28 நவ., 2010

எங்கே போகிறது இந்தியா? பகுதி - இரண்டு...

முதல் பகுதியைப் படித்துவிட்டு இந்தியாவின் நல்ல விசயங்களை மட்டும் எடுத்து சொல்லி நம்பிக்கை விதைகளைத் தூவலாமே எனப் பதிவுலக நண்பர்கள் கருத்து சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றியும் வந்தனமும். இந்தியா நமது தாய் தேசம் இது சீர்கெட்டுப் போகிறதே என்கிற ஆதங்கம்தான் இந்தக் கட்டுரை. பொதுவாகவே ஒட்டு மொத்த இந்தியாவும் ஆழமான கலாசார வேர்களைக்கொண்டது. ஆனால் அது மட்டுமே நமது பலம் அல்ல. நண்பர் வசந்த் இந்தியா இப்படியே இருப்பதுதான் சரி, இப்படியே இன்னும் ஐம்பது ஆண்டுகளைக் கடந்தால் உலகில் மற்ற நாடுகளில் வாழும் அனைவரும் இந்தியாவை சிறந்த சுற்றுலாத்தளமாக பார்ப்பார்கள். இயற்கைத்தன்மையுடன் நாம் வாழ்வதாக அதிசயிப்பார்கள் என்று சொல்வார்.


நீங்கள் பொது விநியோக மையங்களில் ( ரேசன் கடைகளில்௦௦) சென்று பொருட்கள் வாங்கியதுண்டா? அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் தர்மத்திற்கு வேலை செய்பவர்கள் போல் தங்களைக் காட்டிக் கொள்வார்கள். அதிகாரம் தூள் பறக்கும், எடை சரியாகவே இருக்காது இதனை ஒரு சாமானியனால் தட்டிக் கேட்கவே முடியாது, காரணம் மீண்டும் அவன் அந்தக் கடைக்கு வந்தே ஆக வேண்டும். இதே நிலைதான் அரசு ஊழியர்கள் அனைவரின் செயல்பாடும், சரியான நேரத்தில் அலுவலகத்தில் இருக்க மாட்டார்கள், ஒழுங்கான வேலைகள் செய்து தருவதற்கே பணம் அழ வேண்டும். புரோக்கர்கள் இல்லாத அரசு அலுவலகங்களே இல்லை என்கிற நிலைமைதான். சமீபத்தில் சென்னையில் அரசு பேருந்து நடத்துனருக்கும், அந்த பகுதி கவுன்சிலருக்கும் நடந்த சண்டையால் அன்று நாள் முழுதும் சென்னையின் அனைத்து பேருந்து ஊழியர்களும் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அரசையும், மக்களையும் நிலை குலைய வைத்தனர். காவல் நிலையங்களில் ஒரு சாதாரண நபரின் புகார்களை எப்படிக் கையாளுவார்கள் எனத் தெரிந்தவர்கள் அறிவார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசாங்கம் அல்ல, நாம்தான் காரணம்.



ஒரு அரசு அதிகாரியோ, காவலரோ. கவுன்சிலரோ, அமைச்சரோ அது யாராக இருந்தாலும் அவர்கள் நம்மில் ஒருவர்தான். அவர்கள் யாரும் மேலோகத்தில் இருந்து திடீரென குதித்தவர்கள் அல்லர். ஆனால் நாம் சுலபமாக குறை கூறுகிறோம். பிரச்சினை என வந்தால் ஒதுங்கிக்கொள்கிறோம். போக்குவரத்து விதிகளை நாம் யாராவது முறையாக பின்பற்றுகிறோமா? சிக்னலில் காவல் துறை அதிகாரி இல்லையென்றால் நாம் யாரும் சிக்னலை மதிப்பதே இல்லை. ஒரு காரியம் உடனே ஆகவேண்டும் என்று அதற்கான பணத்தை லஞ்சமாகக் கொடுக்க தயாராய் இருக்கிறோம். எனது நண்பர் தனக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்றார், நான் அதற்கான விதிமுறைகளை விளக்கினேன் , ஆனால் அவரோ நான் போகாமல் எடுத்து தர ஆள் இருக்கா எனக்கேட்டார். பாஸ்போர்ட் என்பது மிக முக்கியமான ஆவணம் அதை ஏஜெண்டுகள் மூலம் கொடுப்பதே இந்திய அரசின் தவறான கொள்கைகளில் ஒன்று. இப்போது ஒரு பாஸ்போர்ட் எடுக்க சுலபமான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ள அரசு இன்னும் ஏன் ஏஜெண்டுகளை வைத்திருக்கிறது எனத் தெரியவில்லை. ஒரு நாள் நேரம் ஒதுக்கி பாஸ்போர்ட் எடுக்கப் போக விரும்பாத சோம்பேறிகள் நாம். இப்படி ஏஜெண்டுகள் மூலம் பெறப்படும் பாஸ்போர்ட்டில் நிறைய குளறுபடிகள் வந்திருக்கின்றன.



இந்தியாவின் இன்னொரு மோசமான விசயம் வரிசையில் நிற்காதது , பெட்ரோல் பங்கில் துவங்கி அனைத்து இடங்களிலும் யாரும் வரிசைப்படி செல்வதே இல்லை. மின்சார கட்டணம் கட்ட நாம் காத்திருப்போம் ஆனால் அலுவலகத்தின் உள்ளே நுழைந்து நேரடியாக அதிகாரியிடம் நான்கைந்து கார்டுகளை கொடுத்து பணம் கட்டும் கட்சிக்காரர்கள். மருத்துவமனையில் அதுவும் அரசு மருத்துவ மனைகளில் நம் ஆட்கள் முண்டியடிப்பது என ஒழுங்கு என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் நாம். சிங்கப்பூர் ஒரு சிறிய நகரம், ஆனால் வரிசைப்படிதான் அங்கு எல்லாம் நடக்கும். மலேசியா கூட நிறைய விசயங்களில் நம்மைவிடவும் பத்து வருடங்கள் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறார்கள், அவர்கள் கூட வரிசை மாற மாட்டார்கள். அடுத்து குப்பை போடுவது, நம் வீட்டு குப்பைகளையும், மீந்த உணவுகளையும் அப்படியே சாலையில் கொட்டுவது, இதனால்தான் நிறைய வியாதிகள் சுலபமாக பரவுகின்றன, இதையெல்லாம் விட உடல்நிலை சரியில்லாத போது தனியாக ஓய்வு எடுக்காமல் எங்கும் சுற்றி தாம் பெற்ற துன்பத்தை அனைவருக்கும் பரப்புவது. அடுத்து உணவு, இந்த விசயத்தில் நாம் மிக மோசமானவர்கள் சுத்தம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், நம் தேசத்தின் உணவகங்களின் சமையல் கூடங்களுக்கு நீங்கள் ஒருமுறை சென்றால் அப்புறம் வாழ்நாளில் உணவகம் பக்கமே போக மாட்டீர்கள், ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் சில பெரிய உணவகங்களும், சிறு நகரங்களில் பெயர் சொல்லகூடிய சில உணவகங்களும் நேர்த்தியாகவும், சுத்தமாகவும் இருக்கும்.



சீனாவை விடவும் இருபது வருடங்கள் நாம் பின்தங்கியுள்ளோம். அவர்களை நாம் பின்பற்றி உற்பத்தி துறையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நம் மக்கள் தொகை நமது வரப்பிரசாதம். நமக்கென்று ஒரு மிகப்பெரிய சந்தை நம் கைவசம் இருக்கிறது எனவே உற்பத்தி துறையின் மூலமே நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும். உணவுப்பொருட்களின் தேவை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதற்கான விசயங்களை மேம்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வேண்டும். நமது பாரம்பரிய கலைச்சின்னங்களை மேம்படுத்தி சுற்றுலா வாசிகளை அதிகம் ஈர்த்தால் , நமது கலை வடிவங்கள் மூலம் புதிய சந்தை வாய்ப்புகளை மேம்படுத்த முடியும். நூலகங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து எல்லாக் கிராமங்களிலும் நூலகத்தை உருவாக்கி வாசிக்கும் பழக்கத்தினை இளையோரிடம் உருவாக்க வேண்டும். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...



அடுத்த அத்தியாயத்தில் இந்தியாவின் சாதனை விசயங்களையும், ஒரு வெற்றிகரமான நாடாக வளம்பெற இருக்கும் சாதகமான விசயங்களையும் அலசுவோம் ...

46 கருத்துகள்:

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமையான பதிவு..

செந்தில் அண்ணா நீங்கள் கூறியதை போன்று அன்றாடம் வாழ்வில் நடக்கும் விசயங்களை ஒழுங்கு படுத்தி சீராக சிறப்புடன் செய்து நாம் ஒவ்வொருவரும் நம்மை சீர் செய்து கொண்டாலே போதுமானது...
சமுதாயத்தை குறை கூறி எந்த பயனும் இல்லை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

//இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...//

Nalla pakirvu....
sollungal....
innum sollungal anna...

Unknown சொன்னது…

அருமை.
மாற்றங்கள் என்பது நம்மில் இருந்து தான் துவங்க வேண்டும்..

Unknown சொன்னது…

//நம் மக்கள் தொகை நமது வரப்பிரசாதம். நமக்கென்று ஒரு மிகப்பெரிய சந்தை நம் கைவசம் இருக்கிறது//
//நூலகங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து எல்லாக் கிராமங்களிலும் நூலகத்தை உருவாக்கி வாசிக்கும் பழக்கத்தினை இளையோரிடம் உருவாக்க வேண்டும். //

Unknown சொன்னது…

//ஒரு அரசு அதிகாரியோ, காவலரோ. கவுன்சிலரோ, அமைச்சரோ அது யாராக இருந்தாலும் அவர்கள் நம்மில் ஒருவர்தான். அவர்கள் யாரும் மேலோகத்தில் இருந்து திடீரென குதித்தவர்கள் அல்லர். //

dheva சொன்னது…

வெகுமன ஆதங்கங்களின் அணிவகுப்பாய் இருக்கிறது கட்டுரை...

பாஸ்போட் அப்ளை செய்யும் சிஸ்டம் ரியலி வொர்ஸ்ட் ...பெரும்பாலும் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கும் மரியாதையை பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் நேரிடையாக செல்லும் மக்களுக்கு கொடுப்பதில்லை..

ஏஜெண்ட் தேவையில்லை என்பதை (குறைந்த பட்சம் பாஸ்போர்ட்டுக்காவது) நான் ஆமோதிக்கிறேன்.

Madhavan Srinivasagopalan சொன்னது…

செந்தில் அவர்களே
நீங்கள் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்....
"நான் என்னை முதலில் சரிசெய்து கொள்ளவேண்டும்"

'வரிசையில்' வரவேண்டும். அதற்கான பொறுமை வேண்டும். (எனக்கு உண்டு)

'சாலை விதிகளை மதித்து செல்ல வேண்டும்"
--90 % நான் மதித்து வருகிறேன்..
--- இனிமேல் 100 % மதித்து நடப்பேன்.. (என்னை தட்டி எழுப்பியதற்கு நன்றி)

அரசு அதிகாரி என்ற முறையில், என்னுடைய அலுவல் பணிகளை நான் இன்னும் சிறப்பாக செய்வேன்..

நல்ல கட்டுரை.

Unknown சொன்னது…

உங்களின் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.

Philosophy Prabhakaran சொன்னது…

இந்த வாரம் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறீர்கள் போல... வாழ்த்துக்கள்...

அம்பிகா சொன்னது…

\\பாரத்... பாரதி... சொன்னது…
அருமை.
மாற்றங்கள் என்பது நம்மில் இருந்து தான் துவங்க வேண்டும்\\
நிதர்சனம்.
நல்ல கட்டுரை

iniyavan சொன்னது…

//மலேசியா கூட நிறைய விசயங்களில் நம்மைவிடவும் பத்து வருடங்கள் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறார்கள்//

செந்தில்,

எந்த விசயங்களில் என்று கொஞ்சம் சொல்லுங்கள், முடியும்ம் என்றால்??

//அடுத்த அத்தியாயத்தில் இந்தியாவின் சாதனை விசயங்களையும், ஒரு வெற்றிகரமான நாடாக வளம்பெற இருக்கும் சாதகமான விசயங்களையும் அலசுவோம் ...//

ஆவலுடன் காத்திருக்கிறேன்.

என்றும் அன்புடன்,
லால்குடி என்.உலகநாதன்
மலேசியா

iniyavan சொன்னது…

தலைவரே,

ஏதாவது பத்திரிகைகளிலூம் நீங்கள் எழுதலாமே?

ஜீவி, ரிப்போர்ட்டர் டச் தெரிகிறது உங்கள் எழுத்து நடையில்.

என்றும் அன்புடன்,
லால்குடி என்.உலகநாதன்
ம்மலேசியா

vasu balaji சொன்னது…

ம்ம். தொடருங்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

//பொதுவாகவே ஒட்டு மொத்த இந்தியாவும் ஆழமான கலாசார வேர்களைக்கொண்டது.//

அழகான வரிகள்.

அன்பரசன் சொன்னது…

//நீங்கள் பொது விநியோக மையங்களில் ( ரேசன் கடைகளில்௦௦) சென்று பொருட்கள் வாங்கியதுண்டா? //

பல வருடங்கள்.
நீங்க சொல்லிருக்கற ஒவ்வொரு விசயமும் அனுபவித்ததுண்டு.

ராஜ நடராஜன் சொன்னது…

//'சாலை விதிகளை மதித்து செல்ல வேண்டும்" //

முதல் துரித வேகப் பாதைதானே வண்டி துரிதமாகப் போகவேண்டும்?ஆனால் அதுதான் இல்லை.குவைத்தில் காலை நெரிசலில் ஆமைத்தடமான மூன்றாவது பாதையே வேகமாக செல்வதற்கு வசதியானது.நான் மட்டுமல்ல ஏனைய குவைத்திகளும் இடம் கிடைச்சா மூணு,நாலு பாதையிலும் பேந்தா ஓட்டுற ஆளுக:)

நகரை நோக்கியே அனைத்து அரசு,தனியார் நிறுவனங்களும்.ஆட்டுமந்தை மாதிரி காலைல ஒண்ணா போனா ட்ராபிக் போலிஸ் மதியம் எல்லோரையும் ஒண்ணா ஓட்டிட்டு வந்துடுவார்:)

எதிர்ப்பக்கம் சவாரி செய்தால் மணிக்கு 120 முதல் 150 கிலோமீட்டர் வரை வண்டி எகிறும்.

இந்தியாவில் கம்பி தொட்டு சாகசம் செய்த பஸ் பயணங்கள் இப்ப பயிற்சி இல்லாம பயமாகவே இருக்கிறது.

மும்பாயில் இந்த பிரச்சினையே இல்லை.இரண்டு கையையும் நெஞ்சுக்கு பக்கத்தில் வைத்து நின்று கொண்டால் கூட்டத்தில் சல்லோ சல்லோ குரலில் பின்னால் இருப்பவர்களே ரயிலுக்குள் தள்ளி விடுவார்கள்:)

ராஜ நடராஜன் சொன்னது…

//சிக்னலில் காவல் துறை அதிகாரி இல்லையென்றால் நாம் யாரும் சிக்னலை மதிப்பதே இல்லை. //

சிக்னலில் காவல்துறை அதிகாரி என்பது இப்போதைய காமிரா கண்காணிப்பு நவீனத்தில் தேவையில்லாத ஒன்றே என்பேன்.ஆனால் நம்மவர்கள் காமிராவை உடைக்க இயலாத இடம் தேடுவதுதான் பிரச்சினை.

வளைகுடா சாலை நெறிகள் செயல்படும் விதம் கிட்டத்தட்ட அமெரிக்கா மாதிரின்னு நினைக்கிறேன்.ஒவ்வொரு சிக்னல் சந்திப்பிலும் ஆளுக்கு எட்டாத உயரமான தூண்களில் காமிராவை பொறுத்தி விடுகிறார்கள்.கூடவே வேகமான சாலைகளிலும் வேக எல்லையை கடந்தால் பளிச்ன்னு பிளாஷ் செய்யும் காமிராக்கள்.

நிறுத்தக் கூடாத இடத்தில் வாகனம் நிறுத்தினால் வண்டி சக்கரத்துக்கு விலங்கு,மஞ்ச நோட்டிஸ் எழுதி வச்சிட்டு வண்டி எண்ணை கணினியில் பதிவு செய்து விடுகிறார்கள்.அபராத தொகையை கட்டாயம் கட்டியே ஆகவேண்டும்.இல்லையென்றால் வருட இறுதியில் வண்டி உரிமம் மீள் பதிவு செய்ய மாட்டாது.

போலிஸ் மாமா!இந்தா காசு!ஆளை வுட்டுறுன்னு காசு கொடுத்தா ஜெயிலில் குப்புசு திங்க வேண்டியதுதான்.

உணவு,உடை,பழக்கங்கள் என்று அடிப்படை கலாச்சாரங்களின் வேர்கள் நம்மிடமிருக்கிறதென்பதில் சந்தேகமேயில்லை.ஆனால் நடைமுறை வாழ்க்கையின் பண தேவைகள் குறுக்கு புத்தியை கற்பிக்கிறதென்பதே கோளாறுகளுக்கு காரணம்.

ராஜ நடராஜன் சொன்னது…

//நம் தேசத்தின் உணவகங்களின் சமையல் கூடங்களுக்கு நீங்கள் ஒருமுறை சென்றால் அப்புறம் வாழ்நாளில் உணவகம் பக்கமே போக மாட்டீர்கள், //

இதற்கு காரணம் நமது உணவு சமைக்கும் முறை,உண்ணும் முறை,சமையல் பாத்திரங்கள் பராமரிக்கும் முறை என்பேன்.அதாவது அரிசி வடித்தால் கஞ்சி கீழே கொட்டுவது,எண்ணை இல்லாமல் நம்மால் இட்லி தவிர எந்தப் பொருளும் சமைக்கவே இயலாது என்பது,பலசரக்கு(Spice)மற்றும் ரசம்,கொழம்பு என்று நீரின் அத்தியாவசிய தேவை,ருசியால் ரசம்,மோர் போன்றவற்றை கைநிறைய வழிய விட்டு பின் கைகழுவ வேண்டிய தேவை.சமைத்த பின் எண்ணைப்பிசிறு போக கழுவி வைக்கவேண்டிய நிர்பந்தம்ன்னு எத்தனைக் கலாச்சாரத்தின் ஆணிவேர்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.

உணவு பழக்க வழக்கங்கள்ன்னு ஆராய்ந்தால் இன்னும் சொல்லிகிட்டே போக வேண்டுமென்பதால் இத்துடன் உணவு சமைக்கும் அறைக்கு போகாமல் உண்ண வேண்டுகிறேன்.இல்லைன்னா நன்றாக பரிமாறுகின்றார் என்று சர்வருக்கு கொடுக்கும் அன்பளிப்பு டிப்ஸை இந்த பின்னூட்டம் படிக்கிறவர்கள் அடுத்த முறை உணவகங்கள் போகும் போது சாப்பாடு ருசியாக இருந்து மகிழ்ந்தால் சமைப்பவருக்கு டிப்ஸ் வழங்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டுகிறேன்.உணவக சுத்தம் வருவதற்கு சாத்தியமிருக்கிறது.

சூட்டுல கஷ்டப்படுறது சமையல்காரர்.சூட்டுல துட்டு வாங்கிறது சர்வர்.என்னா இது நியாயம்:)

மாணவன் சொன்னது…

//"எங்கே போகிறது இந்தியா? பகுதி - இரண்டு..."//

விரிவான பார்வையுடன் சிறப்பாக பதிவு செய்து வருகிறீர்கள் அருமை,

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...

மாணவன் சொன்னது…

//பிளாகர் வெறும்பய கூறியது...

அருமையான பதிவு..

செந்தில் அண்ணா நீங்கள் கூறியதை போன்று அன்றாடம் வாழ்வில் நடக்கும் விசயங்களை ஒழுங்கு படுத்தி சீராக சிறப்புடன் செய்து நாம் ஒவ்வொருவரும் நம்மை சீர் செய்து கொண்டாலே போதுமானது...
சமுதாயத்தை குறை கூறி எந்த பயனும் இல்லை...//

இதுதான் எனது கருத்தும் முதலில் நம்மை நாமே சரி செய்துகொண்டாலே சமுதாயம் தானாக சரியாகிவிடும் சமுதாயம் என்பது நாமதானே!

பகிர்வுக்கு நன்றி

தொடருங்கள்....

ராஜ நடராஜன் சொன்னது…

//சீனாவை விடவும் இருபது வருடங்கள் நாம் பின்தங்கியுள்ளோம். அவர்களை நாம் பின்பற்றி உற்பத்தி துறையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.//

தரம்ன்னு பார்த்தால் சீனாவை விட இந்திய பொருட்கள் உயர்ந்தவை.ஆனால் உலக சந்தைப்படுத்தலில் நாம் பின் தங்கி விடுகிறோம்.அரசு சிவப்பு நாடாக்களாய் அரசு அதிகாரி,பணியாளர்களின் ஒப்புதல் வேகம்,துரித கட்டமைப்புகள் சாத்தியமற்ற சாலைகள் மற்றும் இந்திய சீன பொருட்களின் விலை வித்தியாசம் போன்றவை நம்மை பின் தள்ளுகின்றன.

நண்பர் ஒருவரின் இந்திய பொருளை சந்தைப்படுத்தலில் எனக்கு இன்னும் கூட மூச்சு வாங்குகின்றது.அதற்கு தகுந்த மாதிரி இந்தியா மீது நேசம் கொண்ட குஜராத்தி மார்வாடி,போரிகள் நமக்கு வில்லன்கள்.

எனக்கென்னமோ சீனாக்காரனின் அம்பு இந்திய சந்தையை அமுக்குவது போல்தான் தெரிகிறது.ஆங்கிலமும் தெரியாமல் சீனாவில் உட்கார்ந்த இடத்திலே உட்கார்ந்து கொண்டு செலுத்தும் மையப்புள்ளியான திறந்தவெளி கம்யூனிஸம் காமன்வெல்த்,ஆதர்ஷ்,ஸ்பெக்ட்ரம் ஜனநாயகத்தின் முன்னால் நம்மை உலக சந்தைப் போட்டியில் மண்டியிட வைக்கிறது.

ராஜ நடராஜன் சொன்னது…

வள வளன்னு சொன்னதை வைத்து ஒரு பதிவு தேத்தியிருக்கலாம் போல தெரியுதே:)சட்டில இருக்குறதுதானே மண்டைல வரும் இல்ல?

ஜோதிஜி சொன்னது…

மொத்தமாக சுட்டிக்காட்டியிருக்கீங்க. நன்றி. ஆனால் ஒரே ஒரு ஆதங்கத்தை பதிவு செய்து வைக்க விரும்புகின்றேன்.

நண்பர் கேரளா மாநிலம் காசர்கோடு அருகே உள்ளவர். அவர் சொன்ன தகவல். அந்த கிராமத்தில் தனது வசதிக்காக பொதுவழியை மறைத்து தனக்கான வசதியை ஏற்படுத்தி இருந்த நகர்மன்ற உறுப்பினரிடம் இயல்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

கடைசியில் நீதிமன்றத்திற்கு பொது நல மனுவாக கொண்டு செல்ல கொட்டுப்பட்ட நிர்வாக அமைப்பு துண்டைக் காணோம் துணியை காணோம் என்று அந்த குறிப்பிட்ட நபரை துவைத்து காய போட்டுவிட்டார்கள். இது ஒரு இடம் மட்டுமல்ல. இந்த விழிப்புணர்ச்சி கேரளா மாநிலம் முழுமையாகவே இருப்பதாகவே தெரிகின்றது. காரணம் நமக்கென்ன என்று எவரும் எளிதில் ஒதுங்கி போய்விடுவதில்லை. அரசில் இருப்பவர்கள் கூட சற்று பயத்துடன் இருக்கிறார்கள். மாற்று அரசாங்கம் ஒவ்வொரு முறையும் அமைவதே இதன் அத்தாட்சி.

ஜோதிஜி சொன்னது…

ஆனால் நாம் அரசியல்வாதிகளை எதிர்க்காமல், அரசாங்க ஊழியர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பதன் முக்கிய காரணம் நமக்கும் அவர்களைப் போலவே இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் தான்.

ஸ்பெக்ட்ரம் பற்றி ஒரு கட்டுரையும் ஸ்...ஸ்... நடிகை விட்ட மூச்சு என்று இரண்டு கட்டுரைகளை எழுதிப்பாருங்கள்.

எதை அதிகம் படிப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

அது தான் நாம்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமையான பதிவு..

vinthaimanithan சொன்னது…

இந்த இடுகையில் எனக்கு முரண்பாடுகள் இருக்கின்றன. தனிநபர் பொறுப்புணர்வு என்பது சமூக அரசியல், பொருளாதாரச் சூழலைப் பொறுத்தே அமையும் என்பது உளவியல்... சமூகவியலுங்கூட! இந்தப் பதிலுக்காய் என்னைக் கும்முபவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அடுத்தவனை குறை கூறாம முதல்ல நாம திருந்தோனும்.

Thoduvanam சொன்னது…

ரொம்ப அருமை.சும்மா
சொல்லப்படாது.நெஞ்சு வெடிக்குது.
இன்னமும் நாம்.திருந்த வாய்ப்புக்கள் இருக்கு.மாற நினைத்தால்..

raja சொன்னது…

தொடர்ந்து நேர்த்தியாகவும் ஆழமான விஷயங்களையும் பதிவாக இடுகிறீர்கள். வாழ்த்துக்கள். நீங்கள் எழுதிய விஷயங்கள் அனைத்தும் யாவருக்கும் உடன்பாடே... இந்ந சாலை ஒழுங்கு எனும் விஷயம் இருக்கிறதே... சென்னையில் பல கொலைகள் விழுக்கூடிய அளவுக்கு மிகமூர்க்கமான ஒரு விஷயம் நேற்று(27.11.2010)கீழ்பாக்கம் பிரதான சாலையில் ஸ்டாலின் போட்டோ வைத்து சுமோ வண்டியை நடுரோட்டிலே நிறுத்தி மொத்த போக்குவரத்தையும்
ஸ்தம்பிக்க வைத்துகொண்டிருந்தான் ஒருவருக்கும் அவனை கேட்க துணிவில்லை.. நான் உட்பட(நான் அவனை அருவருப்பை பார்ப்பது போல் பார்த்துச்சென்றேன்) வேறு வழியில்லை. நீங்க என்னதான் பாஸிட்டிவாக இந்தியாவைப்பற்றி எழுதினாலும் அழுகின ஒரு உறுப்பு அது... ஒன்று எவனாவது புதியதலைவன் வந்து (பிரபாகரன் போன்று) வெட்டி எறியாமல் வேறு வழியில்லை.

வினோ சொன்னது…

இப்பொழுது இங்கே உணர்ந்துக்கொண்டு இருக்கேன் அண்ணா...

ஹேமா சொன்னது…

ஆழமான சிந்தனை செந்தில்.

நம்ம ஊர்...நம்ம பழக்கவழக்கங்களை அப்பிடியே அம்பலப்படுத்தியிருக்கீங்க.
வெளிநாடுகளில் வருடக்கணக்காகக் குப்பை கொட்டியும் மாறுதில்லையே இதெல்லாம் !

Paleo God சொன்னது…

செந்தில்,

சீனாவையும், இந்தியாவையும் கம்பேர் செய்வதென்றால்..

சீனா ப்ரைவேட் ஆஸ்பத்திரி.
15 லேனில் ஒரு ரோடு போட ஒரு சிறிய அறிவிப்பு போதும். எந்தக்கேள்வியுமில்லாது மக்கள் காலி செய்வார்கள்.


இந்தியா கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரி.

அனைத்து வசதிகள் இருந்தும் அலட்சியங்களில் அவஸ்தைப் படுகிறோம்.


@ஜோ மலையாளிகள் சொந்த ஊரில் கேள்வி கேட்கத்தெரிந்தவர்கள். சொல்வது சரியென்றால் சரியாக கடைபிடிக்கவும் செய்கிறார்கள். நீரோடும் எந்த ஆற்றங்கரைப் பக்கமும் மலத்தைக்கண்டதில்லை. குளிக்காத மனிதரைப் பொது இடங்களில் பார்ப்பதறிது. வெறும் மூன்றே பேர் கையில் ஒரு கொடி ஏந்தி ஒரு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஜிந்தாபாத் கூவிக்கொண்டு சென்றதைப் பார்த்திருக்கிறேன். :))

//தரம்ன்னு பார்த்தால் சீனாவை விட இந்திய பொருட்கள் உயர்ந்தவை//

கொடுக்கும் விலைகள் சார்ந்து பார்த்தால் அதன் தரம் மிகக் குறைவானதே என்பது என் கருத்துங்க!

- தொடருங்கள் செந்தில்..

Bibiliobibuli சொன்னது…

இந்தியா பற்றிய ஆதங்கதத்தையும் ஒவ்வொருவரினது ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் அறிந்தேன்.

ராஜ நடராஜன், கடந்த ரெண்டு நாளா உங்க பின்னூட்டங்கள் நிறைப்படித்தேன். தனிப்பதிவே போட்டிருக்கலாமோ!!!

a சொன்னது…

அருமை........தொடர்ந்து வருகிறேன் செந்தில்........

வைகை சொன்னது…

உங்களுடைய ஆதங்கம் மிகச்சரியானது, நம்மால் பதிவுகளில் புலம்பத்தான் முடியுது, மாற்றத்தை கொண்டுவரும் அதிகாரம் நம்மிடம் இல்லையே!!! நேரமிருந்தால் வரவும் http://unmai-sudum.blogspot.com/

Karthick Chidambaram சொன்னது…

//அடுத்த அத்தியாயத்தில் இந்தியாவின் சாதனை விசயங்களையும், ஒரு வெற்றிகரமான நாடாக வளம்பெற இருக்கும் சாதகமான விசயங்களையும் அலசுவோம் ...//

எதிர்பார்கிறேன்.

RK நண்பன்.. சொன்னது…

பணம் தொடர் போலவே இதுவும் பரபரப்பா இருக்கே அண்ணே.....

மக்கள் (நாம்) மாறினாலே சமுதாயம் மாறும், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் அலட்சிய போக்கை விட்டு மாறவேண்டும்...

அடுத பகுதியை எதிர்பார்த்து....

செல்வா சொன்னது…

/ எடை சரியாகவே இருக்காது இதனை ஒரு சாமானியனால் தட்டிக் கேட்கவே முடியாது, காரணம் மீண்டும் அவன் அந்தக் கடைக்கு வந்தே ஆக வேண்டும். இ//

மறுக்க முடியாத உண்மை அண்ணா ., எங்கள் ஊரில் உள்ள ரேசன் கடையில் கடைக்காரர் எப்பொழுது வருவார் , எப்பொழுது போவார் என்று கூட தெரியாது ..!!

பனித்துளி சங்கர் சொன்னது…

விழிப்புணர்வை ஏற்படுத்தும் மிக சிறந்தப் பதிவு . அடுத்து அடுத்து இரண்டு அணுகுண்டுகளை தனது மார்பில் வாங்கிய ஜப்பான் . இன்னும் புள் பூண்டுகள் கூட முளைக்காத ஒரு பெரும் அழிவை சந்தித்த நாடு இன்று கப்பலில் விவசாயம் செய்கிறது ஆனால் நாமோ அனைத்து வளங்களும் இருந்தும் வாழ வழி மறந்தவர்களாய் !. பகிர்வுக்கு நன்றி

Muruganandan M.K. சொன்னது…

நல்ல பதிவு. இலங்கையர்களான எங்களுக்கும் கியூ விடயத்தில் நிறைய ஒற்றுமை போலிருக்கிறதே.

Ravichandran Somu சொன்னது…

நல்ல பதிவு. தொடருங்கள்...

தல தளபதி சொன்னது…

மாறுதலை விரும்புகிறாயா? உன்னிடத்திலிருந்தே அது தொடங்கட்டும்'னு எங்கயோ படிச்ச நியாபகம்.

தல தளபதி சொன்னது…

அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் எழுத்துக்கள்....

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

கூவம் நதிக்கரையோரத்தில் ஒரு பூக்காரி கொண்டுசெல்கிற பூக்கூடையிலிருந்து வருகிற நறுமணத்தை விட கூவத்தின் வீச்சு அதிகம்.

நண்பர்கள் பலர் தேசமயக்கத்தில் நிறைகளைமட்டுமே பேச சொல்லலாம்., அது அவர்களும் வேண்டுமானால் ஒரு போதை தருகிற சுகத்தை தரலாம். ஆனால் அவர்களின் எதிர்கால தலைமுறைக்கு ஒரு நன்மையையும் செய்யாது.

நம் பாட்டன் வள்ளுவர் சொல்வார் " இடித்துரைக்காத எந்த அரசாங்கமும் ,கெடுப்பார் இல்லாவிட்டாலும் தானே கெடும்" ( சோனியா ஆட்சி போல் )

இடித்துரையுங்கள் மக்களை அல்ல., மன்னர்களை(இவர்களை இப்படி அழைப்பதே சரி) ஏனெனில்., மன்னன் எவ்வழியோ குடியோனும் அவ்வழியே. நீங்கள் நன்கு உணரலாம் இதே மக்கள் அயல் நாடுகளில் தானே எப்படி யாரும் கூறாமல் ஒழுங்கை பேணுவதை..... நன்றி.

ரோஸ்விக் சொன்னது…

பதிவுலகத்தின் பயனுள்ள தளங்களில் உங்களதும் ஒன்று. பெருமைப்படுங்கள்.

velu சொன்னது…

it is a great article. but our politicians are creating a lazy society not manufacturing industry. Rural employment Guarantee scheme is an example for it. it does not generate any productivity for the country.all are thinking to make money without hard work