31 மே, 2011

முத்தம்...


உன் 
முதல் முத்தத்திற்கே 
மொத்த ரத்தமும் 
முகத்தில் வந்து நிற்க 
மறுபடி முத்தமிட்டு 
இதயத்தை நிறுத்திச்சென்றாய்..

திருமண வீடொன்றின் 
அதிகாலை இருட்டில் 
அழுத்தமாய் முத்தமிட்டு 
அவசரமாய் விலகிச்சென்றாய்..

முத்தத்தால் காதல் சொன்ன
முதல் ஆள் நீயாகத்தான் இருப்பாய்..

அதன்பின் 
எத்தனயோ சந்தர்ப்பங்கள் 
ஏராளமாய் முத்தங்கள் 
கொடுத்து.. வாங்கி 
வாங்கி.. கொடுத்து 
தருவதிலும்..பெறுவதிலும் 
உனக்கும் அலுக்கவில்லை 
எனக்கும் சலிக்கவில்லை..

முத்தங்களால் 
ஆடை போர்த்தும் வித்தைகள் 
நித்தம்.. நித்தம்..
நாவின் ஒரே பயன் 
சுவை.. 
மேலும்.. மேலும் 
சுவை..
சுவைத்து சுவைத்து 
சுவை..

ஆனாலும் 
முதன்முதலாய் 
யான் பெற்ற ஈரங்கள் 
இரண்டைப் போல் 
எப்போதும் இல்லை 
கொடுத்ததும் 
பெற்றதும்..

நதிகளைப்  பருகியவன் நான் 
மழைத்துளிகளால் 
தீர்க்க முயல்கிறாய் என் 
தாகத்தை..

தாகம் 
தாபம் 
மோகம் 
முடிவிலா சாபம் 
முத்தங்களால் தீர்ப்போம் வா!..

30 மே, 2011

எக்குதப்பாய்...

என் எதிரே
புத்தரைக் கண்டேன்
அவரைக் கொன்றுவிடும் உத்தரவை
அவரே 
எனக்கு தந்திருந்ததால்
கத்தியை இறக்கினேன்
கண்ணாடியில் பட்ட கத்தியால்
என் கழுத்து அறுபட்டு 
இறந்து கொண்டிருக்கிறேன்..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&


அவராகத்தான்
இருக்குமென்று நினைத்து
அவரை நெருங்கினேன்
அவர் இல்லை.
அவர் இல்லையென்றானபோது
அவரைத் தேடி அலைகிறேன்..


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


யாரும் அறியவில்லை என 
நான் அவளை 
பார்த்துக்கொண்டிருந்தேன்
அவள் அறியாவண்ணம்
அவளைப் பார்ப்பதை
அவள்
பார்த்துவிட்ட பின் 
அவள் அறியாவண்ணம்
பார்ப்பதில்லை இப்போது,,,

27 மே, 2011

ஆறுதல்...


பெட்ரோல் வாசனை வீசும் 
நகரத்தின் சாலைகளில் 
எல்லோரையும் துரத்துகிறது 
ஏதோ ஒரு அவசரம்..

சம்பிரதாய வணக்கங்களை 
கடந்து வந்தமரும் 
அலுவலக மேஜையின் 
மீதமர்ந்திருந்த 
கணினியில் 
எலக்ட்ரான் விழிகளால் 
பிடிக்கப்பட்ட உன் பிம்பம் 
சலனமாக..

மூளையில் பதிந்திருக்கும் 
ஆறுதலை
விரல்கள் வழி அனுப்பி வைத்தேன்..

பதிலுக்கு சிணுங்கிய 
செல்பேசியில் வந்திருந்தது 
:) 

26 மே, 2011

ரகசியம்...


Three can keep a secret, if two of them are dead. - Benjamin Franklin

யாருமற்ற ஊரில் உறவுகளற்ற ஒரு பெண்ணை காதலித்த மூன்று ஆடவர்களின் கதையை கேட்டிருக்க மாட்டீர்கள். யாருமற்ற ஊரில் ஒரு பெண் எப்படி வந்திருப்பாள் என்ற சந்தேகத்தை விடவும், அவளை காதலிக்கும் மூன்று ஆடவர்கள் என்கிற தொடர்ச்சியின் வசீகரம் அந்தப் பொய்யில் உங்களை கட்டிப்போடக்கூடும். வழி தவறிய ஆட்டுக்குட்டிக்கு அதனைப் பார்த்த முதல் ஆள் தற்காலிக சொந்தக்காரனாகி விடுவதைப்போல இப்படியான கட்டுக்ககதைகள் காற்றின் திசைகளில் பரவும் தூசியென மனிதர்களின் மனங்களின் பரவிவிடுகிறது.

யாரும் வைத்துக்கொள்ள முடியாத ரகசியங்களை நம்பிக்கை வைத்து சொல்லும்போது அது அதன் ஸ்திரத்தன்மையை இழந்துவிடுகிறது. அதனை பெற்றுக்கொண்ட நம்பிக்கை நண்பரின் மற்றொரு நம்பிக்கை நண்பர் வழி ஊரெங்கும் ஒரே நாளில் பரவும் ரகசியம் அதிகம் உண்டு. அதிலும் பிரபலங்களைப் பற்றிய ஊகங்களை தினமும் பரப்பும் ஒரு கும்பல். அந்த ஊகங்கள் பின்பு கண். காது, மூக்கு வைத்து உருவமெடுத்து ஊரெங்கும் சுற்றிவரத்துவங்கும். ஒரு ரகசியத்தை இன்னொரு ரகசியமே வீழ்த்துகிறது.

இருந்தாலும் மனிதின் கருப்பு பக்கங்களில் ஒவ்வொருவருக்குமே சாகும் வரைக்கும் யாரிடத்தும் பகிர்ந்து கொள்ள முடியாத ரகசியங்கள் இருக்கவே செய்கின்றன. உறவுகளால் ஏற்படும் தனி மனித துரோகங்களும், அவமானங்களும் யாரிடத்தும் சொல்லப்பட முடியாமல் மனதில் பூட்டிவைத்து அது அழுத்தி அழுத்தி மன நோய்க்கு ஆளானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

ரகசியங்கள் மிக சுவாரஸ்யமானவை பக்கத்து வீட்டுக்காரரோ, அலுவலக நண்பரோ, போற்றும் பிரபலமோ யாருடையதாக இருந்தாலும் ரகசியங்கள் மிக சுவாரஸ்யமானவை. அது கேட்பவரையும் சொல்லுபவரையும் ஒரே நேரத்தில் பரவசப்படுத்தும். பாலியல் ரகசியங்கள்தான் உலகின் முன்னணியானது. அதற்கடுத்து அலுவலக காக்காய் பிடித்தால், சிண்டு முடிதல் என தான் சார்ந்த உலகின் அதீத பக்கங்களை ரகசியங்களால் நிரப்பி வைத்திருக்கிறோம்.

நாடு தழுவிய ரகசியங்கள் காசு தரக்கூடியவை, ஆட்சிகளை புரட்டிப்போடும் ரகசியங்களை தேடி ஊடகங்கள் அனுதினமும் சல்லடை போடுகின்றன. பெரும்பாலும் அண்டர்கிரவுண்ட் கவனிப்பில் முடக்கப்பட்ட ரகசியங்கள்தான் அதிகம். சமீபத்திய விக்கிலீக்ஸ் வரை நமக்கு எது உண்மை எது பொய் என்று பிரித்து அறிய இயலாத அளவுக்கு பணம் சார்ந்த ரகசியங்கள்தான் உலகை ஆள்கின்றன.

உலகின் மிகப்பெரிய ஊழலில் ஒன்றான ஸ்பெக்ட்ரம் பற்றியும், கைமாறிய பணம் பற்றியும் இங்கு ஆளாளுக்கு ஒரு கருத்தினை பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த பரந்த இணைய கட்டமைப்பில் இனி ரகசியங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது சந்தேகம்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் பாண்டிச்சேரியில் இருந்து ஒரு அரசு பஸ்ஸில் சென்னை வந்து கொண்டிருந்தேன், அப்போது எனக்கு முன்னால் சீட்டில் கடுமையான போதையில் அமர்ந்திருந்த இருவரில் ஒருவர் அது பஸ் என்பதையும் மறந்து தனது நண்பரிடம் தன் மனைவி பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். கேட்கவே அருவருப்பாக இருந்ததால் எழுந்து சத்தம் போட்டேன். திடீரென அழ ஆரம்பித்துவிட்டார் அவர். அதுவரை அவர்மேல் வெறுப்பாக இருந்த சக பயனியர் ஆளாளுக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தனர். அன்று அவர் பஸ்ஸில் தன் மனைவி பற்றி உளறிக்கொட்டியது சக பயணிகளால் எடுத்துச்செல்லப்பட்டு இன்றுவரைக்குமே எங்காவது உலவிக்கொண்டிருக்கும்.

21 மே, 2011

வெளி...


பிரதி சனிக்கிழமை தோறும்
ஆஞ்சநேய விரதமிருந்து 
அடைந்தான் ஒரு காதலை 
நேயர் விருப்பமல்ல 
நம் காதல் என 
நிராகரித்தவளை
பின் தொடர்கிறேன்
நான் அனுதினமும்..

எப்படியெல்லாம் 
இருக்கக் கூடாதோ! 
அப்படியெல்லாம் 
இருக்கப் பழகினேன் 
ஒரு நாய்க்  குட்டியென
வழியெல்லாம் பின்தொடர்ந்து..

நீ எனக்கு கடவுள் 
நான் உனக்கு 
நான்தான்..

அசூயை நிரம்பிய தினமொன்றில் 
நிகழ்ந்தது நம் சந்திப்பு
அசந்தர்ப்பமான வார்த்தைகளால் 
நிரப்பப்பட்ட அக் காலம் 
இன்றுவரைக்கும் 
நமக்கிடையே நீட்டிக்கும் 
இடைவெளிகளை 
இட்டு நிரப்பிக்கொண்டிருக்கிறது..

இடைவெளி 
நீளும் காலம்
வெளி..

19 மே, 2011

எளிய முறையில் "ஆப்பு" வைக்க எட்டு யோசனைகள் ..


1. எல்லோருக்கும் இலவசமாய் தொலைக்காட்சி கொடுத்துவிட்டு 
    பார்க்க விடாமல் கரண்ட் கட் செய்வது. 

    அதே தொலைகாட்சியில் ஸ்பெக்ட்ரம் பத்தி மக்கள் தெரிஞ்சிகிட்டது.

2. ஈழத் தமிழனுகோ, இந்திய மீனவனுக்கோ பிரச்சினை என்றால் 
    கடிதம் எழுதுவது. 
   
    அதே தன் மகளுக்கு பிரச்சினை என்றால் இந்தியாவின் 
    அதிக விலை வக்கீலை வாதாட வைப்பது.

3. தேர்தல் முடிந்தபிறகு அ.தி.மு.க அப்படீன்னு ஒரு கட்சியே 
    இருக்காதுன்னு சவால் விடுவது. 

   தேர்தல் முடிந்தபின் தன் கட்சி உயிரோடு இருக்கா? என்று தேடுவது.

4. 13 ந்தேதி என்ன பண்றேன்னு பாருங்கன்னு BUZZ, TWITTER, BLOG
     எல்லாத்திலயும் சவால் விடுறது. 

    ஆனா அபீட்டாயிட்டு அடுத்த அஞ்சு வருசத்துக்கப்புறம் 
    நாமதான்னு அவங்களுக்கு அவங்களே (நமக்கு நாமே திட்டம் மாதிரி௦) 
    ஆறுதல் சொல்லிக்கிறது.

5. கருணாநிதி பி.ஜெ .பி க்கு சப்போர்ட் பண்ணப்ப சூப்பர் என்பது. 

    சீமான் மோடிய பத்தி சொன்னா கரசேவைக்கு செங்கல் தூக்குறார் 
    என கிண்டல் அடிப்பது.

6. தமிழக மீனவர்களுக்காக காங்கிரஸ் கட்சி இலங்கை தூதரகம் முன்பு 
    ஆர்ப்பாட்டம் செய்வது.
   
      இத்தாலிக்காரம்மாவை தலிவரா ஏத்துகிட்டு இந்திய 'பொறை'யான்மை 
      பத்தி ஊளையிடுவது.

7. எல்லோரும் தமிழில் படிக்க வேண்டும் எனப் பேசுவது. எஞ்சினியரிங் உட்பட..
   
   ஆனா தனது பேரப் பிள்ளைகளை தமிழ் ஆங்கிலவழிக் 
   கல்வி பயில அனுப்புவது.

8. பணம் கொடுத்துட்டா ஒட்டு போடுவானுங்கன்னு நெனச்சது. 
   
    மக்கள் பணம் வாங்கிட்டு மாத்தி ஒட்டு போட்டது.

18 மே, 2011

ஈழம் : "வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி" ...

யூத இன மக்களுக்கு தனது பத்து தலைமுறைகளின் வரலாறு தெரியும் எனச் சொல்வார்கள். தனது பாரம்பரியத்தின் மேல் மிகுந்த மரியாதையும், அர்ப்பணிப்பும் உடையவர்களில் முதன்மையானவர்கள் யூதர்களே. அதனால்தான் ஜெர்மனியில் கொத்து கொத்தாக கொல்லப்பட்டாலும் உலகெங்கும் சிதறிப்போனாலும், தனக்கென்று ஒரு தாயகத்தை கட்டமைத்தவர்கள் அவர்கள். இவர்களைப் போலவே உலகின் தொன்மையான வீரமிக்க இனங்களில் ஒன்றான தமிழினத்தின் இன்றைய நிலை பல்லாயிரம் மடங்கு மோசமாக இருக்கின்றது.

வீரம் செறிந்த இந்த பரம்பரையின் தாய்ப் பூமிகளுள் ஈழ தேசமும் உண்டு. திராவிட பாரம்பரியமும், தனித்த கலாச்சாரமும் கொண்ட தமிழர்களின் வாழ்வில் ஊடாக வந்த ஆரியர்கள் தந்திரமாக தங்களை திராவிட கலாசாரத்திற்குள் நுழைத்து அதனை வேரறுத்து விட்டனர். சோழ மன்னர்களில் குறிப்பாக ராஜராஜ சோழன்தான் ஆரியர்களின் செல்லப் பிள்ளை. ராஜராஜன் ஆட்சியில்தான் ஆரியர்கள் மிக செழிப்பாக வாழ்ந்தனர். அதிலும் சைவர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது ராஜராஜனின் ஆட்சியில்தான். வீரனான ராஜராஜனைக் காட்டிலும் பெரு வீரம் மிக்கவன் அவன் மகன் ராஜேந்திரன் ஆனால் இன்றளவும் "பொன்னியின் செல்வன்" , "உடையார்" என ராஜராஜனின் சரித்திரமும், வீரமும் பார்ப்பனர்களால் பரப்பப் படுவதற்கு காரணம் ராஜராஜனின் ஆட்சியில் அவர்களுக்கிருந்த அதீத அதிகாரம்தான்.

கடல் கடந்து தேசங்களை வென்ற ராஜராஜன் அங்கெல்லாம் பரவியிருந்த புத்த மதத்தை தழுவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்த ஆரியர்கள். அவனை அங்கெல்லாம ஆளவிடாமல் பிடித்த மண்ணை அவர்களிடமே ஒப்படைத்து கப்பம் கட்டச் சொல்லி தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக மட்டுமே அறிவிக்க வைத்தனர். இதில் ஈழம் ராஜராஜனுக்கு முன்பிருந்தே தமிழர்களின் தாயகமாக இருந்த பூமிதான்.

மன்னர்களின் ஆட்சி நடந்தபோதே ஈழத்தின் ஒரு பகுதில் குடியேறிய வட இந்திய மக்களால் தனித்து ஒரு அரசாங்கம் நிறுவப்பட்டு பின்னாளில் அவர்களால் புத்த மதம் ஏற்கப்பட்டு மகாவம்சம் எழுதப்பட்டு அப்போதே ஈழம் சிங்களவர்களின் பூமியென சித்தரிக்கப்பட்டது. வெள்ளையர் ஆட்சிக்குப் பின் தமிழ் மன்னனால் பிடிக்கப்பட்ட அதே ஆசிய நாடுகளுக்கு கூலித் தொழிலாளிகளாக தமிழர்களே அழைத்துச் செல்லப்பட்டதுதான் கொடுமையே! அப்படி ஈழத்தின் மலையகத்திற்கும் அழைத்து செல்லப்பட்டவர்கள்தான் இன்றைய மலையக தமிழ் மக்கள். டச்சுக்காரர்களும், பிரிட்டீசாரும் ஆட்சி செய்தபோதும் வன்னிய தமிழ் மன்னன் தன்னுடைய பகுதியை அவர்களுக்கு அடிபணியாது ஆண்டிருக்கிறான். பின்னாளில் ஒட்டு மொத்த ஈழ மண்ணையும் பிரிட்டிசார் கைப்பற்றி ஒருங்கிணைந்த இலங்கையாக அறிவித்தார்கள்.

வெள்ளையர்கள் மண்ணைவிட்டு போன நாள் முதலாகவே சிங்களவர்க்கும், தமிழர்களுக்கும் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. பொன்னம்பலம் தலைமையிலான தமிழர்கள் காந்தியின் வழியிலேயே போராடி வந்தனர். ஒரு கட்டத்தில் மலையக மக்களின் உரிமை பறிக்கப்பட்டது. அப்போது யாழ்ப்பாண மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை என இன்றுவரை பேசப்படுகிறது. அதன்பின்னர் நடந்த தொடர்ச்சியான நடந்த அகிம்சா போராட்டங்கள் ஆயுதங்களால் அடக்கப்படுகிறது. படிப்படியாக தமிழர் பிரதேசங்களில் சிங்களர் குடியேற்றம் நடத்தப்படுகிறது.

அதனை எதிர்த்து போராடிய தமிழர்களின் நிறுவனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு, சூறையாடப்படுகிறது. தமிழ் பெண்களை வீதியில் வைத்து ராணுவத்தினர் கற்பழித்து கொன்றனர். அதற்கு மேல் பொறுக்காத இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மாணவர் பெருமன்றத்தை துவங்கி ஆயுதபோராட்டத்தை துவங்குகின்றனர்.  பல்வேறு குழுக்களாக உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்து செல்லும்போது ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் பிரச்சினை வந்தது. அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திராகாந்தியும், தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து இந்தியாவில் அவர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கிறார்கள்.

விடுதலைபுலிகள் அமைப்பின் தலைவராக பிரபாகரன் பொறுப்பேற்றவுடன் ஏனைய குழுக்களை ஓரங்கட்டினார். தமிழர்களின் ஒட்டுமொத்த அடையாளமாக புலிகளே முன்னின்றனர். தொடர்ந்து வெற்றிகளை குவித்த அவர்களின் தமிழீழ தாயக கோட்பாடு இந்திரா காந்தி படுகொலை மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப் பிறகு இந்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டது.

ஈழத்தை கடந்து இந்தியாவின் தமிழகத்தில் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னிறுத்தி இந்திய அரசாங்கத்தை அசைத்துப்பார்க்க வேண்டிய நாம் சினிமா திரைகளுக்குள் முடங்கிக் கிடந்தோம். இந்து ஆங்கில தினசரி, தினமலர் தமிழ் தினசரி, துக்ளக் 'ஷோ' போன்ற பார்ப்பன ஊடகங்கள் இன்றுவரைக்கும் தமிழர்களுக்கு எதிரான பரப்புரைகளை செய்துவருகிறது. தமிழனின் குரலாக ஒலிக்க வேண்டிய தினத்தந்தி ஆட்சியாளர்களுக்கு ஏற்ப வளைந்து கொடுத்தது. பார்பனரின் ஊடகம் என்றாலும் இன்றுவரை ஈழபிரச்சினையில் மிகுந்த அக்கறை காட்டிவரும் 'விகடன்' குழுமத்தை தமிழக மக்கள் மறக்கக் கூடாது.

தமிழனின் தன்மான பிரச்சினை பற்றி கவலைப்படாமல் தலைவனின் குடும்ப நலனுக்காய் இன்றுவரைக்கும் குரல் கொடுக்கும் உடன் பிறப்பு "கொளந்தைகளும்" தலைவியின் கொள்கையே தன் கொள்கையை முழங்கும் " ரத்தத்தின் ரத்தங்களும்" ஈழமக்களின் கண்ணீரை பற்றி கவலைப்படாதது வருத்தம் அளிக்க வேண்டிய விசயம். ரஜினிக்கு உடம்பு சரியில்லை என்றால் நாடே பரபரப்பாகிறது, ஊடகங்கள் கொட்டை எழுத்தில் செய்தி போடுகிறது. ஆனால் எம் தமிழ் இனம் உயிரோடு கொளுத்தப்பட்ட போது பாரா முகமாய் இருக்கிறது, தமிழக தமிழர்களின் அடிமை மனோபாவம் இப்படித்தான் இருக்கும்.

தனித்து முழங்கும் சீமானையும் அவரின் தம்பிகளையும் கொச்சை படுத்தும் இணைய உடன்பிறப்புகளே. உங்கள் தலைவன் கடிதம் எழுதுவதற்கு தமிழக மக்கள் கொடுத்த பதிலடியை பார்த்தாவது திருந்துவீர்கள் என நம்புகிறேன். ஒருத்தர் ஜெயலலிதா வெற்றி பெற்றவுடன் இனி தமிழக மீனவன் சாக மாட்டான்.அவன் மீன் பிடிக்கப்போனால் மீன்கள் தானாக வந்து படகில் விழும் என கிண்டல் செய்தார். ஐந்து வருடங்கள் உங்கள் தலைவன் ஆட்சியில் இருந்தபோது அதுவும் மத்தியிலும் செல்வாக்கோடு இருந்தபோது முன்னூறு மீனவனுக்குமேல் சுட்டுக் கொல்லப்பட்டும், ஏராளமானவர்கள் அவமானப்படுத்தப்பட்டும், படகுகள் உடைக்கப்படும் அல்லல்பட்டபோது ஆறுதலுக்கு கூட போகவில்லை என்பதை சுலபமாக மறந்துபோவது ஆச்சர்யம் இல்லை.

எந்த இந்திய அரசாங்கத்தால் ஆதரவு அளிக்கப்பட்டதோ அதே இந்திய இத்தாலி கொடுங்கோல் சோனியா ஆதரவுடன் முள்ளி வாய்க்காலில் வைத்து ஒன்ரரை லட்சம் மக்களை அழித்தது சிங்கள அரசு. பிரபாகரனால்தான் தமிழ் மக்கள் நிம்மதி போனது என்று பரப்புரை செய்தவர்கள் எல்லாம் இன்றைக்கும் சிங்களனுக்கு கூட்டிக் கொடுத்துதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழக காங்கிரஸ் அடிமை நாதாரிகள் சோனியாவின் செருப்பாக இருப்பதையே வாழ்வின் கடமையாக நினைக்கிறானுங்க. 

ஈழம், தமிழர்களின் தாயக பூமியென்று கூட தெரியாத மக்களுக்காய் நமது தகவல் தொழில்நுட்ப சகோதரர்களால் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய ஆவணம் இது. ஈழ வரலாற்றைப் பற்றி தெரியாத அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய காணொளி தொகுப்பு இது. மிக நேர்த்தியாக, கடின உழைப்போடு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக உழைத்த அத்தனை சகோதர, சகோதரிகளுக்கும் என் வந்தனம்.

16 மே, 2011

பயோடேட்டா - ஜெயலலிதா...

பெயர்                 : ஜெயலலிதா
இயற்பெயர்      : கோமளவல்லி 
தலைவர்           : எம்.ஜி.ஆர் (பேருக்கு மட்டும்)
துணைத் தலைவர் : சசிகலா (அறிவிக்கப்படாத)
மேலும்
துணை தலைவர்கள்
: தினகரன்,திவாகரன்,இளவரசி, வெங்கடேஷ்
                                            மற்றும் சசிகலா குடும்பத்தினர் அனைவரும் 
வயது                  : பக்குவப்பட்டிருக்க வேண்டிய வயது
தொழில்             : முன்னாள் மந்திரிசபையின் ஊழல்களைத் தோண்டியெடுப்பது
பலம்                    : தன்னை மட்டுமே நம்புவது 
பலவீனம்            : எம்.ஜி.ஆரை சொல்லி ஒட்டு கேட்க வேண்டியிருப்பது 
நீண்ட கால சாதனைகள்  : கலைஞரின் சொச்ச முடியையும் கொட்ட வைத்தது 
சமீபத்திய சாதனைகள்    : 148
நீண்ட கால எரிச்சல்           : ஆண்கள் 
சமீபத்திய எரிச்சல்             : தேமுதிகவுக்கு 29
மக்கள்                            : வேறு வழியில்லாமல் ஓட்டுப் போடுபவர்கள்
சொத்து மதிப்பு            : மூனாவது ரவுண்ட் இப்பதானே ஆரம்பிச்சு இருக்கோம்
நண்பர்கள்                      : முன்பு வைகோ , இப்போது விஜயகாந்த் , தா.பா, மோடி
எதிரிகள்                         : காலில் விழாதவர்கள் 
ஆசை                               : உலக ஜனாதிபதி ஆவது 
நிராசை                           : பிரதமர் ஆவது 
பாராட்டுக்குரியது        : குருட்டு தைரியம் 
பயம்                                 : அப்படின்னா?.. 
கோபம்                            : பெண்டிங்கில் இருக்கும் நீதிமன்ற வழக்குகள்
காணாமல் போனவை : வளர்ப்பு மகன் 
புதியவை                          : புனித ஜார்ஜ் கோட்டை
கருத்து                               : கட்சிக்காரார்களுக்கு தனியாக இருக்க கூடாதது 
டிஸ்கி                                 : சோனியா டீ பார்ட்டிக்கு கூப்பிட்டு இருக்காங்க,
                                                 கலைஞர் ரொம்பத்தான் படுத்திட்டாரோ!

14 மே, 2011

ஒரு தீர்ப்பை எழுதி முடித்திருந்த போது...

நான் ராஜாவாகவும் இருந்த
ரா.. ஜ்..ஜி..யத்தில்
எனது கட்டுப்பாட்டுக்குள் இல்லை
மக்கள்
எனது மக்கள்..

கொத்து கொத்தாய்க்

கொன்று முடித்தபோதும்
வாளாவிருந்தேன்
குறைந்த பட்ச பொது செயல் திட்டத்தின்
குடும்ப நலனுக்காக..

வக்கனையாய்

வசனம் எழுதினேன்
வரிவரியாய் வீரம் பேசினேன்
விசிலடித்து, கைதட்டி
பின்னே நின்றது தமிழ் கூட்டம்
ஓட்டம் எடுத்தது
ஆரியர் கூட்டம்..

மூத்த இளவரசன்

பட்டத்துக்கு ஆசைப்பட
உரிமை இளையவன் வெதும்பி நிற்க
இளவரசியோ வழக்கில் சிக்க
இன்னொருமுறை
காவு கொடுக்க கம்பி வேலிக்குள்
மிச்சம் இருப்பான்..

தமிழ்தான் நான்

நான்தான் தமிழ்
குஷ்பூவின் தமிழ்
மானாட மயிலாட மயக்கம் வரும்
தமிழ்..

குடி

நன்றாகக் குடி
உன் கூலி முழுவதையும் குடி
கஞ்சிக்கு உத்தரவாதம் தருகிறேன்
அதையும் குடித்துவிட்டு
தொலைக்காட்சியில் களி
களைத்து விழுந்தபின்
108 வரும்
காப்பீட்டால் காப்பாற்றப்படுவாய்
செத்தாலும் தருவேன் பணம்
என்ன தரவில்லை நான் ..

சும்மாவா கேட்டேன்

ஓட்டு
இந்தக் கையில் துட்டு
அந்தக் கையில் ஓட்டு ..

சொந்தமாக எதுவுமில்லை

இருந்த வீட்டையும்
எழுதி வைத்துவிட்டேன்
என் மனைவியுடையதும்
பிள்ளைகள்,
பேரப் பிள்ளைகளுடையதும்
உங்கள் கண்களை உறுத்தினால்
இருக்கவே இருக்கு
வாசன் ஐ கேர்..

இத்தாலி அன்னை கைவிட

இருந்த பாபா போய்விட
யாரிடம் போவேன் நான்
இனி யாரிடம் போவேன் நான்..

என்ன கொண்டு வந்தேன்

என்ன கொண்டு போகப் போகிறேன்..

ஒப்பற்ற தலைவனே

ஒப்பாமல் போனாயே
இனி எப்போதும் தப்பாது
தப்பாகவும் இருக்காது
தமிழனின் வாக்கு..

12 மே, 2011

பயோடேட்டா - சோனியா காந்தி...

பெயர்                         : (அன்னை) சோனியா            
இயற்பெயர்               : எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ
தலைவர்                    : அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி
துணைத்தலைவர்    : ராகுல், மன்மோகன்
மேலும்
துணைத்தலைவர்கள் : வின்செண்ட் ஜார்ஜ், சிவசங்கர் மேனன், 
                                                  எம்.கே நாராயண் உள்ளிட்ட மலையாளிகள் மட்டும்
வயது                    : வெள்ளையனை வெளியேற்றுவதற்காய் நடந்த                                                                 கப்பற்படைப்  புரட்சி நடந்த ஆண்டு பிறந்தவராம்!!!(1946)          
தொழில்              : "இந்தியா விற்பனைக்கு" என்று விளம்பரபோர்டு எழுதுவது
பலம்                     : நேரு குடும்ப மருமகள் , காந்தி என்ற குடும்பப் பெய்ர்
பலவீனம்            : இத்தாலிப் பெண்மணி
நீண்டகால சாதனைகள்   : போஃபர்ஸ் வழக்கிலிருந்து குவாத்ரோச்சியையும்,
                                                          ராஜீவ் கொலைவழக்கிலிருந்து 
                                                          சந்திராசாமியையும் பாதுகாத்தது
சமீபத்திய சாதனைகள்     : ஈழத்தில் சொக்கப்பனை கொளுத்தியது
நீண்டகால எரிச்சல்            : மேனகா & வருண்(காந்தி)
சமீபத்திய எரிச்சல்              : ஆனானப்பட்ட கருணாநிதிக்கே ஆப்பு வைத்த 
                                                           தனக்கு, மம்தா அல்வா கிண்டியது
மக்கள்                                  : தலைமையைக் கேள்வி கேட்காதவர்கள்
சொத்துமதிப்பு                 : சொந்தக்கார் கூட இல்லையாம் (சு.சாமி கவனிக்க!)
நண்பர்கள்                          : இப்போது ஒபாமா, ராஜபட்சே, இடையில் கருணாநிதி,
                                                    எப்போதும் குவாத்ரோச்சி
எதிரிகள்                             : தமிழர்கள் அனைவரும் புலிகளே
ஆசை                                  : பிரதமர் பதவி
நிராசை                              : தியாகதீபம் ஆக்கிவிட்டார்கள்
பாராட்டுக்குரியது        : நைந்து, கிழிந்துபோன காங்கிரஸ் துணியை 
                                                  ஒட்டுப்போட்டது
பயம்                                    : ராகுலுக்கு பிரதமர் பதவி வர்ற வரைக்கும் 
                                                 கட்சி இருக்குமா?
கோபம்                               : ஈழப்படுகொலைக்கும், தமிழ்மீனவர்
                                                  கொலைகளுக்கும் நியாயம் கேட்பவர்கள்மீது
காணாமல் போனவை   : மனிதநேயம்
புதியவை                               : மே 13 தெரியும்
கருத்து                                    : மன்மோகன் வாயால் சொல்ல வைக்கப்படுவது
டிஸ்கி                                     : 1968-ல் திருமணமாகி வந்தவர், பதினாறாண்டுகள் 
                                                      கழித்து 1984-ல் தான் இந்தியக்குடியுரிமை பெறுகிறார்
                                                      என்றால்,என்னே அவரது இந்தியப்பற்று?!

10 மே, 2011

வெயில்...

"ஒரு வெறிநாயின் வாயிலிருந்து ஒழுகும் எச்சில்போல ஊரெங்கும் வெயில் ஒழுகிக் கொண்டிருக்கின்றது" என்று ஒரு கட்டுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லி இருப்பார்.

நினைவு தெரிந்த நாட்கள் முதலாகவே எனக்கு ஆகாத எதிரி வெயில்தான். வாழ்வின் பக்கங்களில் பெரும்பாலானவை இருட்டினால் நிரப்பப்பட்டவை என்பதனாலும் கூட இப்படி ஒரு வெயில் வெறுப்பு என் மனதை பட்டுப்போக வைத்திருக்ககூடும். தனித்த இரவுகளில் நிலாவும், நட்சத்திரங்களும் சொல்லும் ஆயிரம் கதைகள் போலல்லாது பகல் என்னை மனிதர்களால் நிரப்பி வைத்ததாலும் பிடிக்காமல் போயிருக்கக் கூடும். கூடுமானவரைக்கும் வெயில் நாள் பகலில் கூட்டுக்குள் வாழப்பழகிவிட்ட ஆந்தை என மாறிவிட்ட என் இரவுகளையும் வெறுப்பாக்க முயலுகிறது இப்போது சென்னையின் மே மாத வெயில். வெயில் என்னுள் எப்போதும் வேப்பிலைச்சாற்றைப்போல் ஒரு கசப்பை ஊறவைத்தபடியே இருக்கின்றது

எத்தனை இடர்பாடுகளை மழை எனக்குத் தந்திருந்த போதிலும். சேற்றுப்புண் வந்து பாதங்கள் வெந்து சுரைச்செடியின் இலைகளையோ, சைப்பாலையோ அம்மாவின் வசவுகளுடன் கலந்து தடவிக்கொண்ட இரவுகளிலும் மறுநாள் மழைக்கான கற்பனைகள்தான் தூங்கவைக்கும். மழைவிட்டபின்னும் பன்னீர் தெளிக்கும் மரக்கிளைகள் என் மழைக்கால வாசஸ்தலங்களாக இருந்தன.

முதல் காதல் மலர்ந்த மழைராத்திரி என்னை வீடுவரைக்கும் கொண்டு வந்து சேர்த்தது ஒரு பெருமழைதான். அதன்பின் அவள் என்னைவிட்டு பிரிந்தபின் போதையில் ஆற்றங்கரையில் மயங்கிக் கிடந்தபோது நனைத்து எழுப்பியதும் ஒரு மழைதான். கிராமத்து நாட்களில் காலைப்பனி வரப்புகளின் ஓரத்துப் புற்களில் படிந்திருக்க செருப்பணியாக் கால்களை கழுவி விளையாடும் நாட்கள் கடந்தபின் வரும் சித்திரை மாதத்துக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே பிறந்தவன் நான்.


என் மூத்த சகோதரன் கணேசன் அண்ணனுக்கு வெயிலென்றால் கொள்ளைப்பிரியம் மூடிய மேகத்தை பார்க்க நேர்கையில் எல்லாம் பிரகாசமாக ஜொலிக்கும் என் முகத்தின் நிழல் அவரை சோகமாய் காட்டும் எனக்கு. நான் சிங்கப்பூரில் அண்ணனுடன் இருந்தபோது அங்கு தினசரி ஒரு முறையாவது என் விருப்பம்போல் பெய்த மழையை எனக்காக அவரும் பொறுத்துக்கொள்வார். வாழ்வியலின் சோகம் எப்போதும் தன்னை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும் அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். சுஜாதாவின் பரம விசிறி. உதவிய நண்பர்கள் அவருக்கு துரோகத்தையே பரிசளித்தபோதும் சிரித்தபடி ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். 

ஒருமுறை விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் வெயில் பற்றிய சிலாகிப்பை ஒரு தொடரில் எழுதி இருந்ததை அவரிடம் காட்டியபோது வெயிலின் மீதிருந்த என் வெறுப்பையும் மீறி அவரை நான் நேசிப்பதை புரிந்துகொண்ட கணத்தில் இருந்து எனக்காக மழையை நேசிக்க முயல்வதாக என் கைபிடித்து சொன்னார். அப்போது திடீரென தூறல் போட ஆரம்பிக்க சிரித்துக்கொண்டே நனைந்தவாறு என்னுடன் நடக்க ஆரம்பித்தார்.

சென்னையில் மூன்று நாட்கள் பெரு மழையொன்று தொடர்ச்சியாக பெய்த மூன்றாம் மழைநாள் இரவில் முகப்பேரில்  தங்கியிருந்த வீட்டில், நள்ளிரவில் கிணறு நிரம்பி வீட்டுக்குள் தண்ணீர் வர ஆரம்பிக்க நிரம்பிகொண்டிருந்த வீட்டின் படுக்கையறையில் ஒரு வயது மகனுடன் மனைவியும், நானும் கொட்டக் கொட்ட விழித்திருந்தோம். எங்கிருந்தோ படையெடுத்த பூரான்களை கையில் வைத்திருக்கும் டார்ச் லைட்டால் கண்டுபிடித்து ஒவ்வொன்றாய் கொல்லத் துவங்கினேன். மறுநாள் காலை ஒரு ஆட்டோவில் சமைப்பதற்கு சில பாத்திரங்களையும் சிலிண்டரையும், கேஸ் ஸ்டவ்வையும் எடுத்துக்கொண்டு எனது அலுவலகம் வந்து மழைவிடும் வரைக்கும் அங்குதான் தங்கியிருந்தோம். அப்போதும் கூட எனக்கு மழை மீதான காதல் கூடித்தான் போனது.


அதன்பிறகு தியாகராய நகருக்கு வீடு மாறி வந்து ஒரு வருடம் கழிந்தபின் அந்த வீட்டை அலுவலகமாக மாற்றிவிட்டு எதிரே இருந்த வீட்டுக்கு மாறுவதற்கு அட்வான்ஸ் கொடுக்கப் போனபோது  அந்த வீட்டைப் பார்த்ததும் வீட்டு உரிமையாளரிடம் மழை வந்தால் வீட்டுக்குள் தண்ணீர் வருமா? என்று கேட்டபோது கடந்த 32 வருடங்களில் ஒருமுறை கூட அப்படி ஆனது இல்லை என்று சொல்லிவிட்டு, ஏன் அப்படி கேட்டீர்கள்? என்றார். நான் சிரித்துக்கொண்டே என் ராசி அப்படி! என்றேன். அப்போது அவர் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார் அந்த வருட மழை என் ராசியை உண்மையாக்கும் என!.

சொன்னமாதிரி அந்த வருடமும் மழை தொடர்ந்து பெய்ய ஆரம்பித்தது. அப்போது என் இரண்டாவது மகன் மனைவியின் வயிற்றில் இருந்ததால் முன்கூட்டியே அலுவலகம் வந்துவிட்டோம். அந்த வீட்டிற்குள்ளும்   தண்ணீர் நிரம்பியது, அந்த வாரம் முழுக்க வீட்டு உரிமையாளர் எங்களுக்கும் சேர்த்து சமைத்து தந்தார். அவர் நூறு தடவையாவது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததற்காய் வருத்தம் தெரிவித்தாலும் அவர் மீதும் மழை மீதும் எனக்கு கோபமே வரவில்லை.


எனது சகோதரியின் மகன் வீரவேல் இப்படித்தான் ஒரு மூன்று நாள் மழைநாள் முடிவில் விபத்தில் சிக்கி அதன்பின் ஐந்து நாள் கழித்து மருத்துவமனையில் இறந்துபோனான். அப்போதும் அவன் இறுதிச் சடங்கு முடிந்த மறுநாள் ஒரு தனித்த இரவில் ஆகாயத்தில் இருந்த ஒற்றை மேகத்தைப்பார்த்து இன்னும் ஒரு நாள் சேர்த்துப் பெய்திருந்தால் ஒருவேளை அவன் காப்பாற்றப்பட்டு இருப்பானே என அதனிடம் வருத்தப்பட்டு அழுதேன். எங்கிருந்தோ இரவுப் பறவையொன்று என்  தனிமையை நீக்க தொடர்ந்து கூவிய  வண்ணம் இருந்தது.

குறும்புகள் செய்யும் காதலியைப்போல மழை என்னுடன் எப்போதும் தீராவிளையாட்டினை ஆடிக்கொண்டே இருக்கிறது. முகத்தில் பட்டுத்தெறிக்கும் மழையின் முதல்துளி என்றுமே எனக்கு முதல்முத்தம் அளிக்கும் கிளர்ச்சியையே தந்து கொண்டிருக்கிறது. 


இப்போதுமே வெயில் என்று தலைப்பு போட்டுவிட்டு மழை பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இந்த வெயிலை என்ன செய்ய
அறையெங்கும்
பரவும் புழுக்கத்தில் கசியும் வியர்வை
பெருக்கெடுத்து ஆடைகளை நனைக்க
பெரு நகரமெங்கும் இப்படியாக
வெயிலை வருடம் தப்பாது வைதாலும்
வெறுப்புடன் பொருத்துக் கொள்ளத்தான்
வேண்டியிருக்கிறது ஒரு
வேண்டா விருந்தாளியைப் போல... 

கீர்த்தனாவும், கெடா வெட்டும்...

எல்லாவற்றையும் வெவரமா  சொல்லணும்
பெரிய அத்தைக்கு 

நடுமாமா தண்ணி  போட்டால் மட்டும் 
தகராறு செய்வார்
பங்காளிக அத்தனை பேருக்கும் 
ஆளனுப்பி சேதி சொன்னாப்  போதும் 
மாமா வகையறாக்களுக்கு 
நேர்ல போய்த்தான்  கூப்பிட்டாகனும் 
ரெண்டு நாளாவே டவுனுக்கு போயி 
சாமானெல்லாம் வாங்கி வந்த பெரிய சித்தப்பா
அம்மா சாப்பிட சொல்லலன்னு கோச்சுகிட்டு போச்சு
சித்தி பாவம் எதைச் சொன்னாலும் கேட்டுக்கும்

இந்த தடவ குல தெய்வத்துக்கு நாலு ஆடு வெட்டியும்
கறி பத்தல 
தண்ணி அடிச்சுட்டு, 
ரகள செஞ்சு, 
சவால் விட்ட சொந்தம் 
அடிச்ச கூத்துல ஐயனாரே ஓடிருக்கணும்..

செல்வி அக்கா கல்யாணம் வரைக்கும் 
அதே கொறை தொடர
கறிக்கு செத்த பயலுவோன்னு அப்பா சொல்ல 
ராமசாமி மாமா மொறைக்க 
கல்யாண வீடு கதிகலங்கிப் போச்சு..

கூடப் படிச்ச மாமெம் பொண்ணு கீர்த்தனா 
குடும்ப உத்தரவால் பேசவே இல்ல என்கிட்டே 
போடி போக்கத்தவளேன்னு நானும் பேசல 
அதாச்சு வருசம் ரெண்டு ..

நேத்தைக்கு
பெரியத்தை செத்துப் போச்சுன்னு ஊருக்குப் போனா 
மாமென்காரனுக்கு  டீ ஊத்திக்  கொடுக்கிறாரு அப்பா
மாப்ள எம்பொண்ணு ஒனக்குதாண்டான்னு என்கிட்டே மாமா சொல்ல 
கடந்து போன மாமெம் பொண்ணு  கீர்த்தனா
வெக்கப்பட்டா பாருங்க 
இன்னொரு சண்டை வராம இருக்கனுன்னு 
குலதெய்வத்துக்கு இந்த தடவ 
பத்து கெடா வெட்டுறேன்னு
வேண்டிகிட்டே
ன் ..

9 மே, 2011

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்...

ஒருகாலத்தில் போர் என்றால் கத்தி, வாள், ஈட்டி, வில் முதலிய ஆயுதங்களோடும் ரத,கஜ,துர,பதாதிகள் எனப்படும் நால்வகைப்படைகளோடும் நடைபெறும் என்று படித்திருக்கிறோம். காலம் நவீனமாக, நவீனமாக துப்பாக்கிகளும், பீரங்கிகளும் போர்க்களத்தினை ஆக்கிரமித்தன. பிறகு அணு ஆயுதங்களும் ஏவுகணைகளும் வந்தன. இருபதாம் நூற்றாண்டின் முடிவில் பயோகெமிக்கல் வார் என்கிற சொற்பதமும் புதிதாகச் சேர்ந்துகொண்டது. ஆனால் இப்போது நடைபெறும், இனி வருங்காலங்களில் நடைபெறப்போகும் போர் என்பது பொருளாதாரப்போர்! நேரடியாகவும், மறைமுகமாகவும் பொருளாதார ஆக்கிரமிப்பாகவும், பொருளாதாரத்தடைகளாகவும் நடைபெறும் இந்தப்போரில் ஆதிக்கம் செலுத்தும் நாடுதான் உலக வல்லரசுச் சக்தியாக இருக்க முடியும். அது என்ன பொருளாதாரப்போர்?!

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல்,அந்நிய மூலதனம் என்ற கூச்சல் நம் செவிப்பறையை கிழித்துகொண்டிருக்கும் நேரம் இது. அந்நிய மூலதனமும், பன்னாட்டு நிறுவனங்களும்,சிறப்பு பொருளாதார மண்டலங்களும் சொர்க்கத்தை பாரத கண்டத்திற்கு இறக்குமதி செய்துவிடும் என்று நம்மை நம்பவைக்க ஊடகங்கள் ஒற்றைக்காலில் தவமியற்றிகொண்டிருக்கின்றன.

புத்தகத்தை பிரித்து முதல் பக்கத்தில் பதிப்புரையை வாசித்தால் அதன் முதல் பாராதான் மேலே இருப்பது. என் சோசலிஸ்ட் நண்பன் சொன்னான், நம்முடைய உண்மையான எதிரி அமெரிக்காவும், ஐரோப்பாவும்தான் அவர்கள் எப்போதுமே அவர்களின் சோதனைச்சாலை எலிகளாகத்தான் நம்மை நினைத்து உபயோகித்து வருகிறார்கள் என. அதுதான் அப்பட்டமான உண்மையும் கூட என நம்மிடம் சொல்லும் ஒரு அமெரிக்க அதிகாரியின் வாக்குமூலம்தான் இந்தப் புத்தகம்.

அமெரிக்க பெரியண்ணனை பொறுத்தவரை தன் செல்வாக்கினை உலகெங்கும் நிலைநிறுத்த என்னவேண்டுமானாலும் செய்யத்துணிந்த ஆள். அதற்காக செலவழிக்கும் தொகையை உலக மக்களின் வறுமையை இல்லாதொழித்துவிட முடியும். ஆனால் உலகின் ஒப்பற்ற தலைவனாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அமெரிக்கா மூன்றாம், நான்காம் உலக நாடுகளை தனது பொருளாதார மாயவலையால் சிக்கவைத்து அடிமைப்படுத்தி விடுகிறது.

ஜான் பெர்கின்ஸ் என்கிற அமெரிக்க அதிகாரியினால் எழுதப்பட்டு இரா.முருகவேள் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்கிற நூலை படித்து முடித்தும் நம் இந்திய தேசமும் அமெரிக்காவின் கைப்பாவையாக மாறிவிட்ட அவலத்தை உணர முடிகிறது. இந்தியாவும், அமெரிக்காவும் 2005 நவம்பர் 12 ஆம் தேதி கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தம் மட்டும்தான் நமக்குத்தெரியும். அதே நாளில் இன்னொரு ஒப்பந்தமும் கையெழுத்தானது அது இந்திய அமெரிக்க வேளான்மைக்கல்வி, ஆரய்ச்சி, சேவை மற்றும் வணிகம் பற்றிய ஒரு ஒப்பந்தம்தான் அது. கிட்டத்தட்ட நமது மரபுசார்ந்த விதைகளை அழித்துவிட்டு மரபணு மாற்ற விதைகளை விற்பதற்கு வழிகோலும் ஒப்பந்தம் அது. அணுசக்தி ஒப்பந்தம் பற்றி மட்டும் வாய்கிழிய பேசிய நம் இரண்டாவது ஒப்பந்தத்தை பற்றி பேசாமல் விட்டதன் பலனை அனுபவிக்கத்தான் போகிறோம்.

இனி கொஞ்சம் ஜான் பெர்கின்ஸ் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:
1963 ல் பிறந்த ஜான் பெர்கின்ஸ் படிப்பை முடித்தபின் மெய்ன் என்ற அமெரிக்க நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறார். ஆரம்பத்தில் தன் வேலைகளைப்பற்றி அதிகம் அறியாத அவர் போகப்போக தான் ஏற்றுக்கொண்ட பணியினை திறம்பட செய்யப்போக தான் ஒரு பொருளாதார அடியாளாக பணியாற்றுவதை உணர்கிறார். இவரின் மற்றும் இவர் அடங்கிய குழுவின் வேலையே எண்ணெய் வளம் மிக்க நாடுகளுக்குள் நுழைந்து அங்குள்ள வளங்களை ஆராய்ந்து மெல்ல அந்நாட்டின் அரசியல்வாதிகளை, அதிகாரிகளை வளைத்து அவர்கள் உதவியுடன் முதலில் அந்நாட்டின் பொருளாதார, உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவது. இந்த உள்கட்டமைப்பு வசதிகள் என்பதே மின்சாரம், சாலைகள், துறைமுகம் சார்ந்தவையாக மட்டுமே இருக்கும். இதற்க்கு மட்டுமே அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் காரணம் என்னவெனில் பின்னாளில் அமெரிக்காவின் நிறுவனங்கள் உள்நுழையும்போது அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முன்பே ஏற்ப்படுத்தி வைக்கத்தான்.

இப்படி ஆரம்பத்தில் செய்யப்படும் அனைத்து கட்டமைப்புக்களுமே உலகவங்கியால் சொற்ப வட்டியில் கடன் வழங்கப்படும். மக்களும் ஆகா முட்டாப் பசங்க இவ்வளவு குறைவான வட்டில தருகிறானே என அவனின் உள்நோக்கம் புரியாமல் ஏற்றுக்கொள்வார்கள். இந்த இடத்தில் இப்போது ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன் நமது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கி கொடுக்கும் கடனுக்கு வட்டி எவ்வளவு தெரியுமா? 0.01%. அதன்படி திட்டங்கள் செயலான பிறகு தங்கள் நிறுவனங்களை உள்ளே கொண்டுவரும் அமெரிக்கா. அடுத்தடுத்த உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வலைவிரித்து அப்போதைய மந்திரிமார்களை சரிகட்டி கடன் வாங்கவைக்கும் இந்தக் கடன்களுக்கான வடி கணிசமாக உயர்த்தப்பட்டு அதிகப்படியான கடன்களை வழங்கி மீளாக் கடனில் சிக்கவைத்து விடும்.

இப்படி ஆரம்பித்த இந்தோனேசிய அரசாங்கம் இன்றைய தேதிவரைக்குமே தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை. இந்த அமெரிக்கர்களின் புத்திசாலிதனத்தை நாம் இங்கேதான் புரிந்துகொள்ள வேண்டும். தான் உள்ளே நுழைய மந்திரிமார்களுக்கு கொடுக்கும் லஞ்சப்பணத்தை சுவிஸ் வங்கி கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் போட்டுவிடும். பொதுவாகவே சுவிஸ் வங்கிகளில் நாம் வைத்திருக்கும் கள்ள கணக்குகளுக்கு நாம்தான் சேவைத் தொகை செலுத்த வேண்டும். ஆனால் அந்தப் பணத்தை அந்த வங்கிகள் வெளியில் வட்டிக்கு விட்டு சம்பாதித்துகொள்ளும். ஒரு முறை ஐரோப்பியர் ஒருவர் சொன்னார் "பணக்கார இந்தியா ஏழை ஐரோப்பிய நாடுகளுக்கு கடன் தருகிறது" என. அதாவது சுவிஸ் வங்கிகளிடமிருந்து கடனாக வாங்குவதே ஐரோப்பாவும், அமெரிக்காவும்தான்.

நமது இந்திய அரசியல்வாதிகளின் பணம் கிட்டத்தட்ட 72 லட்சம் கோடிகள் சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டு இருப்பதாக வந்திருக்கும் தகவல்களை இப்போது யோசித்துப்பாருங்கள். நம்மை எந்த அளவுக்கு இந்த அரசியல்வாதி பன்னாடைகள் அடகு வைத்திருக்கிறார்கள் என்பதை. இப்போது சில மாநிலங்களில் இருக்கும் மின்சாரப் பற்றாக்குறையை நீக்க நிச்சயம் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனகள் உள்ளே நுழையப்போகின்றன. அதற்க்கான முன் ஏற்ப்பாடுகளைதான் இப்போதைய ஆளும் வர்க்கத்தினர் தன்னிறைவு திட்டங்களை தாமதமாக செயல்படுத்துகின்றனர். நம்மை அணுசக்தி மின்சாரத்தை எற்றுக்கொள்ளவைக்கும் சதியாகத்தான் இந்தப் புத்தகத்தை படித்தபின் நான் இதையும் பார்க்கிறேன்.

இந்தப் புத்தக ஆசிரியர் இந்தோனேசியாவின் கிராமங்களில் சுற்றியபோது அங்கிருக்கும் கம்யூனிஸ்டுகள் அப்போதே அமெரிக்காவுக்கு எதிராகத்தான் இருந்தார்கள். அவர்களுக்குப் புரிந்து இருந்தது. ஆனால் அவர்களின் புரிதல் வேறுவிதமாக இருந்தது என்கிறார். அதாவது அது கிறிஸ்துவர்கள், இஸ்லாமியரை அழிக்கப்போகிறார்கள் என்பதாகவே பரப்புரை செய்யப்பட்டு இருந்தது. இந்தோனேசியா முதலான அரபு இஸ்லாமிய நாடுகளை கபளீகரம் செய்வதுதான் அமெரிக்காவின் நோக்கமாக இருக்கிறது என அவர்கள் கருதினார்கள் எனக்குறிப்பிடுகிறார். உண்மையில் அமெரிக்காவின் நோக்கமே வேறாக இருந்திருக்கிறது அது தன் பொருளாதார, ராணுவ, நிறுவனங்களின் வளர்ச்சியை அந்த நாடுகளில் நிலைநிறுத்துவதையே அது விரும்பியது.

இந்தோனேசியாவை விடவும் சவூதி அரேபியாவில்தான் அமெரிக்கா தன் இருப்பை வெற்றிகரமாக நிலைநாட்டியது. அங்கிருக்கும் அரச குடும்பங்களை எண்ணையிலிருந்து கிடைத்த பல்லாயிரம் கோடி டாலர்களையும் அமெரிக்க முதலீடு செய்யவும் அதில் கிடைக்கும் வட்டியைக்கொண்டு நீர் விநியோக முறைகள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், பெரு நகரங்கள், விமான தளங்கள் ஆகியவற்றை அமைக்க அமெரிக்க நிறுவனங்களையே அமர்த்தியது.    

இவர்கள் தோல்வியடைந்த திட்டங்களும் இருக்கவே செய்கிறது, பனாமா மற்றும் ஈரானிடம் இவர்கள் பருப்பு வேகவில்லை. ஈராக்கை தந்திரமாக குவைத்தை பயன்படுத்தி வெற்றி கண்டாலும் அதற்காக அமெரிக்கா கொடுத்த விலை அதிகமே. இப்போது ஆப்கனில் தன் இருப்பை நிலைநாட்டும் அமெரிக்காவின் முக்கிய இலக்கே எண்ணெய் வளம்தான்.

இந்தியாவில் அடிமைகள் சல்லிசாக கிடைப்பதால் அமெரிக்காவுக்கு பிரச்சினையில்லை. இந்தியா தனக்கு எதிர்ப்பாக இருந்தவரைக்கும் பாகிஸ்தானை ஆதரித்த அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியைப் பார்த்து இந்தியாவிற்குள் தன் காலடியை எடுத்துவைத்தது. ஆரம்பத்தில் தனக்கு சாதகமாக இருந்த பி.ஜெ.பி.யை விடவும் சோனியா சிறந்த தேர்வாக தெரிந்ததும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அதன் இருப்பை தீர்மானித்தது. சிதம்பரம் போன்றவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் செயிக்க வைக்கப்பட்டதற்க்கு இருக்கும் அசாத்தியமான வலைப்பின்னலை அறியாமல் கைமாறிய கோடிகளைப் பற்றிய கதைகளை ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்தே கைமாறிய பெருமையாக பேசிக்கொள்கிறோம். இன்றைக்கு இந்தியாவுக்கே முன் மாதிரியாக தமிழகத்தில்தான் ஓட்டுக்கு பணம் தருகிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு கொடுத்த ஒரு பொருளைப் பற்றியே பேசமுடியாத நமக்கு ஐந்து வருடங்கள் கேவலம் நூறுக்கும், ஐநூறுக்கும் விலைபோகிறோம்.

ஒரு கேவலமான செயலை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தின் அடுத்த ஆட்சிக்காக காத்திருக்கும் கருணாநிதி சாகும்வரைக்கும் ஆட்சியில் இருந்து மிச்சமிருக்கும் ஈழத்தமிழனை காவு கொடுக்கவும், இந்தியத் தமிழனை குடிகாரனாக்கவும் முயன்றுவருகிறார். இதற்க்கு போட்டியாக வரும் மிடாஸ் ஆத்தா என்னென்ன செய்ய காத்திருக்கோ.

இப்படியாக உலக தாதாக்களிடமும், உள்ளூர் தாதாக்களிடமும் அடிமையாக கிடக்கும் நாம் ஒருபோதும் சுதந்திரமாக வாழ வாய்ப்பே இல்லை என்பதை இந்தப்புத்தகம் முழுமையாக நமக்கு உணர்த்துகிறது. சமூக அக்கறை உள்ள ஒவொருவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.


ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
ஆசிரியர்: ஜான் பெர்கின்ஸ் தமிழில்: இரா.முருகவேள்
வெளியீடு: விடியல்  பதிப்பகம் , கோவை
விலை:ரூ.150 /-
மின்னஞ்சல்: sivavitiyal@yahoo.co.in

8 மே, 2011

இந்தியாவின் பட்டினியாளர்கள் - எங்கே போகிறது இந்தியா? - பகுதி - ஆறு...

இந்தியாவை வல்லரசாக்க கனவுகான சொன்னவர் முன்னால் ஜனாதிபதி கலாம் அவர்கள். கவனிக்க அவர் கனவு மட்டும்தான் கானச்சொன்னார். காங்கிரஸ் பேரியக்கம் இந்தியாவை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுவருகிறது. இன்றைக்கு உலகமே பொருளாதாரத்தில் முன்னோக்கி நடைபோடுகிற அதே வேளையில் இந்திய தேசம் ஊழல் மலிந்து ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கேவலமான அரசியல் விளையாட்டை சந்தித்து விட்டது.

முக்கியமாக மிகுதியான மக்கள் நமக்கென்ன மனைநிலையில் இருப்பதால்தான் இந்த அவலநிலை மேலும் மேலும் கூடிக்கொண்டே போகிறது. நாம் எல்லாம் கிடைத்துவிட்டது என பெருமையாக கோக் சாப்பிட்டுக்கொண்டே IPL match பார்க்கும் அதே அரங்கத்துக்கு வெளியேதான் ஒருவேளை உணவுக்கு பழைய பேப்பரும்,பிளாஸ்டிக்கும் பொறுக்கி வயிறு கழுவும் கூட்டமும் வசிக்கிறது. நம் நாட்டில்தான்  நேர்மையான விசயங்களை செய்யவே காசுகொடுக்க வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் பட்டினிக்காலம் இருந்தபோது அதனைப்போக்க M.S. சுவாமிநாதன் தலைமையில் விவாசாயப் புரட்சி தொடங்கப்பட்டு பன்னாட்டு உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு விளைநிலங்களில் மிகுதியான விளைச்சல் காணப்பட்டு பசி போக்கப்பட்டதாக இன்னும் கதை பேசிக்கொண்டு இருக்கிறோம். உண்மையில் நடந்துகொண்டிருக்கிறது என்னவென்றால் பன்னாட்டு நிறுவனங்கள் மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட என்டோசல்பான் போன்ற பூச்சிக்கொல்லிகளை மிகத்தாரளமாக இந்தியாவில் விற்பனை செய்துகொண்டு இருக்கின்றன. இந்திய சுதந்திரப்போரில் ஈடுபட்டவர்களை இந்தியர்களைக் கொண்ட படையணிகளை வைத்தே விரட்டினான் வெள்ளைக்காரன். அப்படிப்பட்ட தூய இனம்தான் நம் இந்திய இனம். இப்போதும் சுவாமிநாதன் போன்ற காசுக்கு சோரம்போன ஆட்களால் இந்தியாவின் விவசாய வளம் அழிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கிடங்குகளில் வீணாகும் உணவுபொருட்களை இலவசமாக கொடுக்க முடியாது என்றார் நமது பொருளாதார மேதையான தலைப்பாகட்டு. இதே ஆசாமிதான் கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிடமுடியாது என்றும் சொன்னார். இன்னொரு விசயமும் சொன்னார் அதாவது பத்திரிகைகள் சொல்லும் அளவு நான் தவறு செய்யவில்லை என்று. இதெயல்லாம் கேட்டுவிட்டு காங்கிரசுக்கு ஒட்டு கேட்கும் அவலமும் கேட்க வேண்டியிருக்கிறது.

ஆனாலும் இந்திய அரசின் நூறு நாள் வேலைத்திட்டம், தமிழக அரசின் ஒரு ரூபாய் அரிசித்திட்டம் போன்றவற்றை நாம் பாராட்டியே ஆகவேண்டும். இதில் ஒரு ரூபாய் அரிசிக்காகத்தான் டாஸ்மாக் கடைகளை திறந்திருக்கிறோம் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். நூறு ரூபாய் கொடுத்து ஒரு குவார்ட்டர் வாங்கிக் குடிப்பவன் அந்தப்பணத்தில் நான்கு கிலோ உயர் ரக அரிசி வாங்கி சாப்பிட முடியும் என்பது புள்ளிவிவரப் புலியான அவரின் மண்டைக்கு உரைக்காததன் மர்மத்தை மதுச்சாலை அதிபர்களே அறிவார்கள்.

அமெரிக்காவின் டியூபான்ட் நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட நெல்விதைகளை இந்தியாவில் விற்பனை செய்ய முயன்று வருகிறது. பெங்களூரு வேளாண் பல்கலைகழகத்துடன் இணைந்து ஏற்கனவே தன் பணிகளை துவங்கிவிட்ட அது மெல்ல மொத்த பாரம்பரிய விதைகளையும் முடக்கிவிடும் அபாயம் இருக்கிறது. இதற்காக இந்திய அரசால் மரபணு பொறியியல் ஏற்புக் குழு துவங்கப்பட்டு அவர்களுக்கு ஆதரவான நிலையை கொண்டுவர முயல்கிறது. இப்போதைக்கு கர்நாடக விவசாயிகள் இதனை எதிர்த்தாலும் மானியம், இலவசம் என எதையாவது கொடுத்து சரிகட்ட முயல்வார்கள்.

இந்த தேசத்தின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்குமேல் ஊட்டச்சத்து குறைவாகவும், முப்பது கோடிக்கும் அதிகமான மக்கள் மூன்று வேலை உணவு கிடைக்காமல் அவதியுறுகின்றனர். பொதுவிநியோக சங்கிலி முறையாக கவனிக்கப்படாமல் பாதிக்கும் மேலான உணவுப் பொருட்கள் கள்ள சந்தைக்கு மாற்றப்படுகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களிலும், கிராமங்களிலும் இப்படி பொது விநியோக பொருட்கள் குறிப்பாக அரிசி, மண்ணெண்ணெய் போன்றவை நேரிடையாகவே உணவகங்களிலும், இட்லி, தோசை மாவு விற்கும் கடைகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

நடுத்தர மற்றும் நடைபாதை உணவுக்கடைகள் அத்தனையும் சுகாதாரம் ஒரு சதவீதம் கூட கடைபிடிக்காமல் நடத்தப்படுகின்றன. சுகாதார குறைபாடுகள் பற்றிய வழக்குகள் பதிவு செய்யப்படுகிறதா? என்றே தெரியவில்லை. இந்தியா போன்ற இயற்கை வளம் மிகுந்த நாட்டில்தான் இன்னமும் பட்டினிச் சாவுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. ஒரு மனிதனுக்கு தேவையான உணவு, உடை,இருப்பிடம் என இந்த மூன்றில் முதலாவதில் மட்டும் கூட இன்னும் தன்னிறைவு அடையாத தேசமாகத்தான் இந்தியா இருக்கிறது.

சாலை ஓரங்களில் இந்தியா முழுமைக்குமே குறைந்தது 200 பேராவது தினசரி பட்டினியால் அனாதையாக செத்துப்போகிறார்கள். அடிப்படையாக இருக்கும் நீர் ஆதாரங்களைக் கூட குடியிருப்புகளாக மாற்றும் திட்டங்களை ஏற்பாடு செய்யும் ஆட்சியாளர்களை வைத்திருந்தால் தண்ணீருக்காக தவிக்கும் நிலை கூடிய விரைவில் பெரிய அளவில் வரக்கூடும் அபாயம் இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி நாம் இன்னமும் சுகாதாரத்தில் பின்தங்கித்தான் இருக்கிறோம்.

மேலும் நாம் பயன்படுத்தும் மருந்துகள் அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கான மருந்துகளில் பெரும்பாலானவை தரமில்லாதவை. கடைகளில் கிடைக்கும் செட் மாத்திரைகள் இந்தவகையை சேர்ந்தவைதான். அடிப்படை உணவுமுதல் ஆடம்பர உணவு வரை இன்றைக்கு கலப்படமில்லாத பொருள்களை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. நாமும் வேறு வழியின்றி அதற்கு பழகிவிட்டோம். ஆனால் எதிர்கால நமது வாரிசுகள் அதனை அனுபவிக்கும்போது இந்த தேசமே செத்துப்போகும் அபாயம் வெகுதூரத்தில் இல்லை.

தொடர்புடைய சுட்டிகள்:

India State Hunger Index

Global Hunger Index

INTERNATIONAL FOOD POLICY RESEARCH INSTITUTE


7 மே, 2011

நட்பெனப்படுவது...

மதிப்பீடுகளின்
எள்ளலில் தொக்கி நிற்கும் நட்பில்
இன்னும் மிச்சமிருக்கிறது
கொஞ்சம் புன்னகையும்,
நிறைய கோபமும்.

புறமுதுகின் வசனங்கள்

ஆடிகளிலும் தலைகீழாகத் தெரிய
இன்னொரு ஆறுதலில்
குமுறும் செய்திகள் காற்றில் பரவ
துண்டிக்கப்படும் கணத்தில்
துடிக்கும் பல்லியின் வாலென
படபடக்கும் இதயத்தை நிறுத்த
தேவைப்படுகிறது ஒரு துளி
கண்ணீர்.

துவங்குவது போல் முடிவதேயில்லை
எப்போதும் நட்பு.

எல்லா நட்புகளிலும்
சிறிய குறைகளேனும்
இருந்து கெடுத்துவிடுகிறது.

அவனையெல்லாம்
மனுசனா மதிக்கறதேயில்லை என்றான்
இவன்
அதையே சொன்னான்
அவனும்.

பிரிந்தபின்னும்
பேசிக்கொண்டிருக்கிறோம்
மாற்றி மாற்றி
நேசத்தையும் துரோகத்தையும்.

அன்பை மட்டுமே தரும்

நட்பு
இனிமேலும் வாய்க்காது
உலகில்.

சுலபமாக மறைத்துவிட முடிகிறது
எல்லோராலுமே
தத்தமது துரோகங்களை.

6 மே, 2011

மரணகானா விஜி...

நான் கடவுளை நம்புவதில்லை
வீதிகள்தோறும் உண்டியல்
வைத்து பிச்சையெடுக்கும்
கேவலமானவனிடம்
நானெப்படி வைக்கமுடியும்
வேண்டுதல்களை..


விளிம்புநிலை மனிதர்கள் பற்றி நாம் அனைவருமே கேள்விபட்டோ அல்லது படித்தோ இருக்கலாம். சென்னை போன்ற பெருநகர வாசிகளுக்கு அவர்களை சந்தித்த அனுபவம்கூட இருக்கலாம். கோடிகளை கொள்ளையடித்து வாழும் கூட்டங்களுக்கு மத்தியில்தான் இதே மனிதர்களும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஏதோ ஒரு கட்சிக்காக தன் அடிப்படை நேர்மையைக்கூட அடகுவைத்துவிட்டு கோசம் போடும் அடிமைகள் நிறைந்த இதே ஊரில்தான் வாழ வழியற்று சோற்றுக்கே சிரமப்பட்டு சுடுகாட்டில் உறங்கும் தன்மானம் கொண்ட மனிதர்களும் வாழ்கிறார்கள்.

ஒரு சான் வயிற்றுக்கும் ஒருவேளை உணவுக்கும் உடலை விற்றுப்பிழைத்தாலும் சகமனிதர்களின் துன்பத்துக்காய் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது ஆதரவுக்கரம் நீட்டும் இவர்களைப்பற்றி அன்றாடம் சுக ஜீவனம் நடத்திவிட்டு வாய்கிழிய அரசியலும், பொருளாதாரமும் பேசும், அட்ச்சய திரிதியை அன்று தங்கம் வாங்க வரிசைகட்டும் நமக்கு தெரியாமல்போவதில் வியப்பொன்றும் இருக்கமுடியாது.

பதிவுகளிலும், பேஸ்புக்கிலும்(facebook), பஸ்சிலும்(buzz) வெட்டி அரட்டையும், பொன்ட்டாட்டிகளின் பெருமையும், கேவல வாழ்வை நடத்தும் அரசியல்வாதிகளை போற்றியும் அவர்களின் ஊழலுக்கு ஆதரவாக அலுவலக நேரத்தில் முதலாளிகளுக்கு துரோகம் செய்துகொண்டு மாய்ந்து மாய்ந்து சப்பைக்கட்டு கட்டும் ஜால்ராக்களும், சினிமாப் பாடல்களையும், சினிமாவையும் வைத்தே காலம்தள்ளும் மொக்கைகளும்  தம்மை சுற்றி நடக்கும் இம்மாதிரி விசயங்களை கண்டுகொள்வதே இல்லை. கோவில்களில், இல்லாத கடவுளுக்கு கோடிகளை இறைக்கும் மனிதர்கள் வாசலில் நிறைந்திருக்கும் பிச்சைக்காரர்களை கேவலமாக பார்ப்பதும் இங்குதான் நடக்கிறது.

இனியாவது ஒரு சகமனிதனின் துன்பம் பார்த்தால் குறைந்தபட்சம் ஒருவேளை உணவாவது வாங்கிக்கொடுங்கள். மரணகானா விஜி என தலைப்பு வைத்துவிட்டு அவரைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என நினைப்பீர்கள். நான் சொல்லுவதைவிட அவரே அவரின் கதையை சொல்லியிருக்கிறார். நேரம் ஒதுக்கி படித்துப்பாருங்கள். உங்கள் கண்களில் ரத்தம் வழியும்..

தொடர்புள்ள சுட்டிகள்:

http://maranaganaviji.com
http://madrasbhavan.blogspot.com/2011/05/1.html
http://madrasbhavan.blogspot.com/2011/05/2.html
http://maranaganaviji.com/pdf/maranaganaviji-Sudukadum-sila-sundarikalum.pdf
http://maranaganaviji.com/pdf/maranaganaviji-Nan-Santhitha_Maranakkal.pdf

5 மே, 2011

நடுக்கடல் பகலில்...

நடுக்கடல் பகலில்
மேலும்,கீழும்
ஒரே நீலம்..

பிறந்த இடத்திற்க்கே
வந்து சேர்ந்தது
நிலத்தை விரும்பாத
பெருமழை..

வயிற்றுப் பாட்டுக்கென
நான் மீனையும்
பெருமீன் சிறுமீனையும்..

அப்போதுதான்
தன் கடைசிக் கலவியை
முடித்திருந்தது
வலையில் சிக்கிய மீன் ஒன்று..

ஒரே கடல்
பல பெயர்கள்
செத்த கடலென்றும்
ஒரு பெயருண்டு..

நடுக்கடல்
எனக்குமேலே பறந்துசென்றது
ஒரு பறவை
அருகில் இருக்கக் கூடும்
ஒரு தீவு..

கையளவு
நீரள்ளி குடிக்கமுடியாத!
கடலென்ன கடல்..

சுலபமாக
தின்றுவிடுகிறோம்
மீன்களையும்
மீனவன் கதைகளையும்
செரித்தும் விடுகிறது..

கடலை
வென்றவன் என்றது
ஒரு படகு
பாய்மரத்தைப் பார்த்து
காற்று நகைத்தது..

பெருங்கடலில்
சிறுமீன்கள் தேடும்
கட்டுமரக்காரனாய்
வாழ்வும், நானும்..

4 மே, 2011

ஒசாமாவும், போட்டோ ஷாப்பும் பின்னே ஒபாமாவும்...

சமீபத்திய பரபரப்பு படமான ஒசாமாவின் கொலை எல்லா ஊடகங்களிலும் வெற்றிகரமாக ஒட்டப்பட்டது. அந்தப்படத்தை தயாரித்து உலகுக்கு வழங்கிய புதிய தாதா அண்ணன் ஒபாமாவுக்கு எனது மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டு கதைக்குள் நுழைவோம். அதாகப்பட்டது அதன் திரைக்கதையின் சிறப்பம்சமே அதிலிருக்கும் அதிபயங்கர மயிர்க்கூச்செரியும்  திருப்பங்களுக்கு உதவிய துனைக்கதைகளே!. எல்லா ஹாலிவுட் ஆக்சன் படங்களைப்போலவே..

1. எதிரி நாட்டுக்குள் அவர்கள் ரேடாரில் பார்க்க முடியாத வகையில் நுழைவது. இதற்க்கு இடையில் ஒரு சின்ன டுவிஸ்ட்டு அது யு.எஸ்ல வாங்குனதுதான்.
 
2. ஹெலிகாப்டரில் இருந்து அதிபயங்கர ஆயுதங்களுடன் இறங்கி வில்லனை வேட்டையாடும் காட்சி. இதற்க்கு இடையில் ஒரு சின்ன டுவிஸ்ட்டு அதற்கு பக்கத்திலேயே ஆர்மி அகாடமி!. 

3. வில்லனை கொன்றபின் அவன் உடலை கைப்பற்றியும் சிலரைக் கைது செய்தும் எதிரி நாட்டு ராணுவம்  தூங்கி முழிப்பதற்குள் வெளியேறுவதும். இதற்க்கு இடையில் ஒரு சின்ன டுவிஸ்ட்டு ஒரு ஹெலிகாப்டர் வேற ஒர்க் ஆகல.

4. வில்லனை கடலில் தூக்கி போடுவது. இனி ஒசாமாவே நெனச்சாலும் அவரோட பாடிய கண்டுபிடிக்க முடியாது!
5. கடைசியாக ஹீரோ டெலிவிசனில் உரையாடிய பின் அவரோட இமேஜ் 56% அதிகரித்தது.
                                            
                                                        &&&& சுபம் &&&&&

ஒசாமாவை கொல்றது ரொம்ப ஈசிங்க, ஒபாமா, நீங்க, நானு அல்லது  யாரும் கொன்னுடலாம். எப்புடின்னு முழிக்காதீங்க மேலே இருக்கிற மூன்று ஒசாமா படத்தில் முதலில் இருப்பது அவர் எப்போதோ பேசியபோது எடுத்த படம். மூன்றாம் படம் போட்டோ ஷாப்பின் ஆரம்பம். நடுவில் இருப்பதுதான் எல்லா ஊடகங்களாலும் காட்டப்பட்ட படம்.

இங்க இருக்கிற மூக்கையும், உதடுகளையும் நல்லாப் பாருங்க.


இப்படியெல்லாம் சொல்றது நானில்லை. நம்ம David Vaughan Icke. இவரைப்பத்தியும். இவர் எழுதிய புத்தகம் பத்தியும் நாளை பார்க்கலாம்..

தொடர்புடைய சுட்டி:
http://www.prisonplanet.com/media-runs-fake-photo-to-illustrate-bin-laden-death-propaganda.html