7 பிப்., 2014

Miracle in Cell No. 7 - கொரியன் சினிமா....

உலக சினிமாக்கள் பற்றி அதிகம் எழுதும் ஜாக்கி சேகர் பொதுவாகவே சமீப காலமாக அதிகம் எழுதுவதில்லை. வேலைப்பளு அதிகமாகிவிட்டதாக அவர் தன் முகநூல் பக்கத்தில் இதனைப்பற்றி குறிப்பிட்டு இருந்தார். அவரின் சமீபத்திய பதிவான MIRACLE IN CELL NO .7-2013/உலகசினிமா/கொரியா/அப்பாவி அப்பா. படித்தபோது  நேரம் கிடைக்கும்போது பார்க்கவேண்டும் என குறித்து வைத்துக்கொண்டேன். ஆனால் முகநூலில் விதூஷ் இதனை Must watch என குறிப்பிட்டு இருந்தார். படத்தை கொஞ்சம் பார்க்கலாம் என அதன் இணைப்பில் சென்று பார்த்தேன். ஆனால் என்னால் வேறு எந்த வேலையையும் பார்க்க முடியவில்லை. மிக அழகான திரைக்கதை என்னை படத்தோடு ஒன்றவைத்து விட்டது.


Lee Yong-gu எனும் அப்பா பாத்திரம் ஆறு வயதுடையவரின் மன வளர்ச்சி கொண்டது. அதே ஆறு வயது மகளுடன் அவர் வசித்து வருகிறார். புத்திசாலியான மகளுடன் சந்தோசமாக வாழும் அவர், கார் பார்க் அட்டெண்டராக வேலை பார்த்து வருகிறார். ஒரு நாள் வேலை முடித்து வரும் வழியில் ஒரு சிறுமி விபத்தில் சிக்கிவிட அவளை காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால் சிறுமி இறந்து விடுகிறாள். சந்தர்ப்ப சாட்சியங்கள் அவருக்கு எதிராக இருக்கின்றன. மேலும் இறந்த சிறுமியின் தந்தையான போலீஸ் கமிஷனருடன் முன்பு ஷாப்பிங் காம்ப்ளெக்சில் வைத்து நடந்த தகராறு காரனமாக தன்னை பழி வாங்கவே அவர் மகளை கொன்று விட்டதாக எண்ணி போலீஸ் அவருக்கு எதிராக வழக்கை முடித்து விடுகின்றனர்.


தண்டனைக் கைதியாக சிறைக்கு வரும் Lee Yong-gu வை அச்சிறையின் ஏழாம் எண் அறையில் அடைக்கின்றனர். அங்கு ஏற்கனவே இருக்கும் ரவுடிகள் இவரின் கேஸ் ரிப்போர்ட்டை படித்துவிட்டு சிறுமியை கற்பழித்தவன் என அடித்து உதைக்கின்றனர். பின்னர் ரவுடிகளின் தலைவனை ஒரு சந்தர்ப்பத்தில் இவர் காப்பாற்றுகிறார். அவர்கள் அப்போதுதான் இவரின் மனநிலையை புரிந்துகொள்கிறார்கள். பதிலுக்கு இவருக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என ஆதரவற்றோர் பள்ளியில் படிக்கும் அவரின் மகளையே சிறைக்குள் கொண்டு வந்து விடுகின்றனர். அங்கு அவரின் மகளுக்கும்  Lee Yong-gu க்கும் இருக்கும் பாசப் போராட்டம் அவர்களின் இதயத்தையும் உருக்குகிறது. ஆனால் உயர் அதிகாரியால் சிறுமியை இவர்களுடன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிறுமியை மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்துக்கே அனுப்பி வைக்கப்படுகிறாள். Lee Yong-gu ஐ  தனியறையில் அடைத்து கட்டிப்போடுகின்றனர். அன்று இரவு நடக்கும் தீ விபத்தில் சிக்கிக்கொள்ளும் அந்த உயர் அதிகாரியை காப்பாற்றுகிறார். அதன்பின் உயர் அதிகாரி ஒரு புறமும் சிறையில் இருக்கும் நண்பர்கள் ஒருபுறமும் இவரைக் காப்பாற்ற போராடுகிறார்கள்.

அவர்கள் மீண்டும் அவ்வழக்கை நீதிமன்றதில் விசாரிக்க கோருகிறார்கள். சிறுமி Ye-sung ஐ சிறையின் உயர் அதிகாரி தன் சொந்த பொறுப்பில் வளர்க்கிறார். சிறையின் உயர் அதிகாரி என்பதால் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து விடுமுறைகளில் சிறுமியை சிறைக்கு அழைத்து வந்து அறை எண் 7- ல் விடுகிறார். சிறையில் இருக்கும் மொத்த கைதிகளும்  Lee Yong-gu ஆதரவாக மாறுகிறார்கள். இறுதியில் என்ன முடிவு கிடைக்கிறது என்பதுதான் படத்தின் திருப்பம்.


அப்பாவாக நடித்த Ryu Seung-ryong ம் அவரின் சிறுவயது மகளாக நடித்த Park Shin-hye அசத்தலான நடிப்பை தந்திருக்கிறார்கள். நிஜமான தந்தை மகளுக்கான உறவைப்போல் வாழ்ந்திருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிறைக்குள் படமாக்கப்பட்டிருக்கிறது. தெளிவான திரைக்கதை நம்மை படத்தோடு கட்டிப்போடுகிறது. படத்தின் இறுதிக் காட்சிகளில் என்னால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. படத்தில் குறைகள் இருக்கு ஆனால் அதையெல்லாம் மீறி படத்தில் இருக்கும் உயிரோட்டம் படத்தை ஜெயிக்க வைத்திருக்கிறது என ஜாக்கி அண்ணன் எழுதியிருந்தார். படம் வெளியாகி ஏகப்பட்ட வசூலையும், விருதுகளையும் குவித்து இருக்கிறது. படத்தை  Lee Hwan-kyung இயக்கியிருக்கிறார்.

A story about love between a mentally ill father and his lovingly adorable daughter. Which is his father, accused of murder and rape. This is must watch movie.

படத்தை பார்க்க( with English sub title) : Miracle in Cell No. 7

5 பிப்., 2014

முடிவு...

யாரிடமும் சொல்லாமல் கிளம்புவது இதுதான் எனக்கு முதல்முறை. இனிமேல் திரும்பவே மாட்டேன் எனும் முடிவான முடிவுக்கு வந்தபின்  விடைபெற என்ன இருக்கிறது. இதுநாள் வரைக்கும் அன்பாய் இருந்தவர்களின் கேள்விகளுக்கு பொய் சொல்லி சமாளிப்பதில் விருப்பம் இல்லை. முதலிரண்டு நாட்கள் எங்காவது அருகில் போயிருப்பேன் என நினைப்பார்கள். அதன்பின் வீட்டில் உள்ளவர்களிடம் கேள்வி கேட்பார்கள். கேள்விகள்... பதில்கள்... சந்தேகங்கள் என என்னைத்தேட துவங்குவார்கள். அதற்குள் நான் வெகுதூரம் பயணப்பட்டிருப்பேன்.

வாழ்க்கையில் இதுதான் பாதை என அறியாத, வாழ்வின் போக்கில் பயணிக்கிறவனுக்கு இந்த உலகம் எத்தனை பாடங்களை மிக எளிதாய் பயிற்றுவிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?. ஒரு காட்டாறு தன் இயல்பில் பாய்ந்தாலும் அது தன் முன்னே இருக்கும் அத்தனை தடைகளையும் உடைத்து பிரவாகமாய் கீழிறங்கி விடுகிறது. மனித வாழ்க்கையில் நம்மால் பிரவாகமாய் ஊற்றெடுக்க முடியாது. நமக்கு முதல் தடை நாம்தான், சூழ்நிலை நம்மை ஒரு படியில் ஏற்றி பிறகு, இன்னுமிரண்டு படிகளில் இறக்கிவிடுகிறது.

ஒரு எளிய மனிதன் இந்த வாழ்க்கையை கடப்பது என்பது எத்தனை சிரமமானதாகிவிடுகிறது. தினசரி குறைந்தது எட்டு மணி நேரமாவது தன் உடல் உழைப்பை செலவிட்டால்தான் மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் கிடைக்கும். சமயங்களில் அப்படிப்பட்ட வாழ்க்கையை கூட இயற்கை ஏன் நமக்கு கொடுக்கவில்லை? என வருத்தமாக இருக்கும். காரனம் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளுடன் வாழும் அவர்களில் பல பாக்கியவான்களை நான் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து. கொஞ்சமாக படித்துவிட்டு, சமூகத்தில் அடுத்த கட்டத்துக்கு தன்னை நகர்த்த போராடுகையில் மேலே போகவும் முடியாமல் கீழே இறங்கவும் விருப்பம் இல்லாமல் ஒரே பாதையில் சீராகவும் செல்ல முடியாமல் அந்தரத்தில் காற்றில் மிதக்கும் இலை போல பணம் போன போக்கில் அதனை துரத்தும் உத்தியில் இளமையை தொலைத்து விடுகிறோம்.

எல்லோருக்கும் இயல்பாய் வரும் காதல் நம்மை கிடைக்கும் இடைவேளைகளில் படுத்தி எடுக்கும். நமக்கான ஐஸ்வர்யா ராவை கண்டடைந்தபின் கிடைக்கும் பேரானந்தம் அதே சொற்ப இடைவெளிகளில் அவள் யார் பைக்கிலாவது பின்னால் அமர்ந்து செல்லும்போது பார்க்க நேர்கையில் பறிபோய்விடும். ஆனால் நாட்டில் ஒரே ஒரு ஐஸ்வர்யா ராய் மட்டும்தானா? ஒரு அசின், அமலாபால் இல்லாமலா போய்விடுவார்கள் என விக்கிரமாதித்யனின் மன உறுதியைப்போல் மீண்டும் காதல் வேதாளத்தை மனதின் தோள்களில் சுமக்கிறோம். வருத்தப்பட்டு காதல் பாரம் சுமக்கிறவர்கள் யேசுவிடம் சென்றால் கூட இளைப்பாறுதல் கிடைக்காது.

வாழ்வின் போராட்டங்கள் நம் வயதைக்கூட்டி நரை முடிகள் தென்பட ஆரம்பிக்கும். எனக்கும் அப்படியான காலம் வந்துவிட்டிருந்தது. ஒரு கட்டத்தில் வாழ்வே போராட்டமான நிலையில் பெண்களை சைட் அடிப்பது கூட நின்றுபோய் திருமண ஆசையே இல்லாமல் போய்விட்டது. ஒரு நிலையான வேலை கிடையாது. ஒரு தடவை மஞ்சள் காமாலை வந்ததாலும், மறுமுறை அம்மாவின் இறப்பினாலும் ஆரம்பித்த மூன்றாம் மாதமே முடிந்த வெளிநாட்டு வாழ்க்கை கடன்காரனாக மாற்றி, நிலத்தை விற்று வட்டிக்கு போக மீந்த பணத்தில் ஒன்று மாற்றி ஒன்றென செய்த வியாபாரங்கள் தோல்வியில் முடிய, இறுதியாக உனது பங்கு முடிந்துவிட்டது என அண்ணன்கள் கைவிரித்து விட்டபோதுதான் நான் தனித்து நிற்பதை உணர்ந்தேன். சாகத்துணிந்தவனுக்கு வாழ்வில் பயமே கிடையாது என்பார்கள், வாழப் பயந்தவன் நான். என்னால் தற்கொலை செய்துகொள்வதை நினைத்துப்பார்க்கவும் முடியவில்லை. ஆனால் அதைத்தான் முடிவாக முடிவு செய்தபின் ஒரு இறுதி முயற்சிக்கு ஆயத்தமாகிவிட்டேன்.

நெடுந்தூரப் பயணம் இது. ரயில் பெட்டியின் பொதுவகுப்பு நிற்கவே முடியாத நெருக்கடியில் நம்மைப்போல ஏராளமான ஜீவராசிகள் இருக்கவே செய்கின்றனர் என்பதை உணர்த்தியது. தன் வாழ்வை முடித்துக்கொள்ள நினைக்கும் ஒருவன் எதற்கு இப்படி வெகுதூரம் பயணிக்க வேண்டும், என உஙகள் மனதில் எழும் கேள்வி என் காதில் விழுகிறது. வாழ்வின் கடைசி பக்கங்களை இனி எதுவுமற்று கடக்கும் எனது பாதையில் எனது முடிவை நான் ஆவலாக அனுபவித்தே பயணிக்கிறேன். இத்தோடு சாப்பிட்டு இரண்டு நாள் ஆகப்போகிறது. என் பெயர் எழுதப்பட்டிருக்கும் கடைசி அரிசி எதுவென பார்க்கலாம்.......