளரும், மேய்ப்பர்களும் 
எப்போதும் விரும்புகின்றனர்.. 

22 ஏப்., 2011

ஒற்றை வைக்கோல் புரட்சி...


மாசானபு ஃப்கோகா என்றொரு எளிய மனிதரால் ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டு உலக மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழிலும் வம்சியும், பூவுலகில் நண்பர்களும் இணைந்து வெளியிட்டுள்ளார்கள். விவசாய பூமியான நமது தேசம் இப்போது எதை நோக்கி பயணிக்கிறோம் என்று இலக்கில்லாமல் பயணித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நம்மாழ்வார் போன்ற நமது ஆசான்கள் நமது பாரம்பரிய விவசாயத்தை காக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு லிட்டர் பாலின் விலையைவிடவும் அதே அளவு தண்ணீருக்கு அதிக விலைகொடுத்து கூச்சமில்லாமல் வாங்கப் பழகிவிட்டோம். எதிர்காலத்தில் இன்னும் என்னென்ன கொடுமைகளை சந்திக்கபோகிறோமோ?.

இந்தப்புத்தகம் இயற்கை வேளாண்மை பற்றி மட்டும் பேசாமல் பாரம்பரியம், கலாசாரம், உணவு பழக்கவழக்கங்கள் பற்றியும் ஆராய்கிறது. யகொஹோமா கஸ்டம்ஸ் பீரோவில் தாவர சோதனைப்பிரிவில் வியாதிகளை பரப்பும் பூச்சிகள் உள்ளனவா எனும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த மாசானபு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனது சொந்தக்கிராமத்தில் வந்து விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறார். முதலில் கடுமையான நஷ்டத்தினை ஏற்ப்படுத்திய இவரது விவசாய முறையைப்பார்த்து அவரது தந்தையார் கடிந்துகொள்ள, அவரது சிந்தனை வேறு மாதிரியாக இருந்தது.  அவர் சொல்கிறார் "நான் ஒரு மகிழ்ச்சியான, இயற்கையான வேளாண்மை முறையை கண்டுபிடிக்கவும். அதன் மூலம் வேலைப்பளு குறையவும் குறியாயிருந்தேன். அல்லது "இதைச் செய்யாமல் இருந்தால் என்ன?" என்றே எனது சிந்தனை இருந்தது என்கிறார்.

இறுதியாக தனது நிலத்தை உழத்தேவையில்லை, செயற்கை உரங்கள் போடத்தேவயில்லை, பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்க தேவையில்லை, இப்போது நடைமுறையில் இருக்கும் பெரும்பாலான வேளாண்மை முறைகள் தேவையில்லை என முடிவு செய்கிறார். அதனை சோதனை செய்து பார்க்கும்போது ஒரு சமச்சீரான நெல் வயல் சூழலமைப்பு என்பதே பூச்சிகளாலும், தாவரக் குடும்பங்களும் நிரந்தர உறவைக்கொண்ட ஒரு அமைப்பாகும். இப்பகுதியில் தாவர நோய்கள் தாக்குவது அசாதரணமான விசயமாக இருந்தாலும், அதனால் பயிர்வகைகள் பாதிக்கப்படுவதில்லை எனக் கண்டறிந்தார்.

அவர் நான்கு அடிப்படைகளை முன்வைக்கிறார். முதலாவதாக மண் பதப்படுத்துதல் கிடையாது. அதவாது நிலத்தை உழுவதோ, புரட்டிப்போடுவதோ செய்தல் கூடாது. இரண்டாவது வேதியியல் உரங்களோ, நாமே தனியாக தயாரித்த தழை உரங்களோ போடக்கூடாது. மூன்றாவது களையெடுப்போ, களைக்கொல்லி உபயோகமோ செய்தல் கூடாது. நான்காவது இயற்கையை அதன் போக்கில் விடுவது. அதாவது நிலத்தை நாம் அதன் தொன்மை மாறாது பயன்படுத்துவது.

இவர் காய்கறி வளர்ப்பையே காட்டுச்செடிகளைபோல தன் இயல்பில் விட்டுவிடவேண்டும் எனச்சொல்கிறார். முல்லைக்கு தேர் தந்த வள்ளல் பரம்பரையான நமக்கு இது ஏற்றுக்கொள்ளமுடியாத விசயமாக இருந்தாலும் காட்டில் விளைகின்ற பழங்களை, காய்களை நீங்கள் யாராவது சாப்பிட்டு இருந்தால் மாசானபு சொன்னது உண்மைதான் என ஒத்துக்கொள்வோம். நம்மில் சப்பாத்திக்கள்ளிப் பழம் எத்தனை பேர் சாப்பிட்டுருப்போம்..

மிகச்சிறிய அளவில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாயி, மிக எளிய அர்த்தமுள்ள வாழ்வை வாழ்கிறான். வெகு காலத்திற்குமுன்பு, ஒரு ஏக்கர் நிலம் மட்டும் வைத்திருக்கும் விவசாயி வருடமுடிவில் குன்றுகளில் முயல் வேட்டையாடியபடி ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களை கழித்தான் அவன் ஏழையாக இருந்தாலும் அவனுக்கு இப்படிப்பட்ட சுதந்திரம் இருந்தது. இந்தப் புதுவருட விடுமுறை  மூன்று மாதத்தில் இருந்து இரண்டாகி, ஒன்றாகி, இன்று வெறும் மூன்று நாள்களாக மாறிவிட்டன என ஜப்பானிய விவசாயிகள் பற்றி பேசுகிறார்.

"இளவேனில் என்பது மழையைக் கொண்டு வருமா? புயலைக்கொண்டு வருமா? என எனக்குத்தெரியாது ஆனால், நான் இன்று என் நிலத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறேன்" இது ஒரு பழைய நாட்டுப்பாடல் இதிலிருந்து வேளாண்மை ஒரு வாழ்க்கைமுறை என விளக்குகிறார். 

அவரிடமிருந்த இளைஞர்கள் இந்தியாவில் காந்தி கிராமத்திற்கும், இஸ்ரேலில் கிபுட்ஸ்க்கும்,அமெரிக்க பாலைவனம் மற்றும் மலைகளில் வசிக்கும் கூட்டுச் சமூகத்துக்கும் சென்று பார்வையிட்டு வந்திருக்கின்றனர். 

செறிவற்ற உணவு, சாதாரண உணவு, கொள்கை உணவு, இயற்கை உணவு, என உலகின் முக்கியமான நான்குவகை உணவுப் பழக்கத்தை விரிவாக அலசியிருக்கிறார்.  மனிதனைப்போல அறிவுடைய விலங்கு எதுவுமில்லை என்று கூறப்பட்டது. ஆனால் இந்த விவேகத்தால் மக்கள் அணு ஆயுதப்பரவலைத்தான் நடைமுறைப்படுத்தியுள்ளனர் என்று சாடுகிறார்.

ஒரு ஏக்கர் நிலத்தில் நான்குபேர் கொண்ட குடும்பம் ஒன்று நாளொன்றுக்கு ஒருமணி நேரம் மட்டும் திட்டமிட்டு உழைத்தால், அவர்கள் தன்னிறைவு அடையும் அளவுக்கு அவர்களால் பயன்பெற முடியும் என உறுதியாக சொல்கிறார். உழைப்பு ஒன்றையே பிரதானமாக, பெருமையாக கருதும் ஜப்பானியர்கள் மத்தியில், ஏன் தேவையின்றி இவ்வளவு உழைக்க வேண்டும் என மனிதர்களை எள்ளி நகையாடும் மாசானபு எனக்கு ஆதர்சமாகதான் தெரிகிறார்.

ஒரே ஒரு வைக்கோல்!

இந்த வைக்கோல் சிறியதாகவும், இலகுவாகவும் தெரிகிறது. இது எவ்வளவு கனமுடையதாக இருக்கும் என்பதுகூட பலருக்கு தெரியாது. இந்த ஒற்றை வைக்கோலின் உண்மையான மதிப்பை மக்கள் புரிந்துகொண்டால், இந்த நாட்டையே, ஏன் இந்த உலகையே உலுக்கி விடக்கூடிய ஒரு மனிதப் புரட்சியே உருவாகும்.  

புத்தகம் வாங்க வேண்டுமெனில்:

என்னுடைய பணம் புத்தகத்திற்க்கு நண்பர் ரஹீம் கசாலியின் விமர்சனம் படிக்க:

21 ஏப்., 2011

கூட்டுறவு சங்கங்களின் தோல்வியும், கிராமங்களின் நகர மயமாக்கலும்...


கிராம முன்னேற்றங்கள்தாம் இந்தியாவின் வளர்ச்சியை தீர்மானிக்கும் என் மகாத்மா சொன்னார். தன் சொந்த தேவைக்கு தனக்கு தாமே தன்னிறைவை கொண்டிருந்த கிராமங்கள் இப்போது இல்லை.இந்தியா சுதந்திரம் பெற்ற பின் பத்தாண்டுகளில் இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என அப்போதைய தலைவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்தார்கள். கிராமப் பொருளாதார முன்னேற்றமே அவர்களின் தாரக மந்திரமாக இருந்தது.

கிராம முன்னேற்றத்திற்க்காக விவசாயிகளை ஒருங்கிணைக்க கூட்டுறவு சங்கங்கள் துவங்கப்பட்டன. ஆரம்பத்தில் மிக உற்சாமாக இயங்கிய கூட்டுறவு சங்கங்கள், தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைய ஆரம்பித்தது. விவசாய மற்றும் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களில் அரசியல்வாதிகள் பொறுப்பேற்க ஆரம்பித்தவுடன். கையாடலும் கூடவே நடக்க ஆரம்பித்தன. அதன்பிறகு கடன் கொடுப்பதே பெரிய விவசாயிகள் அல்லது அப்போதைய ஆளும் கட்சியினருக்கு என்றானது.

மக்களுக்காக மக்களால் நிர்வாகிக்கப்பட வேண்டிய கூட்டுறவு சங்கங்கள் அதல பாதாளத்துக்கு தள்ளப்பட்டது எம்.ஜி.ஆரின் பொற்க்கால ஆட்சியில்தான். அதன்பின் வந்த தி.மு.க ஆட்சியில் அமைச்சரான கோ.சி.மணி மீண்டும் அதனை சரி செய்து குறைகளை களைந்து அதற்கு புத்துயிர் ஊட்டினார். அப்புறம் மாற்றி மாற்றி இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் போட்டி போட்டு அதனை குழியில் தள்ளி தற்போது சாகும் தருவாயில் இருக்கிறது.

தொடர்ந்து கூட்டுறவு சங்கக்களுக்கான தேர்தல் நடத்தப்படவே இல்லை. மக்களால் நிர்வாகிக்கப்பட வேண்டிய கூட்டுறவு சங்கங்கள் இன்று அரசாங்கத்தால் இழுத்து மூடப்படும் நிலையில் இருக்கிறது. உலக மயமாக்கலின் இன்னொரு பாதிப்பு இப்படி கூட்டுறவு சங்கங்கள் காணாமல் போவது. தமிழகத்தில் நில உச்சவரம்பு சட்டம் இன்னும் இருக்கும் நிலையில் தனிப்பட்ட நபர்களால் அதிலும் முக்கியமாக அரசியல்வாதிகளால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வளைக்கப்பட்டு. விவசாய நிலத்தின் விலை எக்கச்சக்கமாக ஏறிப்போய்விட்டது.

சென்னை நகரில் மட்டுமே நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் லிட்டர் பால் பற்றாக்குறையாக இருக்கிறது. தனியார் பால் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பால் பவுடரை இறக்குமதி செய்து அதனை மீண்டும் பால் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கிறது. இரண்டு பசுமாடுகளை வைத்திருந்தால் அன்றாடம் குடும்ப செலவுகளை சமாளிக்கலாம். ஆனால் இன்றைய கிராம மக்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மாடுகளை அடிமாட்டுக்கு விற்றுவிட்டு பாக்கெட் பாலுக்கு மாறியதை பெருமையுடன் பேசுகிறார்கள். ஒரு காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய பால் உறபத்தியாளர் சங்கங்கள் இன்றைக்கு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. 

ஒரு பசு மாடாவது வைத்திருப்பது கவுரவம் என்கிற நிலைமை போய் மாடு இல்லாமல் இருப்பது கவுரவம் என்கிற கேவலமான மனப்பான்மை எல்லோரிடம் வந்தற்கு காரணமே. அரசியல் கட்சிகளை தனியார் நிறுவனங்கள் போல் நடத்தும் கட்சிகளின் ஊடகங்கள் எப்போதும் சினிமா மற்றும் அதனை சார்ந்த நிகழ்சிகளை மட்டும் ஒளிபரப்பி மக்களின் மூளைகளை மழுங்கடித்து விட்டதுதான். அனைத்து கட்சிகளின் தொண்டர்களும் காயடிக்கப்பட்ட காளை மாடுகளைப்போல்  வாரிசுகளுக்கு கோசம் போட்டு அவர்கள் வீசியெறியும் ரொட்டித்துண்டுகளுக்கு வாழ்வை சுமக்க பழகிவிட்டனர்.

உலகின் முன்னேறிய நாடுகளில் எல்லாம் விவசாயத்தில் குறைந்த அளவு தண்ணீரைக்கொண்டு மிகுந்த விளைச்சலை இயற்கை முறையில் விளைவிக்கும் மிகச்சிறந்த தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெற்றிகரமாக விவசாயம் செய்கிறார்கள். இந்தியாவில் மேலும் மேலும் ஆழ்துளை கிணறுகளை எக்கச்சக்கமாக தோண்டி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிறுக சிறுக சேமிக்கப்பட்ட தண்ணீரை நாம் வீணாக்கி வருகிறோம். இதற்கான காரணமே நாம் அனைவரும் சுயநலப் பேய்களாக மாறி 'எவன் எக்கேடு கேட்டால் எனக்கென்ன' என்கிற மனப்பான்மைக்கு மாறிப்போனதுதான்.

ஜெயலலிதா வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி ஊழலில் கைதானபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி "இந்தியாவிலேயே இதுதான் மிகப்பெரிய ஊழல்" என்று வர்ணித்தார். அவரின் இப்போதைய ஆள் ராசா செய்திருப்பது ஊழலே இல்லை என அறிக்கை விடுகிறார். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தை நடத்தும் சோனியாவும் அவரது செல்லப்பிள்ளையும் ஊழலை ஒழிப்போம்ன்னு சொல்லியே மிகப்பெரிய ஊழல்களை அரங்கேற்றியுள்ளனர்.

இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் பதுக்கியிருக்கும் மொத்த பணத்தின் உத்தேச பதிப்பு எவ்வளவு தெரியும் Rs.2250000 Cr, இவ்வளவு பணத்தையும் ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறார்கள். இந்திய அரசியல்வாதிகள் தானும் சாப்பிடாமல், மக்களையும் சாப்பிட விடாமல் பணத்தை மென்மேலும் கொள்ளையடிப்பதில் போட்டா போட்டி போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

இணையம் எல்லா ஊர்களிலும், எல்லா வீடுகளிலும் குறைந்தபட்சம் மொபைல் போனிலாவது எளிதாக கிடைக்கும்போது நமக்கான மாற்றத்தின் விதை துளிர்விடும் என நம்புகிறேன்.. அதுவரை நமது தேசபக்தி சிசுபாலர்கள் என்னையும், இந்தக் கட்டுரையையும் திட்டிக்கொண்டே பக்கத்து நாயர் கடையில்போய் யூரியா கலக்கப்பட்ட பாக்கெட் பாலில் போடப்பட்ட புளியங்கொட்டை தூள் கலந்த டீயை உறிஞ்சியவாறே அரசியல் பேசுங்கள்...    

தொடர்புடைய சுட்டிகள்:





20 ஏப்., 2011

குழந்தையின் கனவில் சுழலும் லத்திகள் ...


courtesy - article.wn.com

குப்பைகளை 
தெருவில் கொட்டுகிறார்கள் சிலர் 
அதிலிருந்து 
வாழ்வை துவங்குகிறார்கள் சிலர்..

தெருவோரக் கடையொன்றின் 
பரபரப்பான வியாபாரத்தை 
பாதிக்காமல் 
உறங்கிக் கொண்டிருந்தது
ஒரு குழந்தை..

மந்திரிமார்களும், அதிகாரிகளும் 
அடிபொடிகளும் 
சாலையைக் கடந்தபின்பு 
கூவிக்கொண்டிருந்தான் ஒருவன் 
"எதை எடுத்தாலும் பத்து ரூவா!" ..

சப்தங்களாலும் 
தூசிகளாலும் 
நிரம்பியிருக்கும் இந்த நகரத்தில் 
மனிதர்களோடு 
சில பறவைகளும் 
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது..

விதிக்கப்பட்ட வாழ்வை 
வாழ்வதாக 
சொல்லிக்கொள்கிறோம் 
சபிக்கப்பட்டிருந்தாலும்!..

19 ஏப்., 2011

பணம் - ஒரு ரசிகனின் விமர்சனம்..


என்னுடைய புத்தகம் "பணம்" படித்துவிட்டு தம்பி சவுந்தர் எழுதியிருக்கும் விமர்சனம்....

புத்தகங்கள் பல வந்தாலும் அவைகளை நாம் வாங்கி படித்து கொண்டு தான் இருக்கிறோம்...ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அனுபவத்தை நமக்கு அளிக்கிறது...அதே போல் தான் இந்த பணம் புத்தகமும். ஏன் இதற்கு பணம் என்று தலைப்பு வைத்தார், வேறு ஏதாவது தலைப்பு வைத்திருக்க கூடாதா என நான் யோசித்து பார்த்தேன்...பணத்திற்காக தானே வெளிநாட்டிற்கு செல்கிறோம்...பணம் என்பதை விட சரியான தலைப்பு வேறில்லை என உணர்ந்தேன்.

தொடர்ந்து படிக்க....

18 ஏப்., 2011

துரோணா - 14...


மண்ணிப்பு: என் பதிவுகளை AUTO PUBLISHING செய்திருந்தேன். அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் பதிவுகள் மாறிவிட்டன. கீதாஞ்சலி பற்றி எழுதும்போதெல்லாம் மனதின் சஞ்சலத்தால் நிறைய நடந்துவிடுகிறது... 
என் 
மதுக்கோப்பைகளில்
நிரம்பி வழிகிறது உனக்கான காதல் ...

மெல்ல மெல்ல 
அது என்னை கொல்லத் துவங்க ...

எனக்கு தெரிந்ததில் 
இதுதான் 
மிக ரசனையான தற்கொலை ...


எனக்கு அடுத்த ஒரு வாரத்தை தள்ளுவது பெரும் சிரமமாக இருந்தது, இப்போது போல் அப்போதெல்லாம் போன் கூட பேசமுடியாது. அவள் அழுதது என் கண்முன் வந்துகொண்டேயிருந்தது, அவளின் நெருக்கத்திற்கு பிறகு நான் தண்ணி அடிப்பதை முற்றாக விட்டுவிட்டதால் நண்பர்களுடன் பழகுவதை தவிர்க்க நூல் நிலையம் போக ஆரம்பித்தேன். மேலும் நண்பர்கள் வற்புறுத்தினால் மஞ்சள் காமாலையை காரணம் சொல்லி தப்பித்துவிடுவேன், அதனால் அவர்களும் என்னை மாலை வேளைகளில் கூப்பிடுவதை தவிர்த்தனர். எனவே எப்போதும் புத்தகங்களுடன் வாழ ஆரம்பித்தேன். 

ஒரு வாரம் கழித்து எனக்கு அவளிடமிருந்து கடிதம் வந்தது, எனக்கு சந்தோசத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை, அந்த கடிதத்தை ஆயிரம் முறையாவது படித்திருப்பேன், அதில் நவம்பர் இருபதாம் தேதி மன்னார்குடி வருவேன் எனவும் மறுநாள் மாலை வழக்கம்போல் கோவிலில் சந்திப்போம் எனவும், வந்து எனக்கு ஒரு சந்தோசமான செய்தி சொல்லப்போவதாகவும் எழுதியிருந்தாள். முடிவில் With Thousand Warm of Kisses என எழுதி கையெழுத்து போட்டிருந்தாள். அந்த சந்தோசத்தை எனக்கு எப்படி சொல்லுவது என்று தெரியாமல் தனி உற்சாகத்துடன் நடமாட ஆரம்பித்தேன். பத்தொன்பதாம் தேதி அன்று காலை என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. கடுமையான ஜுரம் அடித்தது உடனே மன்னார்குடி அழைத்து வந்தார்கள். அங்கு எனக்கு டைபாய்டு என அட்மிட் செய்தார்கள். தொடர்ந்து நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன், எனக்கு இருபத்திஒன்றாம் தேதி அவளை பார்க்கமுடியவில்லையே என்பதுதான் வருத்தமாக இருந்தது. அதனால் நண்பன் ராஜசேகரை விட்டு விசாரிக்க சொன்னேன், அவனும் விசாரித்துவிட்டு அவள் மன்னார்குடி வந்தமாதிரி தெரியவில்லை என்றான். 

ஆனால் என்னை பார்க்க அஞ்சலியின் தோழி சுமதி வந்தாள், வந்து என்னைபார்த்ததும் கதறி அழ ஆரம்பித்தாள், நான் இருந்தது தனி அறை என்பதாலும், காலை பத்துமணிக்கு மேல் என்பதாலும் யாரும் இல்லை, எனக்கு ஒன்றுமே புரியவில்லை, என்ன ஆச்சும்மா, ஏன் அழுவுறே என சமாதானபடுத்தினேன், அவள் அழுகையை நிறுத்தவில்லை, அழட்டும் என மௌனமாக இருந்தேன், மெல்ல அவளை ஆசுவாசபடுத்திக்கொண்டு அண்ணே அஞ்சலி நம்மை எல்லாம் ஏமாத்திட்டு போய்ட்டான்னே.. என தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்,.எனக்குள் எதுவோ உடைந்தது, .......................................... 

சுமதி போனபிறகு அப்படியே பைத்தியம் பிடித்தவனாய் அமர்ந்திருந்தேன்.. என்னைப்பார்க்க வந்த நண்பனிடம் அஞ்சலி வீட்டின் முகவரி சொல்லி எப்படியாவது என்ன நடந்தது என விசாரிக்க சொன்னேன், 

பெங்களூரில் பத்தொன்பதாம் தேதி ஊருக்கு கிளம்புவதற்குமுன் கடைசி நேரத்தில் தனக்கு டிரஸ் வாங்க வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டு கிருஷ்ணகுமாரின் அம்மா, மற்றும் அஞ்சலியின் மூத்த சகோதரி, கிருஷ்ணகுமார் என்ற குட்டிபையனுடன் கிளம்பியிருக்கிறார்கள், மெயின் ரோட்டில் சாலையை கடக்கையில் சாலையின் நடுவில் நின்று மறுபுறம் கடக்கையில் அந்த குட்டிபையனை யார் அழைத்துவருகிறார் என தெரியாமல் கடந்துவிட அந்த குட்டிபையனோ போகிற வருகிற கார்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே அங்கேயே சாலைநடுவில் நிற்க, மறுபுறம் கடந்த அஞ்சலி அதனை கவனித்துவிட்டு அவசரமாக சாலையின் குறுக்கே ஓடி அவனை காப்பாற்ற முயன்ற பொது வேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்திரிக்கிறது, அவள் சாகும்போது கடைசியாக சொன்ன பெயர் குமார்..... அந்தக் குட்டிப் பையனுக்கு எதுவும் ஆகவில்லை.

இதனை நண்பன் வந்து சொன்னபோது நான் அழவேயில்லை, என் உயிரில் கலந்த அவள் இறந்துவிட்டாள், என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... 

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தபின், நான் எங்கும் செல்லவில்லை, எந்த நேரமும் வீட்டிலேயே அடைபட்டிருந்தேன், நான் யாருடனும் பேசுவதில்லை, சரியாக சாப்பிடுவதில்லை என நண்பனிடம் அம்மா வருத்தப்பட்டது, அவன் பிடிவாதமாக என்னை வெளியில் அழைத்துசென்றான், அன்று இரவு நிறைய குடித்தேன்.. அத்தனை நாள் இரவுகளில் அன்று இரவுதான் போதையில் தூங்கினேன், அதன்பிறகு குடி என்னுடன் ஒட்டிகொண்டது, குடிக்காமல் என்னால் தூங்க முடியாது, வீட்டிற்கு தெரியக்கூடாது என்பதற்காக மாட்டு கொட்டகையில் தூங்க ஆரம்பித்தேன்... 

இப்படி ஒருநாள் காலையிலேயே நண்பன் செழியனுடன் குடித்தபோது, ஓவராக குடித்துவிட்டு அஞ்சலியை பற்றி புலம்ப அவனோ நீ 
\"ஏழு சுவரங்களுக்குள்\" 
என்ற பாட்டு கேட்டிருக்கிறாயா என்றான், அதில்
 \'எனக்காக நீ அழுதாள் இயற்கையில் நடக்கும்\',\'
 நீ எனக்காக உணவு உன்ன எப்படி முடியும்\' 
என்றொரு வரி உண்டு தெரியுமா? என்றான் அதுக்கு இப்ப என்னடா என்றபோது, நீ அஞ்சலியை நெஜமாகவே காதலிச்சியா? என்றான், ஆமாண்டா... அத எதுக்கு கேக்குறே என்றேன். இல்லடா நீ நிஜமா காதலிச்சிருந்தா அப்பவே செத்திருப்பே, ஆனா நீ இப்ப எங்களுக்காக நடிக்கிறே.. உண்மையான காதலா இருந்தா அவளுக்காக நீ செத்திருக்கணும் என்றான்.. என் போதை வடிந்துவிட்டது, வீட்டிற்கு வந்து நெடு நேரம் யோசித்து ஒரு முடிவெடுத்தேன்... 

தற்கொலை செய்து கொள்ளவேண்டும், அதுவும் இன்றைக்கு இரவே என முடிவெடுத்தேன்.. 

மாலையில் மன்னார்குடி சென்று ஒரு பாட்டில் விஷமும், இன்னொரு பாட்டில் பிராந்தியும் வாங்கிகொண்டேன், கடைசியாக ஆத்மநாதன் அத்தானை பார்த்துவிட்டு சென்றுவிடலாம் என அவரைப்பார்க்க சென்டருக்கு போனேன்.. அவர் வீட்டிற்கு சாப்பிட போனதாக சொன்னார்கள், அவருக்காக காத்திருந்தேன்,, என் நினைவுகள் முழுதும் அஞ்சலி மட்டுமே இருந்தாள், இன்னும் சில மணி நேரத்தில் அவளுடன் கலந்துவிடப்போகிறேன், அந்த நினைப்பே என்னை ஒரு ஏகாந்தத்திற்கு இட்டுசென்றது... வகுப்பின் பெஞ்சில் படுத்து கண்மூடினேன் என் கண்களுக்குள் அஞ்சலி சிரித்தாள்... அப்படியே தூங்கிவிட்டேன்.......

அப்படி ஒரு உறுதியான முடிவு எடுத்த என்னை.. எது உங்களுக்கு இதனை எழுதுகிற அளவுக்கு உயிரோடு வைத்தது என்பதை அத்தியாயம் 15 ல் சொல்லியிருக்கிறேன்.

துரோணா - 15 ...



இரா முழுதும் பரவிய தனிமையில் 
போதுமானதாக இல்லை வாங்கி வந்த சரக்கும்,
பைத்தியக்காரத்தனமான முடிவெடுத்து விட்டான் என நண்பர்களும் 
போய்ச்சேர வேண்டியவன்தான் என வெறுப்பவர்களும் 
அய்யோ போயிட்டியே ராசா என பெத்தவளும் 
இன்னும்..
இன்னும் ..
அத்தனை பேச்சுக்கும் தீனி போட 
செத்து விடலாம்தான்..?

அன்று இரவோடு என் கதை முடிந்திருந்தால், இந்த கதையை நீங்கள் படிக்க நேர்ந்திருக்காது.. என் செய்ய உங்கள் தலை எழுத்தை யாரால் மாற்ற முடியும்.

காதல் பற்றிய கதைகளை, காவியங்களை, கட்டுரைகளை, கவிதைகளை படிக்க.. படிக்க அலுப்பதில்லை, பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் காதல் அந்தரங்கமாக நம்முள் எப்படியோ கலந்துவிடுகிறது, அதனால் யார் இதனைப்பற்றி போரடித்தாலும் கேட்க தோன்றுகிறது.. காதல் எப்போதும் ஒருவருக்கு மாதிரி மற்றவருக்கு வாய்ப்பதில்லை, காதலித்த காலத்தில் ஈருடல் ஓருயிராக இருந்தவர்கள் கல்யாணம் முடிந்தபின் விவாகரத்தான கதைகள் உண்டு, அதேபோல் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டவர்கள் வாழ்கிற காலம் முழுதும் காதலித்த கதைகளும் உண்டு, வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் காதல் சுவாரஸ்யமானதுதான். 



அன்று அத்தான் வந்து என்னை எழுப்பி,

”என்ன மாப்புளே இந்த நேரத்துலே” என்றார்.. 

அவரை பார்த்ததும் நான் அழுதேன், 

”என்னடா முட்டாளா நீ?”

”எல்லாரும் ஒருநாள் சாகத்தான் போறோம் சிலபேர் முன்னாடி, சிலபேர் பின்னாடி அவ்வளவுதான், நீ நடந்ததையே நினைச்சுகிட்டிருந்தா! நல்லதில்ல மாப்ள.. ராஜசேகர் சொன்னான் இப்படியே போனா நீ செத்துடுவேன்னு.. கேட்கவே சங்கடமா இருக்கு.. உன் குடும்பத்துல எவ்வளவு பிரச்சினைகள் இருக்கு,முதல்ல உங்க அக்கா பிள்ளைகள பாரு அவங்க ரெண்டு பெரும் உன்னைநம்பிதானே இருக்காங்க,( என் அக்காவும், அக்கா கணவரும் ஒரு விபத்தில் இறந்ததால், அவர்களின் இரு குழந்தைகளும் எங்கள் பராமரிப்பில்தான் இருந்தன) கண்ணனோ (என் அண்ணன்)குடிகாரன் ஆயிட்டான், அப்புறம் யாரு உங்க குடும்பத்த காப்பாத்தறது.. ஒரு ஆறுமாசந்தான் இருக்கும் அந்த பெண்ணோட பழகி, அவளுக்கு உன்னோட வாழ கொடுத்து வக்கல... அதுக்கு இப்படி தாடி வச்சிக்கிட்டு,.. தண்ணி அடிச்சிட்டு திரியறது நல்லால்ல மாப்ள... சரி நீ செத்துட்டதாவே வச்சுக்க உன் குடும்பத்துக்கு ஏதாவது செஞ்சுட்டு அப்புறம் என்னவேனாலும் செய் மாப்ள.. என நான் மௌனமாக அழுதுகொண்டிருக்க சொல்லிகொண்டேபோனார்... நான் எதுவும் பேசவில்லை.. கடைசியாக மாப்ளே நாளைக்கு வந்து என்கிட்டே பணம் வாங்க்கிக்க கொஞ்ச நாளைக்கு மெட்ராசுக்கு போய் இருந்துட்டு வா.. அப்புறம் என்ன செய்றது என முடிவு செய்யலாம்” என டாக்ஸி பிடித்து அனுப்பி வைத்தார். 

வீட்டிற்க்கு வந்து மதுவையும், விசத்தையும் திறந்து வைத்தேன்... அத்தானும், அஞ்சலியும் மாறி மாறி என்னை வதைத்தனர்.. பொழுது விடிய ஆரம்பித்தது, அப்போது எங்கள் வீட்டில்தான் எல்லோரும் மாட்டை ஓட்டிவந்து பால் கறப்பார்கள், அவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.. குடும்பத்துக்காக கொஞ்சநாள் வாழ்வது என முடிவெடுத்தேன், விசத்தை குப்பையில் கொட்டிவிட்டு, மதுவை குடித்துவிட்டு மாட்டுகொட்டகையிலேயே தூங்கிவிட்டேன். மறுநாள் மதியம்தான் எழுந்தேன், அம்மாவிடம் மெட்ராஸ் போகிறேன் என சொல்லிவிட்டு குளிக்கசென்றேன். அப்பா ஏன் இப்ப மெட்ராஸ் போறே என்றார்.. போய் ஏதாவது வேலைப்பார்ப்பேன் என்றதும், மாலை கிளம்பும்போது நூறு ரூபாய் கொடுத்தார்.. மன்னார்குடி வந்து அத்தானை பார்த்தேன், அவர் எனக்கு ஐந்நூறு ரூபாய் கொடுத்தார். மறுநாள் காலை மெட்ராஸ் வந்தேன், அதிகாலை அக்கா வீட்டு கதவை தட்டியபோது திறந்தவள் காமாட்சி.. 

அன்றைக்கு தெரியவில்லை அவள்தான் என் மனைவியாக போகிறவள் என்று.. அம்மா மாமா வந்திருக்காங்க என அக்காவை எழுப்பிவிட்டாள்.. அக்கா என்னடா சொல்லாம வந்திருக்க.. பரவாயில்லை தூங்கு, சாயந்தரம் பேசிக்கலாம் என்று சமைக்க போய்விட்டது, .. 

மெட்ராஸ் வந்துவிட்டேனே தவிர என்னால் எங்கும் வேலை தேட முடியவில்லை, இடையில் அக்கா வீட்டுக்காரர் எனக்காக பார்த்து கொடுத்த வேலையால் வந்த பிரச்சினை பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன், ஆறு மாதங்கள் இப்படியே போனது ஒரு கம்பெனியில் வேலைக்கு போவது இரண்டு நாளிலேயே பிடிக்காமல் வந்துவிடுவது இப்படியே போய்க்கொண்டிருந்தது அக்கா இரண்டு நாளைக்கு ஒருமுறை பத்து ரூபாய் தரும் அதற்க்கு புத்தகங்கள் வாங்கிவிடுவேன், மற்றபடி எங்கு போனாலும் நடைராஜாதான். வாரவாரம் செவ்வாய் அன்று தி.நகரில் வேலை செய்த நண்பன் செல்வகுமாரை பார்க்க வருவேன், அவன் ஜி.ஆர்.டியில் வேலை செய்தான், அந்த நேரத்தில் அவன்தான் எனக்கு ஆறுதலாக இருந்தான்.. 

அண்ணன் பாண்டியன் எனக்கு தமிழ்நாடு தாதா மருந்து கம்பெனியில் வேலை வாங்கி தந்தார், நல்ல வேலை ஆனால் ஒரு வாரம்தான் போயிருப்பேன்.. வீட்டில் இருந்து ஊருக்கு வரும்படி கடிதம் வந்தது.. ஊருக்குபோனால் இருந்த கடைசி நிலத்தையும் விற்றுவிட்டு அண்ணனுக்கு, கடனுக்கு போக அப்பா என் பங்காக எட்டாயிரம் ரூபாய் கொடுத்தார். அப்போது சிங்கப்பூர் போக பதினெட்டாயிரம் வேண்டும், சிகாமணி சித்தப்பா இருக்கிறத கொடு மிச்சத்த சிங்கப்பூர் வந்து சம்பாதிச்சு கொடு என்றார்.

எத்தனையோ அனுபவங்களை இன்றுவரை சந்த்தித்து இருக்கிறேன், ஆனால் இன்றைக்கு ஒரு நல்ல திறமையாளனாக நான் இருப்பதற்கு காரணம் சிங்கப்பூர்தான். பொதுவாக நான் யாருக்காவது இறக்கப்பட்டால் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள், இன்று வரையில் யாருக்காவது உதவி செய்துகொண்டுதானிருக்கிறேன், காரணம் ஒருமுறை இப்படி ரவுடித்தனமாக இருக்கிறாயே.. அதை விடுத்து உன்னால் முடிந்த உதவியை எல்லோருக்கும் செய்துபார் அதில் கிடைக்கும் மனநிறைவு எதிலும் கிடைக்காது என அஞ்சலி சொன்னாள், இன்றுவரை அதை பின்பற்றுகிறேன் ஆனால் என்னிடம் உதவி பெற்றுக்கொண்ட அத்தனைபேரும் என்னை குறை சொல்லிவிட்டுதான் பிரிகின்றனர். 

1995 ஆம் ஆண்டு ஊருக்கு வந்தபோது பெங்களூர் சென்றேன். அங்கு கீதாஞ்சலி அடிபட்டு இறந்த இடத்தில் சாலையோரம் இரண்டு நாள் இருந்தேன். காலை முதல் நள்ளிரவு வரைக்கும் அங்கேயே திரிந்தேன். அப்போது ஒரு நண்பர் அறிமுகமானார், அவர் வாழ்வின் இன்னொரு கோணத்தை புரிய வைத்தார். 

இப்படியாக நகர்ந்த வாழ்க்கையில் என்னையும் இரு பிள்ளைகளையும் மட்டுமே உலகம் என நினைத்து வாழும் மனைவி. என் தொழிலில் எத்தனயோ தோல்விகள், நம்பிக்கை துரோகங்களை சந்தித்து இருக்கிறேன். சில சமயங்களில் பத்து ரூபாய் கூட இல்லாமலும் இருந்திருக்கிறேன். ஆனால் என்னை சரியாக புரிந்துகொண்டு எனக்கு மிகவும் ஆறுதலாக இருப்பவள் என் மனைவி. சூழ்நிலையால் அனேகமாக தினமும் தண்ணி போட்டுதான் வீட்டுக்கு வருகிறேன். நள்ளிரவுக்கு பின் வரும் எனக்கு கதவு திறந்து விடும் அவள் கேட்க்கும் ஒரே கேள்வி சாப்டீங்களா என்பது மட்டுமே. என் திருமணத்துக்கு முன்பே இந்தக் காதலை அவளிடம் சொல்லிவிட்டேன்.

இடையில் ஒரு நாள் சிங்கப்பூரில் இருந்தபோது எங்கள் திருமண நாள் கடந்து போனதை மறந்து விட்டேன். அடுத்த வாரத்தில் போன் செய்தபோது அவள் நினைவு படுத்தினாள். அவளுக்கு உடனே ஒரு வாழ்த்து செய்தியை அனுப்பி வைத்தேன்.அது ஹேராமில் கமல் சொல்வது.

"நான் என்றோ செய்த புண்ணியம் 
நீ எனக்கு மனைவியாக அமைந்தது"
"நீ என்றோ செய்த பாவம் 
நான் உனக்கு கணவனாக அமைந்தது."

இதை எழுதிக் கொண்டிருக்கிற வினாடி வரைக்கும் இதுதான் உண்மை.