11 செப்., 2012

காடு...

அந்தக் காடு செவ்வக வடிவில் இருந்தது. செவ்வகம் என்றால் அளந்து வைத்தது மாதிரியெல்லாம் இல்லை. அருகில் இருக்கும்  மலை மேல் ஏறி ஒரு விமானப் பார்வையில் அது செவ்வகமென குத்து மதிப்பாக  சொல்லிவிடலாம். ஆதியில் அதாவது முப்பாட்டன் காலத்தில் அங்கு சிறுத்தைகள் இருந்ததாகவும் ஊருக்குள் புகுந்து ஆடு, மாடுகளையும் ஒரு முறை கிழவி ஒருத்தியையும் கபளீகரம் செய்ததாகவும்,   பின்னாளில் வெள்ளைக்காரன் வந்து மான், முயல், மயில், இரண்டு சிறுத்தைகள் அதன் குட்டிகள் என அனைத்தையும் வேடையாடி கபளிக்ககரம் செய்ததாகவும் பாட்டி இரவில் கதை சொல்லுவாள். தாத்தனைக் கேட்டால் பாட்டி பொய் சொல்லுகிறாள் எனவும் தான்தான் அவ்வூரிலேயே சிறந்த வேட்டையாடி எனவும், சிறுத்தைகளை  வெறுங்கைகளால் அடித்து கொன்றவன் என உதார் விடுவார். பாட்டி கெக்கே பிக்கேனு சிரிச்சுட்டு அது கொறவன் வச்ச வெடில செத்துப் போனதுன்னுல்ல ஊருல சொல்லிகிறாகன்னு சொல்லுவாள். தாத்தன் பாட்டிய “போடி பொச கெட்டவள ஒங்கப்பன் மாதிரிதானெ ஒனக்கும் புத்திருக்கும், சாரயத்துக்கு தக்கன பஞ்சாயத்து பேசுறவந்தானே ஒங்கப்பன்” என ஆரம்பிப்பார். அதற்கப்புறம் நடக்கும்  சுவாரஸ்யமான சண்டைகள் அப்பா வரும்வரை தொடரும். தாத்தனும், பாட்டியும் அவ்வளவு அன்யோன்யமாக இருப்பார்கள்.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை அடிக்கடி வந்து போகும். எல்லாம் வீட்டுப் பிரச்சினைகளை பார்க்காமல் ஊர்க்காரங்க பிரச்சினைகளையெல்லாம் வீட்டுக்கு கொண்டு வர்றாரு என்பதுதான் பெரும்பாலான சண்டைகளுக்கு அடிநாதம். உண்மையில் வீட்டில் என்ன நடக்கிறது. நானும் தங்கையும் எந்த வகுப்பில் படிக்கிறோம் என்பது கூட அப்பாவுக்குத் தெரியாது. பின்னாளில் உலக அரசியல் முதல் உள்ளூர் விவகாரங்கள் வரை அவருக்கிருந்த ஞானம் என்னை அடித்துப் போட்டது. மழை நிரப்பிய நாளொன்றில் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது வீட்டு விவகரத்தில் ஏன் கவனம் செலுத்துவதில்லை என வெளிப்படையாகவே கேட்டபோது “ ஏன் ஒங்கம்மா நல்லாத்தானெ பாக்குறா! பொறவு நான் வேற கொழப்பனுமா?” என்றார். அவரைப் பொருத்தவரை நாளுக்கு நூறு முறையாச்சும் அம்மாவை வம்புக்கிழுத்து தன் காதலை புதுப்பித்துக் கொண்டேயிருப்பார்.

அப்புறம் காட்டில் இருந்த ஏராளமான இலுப்பை, மா, நாவல், தென்னை என பெயர் தெரியாத மரங்களில் ஆரம்பித்து அத்தனையும் மந்திரி ஒருவர் தனது ஐந்தாட்டு திட்ட வருமானமாக மாற்றிவிட்டார். அதன்பிறகு  புதர்கள் நிறைந்த  மறைவிடங்கள் சொக்கு மாமா சாராயம் காய்ச்சும் மர்மப் பிரதேசமாக மாறியது. பத்தாண்டுகள் முன்னர் வரைக்கும் ஆடு, மாடுகளை பத்திக் கொண்டு போய் மேய்ச்சலுக்கு விடுவார்கள். அப்புறம் மாடுகள் குறைய ஆரம்பித்தன. ட்ராக்டர் வந்து காளை மாடுகளை இறைச்சிகளாக்கியது. பசு மாடுகள் லட்சுமி கடாட்சம் என சொல்லி வைத்தவனாலும், காப்பி கடையைல போயி குடிக்கிறதா எனும் பெருந்தனத்தாலும் தப்பித்தன. வசதி குறைவானவர்களுக்கு அதுவே ஜீவனை தந்து கொண்டிருந்தது. ஆடுகளும், கோழிகளும் கூட சொற்பமாகின.கல்லூரிக்கு போகும் காலம் காடு கொஞ்சம் கொஞ்சமாக இளைக்க ஆரம்பித்தது.

அப்புறம் தங்கைக்கு நிச்சயம் செய்யப்போகிறோம், என்ற கடிதம் அவசரமாய் என்னை ஊருக்கு அழைக்கவே. ஊருக்கு வந்து இப்பத்தானே +2 போறா அதுக்குள்ளே என்ன அவசரம் என்றேன். தாத்தன் அதெல்லாம் எங்களுக்குத் தெரியும், போயி குளியல போட்டுட்டு வாடா சாப்பிடுவோம் என மொத்தமாக அடக்கினார். சாப்பிடும்போது அம்மாவே சொன்னார். அத்தை மகனுக்குத்தான் தங்கையை கொடுக்கப் போகிறோம் என. அது இன்னொரு ஆச்சர்யம். அத்தை உறவை அறுத்துக் கொண்டு போய் பல வருஷங்கள் ஆச்சு, குல தெய்வ கோவிலில் வைத்து தங்கைக்கு மொட்டையடித்து, காது குத்தும்போது அத்தை வீட்டுக்காரர்  மடியில் வைத்து குத்தாமல்.  தாய் மாமா மடியில் வைத்து குத்திவிட்டார்கள் என்று கோபம் வார்த்தைகளில் வெடித்துது. யார் சமாதானம் சொல்லியும் கேட்காமல் பாதியிலேயே புருஷனையும், பிள்ளையையும் இழுத்துக்கொண்டு போய்விட்டாள். ”இப்போது எப்படிம்மா?” என்றேன். ”ம்... எல்லாம் ஒந்தங்கச்சிகாரிய கேளுன்னு” சொல்லிட்டு எழுந்து போய் விட்டார்.

ஆத்ம நண்பன் ஒருவனுக்கு ஊர் விவகாரங்கள் அத்துப்படி மாலையில் அதே காட்டின் கம்மாய் ஓரம் சரக்கடிச்சபடி விசாரிச்சா. அத்தை பையனுக்கும், தங்கைக்கும் காதலாம், விவகாரம் அப்பா காதுக்கு வரவும். அத்தை, மாமாவைக் கூப்பிட்டு முறைப்படி நடக்க வேண்டியதை பார் என்று சொல்ல, அதேன்  நாளைக்கு நிச்சயதார்த்தம் என்றான். அத்தை மகன் என்ன செய்கிறான் என்றால் அவனும் ஒங்கப்பா மாதிரிதான், என்ன ஒங்கப்பா நல்ல பஞ்சாயத்து, அவென் கட்டப் பஞ்சாயத்து அவ்வளவுதான் என்றான். எனக்கு தங்கையின் முடிவை நினைத்து கவலையாகியது. அதன்பிறகு கல்யாணம் முடிந்து, ஒருமுறை அவள் புருஷன் ஒரு பஞ்சாயத்தில் வெட்டு குத்தாகி அது கொலையில் முடிந்தது. வழக்கு விவாகரத்துக்காக சென்னையில் என் வீட்டில் வந்து தங்கியிருந்தான். அப்போது கூட சென்னையில் தனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருப்பதாகவும். தன் மனைவியின் சந்தோஷத்துக்காகவே மச்சான் வீட்டில் வந்து தங்குவதாக சொன்னான். மரியாதையாகத்தான் நடந்து கொண்டான். காலையில் அலுவலகம் போகும்போது அவன் சொல்லும் இடத்தில் ட்ராப் பன்னிடுவேன். வீட்டுக்கு அவனைப் பார்க்க யார் யாரோ வருவார்கள் நள்ளிரவு தாண்டி மிதமான போதையில் கதவு தட்டுவான். திறக்கும்போது வாசலில் சிலநேரம் காருடன் நிற்கும் போலிஸ்காரரையோ, கரை வேட்டியையோ, வக்கீலையோ பார்ப்பேன்.

ஒரு நாள் என் கல்லூரித் தோழி சென்னைக்கு வந்திருந்தாள். அவள் எப்போது சென்னை வந்தாலும் என் வீட்டில்தான் தங்குவாள். அவள் நல்ல தோழி எனக்கு. ஒரு காதல் தோல்வியின் விரக்தியில் இருந்து அவளை மீட்டெடுத்தவன் நான் என்பதால் பிரியமாக இருப்பாள். காலையிலேயே அவளைப் பார்த்ததும் அவன் எதுவும் கேட்கவில்லை. அன்று இரவு சீக்கிரமே வீட்டுக்கு வந்து விட்டான். நாங்கள் இருவரும் அவனை ஓட்டலுக்கு சாப்பிட அழைத்தோம். வந்தான், சாப்பிட்டான், சாப்பிடும் நேரம் கூட யாருக்காவது போனில் பேசிக் கொண்டே இருந்தான். இரவு வீட்டுக்கு வந்து அவளை என் பெட்ரூமில் படுக்க சொல்லிவிட்டு நான் ஹாலில் படுக்க வந்தேன். டி.வி யில் பழைய எம்.ஜி.ஆர் படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தான். அதனை அனைத்து விட்டு, என்னிடம் ”மாச்சான், நீங்க உள்ளேயே படுத்துக்கலாம், நான் தப்பா நெனைக்க மாட்டேன்” என்றான். அது ஒரு தூண்டில் என்பதை அறியாமல் “அலோ நீங்க நெனைக்கிற மாதிரில்லாம் இல்ல!, அவ என் ஃப்ரெண்டு” என்றேன். “படிச்ச பயளுக இப்படித்தான் மழுப்புவீங்க” என்றான். “மாப்பிள்ளை நான் யாரிடமும் மழுப்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஃப்ளீஸ் போய் படுங்க” என்றேன். அதற்கப்புறம் அவன் எதுவும் பேசவில்லை.

ஆனால் மறுநாள் காலை வீட்டின் கதவை தட்டியது என் அப்பா, அம்மா, தங்கை மூவரும். ஆச்சர்யத்தில் என்ன விசயம் என்றால்? அம்மா நேராக என் பெட்ரூம் சென்று பார்த்துவிட்டு வந்து “யாருடா அது?” “அம்மா அவ என் ஃப்ரெண்ட், ஒரு வேலை விசயமா சென்னை வந்திருக்கா, சென்னை வந்தா இங்கதான் தங்குவா” என்றேன். ”பொண்ணு கொடுத்த மாப்பிள்ளைய வீட்டுல வச்சிகிட்டே இப்படித்தான் கூத்தடிப்பியா?” என்றார் அப்பா. அதற்க்குள் மாப்பிள்ளையே வெளியே வந்து அப்பாவை சமதானம் செய்ய, சத்தம் கேட்டு தோழி வெளியே வர, நடக்கும் விவரம் புரியாமல் எல்லோரையும் பயத்துடன் பார்க்கும் அவளை தங்கை ஓங்கி அறைந்தாள். அவ்வளவுதான் நான் கோபம் தலைக்கேறி ”எல்லாரும் வெளியே போங்க” என்றேன். அப்பா, அம்மாவும் அழ ஆரம்பித்தனர். அதற்குள் தங்கையும், அவள் கணவனும் அப்பா, அம்மாவை நான் கெஞ்சக் கெஞ்ச அழைத்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

அதன்பின் தோழிக்கு நிலமையை விளக்கினால் அவள் அழ ஆரம்பிக்க என் வாழ்வு திசை மாறுவதை உணர்ந்தேன். அடுத்த நாள்வரை அலுவலகம் செல்லவில்லை. தோழிக்கு என் நிலமையை புரியவைத்ததும் அவள் தன்னால்தானே இத்தனையும் என்று அன்று நாள் முழுதும் அழுதுகொண்டே இருந்தாள். வீட்டுக்கு போன் செய்து தாத்தனிடமும், பாட்டியிடமும் நிலமையை விளக்கினேன். நேற்று இரவு மாப்பிள்ளை போன் செய்து தான் இருக்கும்போதே வீட்டிற்கு ஒருத்தியை அழைத்து வந்து கூத்தடிப்பதாக சொல்லி அவர்களை வரவழைத்திருக்கிறான் என தாத்தன் சொன்னார். இன்னும் யாரும் ஊருக்கு வரவில்லை, வந்தவுடன் எடுத்து சொல்லி சமாதானப் படுத்துகிறேன் என்று சொன்னார். அவர் முடிக்கும்போது அழ ஆரம்பித்தார். நான் ”தாத்தா என்ன இது” என பதறினேன். “இல்லடா ஒங்கப்பன் ஊருக்கே நாயம் பேசுரவன், ஆனா அவனே பெத்த புள்ள சொல்றத நம்பள இல்லைடா” என்றார்.

உடனே தோழியையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பினேன். ஆனால் கடைசிவரை தாத்தனையும் பாட்டியையும் தவிர அத்தனை பேரும் எங்களை நம்பவில்லை. திருப்பி சென்னை வரும் வழியில் அழுதழுது முகமெல்லாம் வீங்கிக் கிடந்த அவளிடம் ”என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்றேன். அவள் ”காரை நிறுத்துடா, நான் இறங்கி பஸ் பிடிச்சு போறேன்” என்றாள் கோபமாக. ஆயிரம் சாரி கேட்டு வழியில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு காரை கிளப்பும்போதே அவள் அசதியில் தூங்க ஆரம்பித்தாள். அவள் விழிக்கும்போது கிட்டதட்ட சேலத்தை நெருங்கியிருந்தது கார். அது அவள் ஊர்.

அவள் வீட்டில் எல்லோருக்கும் என்னை நன்கு தெரியும் என்பதால் முதல் நாள் இருவரையும் எதுவும் கேட்கவில்லை. ஆனால் இருவருமே மூடியாக இருந்ததால் மறுநாள் அவள் தந்தையிடம்  எல்லாவற்றையும் சொன்னேன். பொறுமையாக கேட்டுவிட்டு. ”சாரிப்பா என் பெண்ணால்தானே” இவ்வளவும் என்றார். அதன்பிறகு என் திருமண விருப்பத்தை சொன்னதும் மகளை கூப்பிட்டுக் கேட்டார். ஆனால் அவளோ ”முடியாதுப்பா அது இன்னும் சிக்கலை உருவாக்கும், அவனை போகச் சொல்லுங்கப்பா” என பிடிவாதம் பிடித்தள். அலுவலகத்துக்கு 15 நாள் மெடிகல் லீவ் அனுப்பிவிட்டு அங்கேயே இருந்தேன். அங்கிளை சமாதனப் படுத்தி அப்பாவிடம் பேசச் சொன்னேன். அப்பா பொறுமையாக கேட்டுவிட்டு எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன். ஊருக்கு வந்து என் மாப்பிள்ளையின் சகோதரியை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என நிபந்தனை விதித்தார். விதியின் வலையை மாப்பிள்ளை சரியாகத்தான் விரித்திருக்கிறான்.

அதன்பிறகு தோழியையும் அவள் குடும்பத்தினரையும் சிரமப்பட்டு சம்மதிக்கவைத்து அவளையே திருமணம் செய்துகொண்டேன். தாத்தனுக்கும், பாட்டிக்கும் மட்டும் விசயம் தெரியும். இருவரின் ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் இருக்கும். சரியாக மூன்று வருடம் கழித்து மனைவி, மகனுடன் ஊர் வந்திருக்கிறேன். என் தாத்தனும், பாட்டியும் இரவு ஒரே நேரத்தில் இறந்து விட்டார்கள் எனத் தகவல் கிடைததும் பதறி ஓடி வந்திருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் பிழியப் பிழிய காதலை பறிமாறிக்கொண்ட என் ஆதர்ஷங்கள் போய்விட்டன. தன் கொள்ளுப் பேரனை அவர்கள் பார்க்க விரும்புவதற்காக இடையில் ஒரு முறை அவர்களை பழனிக்கு வரச்சொல்ல்லி அப்பா, அம்மாவுக்கு தெரியாமல் காட்டியிருக்கிறேன். பிரிய மனமின்றி பிரிந்தார்கள் அப்போது. இப்போதும் மாப்பிள்ளையும், தங்கையும்தான் வீட்டின் சடங்கு சம்பிரதாயம் உட்பட எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தனர். அப்பா சில மணிநேர தயக்கத்துக்குப் பிறகு பேரனை அம்மாவிடம் இருந்து வாங்கிக் கொண்டார். எல்லா சடங்குகளும் முடிந்தன. 16 ஆம் நாள் காரியம் வரை கூட தங்கையும், மாப்பிளையும் எங்களிடம் பேசவில்லை, என் மகனைக்கூட அவர்கள் பிள்ளைகளுடன் விளையாடவிடாமல் பார்த்துக் கொண்டனர்.

எல்லாம் முடிந்து நாளை ஊருக்கு கிளம்புகிறேன் என்றபோது அப்பாவும், அம்மாவும் பாட்டியின் நகைகளையும், சொத்து பத்திரங்களையும் கொடுத்தனர். சொத்து எனக்கும், தங்கைக்கும் சமமாக பிரிக்கப் பட்டிருந்தது. என் மனைவி அப்பாவையும், அம்மாவையும் தங்களுடன் சிலகாலம் வந்து இருக்கும்படி சொன்னாள். அப்பாவும், அம்மாவும் மறு பேச்சு பேசாமல் கிளம்பிவிட்டனர். பேரன் அவர்கள் இருவருடனும் மிக நெருக்கமாகிவிட்டான். மறுநாள் அப்பா, அம்மாவுடன் கிளம்பும்போது மாப்பிளையையும், தங்கையையும் அழைத்தேன். என் பங்காக எனக்கு பிரிக்கப்பட்டதை அவர்களே பயண்படுத்திக் கொள்ளும்படி சொன்னேன். மாப்பிள்ளையும் என்னிடம் மன்னிப்பு கேட்டான்.

காரில் ஊரைக் கடந்தபோது அக்காடு முழுவதுமாக அழிக்கப்பட்டு கிரானைட் குவாரி ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது.

13 கருத்துகள்:

dheva சொன்னது…

Excellent Write-up..!!!!!!

பட்டிகாட்டான் Jey சொன்னது…

எல்லாரும் ஒன்னு சேரதுல சந்தோசம். மூத்தவனா விட்டுக்குடுத்திருக்கீங்க. :)

Unknown சொன்னது…

பல காடுகள், கரடுகள் குவாரிகள் மூலம் அழிக்கப்படுகின்றன......! அவை தனக்குள் பல கதைகள் வைத்திருக்கின்றன...!அது அங்கு வாழ்ந்தவனுக்கு மட்டுமே தெரியும்.

”காடு”

தலைப்புதான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு கே.ஆர்.பி!

அஜீம்பாஷா சொன்னது…

உங்களுக்கு நல்ல மனசு செந்தில் அதனால்தான் மன்னிக்க முடிந்தது.
நம் அடுத்த தலைமுறைக்காக எந்த விலை கொடுத்தும் உறவுகளை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

phantom363 சொன்னது…

ரொம்ப சுவாரசியமாக எழுதி இருக்கிறீர்கள். பதிவின் ஓட்டமே மிக அருமை. ஆனாலும் ஒரு சிறு கேள்வி. மேலே இருப்பது உண்மையா? அல்லது இதுவா?

http://krpsenthil.blogspot.ca/2010/11/blog-post_25.html

என்ன ஆனாலும் உங்கள் பதிவூட்டங்கள் வாசிப்பதற்கு ரொம்ப சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்.

:)

phantom363 சொன்னது…

பி.கு.

எது உங்களுடைய உண்மையான மனைவி என்றுதான் கேட்க வந்தேன். அல்லது இரண்டும் கற்பனையா?

மாதேவி சொன்னது…

படமும் கதையும் நன்றாக இருக்கின்றது.

Unknown சொன்னது…

நன்றி தேவா..

Unknown சொன்னது…

//பட்டிகாட்டான் Jey கூறியது...

azeem basha கூறியது...

phantom363 கூறியது...//

நண்பர்களே இது ஒரு கற்பனை சிறுகதை. இது என் சொந்த அனுபவம் அல்ல, ஆனால் சில சம்பவங்கள் மட்டும் சில நண்பர்களுடைய உண்மைக் குறிப்புகளை பயண்படுத்தி இருக்கிறேன்.

அன்புக்கு நன்றி!

Unknown சொன்னது…

நன்றி வீடு சுரேஷ் குமார் ..

Unknown சொன்னது…

நன்றி மாதவி ..

Unknown சொன்னது…

சில சமயம் கிராமத்து வாழ்க்கையினை பற்றி சொல்லும்போது , நிதர்சனமான உண்மைகள் என்றும் நிலையானது என்று தெரியும் . நன்றி

vasan சொன்னது…

காடுக‌ள், கிர‌ணைட் குவ‌ரிக‌ளாக மாறிக் கொண்டிருக்கிற‌து
கால‌ம், வாழ்வு, ம‌னநிலைக‌ளின் ப‌ரிணாம‌ மாற்ற‌த்தை ஒரே வ‌ரியில்