11 ஜூன், 2009

ராமசாமி அத்தியாயம் - 18

இதில் மிகப்பெரிய வேதனை என்னவென்றால், நண்பன் ராஜா இந்த சமயத்தில் நடந்துகொண்ட விதம்தான், என் திருமணத்திற்காக நண்பர்கள் அனுப்பிய பணம், வீராவின் மருத்துவ செலவிற்கே போதாமல் எல்லோரிடமும் கடன் வாங்கிக்கொண்டிருந்தேன். அப்போது சென்னையில் இருந்த சம்பத்திடம் கம்பெனி அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என கேட்டேன். அவன் பதினெட்டாயிரம் மட்டுமே இருக்கிறது என்றான். அதனை உடனே எடுக்கசொன்னேன், அவன் பதினெட்டாயிரத்தில் டெலிபோன் பில் மூவாயிரம் கட்டிவிட்டு மீதம் எடுத்துவந்தான், அப்போது தஞ்சாவூரில் ராஜாவும், என் அத்தான் துரையும் இருந்தனர், தஞ்சை வந்த அவனிடம் பணத்தை ராஜாவிடம் கொடுத்து அத்தானிடம் கொடுக்க சொன்னேன்.

கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ம்ருத்துவ செலவுக்கே ஆனது. மேற்கொண்டு மற்ற செலவுகள் என பார்க்கிற அனைவரிடத்தும் கடன் வாங்கினேன். ஆனால் கடைசிவரை ராஜா பணத்துக்கு என்ன பண்றே, இவ்வளவு பணம் செலவு ஆகுதேன்னு ஒரு வார்த்தை கேட்கல.

பிப்ரவரி எட்டாம் தேதி வீரா இறந்து போனான். மருத்துவமனையில் போஸ்ட்மார்டம் செய்து எடுத்து போங்கள், அப்போதுதான் அவனுக்கு காப்பீடு கிடைக்கும் என்றனர். அதற்க்கு வக்கீலாக கலைவாணனை ராஜாவே ஏற்பாடு செய்தான். அவர் நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன் என போய்விட்டார். ஆனால் அதன்பிறகு நடந்தவை மிகவும் கசப்பானவை, என் நண்பர்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் மிக கட்ச்சிதமாக முடிக்கும் எனக்கு, என் பிரச்சினைகளை முடிக்க ஆளில்லை. எல்லோரும் எங்களுக்கு உதவுவதாக சொல்லிக்கொண்டு போஸ்ட் மார்ட்டத்தை செய்வதற்கு ஏற்பாடு செய்யாமல் காலம் கடந்தது, வெள்ளிகிழமை இறந்த அவனுக்கு ஞாயிற்றுகிழமைதான் போஸ்ட் மார்டம் நடந்தது.

எல்லாம் முடிந்துபோனது அத்தான் மொத்த செலவுக்கான கணக்கு கொடுத்தார், அதை வாங்கி பார்த்தபோது என்னைப்பற்றி சரியாக அறியாதவர்கள் கூட பணம் கொடுத்ததை அறிந்து மனதிற்குள் அழுதேன். அப்போது அத்தானிடம் ராஜாவிடம் கொடுத்து பதினைந்தாயிரம் கொடுக்கசொன்னேனே அதை எழுதவில்லையா என்றேன். அவரோ இல்லையே அவர் என்னிடம் எந்த பணமும் கொடுக்கவில்லை மேலும் அவருக்கே செலவுக்கே என்னிடம்தான் பணம் வாங்கிக்கொண்டார் என்றார். அதைக்கேட்டதும் என் கண்களில் கண்ணீர் கொட்டியது, என்ன ஒரு நட்பு, நான் துன்பத்தில் கிடந்தது உழல அவன் அதைப்பற்றி எதுவுமே கவலைப்படாமல் இருந்திருக்கிறான், இனியும் இப்படிப்பட்ட நட்பு தேவையில்லை என முடிவு செய்தேன். அப்போது வீட்டிற்கு வந்த தங்கை சுதாவிடம் அவனுக்கும் எனக்கும் எல்லாம் முடிந்துவிட்டது என சொல்லசொன்னேன்.

தங்கை சுதா என்னிடம் என்ன காரணம் என துருவித்துருவி கேட்டபோதும், காரணத்தை பின்னால் சொல்கிறேன்.இப்போது அவனிடம் சென்று இதை மட்டும் சொல் என அனுப்பிவைத்தேன். சுதா அவனிடம் சொன்னதற்கு அழுதிருக்கிறான், என்னை தப்பா புரிஞ்சுகிட்டான் என சொல்லியிருக்கிறான். சுதா நீ போய் அண்ணனிடம் பேசு, அண்ணன் கோபத்தில்கூட சொல்லியிருக்கலாம் நீ வந்து பேசினால் சரியாகும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் அவனோ இண்ணைக்குவரை என்னிடம் வந்து பேசவில்லை.

நானும் இன்றுவரை என் வீட்டில் அவனைப்பற்றி எதுவுமே சொன்னதில்லை. அவன் தந்தை என் வீட்டிற்கு அடிக்கடி வருவார், அப்பாவை அவர்தான் வெளியில் கூட்டிசெல்வார், வீராவின் காப்பீடு மீதான வாழ்க்கை அவர்தான் விசாரித்துவருகிறார், ஆனால் அவன் இறந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது இன்றுவரை வழக்கு முடியவில்லை, அப்படி ஒரு வக்கீலிடம்தான் வழக்கு இருக்கிறது.

வீரா இறந்து ஆறு மாதம் ஆனது. நான் வீட்டிலேயே இருந்தேன் எங்கும் போவதில்லை. இடைப்பட்ட காலங்களில் அவன் என் வீட்டிற்கு வருவான் எல்லோரிடமும் பேசுவான், நாங்கள் இருவர் மட்டும் பேசிகொள்வதில்லை. அப்போது அவனுக்கு திருமணம் நிச்சயம் ஆனது ஜூலை மாதம் பதினைந்தாம் தேதி அவன் திருமணம் முடிவு செய்யப்பட்டு பத்திரிகையில் என் பெயரும் மணமகன் வீட்டாராக போட்டிருந்தது, இதற்கிடையில் அவன் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னதாக ஒரு நாள் சின்ன அத்தான் திடிரென வீட்டிற்கு வந்து என் திருமணத்தை உடனே நடத்த வேண்டும், அதுவும் ஒரு கோவிலில் வைத்தாவது நடத்தவேண்டும் என்றார். நான் ஒரு வருடம் போகட்டும் என்றேன். ஆனால் எல்லோரும் சொல்லிவைத்தமாதிரி பிடிவாதமாக இருந்தனர். நானும் அன்றைய சூழலில் மறுக்கவில்லை. அந்த திருமணம் முடிவு செய்யப்பட்டு எப்படி நடந்தது என்பதை ஏற்கனவே எழுதி விட்டேன்.

அவன் திருமணத்திற்கு மூன்று நாள் முன்னதாக வெறும் ஆயிரத்து இருநூறு ரூபாய் செலவில் என் திருமணம் நடந்தது. ஆனால் அவன் திருமணம் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் செலவில் வெகு விமரிசையாக நடந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். நான் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அதன் பிறகு இன்றுவரை அவன் வீட்டு வாசலை மிதிக்கவில்லை. மேற்க்கொண்டு நாங்கள் இருவரும் சேர்ந்து இருந்தபோது வாங்கிய கடனை அவனுக்கு தெரியாது என சொன்னதால் அதையும் நான்தான் அடைத்தேன்.

இதில் எனக்கு உண்மையான இழப்பு என்னவென்றால் ராஜாவின் தத்தா, பாட்டி இருவரின் இழப்புதான், அவர்கள் என்னை மிகவும் நேசித்தனர். மேலும் ராஜாவின் அம்மா என்னையும் தன் சொந்த பிள்ளையாகத்தான் பார்த்தார், ராஜாவின் சகோதரிகள் இருவரும் என்னை தன் சொந்த சகோதரனாகத்தான் பார்த்தனர். அதிலும் மூத்த அக்கா மின்னல்கொடியும், அதன் கணவரும் என்மேல் எல்லை கடந்த அன்பை வைத்திருந்தனர், பெரிய அக்காவின் கணவர் சுந்தர் என்னைத்தான் சொந்த மச்சினன்போல் நடத்தினார்.

ராஜாவை பிரியவேண்டும் என முடிவு செய்தபோது இவர்களைத்தான் நான் நினைத்து அழுதேன். என் மேல் மிகுந்த பாசம் வைத்தவர்கள், அவர்கள் கையால் சாப்பிட்டு இருக்கிறேன், அதிலும் பெரிய அக்கா உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கும், நான் வீட்டிற்கு போனால், அப்போதுகூட தன் கையால் சமைத்து கொடுக்கும், நான் எவ்வளவு மறுத்தாலும் ரெண்டே ரெண்டு தோசை மட்டும் சாப்பிட்டு போடா என கெஞ்சும். என்ன செய்வது அவர்களிடம் நான் தொடர்ந்து பாசம் வைத்தால் அது ராஜாவைத்தான் பாதிக்கும், ஏற்கனவே அவர்கள் அனைவரும் ராஜாவின் மீது வருத்தமாக இருந்தனர், எங்கள் பிரச்சினையால் உண்மை தெரிந்து அவனை அவர்கள் மேலும் வெறுத்துவிடகூடாது என்பதற்காகவே நான் என் மனதை திடபடுத்திக்கொண்டு அவர்களிடமும் பேசாமல் தவிர்த்தேன். ஆனாலும் இன்றுவரை என் மனதில் அவர்களுக்கென்று தனியே இடம் உண்டு.

அப்புறம் என் வீட்டில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நான் சிங்கப்பூர் சென்றுவிட்டேன். இடையில் காந்தி அண்ணனுக்கு கொடுக்கவேண்டிய பணத்திற்க்காக ஒருமுறை சிங்கபூரில் பஞ்சாயத்து வைத்தார். அப்போது அவரிடம் நானே தந்து விடுகிறேன் என சொன்னேன். ஆனால் அவரோ அது நீ கொடுக்க வேண்டிய பணமல்ல, ராஜா வீட்டிற்காக ராஜா கொடுக்க சொன்னது, அப்போது நீயும் கூட இருந்தாய், அதனால்தான் உன்னையும் கூப்பிடுகிறேன். இல்லையென்றால் நானே அவனிடம் வாங்கிக்கொள்வேன், ஒருமுறை நீ வந்து உட்கார் நடந்ததை பேசுவோம் அவன் மறுத்தால் நீ சொல்லலாம் என்றார். அப்போது அவன் வந்திருந்தான் சம்பிராயமாக விசாரித்துக்கொண்டோம். அப்புறம் அவன் பணத்திற்கு ஒத்துகொண்டான். ஆனால் கடைசியில் காந்தி அண்ணனுக்கு அவன் பணத்தை கொடுக்கவில்லை. காந்தி அண்ணன் எனிடம் அவருக்கு ஒரு டிக்கெட் கடனாக போடசொன்னார். ஆனால் இன்றுவரை அந்த டிக்கெட் பணத்தை அவர் கொடுக்கவில்லை, தன் நண்பர் ஒருவரிடம் செந்திலால்தான் ராஜா எனக்கு அறிமுகம் அதனால்தான் ராஜா கொடுக்கவேண்டிய பணத்துக்காக டிக்கெட் பணத்தை கொடுக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு ராஜாவை நான் சந்திக்கவில்லை. இடையில் அவன் தம்பி இளையராஜாவுக்கு, என் நெருங்கிய நண்பரும், அண்ணனுமான கணேஷின் பெண்ணை கேட்பதாகவும், கொடுக்கலாமா என என்னிடம் அபிப்ராயம் கேட்டார். நான் பூரண சம்மதம் சொல்லுங்கள், அவன் மிகவும் நல்ல பையன் என்றேன். திருமணத்துக்கு பத்திரிக்கை வந்தது, எல்லோரையும் மீண்டும் பார்க்க வேண்டும் என்பதற்காக நான் போகவில்லை.

ஒரு மாதத்திற்கு முன் என் மனைவி மிகவும் சோகமாக அமர்ந்திருந்தாள். என்னவென்று விசாரித்தேன், ராஜாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்து இறந்து விட்டதாக சொன்னாள், கேட்ட எனக்கும் வருத்தமாக இருந்தது, என் மனைவியோ உடனே போன் செய்து விசாரியுங்கள் என்றாள். நான் மறுத்துவிட்டேன் ஏனென்றால் ஒருமுறை பிரச்சினை வந்தபிறகு இனி பேசுவது நன்றாக இருக்காது. அப்படி மீண்டும் ஒருவரிடம் பேசியதால்தான் நான் இப்போது இவ்வளவு சிரமப்படுகிறேன் என்றேன். அவளும் அதற்குமேல் உங்க இஷ்ட்டம் என சொல்லிவிட்டாள்.

எங்கள் நட்பு அபூர்வமான ஒன்று அதை தன் தந்தை, மற்றும் மனைவி பேச்சை கேட்டு ராஜா இழந்து விட்டான். நாகரீகம் கருதி நான் நிறைய விசயங்களை சொல்லாமல் விட்டுவிட்டேன். ஏனென்றால் அவனை இன்றும் என் கூடபிறந்த சகோதரனாகத்தான் நினைக்கிறேன்.

அதன்பிறகு சிங்கபூர் சென்று என் பிரச்சினைகளை முடித்துக்கொண்டு தோழி கண்மணியுடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாம் என் ஊருக்கு வந்தேன். அப்போது வந்து சேர்ந்தவன்தான் ரமேஷ். இவன் ஒரு சைக்கோ என தெரியாமலே இவனைக்கூட சேர்த்துக்கொண்டு அதனால் இன்றுவரை நான் படும்பாடுகளை அடுத்த அத்தியாயங்களில் பாப்போம்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

கருத்துகள் இல்லை: