13 ஆக., 2014

இரவுகளின் இசை...

உலகில் பெரும்பாலோருக்கு இரவு என்பது ஓய்வுக்கான நேரம். ஆனால் என் போன்ற தனிமை விரும்பிகளுக்கு அது வேலை செய்வதற்காகவே படைக்கப்பட்ட ஒன்றாகும். இயற்கைக்கு எதிராகவே  நீ எப்போதும் இருக்கிறாய் என்பான் நண்பன். அவனுக்கு எல்லாம் நேரப்படி நடக்க வேண்டும். அது அவனை ஒரு நிறுவனத்தின் மேலாளராக உயர்த்த மட்டுமே உதவியது. தனிமை மிகப்பெரிய வரம், இரவும் அப்படித்தான். இரண்டும் ஒரு சேரக் கிடைத்தால் நாம் இறைவனாய் மாறலாம்.


ஊரில் இருந்தபோது காதலித்தவள் அகாலமரணம் அடைந்த இக்கட்டான தருணத்தில், நள்ளிரவில் ஊரின் எல்லைப்பகுதியில் இருக்கும் சுடுகாட்டிற்கு செல்வதுண்டு என்னைப்போலவே தனித்திருக்கும் பேய்கள் இருந்தால் அதனுடன் கொஞ்சம் அளவளாவி வரலாமே என்று தோனும். ஆனால் அப்போது பேய்களும் என்னை புறக்கணித்தன. மெல்லிய மதுவின் போதையில் என் தனித்த அழுகை வானுலகு சென்ற என் காதலியை ஒருபோதும் எட்டியதில்லை. ”தற்கொலை செய்து பார்க்கலாமா?” எனும் ஆர்வம் மேலோங்கிய காலம் அது. அப்போதே போயிருக்கலாம் இத்தனை அவலங்களை கடந்து வாழும் இப்பேய் வாழ்வுக்கு அது உத்தமம் என இப்போது புரிகிறது. ஆனால் ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதையைப்போல் வாழ்வென்னும் அடர்ந்த இருள்படர்ந்த இக்காட்டை கடந்து வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. கொடுத்த வாக்குகள் பல உண்டு காப்பதற்கு. சமீபத்தில் ஊருக்கு போனபோது அந்த சுடுகாட்டை சுற்றி நிறைய வீடுகள் இருந்தன.


சிங்கப்பூரில் இருந்தபோதும் தொடர்ந்து இரவு நேர வேலைகளை மட்டுமே விரும்பி செய்ததுண்டு. ஒரு பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தில் பேய் இருப்பதாக சொல்லி இரவு நேர வேலைக்கு யாரும் வருவதில்லை என்றபோது நான் அங்கு ஒரு வருடத்திற்கும் மேலாக  தனியாளாக இரவு வேலை பார்ப்பேன். ஆனால் அங்கும் நானும், அப்பேயும் எங்கள் தனிமைக்குள் சந்தோசமாகவே இருந்தோம்.


எங்கு ஊர் சுற்றுவதாக இருந்தாலும் நண்பர்கள் இல்லாத தனித்த பயணங்களையே விரும்புவேன். எப்போதும் சகபயணியிடம் பேச விரும்பாத ஆள் நான். ஆனால் எல்லா பயணங்களும் அப்படி அமைந்து விடாது. சில நபர்கள் நம்மை வறுத்தெடுப்பார்கள். அப்படியான சில பயணங்களில் நான் வழியில் இறங்கி வேறு வண்டி மாறுவேன். சில சமயங்களில் மொத்த இரவையும் ஏதாவது ஒரு பேருந்து நிலையத்தில் கழித்ததுண்டு. இரவு நேர பேரூந்து நிலையங்கள் ஒரு சுவாரஸ்யமான அனுபவக்களம். பலதரப்பட்ட பெரும்பாலும் ஏழ்மை பாரம் சுமக்கும் உன்னதமான மனிதர்களை சந்திக்கலாம். இங்கிருக்கும் இரவு நேர டீக்கடைகளில் விடிய விடிய இளையராஜா இசைக்க ஐந்தாறு டீயும் மனதிற்கு நெருக்கமான விலாசங்கள் தேவைப்படாத சில மனிதர்களும் வாழ்வில் எல்லோருக்கும் கிட்டாத ஒன்று.

சில வருடங்கள் முன்பு வரைக்கும் இரவு நேர மோட்டார் சைக்கிள் பயணத்தை செய்திருக்கிறேன். இரவை தன் சிறிய வெளிச்சங்களால் விரட்டிப்பாயும் வாகனங்கள். சில்லிடும் காற்று. வழியில் நிறுத்தும் காவலர்கள். சம்யங்களில் முகம் தெரியாத நபர்கள் சிலரை ஏற்றிக்கொண்டு வழிநெடுக ஏதும் பேசாமல் கடைசியில் மனம் நிறைய நன்றிகளுடன் அவர்கள் விடைபெறும் தருணம். இவற்றை வயது காரணமாக இப்போது அனுபவிக்க முடிவதில்லை.

சில நெருங்கிய உறவுகளின் இறுதி நேரத்தில் நான் உடன் இருந்திருக்கிறேன்.


இருபதாவது வயதில் மாமா ஒருவர் தலையில் அடிபட்டு சென்னை அரசு மருத்துவமனையில் 21 நாட்கள் கோமாவில் இருந்தார். அவரின் இறுதி நாளில் நான் மட்டுமே உடன் இருந்தேன். இறப்பதற்கு சில நிமிடங்கள் முன் அவர் நினைவு திரும்பினார். அவரின் விழிகள் என்னிடம் எதுவோ சொல்ல ஆசைப்பட்டன. ஆனால் கண்ணீர் வழியும் அவரின் விழிகளில் என்னால் எதுவுமே படிக்க முடியவில்லை. இரவு 8 மணிக்கு அவர் இறந்து போனார். மறுநாள் காலை அவர் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.


என் சகோதரி மகன் வீரா விபத்தில் சிக்கி மருத்துவமனையில் ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தான். பணி முடிந்து வீட்டிற்கு செல்லவேண்டிய ஒரு செவிலிய சகோதரி என்னுடன் அவன் அருகிலேயே இருந்தார். ”ஏன் வீட்டிற்கு செல்லவில்லை?” எனக்கேட்டேன். ”இல்லண்ணே மனசுக்கு கஷ்டமா இருக்கு” என்றார். மேலும் தான் ஒரு நாத்திக குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அறிவின் நீட்சியைத் தாண்டி இப்போது ப்ரார்த்தனை செய்யனும்போல இருக்கு என்றார். என்னதான் சாவுகளை விதம் விதமாக பார்த்திருந்தாலும் இப்படி சின்னப் பிள்ளைங்க சாகும்போது வாழ்க்கையே வெறுத்துப் போயிடுது என்றார். இவ்வளவு சிறிய வயதில் அவருக்கிருந்த நிறைந்த ஞானம் என் சோகத்தை நிதானப்படுத்தியது.

சென்ற வருடம் அப்பா தன் இறுதி நேரத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். அவ்விரவின் விடியற்காலையில் அவரின் மூச்சு முற்றிலும் அடங்கியபோது ஒரு தனித்த அழுகுரல் மெல்ல மெல்ல எங்கள் வீட்டை பலரின் அழுகுரல்களுடன் அந்நாள் முழுதும் நிரப்பின. தன் வாழ்வை தான் விரும்பியபடி அவர் வாழ்ந்து முடித்திருப்பாரா? என்பதுதான் என் அப்போதைய கேள்வியாக இருந்தது.


இரவுகள் எப்போதும் ஆசானாகவே இருந்து என்னை வழிநடத்தட்டும்.

10 ஆக., 2014

இயக்குனர் ஆவது எப்படி?!... நெடுந்தொடர் அல்ல!!

திரைக்கதை எழுதுவது எப்படி?, உலக சினிமா, தமிழ் சினிமாவில் இலக்கியம்!, வாங்க சினிமா எடுக்கலாம்!, இப்படியாக ஏராளமான பேர் எண்ணற்ற தலைப்புகளில் புத்தகம் எழுதிவிட்டனர். ஒப்பு நோக்கினால் சுஜாதா போன்ற ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் சினிமாவில் என்ன பங்கு வகித்தார்கள் என்பது மாதிரியான சந்தேகங்கள் ஏதும் இல்லாமல் தமிழன் தனக்கான தலைவனை திரையில் இருந்தே தேர்ந்தெடுக்கும் அதாகப்பட்டது அட்டைகத்திகள் தேர்ந்தெடுத்த தெர்மக்கோல் கத்திகள் என  வரலாறு ஆணித்திரமாக நெஞ்சில் இறங்கிவிட்டதாலும், சென்னை நோக்கி படையெடுக்கும் லட்சத்தில் ஒரிருவர் குறைவாக மற்றவரெல்லாம் சினிமாவை காப்பாற்றும் உன்மத்தம் பிடித்தே வந்து சேர்கிறார்கள்.

சமீபமாக சமூக தளங்களின் உதவியாலும் தொழில்நுட்பம் தன் பரிணாம வளர்ச்சியை செல்போன் கேமராவரை கொண்டு வந்துவிட்டதாலும் சினிமா என்பது ரெண்டே நிமிடத்தில் அல்வா செய்வது எப்படி? என்பது மாதிரியான இன்ஸ்டண்ட் சமாச்சாரம் ஆகிவிட்டது. அதிலும் என்னை மாதிரி ஒலகத்தை புரட்டும் கடப்பாரை சுமந்தவர்கள் கூட அரசியல், சமூகம் என்பதை தாண்டி சினிமா விமர்சனம் எழுத வந்துவிட்டதற்கு ஒரு காரன காரியம் எனக்கு தனியாக இருந்தாலும், இருக்கிற அதிலும் எப்போதும் ஃபேஸ்புக், ட்விட்டர் என பழியாய் தவம் கிடந்து விரல் தேய்க்கும் முன்னூத்தி சொச்சம் (நெஜமாவே அவ்வளவு பேர்தான் தமிழில் இருக்காங்க) பேர்களையும் தாண்டி ஆதியில் தோன்றிய பதிவுலகில் இன்னும் விமர்சனத்தில் கேபிளின் இடத்தை இட்டு நிரப்ப  சிலர் முப்பது ரூவா திருட்டு டிவிடியில் (காசு கொடுத்தாலும் திருட்டு டிவிடிதான்) பாத்துட்டு படம் இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வருவதற்கு முதல் நாளுக்குள்ளாவது விமர்சனம் எழுதும் ரேங்கோளாறு ஆட்களும் உண்டு. அதிலும் ஸ்பீல் ஃபெர்க்கிற்கே யோசனை, இந்தப்படத்தை நான் இயக்கினால் என புதிய பரிணாமங்களில் விமர்சனம் எழுதும் திரை விமர்சன மேதைகளும், படம் பார்க்க போன கதைகளை தொகுப்பாக போடும் அளவுக்கு எழுதும் விமர்சனங்களும் நம்மை சினிமா எனும் மாயவலை எப்படியெல்லாம் வீசப்பட்டு அமுக்கப்படுகின்றன எனும் சொற்ப உதாரணங்கள் ஆகும்.

எங்களுடைய தலைவன் கேபிள் படம் இயக்கப்போகிறார்  என்றதும், அது வரைக்கும் கூடவே சுற்றிய செவ்வாழையாக இருந்த எனக்கு கண்டிப்பாக அவர் ஏதாவது வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்த்தது ஒரு குத்தமாங்க!?.  அப்பதான் தெரிந்தது கேபிள் ஒரு பாவப்பட்ட ஆத்மான்னு மனுசனுக்கு அண்டார்டிகாவிலிருந்து கூடவா ரெகமெண்டேஷன் வரும். நடிக்க, உதவி இயக்குனர் ஆக இன்னும் பலப்பலவாக தினம் நூறு வின்னப்பங்கள் அதற்கான பரிந்துரைகள் என பதிவுலகம், முகநூல் மற்றும் தெரிந்த தெரியாத ஆட்கள் அவரின் படத்தில் பணிபுரிய தவம் கிடக்க மனுஷன் ஒரே கார்க்கியை மட்டும் கூட வச்சுகிட்டு (அதில் பணியாற்றிய கோ டைரக்டர், உதவி டைரக்டர்கள் எல்லாம் அனுபவம் உள்ளவர்கள்) படத்தை எடுத்து முடிச்சுட்டார். பொறவு நான் எப்புடி வாய்ப்பு கேட்பேன். அதனால அவருக்கு இருக்கும் MAASS பாத்து எனது சகல மயிர்கால்களும் இயக்குனர் ஆகியே தீர்வது என லட்சியத்தின் உச்சத்தை நோக்கி நீண்டு விட்டது. என்ன அதற்குள்ளாகவே ஓடுறீங்க இன்னும் ஒரு பாரா மட்டும்தான் இருக்கு அதையும் படிச்சிருங்க அப்பதான் என்மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கை ஒங்களுக்கு புரியுன்றேன்.

அதாகப்பட்டது சுமாராக 2000 ஒலகப்படங்கள் பார்த்திருக்கிறேன். இப்பவும் கேபிள் மற்றும் சிவாவுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், என சகல மொழிப்படங்களையும் தினசரிக்கு ஒன்று எனும் ஆர்வகோளாறால் பார்க்கிறேன். அப்படியிருக்க உதவி இயக்குனராக பணியாற்ற வந்த நண்பர் ஒருவரின் சினிமா அனுபவம் என்னை ஆச்சர்யத்தின் நடு மண்டையில் கொட்டோ கொட்டோ என கொட்டி தீர்த்தது. அதாகப்பட்டதுங்க  படம் பார்க்கிற வழக்கமெல்லாம் அவருக்கு கெடயவே கெடயாதுங்க, எப்பயாச்சும் பொழுது போவலன்ன படம் பார்க்கிற குரூப்பாம் அவரு. அதிலும் ஒலகப்படங்கள் என்றால் ஜாக்கிசான் நடிச்சதுதானாம்!!!. சரி நீங்க எதுக்காக சினிமாவுக்கு வந்தீங்கன்னு கேட்டா “சொம்மா டைம் பாசுக்குதான்” னு சொன்னதும் அப்படியே ஷாக்காயிட்டேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடிதான் நம்ம பதிவுலக சக ஒருத்தரு சினிமா விமர்சனம் எழுதுனா இயக்குனர் ஆகலாம் என சொல்லிருந்தாரு. இப்ப டைம் பாசுக்கே இயக்குனர் ஆகலான்னு ஒருத்தர் சொல்றாரு. அப்ப இவ்ளோ படத்தையும் பார்த்த நான் இயக்குனர் ஆவதில் என்ன தவறு இருக்க முடியும். ஆகவே நண்பர்களே யாராவது படம் தயாரிக்க ஆசைப்பட்டால் உடனே அனுகவும்:
        


மன்னார் அண்டு கம்பேனி,
கவுண்டமணி - செந்தில் ஃஃபேன்ஸ் கிளப்,
கோடம்பாக்கம், சென்னை.
கிளைகள்: வட பழநி, தி.நகர், மாம்பலம்
தொடர்புக்கு : கப்பல் யாவாரி (மேனேஜர்)