16 நவ., 2013

விடியலை நோக்கி- ஈழம்...

நடந்துவரும் காமன்வெல்த் மாநாட்டின் மூலம் அடுத்த இரண்டு வருட காலங்களுக்கு அதன் தலைவராக மாறப்போவதால் இலங்கை மீதான சர்வேதேச அழுத்தத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியும் என நம்பி ராஜபக்சே கண்ட பகல் கனவு இப்போது அவருக்கே எதிராக மாறிக்கொண்டிருக்கும் காட்சிகள் அரங்கேறியவண்ணம் உள்ளது. இந்தியாவைப் பொறுத்த மட்டில் தமிழக அளவிலான அழுத்தம், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை அனைத்துக் கட்சிகளும் எதிர்நோக்கும் விதமாகவே முன்னெடுக்கப்பட்டது.  தமிழக காங்கிரஸ் இம்முறை தமிழர் நலனுக்கு ஆதரவாக தன்னைக் காட்சிப்படுத்துவதன் மூலம் தன் மீதான களங்கத்தை மறைக்க முயன்றது. பிரதமருக்குப் பதில் குர்ஷித் கலந்து கொள்ளும் நிர்ப்பந்தம் தமிழக மக்களின் பாரிய அழுத்தம் கொடுத்த வெற்றிதான். இதுவரை ஊடகம் தோறும் ஈழப் பிரச்சினையால் எப்போதும் தமக்கு பின்னடைவு இல்லை என முழங்கிய காங்கிரஸ் கட்சியின் சோனியா விசுவாசிகள், இம்முறை அடக்கி வாசித்தனர். தமிழகத்தில் விஜயகாந்த் மட்டுமே தன் கருத்தை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தமிழகத்தில் தன் சார்பாக ஜெயித்த சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து எதிராக மாறுவதால் தமது ஜாகையை டெல்லிக்கு மாற்றும் அதீத ஏற்பாடுகளில் அவர் இருக்கிறார். ஆனால் அதே டெல்லியில் ஈழத் தமிழனுக்காக வாய் கிழியப் பேசிய அவர் தமிழ்நாட்டில் மட்டும் மவுன விரதம் கடைப்பிடிக்க காங்கிரஸ் மீதான அவரின் தீராத நம்பிக்கை ஒரு காரனமாக இருக்கலாம்.

கடந்த ஒன்பது வருடங்களாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க தமிழர்கள் மத்தியில் பலத்த வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சினைதான், தான் ஆட்சியமைக்க உதவியது என்பதை உணர்ந்த ஜெயலலிதா ஆரம்பத்தில் தமிழகம் சார்ந்த ஈழ ஆதரவு போராட்டங்களை கண்டுகொள்ளாமல்தான் இருந்தார். கட்சத் தீவு மீட்பு, சட்டமன்றத் தீர்மானங்கள் என நம்பிக்கை தரும் விதமாகத்தான் நடந்துகொண்டார். ஆனால் இரண்டு வருடம் கடந்துவிட்ட நிலையில் இப்போது தமிழக அளவில் ஈழ ஆதரவு போராட்டங்களை அவர் அனுமதிக்க மறுக்கிறார். கருணாநிதியை விடவும் ஜெயலலிதா இவ்வியசயத்தில் லட்சம் மடங்கு மேலானவர். கருணாநிதி ஈழத்தில் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தபோது டெல்லியில் பதவிக்கு பேரம் பேசிய கொடுமையான மனதைக் கொண்டவர். விடுதலைப் புலிகள் மீதான தனிப்பட்ட வெறுப்பை அவர் சாகும் வரைக்கும் தமிழர்களுக்கு எதிராகவே உமிழ்கிறார். தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க போன்ற கட்சிகளை ஆதரிக்கும் அடிமட்ட தொண்டர்கள் சமீபமாக விழிப்புணர்வுடன் பேசிவருவது ஆறுதலை அளித்தாலும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் தலைமைக்கு எதிராக திருப்பினால்தான் அவர்களுக்கும் மக்களிடம் பயம் வரும்.

முதல்நாள் தீர்மானம் மறுநாள் முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுச்சுவர் இடிப்பு எனும் முடிவுகளை ஜெயலலிதா என்கிற ஒற்றை ஆளுமையால்தான் எடுக்க முடியும் என மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார். இவ்விசயத்தில் அவர் மத்திய அரசை கடுமையாக பகைத்துக்கொள்ள விரும்பாத போக்கை காட்டினாலும்  தமிழ் ஆர்வலர்கள், தமிழக மக்கள் மத்தியில் உச்சியில் நிறுத்தப்பட்டிருந்த அவர் மீதான பெருமிதம் சடாரென ஒரே நாளில் கீழிறங்கிவிட்டது. உடனே ஒரு அறிக்கையுடன் தன் டெசோ அமைப்பை மீண்டும் தூசி தட்ட ஆரம்பித்துவிட்டார் கருணாநிதி. ஞானதேசிகன் எனும் ஒரு நபர் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக பேசிவருகிறார். முள்ளிவாய்க்கால் முற்றமே தேவையில்லாத ஒரு விசயம் என்று சொல்கிறார். ஜி.கே. வாசன் தவிர்த்து வேறு எந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களும் எப்போதும் தமிழர் விரோத போக்கைத்தான் கடைபிடிக்கின்றனர். ஒரு வகையில் தமிழக காங்கிரஸ் செத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு தமிழக காங்கிரஸில் இருக்கும் தலைவர்களே குழிவெட்டுவதுதான் ஆச்சர்யம்.

யாழ்ப்பாணம் சென்ற இங்கிலாந்து பிரதமர் அங்கிருக்கும் தமிழர்களை சந்தித்ததன் மூலம் மாநாட்டின் முதல் நாள் ராஜபக்சே முழங்கிய இலங்கை கடந்த நான்காண்டுகளாக அமைதிப்பூங்காவாக திகழ்கிறது எனும் கோஷம் எவ்வளவு பொய்யானது என்பதை உலகமே பார்க்க உதவியது. சேனல் 4 ஊடகம் ஈழம் வரைக்கும் சென்று உலகத்திற்கு அங்குள்ள நிலமையை காட்டினாலும், இங்கிருந்து சென்ற தந்தி மற்றும் புதிய தலைமுறை ஊடகங்கள் இந்திய அரசின் பிரதிநிதிகள் போலத்தான் செயல்படுகின்றன. இந்த காமன்வெல்த் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினையை, ராஜபக்சே தான் எப்போதும் தீர்வு கான விரும்பாத ஒரு நபர் என உலகிற்கு தெரியவைத்திருக்கிறார். அதேபோல் தமிழக மக்கள் தங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் நாடாளுமனறத் தேர்தலில் அவர்கள் முன்னால்தான் நிற்க வேண்டிவரும் என்பதால் இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் நடத்தும் நாடகங்களையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருகின்றனர்.

உலகளாவிய அழுத்தம் இன்னும் தீவிரமாக இலங்கை அரசின் மேல பாய்வதற்கு உலகளாவிய தமிழர்களுடன், தமிழகத்தில் இருக்கும் தமிழ் ஆர்வலர்களும் தமது தொடர்ச்சியான முன்னெடுப்புகளால் தமிழர்களுக்கு ஒரு பொது வாக்கெடுப்புக்கான சாத்தியத்தை நோக்கி நகர்த்துகிறார்கள். இன்னும் உலகெங்கும் தமது சொந்த மக்களை அகதியாக வாழ்வதை தன் பசப்பு வார்த்தைகளால் மூடி மறைத்து விட முடியும் என்பதை ராஜபக்சே எத்தனை காலம் சொல்ல முடியும். மாற்றம் வந்தே தீரும். அதிலும் வெகு விரைவில் வரும். கொல்லப்பட்ட லட்சக்கனக்கான உயிர்களுக்கு ஒருநாள் நிச்சயம் நீதி கிடைக்கும்

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தமிழகம் இலங்கையில் இலங்கைத் தமிழர் நிலைக்குறித்து சுருக்கமாய் அழுத்தமாய் பகிர்ந்துள்ளீர்கள். மிக அருமை!

Unknown சொன்னது…

தங்கள் பதிவு முற்றிலும் உண்மையே! எதிர் காலம் பதில் சொல்லும்

Udayakumar Sree சொன்னது…

தனி ஈழம் சாத்தியமேயில்லை என்று பிதற்றிக்கொண்டிருந்த கிணற்றுத் தவளைகளின் ___________ நறுக்கப்பட்டது. தமிழினம் இதற்காக கொடுத்த விலைதான் கணக்கு சொல்ல முடியாத அளவுக்கு அதிகமானது.

தனி ஈழம் மட்டுமில்லை, லங்கமே தமிழ் மாநிலமாக ஆகும் நாளும் விரைவில் வரும். நாம் கொடுத்த விலைக்கு அதுவே பலனாகும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

தெளிவாக எழுதப்பட்டுள்ளது. நிச்சயம் மாற்றம் வரும்

ஜோதிஜி சொன்னது…

போர்க்குற்ற காணொளி காட்சிகளை ஒவ்வொரு முறையும் காணும் போது மனம் உறுத்தாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அரசியல் வியாதிகளின் மனோபலத்தை எண்ணிக் கொள்வதுண்டு.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான பதிவு! தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் முகங்களை இழந்து கொண்டு இருக்கின்றன! தொண்டர்களும் கட்சியை புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்! முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு ஜெ.வுக்கு பின்னடைவே! நன்றி!